Friday, April 24, 2015

சம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்த தொழிலாளர்கள்


இது தான் முதலாளித்துவத்தின் கெட்ட கனவு. உண்மையில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், முதலாளிகளுக்கு தமது பாதுகாப்பு குறித்து அச்சமேற்படுவது இயல்பு.

2013 ம் ஆண்டு, சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழிலதிபரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சில நாட்களாக தமது முதலாளியை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததால், கொதிப்புற்ற தொழிலாளர்கள் கம்பனி நிர்வாகியை பிடித்து அடைத்து வைத்தார்கள். பலர் பணி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சமும், அவர்களை இந்த நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.

ஒரு கூண்டுக்குள் அடைக்கப் பட்ட விலங்கு போன்ற நிலையில் உள்ள முதலாளிக்கு, படுப்பதற்கு ஒரு படுக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அணைக்கப் படாத மின்குமிழ் வெளிச்சம், சுற்றியுள்ள தொழிலாளரின் கூச்சல் காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என்று அந்த நிர்வாகி குறைப் பட்டார்.

அவர் தப்பியோட முடியாதவாறு, வெளியே 60 அல்லது 70 தொழிலாளர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆறு நாட்களாக, உடுத்த உடுப்புடன் காலம் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் அவருக்கு மூன்று வேளை உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்த முதலாளியை விடுவிப்பதற்கு, அமெரிக்க தூதுவராலயம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டார். 

உலகம் முழுவதும் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும், இரக்கமற்ற முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும்  அமையும்.


மேலதிக விபரங்களுக்கு:
American boss held hostage by Chinese workers in Beijing - video 

No comments: