Monday, April 13, 2015

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்


தமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.

புலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.

ஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே?

"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: "ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா?


பதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம்? ராஜபக்ச ஒரு "சிங்களப் பிரபாகரனாக" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.

பல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. 

தமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

துரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்?

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ? நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?குறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா? அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா?

வெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா? புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா?

"தமிழ் தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான "கம்யூனிச" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்?

No comments: