Tuesday, April 28, 2015

சோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் தம்பி!




கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. 
தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.


"உன்னால் முடியும் தம்பி!"

 ஒரு நாட்டில், சோஷலிசத்தால் மட்டுமே, எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் என்பது, மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சோஷலிச கொள்கைகளை பின்பற்றி வரும் ஏவோ மொராலேஸ்சின் பொலிவியாவில் எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டு விட்டதாக UNESCO அறிவித்துள்ளது. UNESCO அளவுகோலின் படி, ஒரு நாட்டில் எழுத்தறிவற்றவர்கள் விகிதாசாரம் 4% க்கும் கீழே இருக்க வேண்டும்.

எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக கியூபா தயாரித்த விசேட கல்வித் திட்டமான "Yo, sí puedo" (என்னால் முடியும்) இதற்கு பெரிதும் உதவியுள்ளதாக UNESCO புகழாரம் சூட்டியுள்ளது. கியூபா ஒவ்வொரு வருடமும் கல்விக்க்காக பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதியை ஒதுக்கி வருவது தெரிந்ததே.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், சோஷலிச கொள்கையை பின்பற்றும், கியூபா, வெனிசுவேலாவை, பொலிவியா ஆகிய நாடுகளில் மட்டுமே எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

சோஷலிசத்தை ஆதரிக்கும் ஆட்சியாளர்களைக் கொண்ட எக்குவடோர், உருகுவே, ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளிலும் கியூபாவின் "Yo, sí puedo" கல்வித்திட்டம் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. வெகுவிரைவில் அந்த நாடுகளும் UNESCO பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

1 comment:

gmandurai said...

Good. Nice infor mation