Monday, June 06, 2016

ஐரோப்பாவில் வேலையற்றோர் நவீன அடிமைகளாக சுரண்டப் படுகின்றனர்!


மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நலன்புரி அரசின் திட்டங்களில் ஒன்று, வேலையற்றவர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்கப் படுவது. வேலையிழந்தவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட காலம், முன்பு அவர்கள் கட்டி வந்த காப்புறுதிப் பணத்தில் இருந்து மாதாந்த உதவித் தொகை வழங்குவார்கள். தொடர்ந்தும் வேலையில்லாமல் இருந்தால், அரசு நிதியில் இருந்து பணம் கொடுப்பார்கள்.

இதைப் பற்றிக் கேள்விப் படும் பலர், "வேலைக்குப் போகாமல் சும்மா இருந்து சாப்பிடுகிறார்கள்..." என்று நினைக்கலாம். ஆனால், உண்மை நிலைமை அதுவல்ல. நீண்ட காலம் உதவித் தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூடிய சீக்கிரமே ஏதாவதொரு வேலைக்கு அனுப்புவது தான் அரசின் நோக்கமாக இருக்கும். அதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் செய்வார்கள்.

அது மட்டுமல்ல, ஒருவரது முன்னைய தொழில் அனுபவம், கல்வித்தகைமை எப்படியானதாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த வேலையையும் ஏற்றுச் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் முன்பு மருத்துவராக அல்லது ஆசிரியராக வேலை செய்திருப்பார். அவருக்கு துப்பரவுப் பணி வேலை கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்த உதவித்தொகை வெட்டப் படும்.

குறைந்தது பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்னரான நிலைமை வேறு. அந்தக் காலங்களில் தனியார் நிறுவனங்களை விட, ஏராளமான அரசு நிறுவனங்களும் இருந்தன. ஆகையினால், தனியார் நிறுவனத்தில் தட்டிக் கழிக்கப் பட்ட ஒருவருக்கு அரசு நிறுவனத்தில் வேலை கொடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், கடந்த காலத்தில் அரசு தனது நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டது அல்லது அரசு செலவினக் குறைப்பை சாட்டாக வைத்து மூடி விட்டது.

பாதுகாப்புப் படைகள், அரசு அலுவகங்களை தவிர, அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் திட்டம் மெல்ல மெல்ல செயற்படுத்தப் பட்டு வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து விட்டன. அதனால் வேலையற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. தற்போதுள்ள பிரச்சினை என்னவெனில், பொருளாதாரம் வளர்வதாக சொல்லப் பட்டாலும், சாதாரண பொதுமக்கள் அதை உணரக் கூடியதாகவில்லை. தனியார் துறை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டது.

இதனால் ஒரு பக்கம் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டோர், வெளிநாட்டவர்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். எந்த முதலாளியும் அவர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில், அவர்கள் வருடக் கணக்காக அரசு உதவித் தொகையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அரசு அவர்களை நவீன அடிமைகளாக பயன்படுத்திக் கொள்கின்றது!


நெதர்லாந்தில் நான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

வேலையற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் பொறுப்பேற்றுள்ள நகர சபை நிர்வாகம், அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்குவதில்லை. (வேலை வாய்ப்பு இருந்தால் தானே?) அதற்குப் பதிலாக "வேலை பழகும் நிலையங்களுக்கு" அனுப்புகின்றது. இந்தத் திட்டத்தை மேம்போக்காக பார்த்தால் தொழிற்கல்வி போன்று தோற்றமளிக்கும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல.

அதாவது, வேலை இல்லாதவர்கள் "தொழிற்கல்வி" படிப்பதற்கு பாடசாலைக்கு செல்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அங்கே எதையும் படிப்பதில்லை. மாறாக, வாரத்திற்கு 32 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் நீடிக்கலாம். ஆனால், நான் சந்தித்த சிலர் இரண்டு வருடங்களாக இலவச வேலை செய்கிறார்கள்.

"வேலை பயிலும் நிலையங்களிலும்" விருப்பமான தெரிவுகள் மிகவும் குறைவு. அனேகமாக, துப்பரவுப் பணி, உணவுச்சாலை (கேட்டரிங்) வேலை, தோட்ட வேலை, பொருள் உற்பத்தி போன்ற அடித்தட்டு தொழிலாளர்கள் செய்யும் வேலைகள் தான் கிடைக்கும். இதற்கு முன்னர் ஆசிரியராக, எஞ்சினியராக வேலை செய்திருந்தாலும், அவர் அடித்தட்டு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
கார்ட்டூன்: "தாழ்த்தப் படுதலுக்கு
அடங்கி வாழப்  பழகி விட்டோம்."

தொழிலகங்களுக்கு பொறுப்பாக ஒரு மனேஜர் இருப்பார். அவர் "வேலை பழகும் ஒப்பந்தம்" செய்வதவுடன் மறைந்து விடுவார். அதற்குப் பிறகு அவரைப் பிடிக்க முடியாது. ஏதாவது தேவைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் கிடைக்க மாட்டார். குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டுவார். 

ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். "தவறுகளை" திருத்திக் கொள்வதற்கு இன்னொரு மாதம் சந்தர்ப்பம் தருவதாகவும், அதற்குப் பின்னரே வெளியில் சம்பளத்துடன் கூடிய வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் சொல்வார். ஆனால், எத்தனை மாதங்கள் சென்றாலும் அது மட்டும் நடக்காது. "ஒழுங்காக" வேலை செய்பவர்களுக்கும், அங்கே வேலை இருக்கிறது, இங்கே வேலை இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

தொழிலகங்களில் வேலையாட்களை மேற்பார்வை பார்ப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் இருப்பார்கள். உண்மையில் அங்கே அவர்கள் மட்டும் தான் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். ஏனையோர் எல்லோரும் இலவசமாக வேலை செய்யும் நவீன அடிமைகள்! ஒவ்வொரு வாரமும் புதிய புதிய அடிமைகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேலைப்பளு, சுரண்டலை எதிர்க்க முடியாத கையாலாகத்தனம் காரணமாக, பலர் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுக்கின்றனர். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே வீட்டில் நிற்பதாக மனேஜர் குற்றம் சாட்டுவார்.

வேலையற்றவர்களின் உழைப்பை அரசு இலவசமாக சுரண்டுகின்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு தடவை நான் பூந் தோட்டம் ஒன்றில் வேலை செய்தேன். கூடாரங்களுக்குள் பூஞ் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். வளர்ந்த செடிகளை கொண்டு சென்று சந்தையில் விற்பார்கள். கடைகளில் பூஞ்செடிகளை வாங்கிச் சென்று வீடுகளில் அழகிற்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அது அடிமைகளின் உழைப்பால் உருவானது என்ற உண்மை தெரியாது.

நான் இன்னொரு தடவை கேன்டீன் ஒன்றில் கேட்டரிங் வேலை செய்தேன். தினசரி காலையில் சான்ட்விச் தயாரிக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அந்த உணவுச் சாலைக்கு மதியம் சாப்பிட வரும் அத்தனை பேரும் நகர சபைக்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள்! நாங்கள் அங்கே சம்பளத்திற்கு வேலை செய்வதாக அவர்கள் அப்பாவித்தனமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அங்கே வைக்கப் பட்டிருக்கும் சான்ட்விச்களை அவர்கள் சாதாரண சந்தை விலைக்கே வாங்கிச் செல்கிறார்கள்.

அது மட்டுமல்ல, அந்த இடத்தில் சில நேரம் ஒன்றுகூடல்கள் நடக்கும். பெரிய பெரிய அரசு அதிகாரிகள் அங்கே சாப்பிட வருவார்கள். அங்குள்ள மண்டபத்தில் கூட்டங்கள் நடக்கும். சிலநேரம், வெளியாரும் மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருப்பார்கள். அவர்கள் தமக்கான கேட்டரிங் சேவைக்கு பணம் கொடுக்கிறார்கள். அதுவும் சந்தை மதிப்பின் படியே தீர்மானிக்கப் படுகின்றது. ஒன்று கூடல், கூட்டங்களுக்கு ஐம்பது பேர் சமூகமளித்தாலும், அவர்களுக்கான உணவை நாங்கள், அதாவது நவீன அடிமைகள் தான் தயார் படுத்த வேண்டும்.

நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை என்றால், ஓய்வொழிச்சல் இல்லாத வேலையாக இருக்கும். அரை மணிநேர இடைவேளை உண்டு. அப்போது தான் சக தொழிலாளர்களுடன் (அடிமைகளுடன்) மனம் விட்டுப் பேசலாம். அங்குள்ள நிலைமை பற்றி யாரும் நல்லதாக பேச மாட்டார்கள். "கட்டாய வேலை வாங்குகிறார்கள்... உழைப்பை சுரண்டுகிறார்கள்...ஏமாற்றுகிறார்கள்..." இப்படிப் பல முறைப்பாடுகளை கேட்கலாம்.

கேட்டரிங் வேலை செய்பவர்களாக இருந்தாலும், விற்பனைக்கு வைக்கப் படும் சான்ட்விச் எதையும் எடுத்து சாப்பிட முடியாது. இறைச்சிப் பதார்த்தங்களை சாப்பிட முடியாது. விலை குறைந்த தரமற்ற பாண் (பிரெட்), பாவனை நாள் முடியும் நிலையில் உள்ள சீஸ், பால் இவற்றை மட்டும் உண்ணலாம்.

எல்லா தொழிலகங்களிலும், மதிய இடைவேளையின் போது மாத்திரம் தொலைபேசி பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை வேலைக்கு விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தால்? பிள்ளைக்கு சுகமில்லை என்று அழைப்பு வந்தால்? இந்தக் குறைகளை யாரிடம் சொல்வது? விதியை நொந்து கொள்ள வேண்டியது தான்.

மேற்படி கட்டுப்பாடுகள் எல்லாம், இலவசமாக உழைக்கும் நவீன அடிமைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அவர்களின் மேற்பார்வையாளர்கள், அதாவது சம்பளத்திற்கு வேலை செய்வோர், நிறைய சலுகைகளை அனுபவிப்பார்கள். அரை மணிநேரத்திற்கும் அதிகமாக, சிலநேரம் இரண்டு மணித்தியாலங்கள் உணவு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, காலையில் ஓரிரு மணிநேரம் வேலை செய்வதோடு சரி. அதற்குப் பிறகு அவர்களை காணக் கிடைக்காது. எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? யாருக்குத் தெரியும்?

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஏன் அடிமை வேலை செய்ய வேண்டும்? வேறு வழி? தனியார் துறை தவறு செய்தால் அரசிடம் முறையிடலாம். அரசே அந்த தவறை செய்தால்? யாரிடம் முறையிடுவது? அதனால் பலர் இதனை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கட்டாய வேலை செய்ய மறுத்தால், உதவித் தொகையை வெட்டி விடுவார்களே என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக, அரச உதவித் தொகையில் தங்கி இருப்பவர்கள், அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மாதாந்தம் கிடைக்கும் சொற்பத் தொகை அன்றாட செலவுக்கே கட்டுப்படியாகாது. எப்படியும், வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கால்வாசி தொகை செலவாகிடும். அதையும் வெட்டிக் குறைத்தால் கடனாளியாக வேண்டியிருக்கும். தலைக்கு மேல் எவ்வளவு கடன் ஏறினாலும் அரசு அக்கறைப் படப் போவதில்லை. மீண்டும் கட்டாய வேலை வாங்கும் தொழிலகம் சென்று அவர்களது கட்டுப்பாடுகளுக்கு அடங்கி ஒழுங்காக வேலை செய்யச் சொல்வார்கள்.

உண்மையில் அரசால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் கொடுத்தாவது வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் செய்யப் போவதில்லை. 

வேலையற்றோரின் உழைப்பை இலவசமாக சுரண்டுவதால், அரசுக்குக் கிடைக்கும் இலாபம் மிகவும் அதிகமாகும். உண்மையில், அரசு மில்லியன் கணக்கான யூரோக்களை அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து திருடியுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் எழுதி உள்ளது. (பார்க்க: Gemeenten verdienen half miljoen aan 'dwangarbeid'http://www.gelderlander.nl/regio/achterhoek/aalten/gemeenten-verdienen-half-miljoen-aan-dwangarbeid-1.4879591

அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டப் பட்ட பணம் எங்கே போகின்றது? ஏன் அதில் ஒரு பகுதியாவது இலவசமாக உழைத்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப் படுவதில்லை?

தொழிலகங்களில் சம்பளம் இல்லாத தொழிலாளர்களை வைத்திருந்து, இலவசமாக உழைப்பை சுரண்டுவதால் இரண்டு தரப்பினர் பாதிக்கப் படுகின்றனர். ஒன்று, அடிமை வேலை செய்யும் நபர் சம்பளத்துடன் வேலை செய்யும் தொழில் வாய்ப்பை இழக்கிறார். மற்றது, அப்படி ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கவிருக்கும் இன்னொருவருக்கான வேலை வாய்ப்பு பறிக்கப் படுகின்றது. இதனால் நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லுமே தவிர குறையப் போவதில்லை.

சமீபத்தில் இந்தப் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ள FNV என்ற தொழிற்சங்கம், பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகின்றது. கடதாசிப் பூக்கள் தயாரிக்கும் தொழிலகம் அமைந்துள்ள Aalten என்ற ஊரில் உள்ள நகர சபை அலுவகத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். நகர சபைக்கு வெளியே, ஊடகவியலாளர்கள், ஊர் மக்களை கூட்டி, பொதுக் கூட்டம் நடத்தினார்கள். சோஷலிஸ்ட் கட்சி (SP) பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் (Sadet Karabult; https://twitter.com/sadetkarabulut?lang=nl) அங்கு வந்து உரையாற்றி, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் உடன்...  

நானும் FNV தொழிற்சங்க உறுப்பினர் என்ற படியால், தொடர்ச்சியாக இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன். ஏற்கனவே நான் வழங்கிய பல தகவல்கள், அதாவது இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பவை, பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் காதுக்கு எட்டியுள்ளன. அவர் பாராளுமன்றத்தின் உள்ளே இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார்.

1 comment:

Feroz said...

சுரண்டலின் புதிய வடிவம். அதனை அரசாங்கமே கண்டுபிடித்து நடத்துவது வெட்கக்கேடு.

போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.