Saturday, August 20, 2016

திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்



"புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுப்பி இருந்தார். அதில் கலந்து கொண்ட மணியரசனோ, தியாகுவோ சரியான பதிலை வழங்காமல் சுற்றி வளைத்துப் பேசினார்கள். (முள்ளிவாயிக்கால் : முன்னும்,பின்னும் 06.06.16 | கேள்வி நேரம் | நியூஸ் 7 தமிழ்)

ஆரம்ப காலத்தில் புலிகள் சோஷலிசத் தமிழீழம் கேட்ட கதைகளை பற்றி தியாகு பேசினார். அதே நேரம், புலிகளின் தலைமையில் இருந்தவர்கள் கூட்டம் கூடி, சோஷலிசம் தற்போது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டதாக மணியரசன் கூறினார். (உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.)

நேரடியாக கேள்விக்கு வருவோம். "புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" புலிகள் எண்பதுகளில் சோஷலிசம் பேசினாலும், நடைமுறையில் உள்நாட்டு முதலாளித்துவத்தை ஊக்குவித்து வந்தனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், "de facto தமிழீழம் (தமிழீழ நடைமுறை அரசு)" என்ற பெயரில் பொருளாதார உற்பத்தி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

புலிகளின் வர்த்தக நிறுவனமான "மக்கள் கடை", எல்லாக் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டது. அதிலே குறைந்த விலையில் பொருட்கள் விற்கப் பட்ட படியால், தனியார் வியாபாரிகள் பலர் நஷ்டப் பட்டு கடையை மூடி விட்டார்கள். சில வருடங்களின் பின்னர், மக்கள் கடைகளிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்தன.

அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு முற்றாக நின்று போனது. அதனால் விவசாயிகளும், மீனவர்களும், உள்ளூர் சந்தையில் விற்றது போக, எஞ்சியவற்றை புலிகளின் கொள்வனவு நிறுவனங்களிடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் புலிகளின் கொள்வனவு நிலையங்கள் தமிழீழம் முழுவதும் விற்பனை செய்தன.

அதைத் தவிர, சில கடத்தல்காரர்கள் தடை செய்யப் பட்ட பொருட்களை தென்னிலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விற்றார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய படியால் மண்ணெண்ணெய் பெருமளவு விற்பனையானது. மோட்டார் சைக்கிள்கள் கூட மண்ணெண்னையில் தான் ஓடின.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "சிங்களவனிடம் மண்ணெண்ணெய் வாங்கி, தமிழனிடம் பத்து மடங்கு விலைக்கு விற்று" பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. மகேஸ்வரன் என்ற கடத்தல்காரன் கோடீஸ்வரனாக வந்த கதை அனைவருக்கும் தெரிந்த படியால், அவருக்கு "மண்ணெண்ணெய் மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. அவர் பிற்காலத்தில், புலிகளின் ஆதரவுடன், பேரினவாத யு.என்.பி. கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

2002 ம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், "புலிகள் தாராள பொருளாதாரவாத, திறந்த சந்தைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக" அறிவித்திருந்தார்.

பிரச்சினை என்னவென்றால், புலிகள் மேற்குலக நாடுகளை திருப்திப் படுத்துவதற்காக மட்டுமே அப்படி அறிவித்திருந்தனர். நடைமுறையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் தமது இருப்பிற்கே ஆபத்தானது என்பதை உணர்ந்திருந்தனர்.

தலைவர் பிரபாகரன் அறிவித்த போதிலும், எந்தவொரு பன்னாட்டு நிறுவனமோ அல்லது சிறிலங்கா நிறுவனமோ, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லவில்லை. கொக்கோகோலா(அல்லது பெப்சி கோலா?) நிறுவனம் மட்டுமே, "வரி" என்ற பெயரில் பெருந்தொகை பணம் கொடுத்து வியாபாரம் செய்ய முன்வந்தது. (சாதாரண தமிழ் மக்கள் என்ன விலை கொடுத்து கொக்கோ கோலா குடித்திருப்பார்கள் என்று இங்கே சொல்லத் தேவையில்லை.)

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், யாழ் குடாநாட்டில் புலிகளின் சமாந்தரமான நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைத்து வணிக நிறுவனங்களும் புலிகள் கேட்ட வரியைக் கொடுத்து வந்தன. அன்றைய சந்திரிகா அரசும், சிங்கள இராணுவமும் அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதில், அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்து வந்தது. அது எந்தளவு உறுதியானது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளும் தருணம் ஒன்று வந்தது. அரசு சுகாதாரத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள், தாதியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. யாழ் போதனா மருத்துவமனைக்கு சென்ற புலிகள், அனைவரும் ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவ்வாறு வேலைக்கு திரும்பா விட்டால், அவர்களுக்குப் பதிலாக தமது இயக்கத்தில் உள்ள மருத்துவர்கள், தாதியரை வேலைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.

புலிகளின் இந்த முடிவால் சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. எத்தனை வருடம் எதிரிகளாக போரிட்டாலும், முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கு பகையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதைத் தான் வர்க்க ஒற்றுமை என்று சொல்வார்கள்.

*****

கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால், (தமிழர்களாகிய) நாங்கள் ஏன் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும்?

இந்தக் கேள்வியை அமெரிக்க நலன்களை ஆதரிக்கும் வலதுசாரி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

பனிப்போரின் முடிவில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில், கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால், சர்வதேச மூலதனத்தினை எதிர்த்து நிற்க முடியாமல் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டியிருந்தது. இன்றும் கூட, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள், தமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகின்றன.

கியூபாவும், வியட்நாமும், பொருளாதார ஒதுக்குதலில் இருந்து மீள்வதற்கு முயற்சித்தன. அதனால், குறிப்பிட்ட அளவு உள்நாட்டு சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பெயர் Joint Venture முறை. அதாவது, ஒரு நிறுவனத்தில் அரசு 51% முதலீட்டை செய்யும். மிகுதி பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு. இன்றைக்கும் அந்த நாடுகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழான கலப்புப் பொருளாதாரம் நிலவுகின்றது.

2009 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு முன்னர் நடந்தவற்றை முற்றாக மறந்து விட்டுப் பேசுகின்றார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான "அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல்", 9/11 தாக்குதலுக்குப் பிறகு மிகவும் மோசமான கட்டத்தை வந்தடைந்தது.

நாங்கள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளை மறந்து விட்டுப் பேசுகின்றோம். நோர்வேயும், மேற்குலக நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அல்லது சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். தாய்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டது. அன்டன் பாலசிங்கமும் அதனை ஒத்துக் கொண்டார்.

நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியதை எடுத்துக் காட்டினார்கள். இந்தோனேசியாவில் தனிநாடு கோரிய, அச்சே விடுதலை இயக்கம் சுனாமிக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. அவற்றை உதாரணமாகக் காட்டி, புலிகளும் அந்த வழிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். உண்மையில் அது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்பதை, 2009 ஆண்டு நடந்த துயர நிகழ்வுகள் நிரூபித்தன.

ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மறுத்து விட்டார். சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடையும் தருணத்தில், "புலிகள் மீண்டும் போருக்கு சென்றால், இலங்கை அரசுடன் சேர்ந்து ஒடுக்கப் படுவார்கள்." என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே மிரட்டினார். இனப்படுகொலை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மறைமுகமாக எச்சரித்தார்.

அப்போதும் கூட, பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், போரில் வீர மரணத்தை தழுவிக் கொள்ள தயாராக இருந்தார். அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் சரித்திரமாகி விட்டன.

****** 


போர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களை கண்டுகொள்ளாத அமெரிக்கப் படையினர், தென்னிலங்கையில் வெள்ள அழிவுகளால் பாதிக்கப் பட்ட வீடுகளை புனரமைக்க வந்தனர். 

2009 யுத்தம் நடந்த நேரம், இந்த அமெரிக்கப் படையினர் எங்கே போயிருந்தார்கள்? குறைந்த பட்சம் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவாவது, ஒரு அமெரிக்கன் கூட எட்டியும் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றி அமெரிக்கர்களுக்கு எதுவும் தெரியாதா? அவர்களின் கண்களுக்கு தமிழர்கள் மனிதர்களாகவே தெரியவில்லையா? 

எங்கே நமது "தமிழ் தேசியவாதிகள்"? ஏன் இப்படியான விடயங்கள் அவர்களின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை? "தமிழர்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு உதவிய" அமெரிக்காவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டிருக்கலாமே? அமெரிக்க டாலர்கள் வாயை அடைக்கப் பண்ணி விட்டனவா? 

அமெரிக்கர்கள் வெளிப்படையாக பாரபட்சம் காட்டினாலும், "அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி வழங்கும்" என்று, உங்களை நீங்களே ஏமாற்றுக் கொள்வதுடன் தமிழ்மக்களையும் ஏமாற்றி வருகின்றீர்கள். சூடு சொரணை இல்லாத அடிமைகளுக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?

No comments: