Sunday, July 05, 2015

IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!


ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும் போலித் தமிழ் தேசியவாதிகள், அப்படி ஒரு கருதுகோளை கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை. 

தமது அமெரிக்க அடிவருடித்தனத்தை மறைப்பதற்காக, தமிழ் மக்களுக்கு உண்மையை மறைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இன்றைக்கும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எப்படியாவது புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, IMF ம், உலகவங்கியும் மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத அரசுக்கு பக்கபலமாக நின்று உதவின. அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான IMF, உலகவங்கி ஆகியன, மிக நீண்ட காலமாகவே இலங்கைக்கு கடன் வழங்கி வந்துள்ளன. ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலும், சிறிலங்கா படையினரால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போதிலும், IMF, உலகவங்கி கடன்கள் குறையாமல் வந்து கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், அந்தக் கடனை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தன. ஆனால், அவர்களது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது.

IMF, உலகவங்கி மட்டுமல்ல, எந்தவொரு மேற்கத்திய நாடும், இலங்கை அரசுக்கு வழங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட குறைக்க முன்வரவில்லை. விதிவிலக்காக சில நாடுகள் நடந்து கொண்டாலும், அது வர்த்தக நோக்கில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை காரணமாகக் காட்டி, கடன் "உதவியை" நிறுத்தப் போவதாக பயமுறுத்தின. அதன் மூலம், அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்காக திரை மறைவில் பேரம் பேசப் பட்டது. அதைத் தவிர, எந்த நடவடிக்கையும் தமிழ் மக்கள் சார்பாக அமையவில்லை.

2009 ம் ஆண்டு, இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கைக்கான IMF கடனை நிறுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது வன்னியில் நடந்து கொண்டிருந்த, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட போரின் கொடுமைகளை கண்டதால், ஹிலாரி அப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கலாம். அன்றைய அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் Timothy Franz Geithner உடனான உரையாடலில் அது தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹிலாரியின் யோசனையை, IMF மிகக் கடுமையாக கண்டித்திருக்கும் என்பது, IMF வரலாறு தெரிந்தவர்களுக்கு வியப்புக்குரிய விடயம் அல்ல. உலக நாடுகளில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், பல உள்நாட்டுப் போர்களிலும், இனப்படுகொலைகளிலும் IMF நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்களித்துள்ளது. ஹிலாரி கிளிண்டனின் மூத்த ஆலோசகர் Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் அதைத் தான் நிரூபிக்கின்றது. அண்மையில் அமெரிக்க அரசினால் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில் அது கண்டுபிடிக்கப் பட்டது.

ஹிலாரி கிளிண்டனுக்கான மின்னஞ்சலில், அவரது ஆலோசகர் Burns Strider பின்வருமாறு எழுதியுள்ளார்: "புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப் பட வேண்டும் என்றே IMF, உலகவங்கியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அதற்கான நடவடிக்கையில், மகிந்த ராஜபக்ச அரசினால் ஏற்படுத்தப்படும் மனித அழிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை தான்!"

இதற்குப் பிறகும், "அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும், தமிழ் மக்களுக்கு ஐ.நா.வில் தமிழீழம் வாங்கித் தரப் போகின்றன..." என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க விசுவாசிகள், உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள், தம்மை "தமிழ் இன உணர்வாளர்கள்" என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் உண்மையில் "டாலர் பண உணர்வாளர்கள்".

அதனால் தான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தமிழினப் படுகொலையில் பங்களித்த அமெரிக்காவையும், IMF யும் ஆதரிப்பவர்களை வேறெப்படி அழைக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டனுக்கு Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் இது:

From: Bums Strider
To: H
Sent: Mon May 04 09:36:17 2009
Subject: Some intel for you...

This is about Sri Lankan Govt and the Tigers... I have a good source. This was shared to me at my and Karen's Derby Party yesterday (can you believe the 50 to 1 odds winner?).

There was a meeting held with Geitner asked for and led by IMF... They told him you were intruding into his domain by ordering/telling IMF to suspend funding to Sri Lakan Govt.

UNCLASSIFIED
U.S. Department of State Case No. F-2014-20439
Doc No. C05761169
Date: 06/30/2015

My take is that the people on the ground both with World Bank and IMF believe the Tigers need to be completely defeated and any collateral damage inflicted on private people by SL govt in process is ok... They also believe Tigers are better at propaganda than SL govt...

I have no idea what reality is... I know all about the conflict because there's been so much written over time but no idea of reality on ground.

My point is that IMF/World Bank is hoping to get Geitner to intervene and they recently played to his sense of who is US point person on IMF... So, that's what I know. I'll keep my ears open.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

2 comments:

nerkuppai thumbi said...

தமிழ் இனத்தை அழித்தொழிப்பது என்று எழுதுகிறோமே, எவ்வளவு தமிழர்களுக்கு அகதிகள் என்ற ஒரே காரணத்துக்காக தங்க உரிமை கொடுத்து வாழ்வாதாரங்களை கொடுத்ததும் பேணுவது இந்த "மேற்கு" முதலாளித்துவ கொடுங்கோன்மையினர் தானே? எவ்வளவு பேர் ரஷியாவிலோ சீனாவிலோ தஞ்சம் புக முடிந்தது? தெரிந்தால் சொல்லுங்கள்

Kalaiyarasan said...

தமிழர்கள் மேற்குலகிற்கு அகதிகளாக செல்வது, அவர்கள் எமது முந்திய காலனிய எஜமானர்கள் என்பதால் தான். ரஷ்யாவோ, சீனாவோ எங்களை காலனிப் படுத்தி இருந்தால் நாங்கள் அங்கே சென்றிருக்கலாம். பெரும்பான்மையான தமிழ் அகதிகள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்கள்? கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான். அதாவது, ஆங்கிலேய காலனியாதிக்க தொடர்பை இன்றைக்கும் நினைவுபடுத்தும் நாடுகளுக்கு செல்கிறார்கள். இந்த உண்மை முன்னாள் காலனிய எஜமானர்களுக்கும் தெரியும். அதனால் தான், பாவ விமோசனமாக அகதிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். காலனியாதிக்க ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, இன்று வரைக்கும், இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று, கடன் கொடுத்து, அந்த நாடுகளில் யுத்தங்களை உண்டாக்கி, அந்த நெருப்பில் குளிர் காய்வதும் இந்த மேற்கத்திய நாடுகள் தான். அவர்கள் தாம் செய்வது பாவம் என்று தெரிந்து கொண்டு தான் செய்கிறார்கள். பணம் வருகிறதே? அதனால், தாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவது போன்று, மேற்கத்திய நாடுகளுக்கு வரும் தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்றைக்கு ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளில் பெரும்பான்மையானோர் யார் தெரியுமா? சிரிய நாட்டவர்கள். அமைதியாக இருந்த சிரியாவில் பிரச்சினையை தூண்டி விட்டு, அங்குள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உள்நாட்டுப் போரை ஏற்படுத்திய சக்திகள் யார்? இதே மேற்கத்திய நாடுகள் தான்.
ஆகவே, முதலில் உண்மை நிலைமையை தெரிந்து கொண்ட பின்னர் கருத்தை தெரிவியுங்கள். அமெரிக்கா பணம் கொடுக்கிறது என்பதற்காக, கண்ணை மூடிக் கொண்டு அடிமை மாதிரி விசுவாசம் காட்டாதீர்கள். அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.