Tuesday, May 27, 2014

அறிவுஜீவி அதியமானை மிரட்டும் கம்யூனிச ஆவி

முதலாளிகளுக்கு விசுவாசமாக, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதில், சற்றும் தளராத விக்கிரமாதித்தன், அருமை நண்பர் அதியமான், “கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாக நான் எழுதிய பதில்களை அழித்து விட்டார். அதனால், "அதியமானை பீடித்துள்ள ஆவியை போக்குவதற்காக," நான் இந்த விரிவான பதிலை எழுத வேண்டியதாகி விட்டது.

 அதியமான்: //கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்கு (சமூகத்திற்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs...//

கம்யூன் என்ற சொல்லின் மூலம் லத்தீன் மொழி. இன்றைக்கும், பிரான்சிலும் வேறு சில நாடுகளிலும், உள்ளூராட்சி சபைகளை “கம்யூன்” என்ற பெயரில் அழைக்கிறார்கள். நமது நாடுகளில், நகர சபை, கிராமிய சபை என்று பிரிட்டிஷ்காரர்கள் கற்பித்த சிவில் நிர்வாகத்தை விட, கம்யூன் உள்ளூர் மக்களுக்கு நெருக்கமானது.

கம்யூனுக்கு எதிர்மறைச் சொல் எதுவும் கிடையாது. இது, நமது ஊரில், “பஞ்சாயத்திற்கு எதிர்மறைச் சொல் என்ன?” என்று கேட்பதைப் போன்றது. கம்யூனிசத்திற்கு எதிர்மறைச் சொல் முதலாளித்துவம் அல்ல. மார்க்சியத்தின் படி, முதலாளித்துவத்தின் இறுதிக் காலத்தில், சோஷலிசம் தோன்றும். சோஷலிசத்தின் இறுதிக் காலத்தில் கம்யூனிசம் தோன்றும். அதாவது, அது ஒரு வரலாற்று வளர்ச்சிக் கட்டம்.

கட்டுரையின் ஆரம்பத்தில் அதியமான் குறிப்பிட்டது போன்று, “உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை." அதன் அர்த்தம், “உலகில் இன்னமும் முதலாளித்துவம் அழிந்து விடவில்லை. அதற்கு அடுத்த கட்டமான சோஷலிசத்தை விட்டு விட்டு, கம்யூனிசத்திற்கு ஒரேயடியாகத் தாவிச்  செல்ல முடியுமா?"  என்பது தான். முதலாளித்துவ காலகட்டம், அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டத்தின் அழிவில் தோன்றியது என்பதை இங்கே நினவு படுத்த வேண்டியுள்ளது.

தனிநபர்வாதம் என்பது தாராளவாத (லிபரல்) சித்தாந்தம். முதலாளித்துவம் கட்டுப்பாடற்ற சுதந்திரமான பொருளாதார முறை. அதற்கென்று தத்துவம் எதுவும் கிடையாது. பிரெஞ்சுப் புரட்சியின் சித்தாந்தமான தாராளவாதமும், முதலாளித்துவமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போனதால், அதையே பல நாடுகள் பின்பற்றி வருகின்றன.

முதலாளித்துவ பொருளாதாரம், தனிநபர்வாத கொள்கையை பின்பற்றும் நாட்டில் மட்டுமே இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இஸ்லாமியவாதம் ஆளும் வர்க்க சித்தாந்தமாக இருக்கிறது. ஆனால், அங்கே முதலாளித்துவப் பொருளாதாரம் கோலோச்சுகின்றது. (கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு முதலாளித்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய அரேபியாவில் அது ஏற்கனவே இருந்து வந்தது.)

கம்யூன் அல்லது கம்யூனிச அமைப்பு என்பது, ஒரு குடும்ப அமைப்பு அல்ல. முதலாளித்துவம் பற்றி அக்குவேறு, ஆணி வேறாக அறிந்து வைத்திருக்கும் அதியமானுக்கு, ஒரு நிறுவனம் எப்படி இயங்குகின்றது என்பதை நான் விளக்கத் தேவையில்லை. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் பங்குதாரர்கள், இலாபத்தை தமக்குள்ளே பிரித்தெடுத்துக் கொள்வார்கள். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் என்றிருப்பார்கள்.

ஒரு கம்யூனிச சமுதாயத்தில், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களே, அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பார்கள். அவர்கள் சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொள்வதில்லை, இலாபத்தையும் தமக்குள்ள பிரித்தெடுத்துக் கொள்கிறார்கள்.

அதியமான்: //மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.//

பொதுநலம் பெரிது, சுயநலம் தவறென்று கம்யூனிஸ்டுகள் மட்டும் சொல்லவில்லை. உலகில் உள்ள அனைத்து மதங்களும் அதையே தான் போதிக்கின்றன. "நான் என்ற அகந்தையை அகற்றுமாறு," பகவத் கீதை காலத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை, இந்த மதங்களை உருவாக்கியவர்களுக்கு, அல்லது அவர்கள் நம்பும் கடவுளுக்கு, மனித மனங்களை பற்றிய போதிய தெளிவில்லாமல் இருக்கலாம்.

அதியமான்: //தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.//

மனிதர்களை தேனிக்கள், எறும்புகள் மாதிரி என்றெல்லாம் ஒப்பிடுவதற்கு முன்னர், மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். தேனி, எறும்பு மட்டுமல்ல, உலகில் எந்தவொரு விலங்கினமும், பிற விலங்குகளின் உழைப்பில் மாளிகை கட்டி வாழ்ந்ததில்லை. மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே அப்படி இருக்கிறனர். அந்த “ஒரு சிலர்” தான் முதலாளிகள். மூலதனத்தை மட்டுமே செலுத்தி விட்டு, இலாபத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளும் உளவியலைக் கொண்டுள்ள விசித்திரமான உயிரினங்கள். அந்த "மூலதனம் எப்படி வந்தது? இலாபம் எங்கிருந்து வருகின்றது?" என்பன போன்ற கேள்விகளை கேட்டால், ஆகாயத்தை நோக்கிக் கை காட்டுவார்கள்.

அதியமான்: //பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கத்திற்க்கா வேலை செய்யும் ஊழியர்கள். தனியார் நிறுவனங்கள் அறவே இருக்காத அமைப்பு. பிரதமர் முதல் கடைனிலை ஊழியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். (இங்கு அரசு எனபடுவதற்கு அர்த்தம் வேறு). அவர்களுக்கான சம்பளம், அவர்களின் வேலை மற்றும் தகுதிக்கேற்ப ஆரம்ப காலங்களில் வழங்கப்படும். பிறகு உண்மையான கம்யூனிசம் உருவாகும் போது, தேவைக்கேற்ற ஊதியம் மட்டும் வழங்கப்படும்.//

அதியமானின் தகவலில் பல கருத்துப் பிழைகளும் உள்ளன. கம்யூனிசம் என்றாலும், பொதுவுடைமை என்றாலும், அர்த்தம் ஒன்று தான். அவர் இங்கே “பொதுவுடைமை சமூகம்” என்று குறிப்பிடுவது, சோஷலிச (சமதர்ம) சமூகத்தை என்று நாங்கள் புரிந்து கொள்வோம். ஒரு சோஷலிச சமூகத்தில் அரசாங்கம் இருக்கும். ஆனால், அங்கே தனி உடைமை (சொத்துரிமை) ஒழிக்கப் படும் என்பது ஒரு கட்டுக்கதை.

ஒரு தனி மனிதனின், தனிப் பட்ட சொத்துரிமையை எப்படி ஒழிக்க முடியும்? அது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒருவனுக்கு ஒரு வீடு இருந்தால், அது அவனின் சொத்து. ஆனால், இரண்டு வீடுகள் வைத்திருந்தால், அது ஆடம்பரம். அளவுக்கு மிஞ்சி வைத்திருக்கும் சொத்துக்களை பறிப்பதில் என்ன தவறு? அதை இல்லாதவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தால் யார் தடுக்கப் போகிறார்கள்? மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா?

சோஷலிச நாடுகள் எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான கொள்கை பின்பற்றப் படுவதில்லை. அப்படியே இருந்தாலும், அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அரசுக்கு வேலை செய்ய முடியாது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுடமையாக இருக்கும். சிறிய நிறுவனங்கள் இயங்குவதற்கான சுதந்திரமும் வழங்கப் படும். இன்றைய முதலாளித்துவ உலகில், சிறிய நிறுவனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. முன்பு போல, இப்போதெல்லாம் ஒரு பெட்டிக் கடை வைத்துப் பிழைக்க முடிவதில்லை. மேற்கத்திய நாடுகளில் கூட, பெரும்பான்மையான மக்கள், குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களில் மட்டுமே வேலை செய்கிறார்கள். 

பயப்படாதீர்கள்! ஒரு சோஷலிச அரசு தனிப் பட்ட சொத்துரிமையை ஒழிப்பதற்கு முன்னர், முதலாளித்துவமே அந்தக் கடமையை நிறைவேற்றி விட்டிருக்கும்.

அதியமான்: //ஒரு தொழிற்சாலை அல்லது கூட்டு பண்னையில் ஒரே வகை வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருக்கும். இதன் விளவு, திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல், சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்கும் நிலை. இது நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தை குறைக்கும். அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும். மொத்த விளைவு : உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைவாகவே இருக்கும். மிக முக்கியமாக மூளை உழைப்பை செய்யும் நிர்வாகிகளின் திறன் ஒழுங்காக வெளிப்படாது.//

முதலில், “அனைவருக்கும் ஒரே சம்பளம்” என்ற கோட்பாடு, வறுமையை ஒழிக்கும் நோக்குடன் கொண்டு வரப் பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பல தசாப்த காலமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளில், ஒரு சுத்திகரிப்பு தொழிலாளிக்கும், ஒரு அலுவலக ஊழியருக்கும் வழங்கும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்காது. ஒரு கட்டிடம் கட்டும் தொழிலாளியின் சம்பளம், ஒரு ஆசிரியரின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம், ஒருவரின் சம்பளத்தை பல காரணிகள் தீர்மானிக்கின்றன.

முதலாவதாக, ஒருவரின் சம்பளம், அந்த நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு சற்று அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. இரண்டாவதாக, ஒருவர் வேலை செய்யும் தொழிற் துறையின் வருமான விகிதத்தை கணக்கில் எடுக்க வேண்டும். இது போன்ற காரணிகளால் தான், சோஷலிச நாடுகளிலும், “அனைவருக்கும் ஒரே சம்பளம்” கிடைக்கிறது. பின்னர், அவரவர் தகுதி, திறமை, உழைப்புக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். இது வேலை செய்பவரின் உற்சாகத்தை குறைத்து, உற்பத்தியை குறைக்குமாக இருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்றைக்கோ திவாலாகி இருக்க வேண்டும்.

அதியமான்: //தொழில்முனைவோர் என்படும் entrepreneuers, இவர்களின் முழு திறமையும் வெளிபட வாய்பிருக்காது. ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எந்த பாணியில் அமைக்கப்படிருந்தாலும், அதை நிர்வாக்கிக திறமையான, ஊக்கமான, நிர்வாகிகள் மிக அவசியம் தேவை. Managerial and entrepreunarl talent. இதை பொது உடமை சமூகத்தில் இழக்க நேரிடுவதால், உற்பத்தி மற்றும் efficiency மிக குறைவாகவே இருக்கும்.//

நிர்வாகிகளை, வானத்தில் இருக்கும் ஆண்டவர் எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாகிகள், முகாமையாளர்கள், "ஒரு தனித்துவமான வர்க்கமாக அல்லது ஒரு தனியான சாதியாகத்" தான் இருக்க வேண்டுமா? தொழிலாளர்கள் மத்தியில் இருந்தும் நிர்வாகிகளை உருவாக்கலாம்.

முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் நாடுகளில் கூட, பல திறமையான தொழிலாளர்கள் கல்வி கற்று முகாமையாளர்களாக வந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. ஒரு சோஷலிச நாட்டில் அந்தக் குறை நிவர்த்தி செய்யப் படுகின்றது. ஒரு அரசு, இலைமறை காயாக மறைந்திருக்கும் திறமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு, “தொழில் முனைவோர் என்ற பெயரில் ஒரு உயர் சாதியை” உருவாக்குவது எந்த வகையில் நியாயம்?

அதியமான்: //தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செலுத்த ஊக்குவிக்கும்.//

“இலாப நோக்குடன் கடுமையாக உழைப்பதை” இப்போது தான் கேள்விப் படுகிறேன். உழைப்பவர்கள் முதலில், வாழ்க்கைக்கான ஆதாரமாக தான் அதனைக் கருதுகிறார்கள். யாரும் இலாப நோக்குடன் உழைப்பதில்லை. எத்தனை ஆண்டு காலம் உழைத்தாலும், உழைப்பாளிக்கு இலாபம் கிடைக்காது. இழக்கப் பட்ட உழைப்புச் சக்திக்கு ஈடான நஷ்டஈடு மட்டுமே கிடைக்கும். அதற்குப் பெயர் சம்பளம்.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்கள், உழைத்தால் தான் வாழ முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். வருமானம் இல்லா விட்டால், வறுமையில் வாட வேண்டும். உழைப்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். முதலாளிகள் மட்டுமே இலாபமீட்டுகிறார்கள். சம்பளம் என்பது இலாபம் அல்ல. அது ஒருவரின் உழைப்புக்கு கொடுக்கும் விலை.

அதியமான்: //இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம். பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகளும் அப்படி இருப்பர். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான். பெருவாரியானவர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே மனித இயல்பு. லாப நோக்கு மறுக்கப்ட்டு, தனியுடைமையின் அடிப்படையான சொத்துர்மை ரத்து செய்யப்படும் அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையாக, போதுமானதாக இருக்காது.//

அதியமான், இதற்கு முன்னர் எமக்கு தனிநபர் வாதம் பற்றி வகுப்பெடுத்து விட்டு, இப்போது பொது நோக்கு பற்றி பேசுவது விசித்திரமானது. சுயநலமே முக்கியம் எனும் சமூகத்தில் பொது நோக்கு எப்படி வரும்? இது ஒரு முக்கியமான முரண்பாடு. ஒரு தொழிலகத்தில் யாரும் தனிநபர்வாதம் பேச முடியாது. அங்கே பொதுவான இலக்கு நோக்கிய, அதாவது இலாப நோக்கு கொண்ட, "தொழிலாளர்களின் கூட்டு வேலை" அவசியமாக கருதப் படுகின்றது. எந்த முதலாளியும், எந்த நிறுவனமும் இலாபத்தை எதிர்பார்க்காமல் இயங்குவதில்லை. அவர்களது கணக்கில் அதற்கு இடமே இல்லை.

அதியமான், முதலாளிகளையும், உழைப்பாளிகள் என்றே கருதுகின்றார் என்று நினைக்கிறேன். அதனால் அடிக்கடி இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார். “தனியுடமையின் அடிப்படையான சொத்துரிமை இரத்து செய்யப்படும் அமைப்பு” எதுவும் உலகில் கிடையாது. அது அதியமானின் கற்பனை. ஒரு சோஷலிச நாட்டில், பெரும் வணிக நிறுவனங்கள், பெரிய முதலாளிகளின் சொத்துரிமை பறிக்கப் பட்டு, அது மக்களின் சொத்தாக்கப் படும். அதனால், ஒரு சிலர் (செல்வந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள்) மட்டுமே பாதிக்கப் படுவார்கள்.

தொழிலாளர்களுக்கு நிறுவனத்தை நிர்வகிக்கும் உரிமை வழங்குவதால், உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அவர்களுக்கு இலாபத்தில் பங்கு வழங்குவதால், ஊக்கத்துடன் வேலை செய்வார்கள். அங்கு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புண்டு. அப்படியான ஒரு அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையானதாக இருக்கும்.

அதியமான்: //சோவியத் ரஸ்ஸியாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்க்கான காரணிகளை தோழர்கள் விரிவாக விவாதித்து, மிக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளனர். அதாவது திரிபுவாதிகள், ஏகாதிபத்திய சதி போன்றவை தான் காரணம் என்று சொல்வர். ஆனால் இது மனித இயல்பு என்பதே உண்மை. ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற முடியாது. ஒரு தலைமுறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினரை மட்டும்தான் உண்மையான கம்யுனிஸ்ட்களாக மாற்ற முடியும். பெரும்பான்மையோர் தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் நடிப்பார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்வார்கள். அவர்களை ‘திருத்தி’, re-training and educating about communism செய்ய அரசும், கட்சியும் முயலும். அதற்க்காக பல மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக புரிய வேண்டி வரும்.//

ஒரு புரட்சியை வெற்றி பெறுவதை விட, அதனை நிலை நிறுத்துவது தான் மிகவும் கடினமானது. புரட்சியாளர்களின் அரசாங்கம் அமைந்தாலும், இரண்டாவது புரட்சியின் அவசியம் ஏற்படும். அமெரிக்கப் புரட்சியின் பின்னரும், ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம் மாறியது. ஆபிரகாம் லிங்கன் காலத்தில் நடந்த உள்நாட்டுப் போர், ஒரு இரண்டாவது புரட்சியாக கருதப் படுகின்றது. அதே போன்று, சோவியத் ஒன்றியத்தில் நடந்தது. ஸ்டாலின் காலத்தில் இரண்டாவது புரட்சி நடந்தது. மாவோவின் செஞ்சீனாவும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டது. அதனால் தான் அங்கு கலாச்சாரப் புரட்சி நடந்தது.

திரிபுவாதிகள் எனப்படுவோர், ஒரு கொள்கையை தமது வசதிக்கேற்றவாறு திரிப்பவர்களைக் குறிக்கும். அப்படியானவர்கள், சோஷலிச நாட்டில் மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் திரிபுவாதிகள். மேற்கத்திய நாடுகளில் வாழும் மதச் சார்பற்ற லிபரல்களின் பார்வையில், இந்தியாவில் உள்ள மத நம்பிக்கை கொண்ட லிபரல்கள் திரிபுவாதிகளாக தென்படுகின்றனர். ஆகவே, இது சோஷலிசத்திற்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லாக் கொள்கைகளுக்கும் பொருந்தும்.

ஏகாதிபத்திய சதி என்பது ஒரு கற்பனை அல்ல. ஏற்கனவே, CIA, MI6 ஆகிய மேற்கத்திய உளவு நிறுவனங்கள், அது உண்மையென உறுதிப் படுத்தியுள்ளன. முன்னாள் சோஷலிச நாடுகளுக்குள், சி.ஐ.ஏ. யின் சதி நடவடிக்கைகள் பற்றி, ஏராளமான நூல்கள் வந்து விட்டன. Radio Free Europe, BBC, VOA என்பன, சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்களை கிளர்ச்சிக்கு தூண்டி விடும் வகையில், பல மொழிகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. "ஏகாதிபத்திய சதி என்ற ஒன்று இருக்கவேயில்லை" என்று, அதியமான் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வது, முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்றது.

அதியமான்: //எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை. இதை தான் வரலாறு நிறுபிக்கிறது.//

இன்றைக்கும் பல முதலாளித்துவ நாடுகளில், மனிதர்கள் எறும்புகள், தேனீக்கள் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக அடிமை வேலை செய்யும் இந்தியர்களை கேட்டுப் பாருங்கள். அவர்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்று. சிங்கப்பூரில் ஒரு தடவை, எறும்புகளாக வாழ விரும்பாத தமிழக தொழிலாளர்கள், கலவரத்தில் ஈடுபட்டு வண்டிகளை கொளுத்தினார்கள். பங்களாதேஷ் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மாண்டார்கள். பங்களாதேஷ், கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளில், ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலகங்களில் வேலை செய்பவர்களை கேட்டுப் பாருங்கள். அவர்கள், எறும்புகள், தேனீக்களை விட மோசமாக நடத்தப் படுகின்றனர்.

அதியமான்: // செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக, உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். முக்கியமாக விவசாயத்தை திடிரென பொது உடைமை பாணியில், கூட்டுபண்னைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. இது செம்புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் ஆரம்ப வருடங்களில் நடந்தது. விதிவிலக்கே இல்லை. ஏன் என்று யோசிக்க வேண்டும். 80களில் ஒரு சோவியத் ரஸ்ஸிய கூட்டுபண்ணை தொழிலாளர் சொன்னது : “We pretended to work while they pretended to pay”//

செம்புரட்சி நடந்த நாடுகளுக்கு போவதற்கு முன்னர், தொழிற்புரட்சி நடந்த நாடுகளை எடுத்துப் பாருங்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமான சம்பளம். குழந்தைத் தொழிலாளர்கள். பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள். சராசரி 12 மணித்தியாலத்திற்கும் அதிகமான வேலை நேரம். இவையெல்லாம் முதலாளித்துவ நாடுகளில் இருக்கவில்லையா? அதைப் பற்றிக் கேட்டால், அது அந்தக் காலம் என்று சமாளிப்பார்கள். உலகில் முதலாளித்துவம் முன்னூறு வருடங்களாக இருந்து வருகின்றது.

அமெரிக்காவில் 300 வருடங்களுக்கு முன்பிருந்த காட்டுமிராண்டி கால முதலாளித்துவத்தை, இன்றுள்ள வளர்ச்சி அடைந்த முதலாளித்துவத்துடன் ஒப்பிடாதீர்கள் என்று அதியமானே வாதாடுவார். உண்மை தான். முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால், சோஷலிசம் இன்றைக்கும் ஒரு குழந்தை. பொதுவாக, நாங்கள் வயதுவந்தவர்களின் தவறுகளை தான் சுட்டிக் காட்டுவோம். சட்டங்கள் கூட அவர்களை தண்டிப்பதற்காகத் தான் இயற்றப் பட்டன. ஆனால், குழந்தைகள், சிறு பிள்ளைகள் விடும் தவறுகளை, பொறுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அவை வளரும் காலத்தில் தாமாகவே திருத்திக் கொள்ளும் என்பதை உணர வேண்டும்.

அதியமான்: //இன்று உலகில் எங்கும் சோசலிச பாணி கம்யூனிச அமைப்புடைய நாடே இல்லை. கூபாவையும் சொல்ல முடியாது. 50 ஆண்டுகளில் பெரும் மாற்றம். வரும் காலங்களில் செம்புரட்சி உருவாக வாய்புள்ள நாடு என்று ஒரு நாட்டையும் சொல்ல முடியவில்லை.//

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் நேபாளத்தில் மாவோயிஸ்ட் போராட்டம் நடந்தது. மாவோயிஸ்டுகள் நாட்டை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில், ஐ.நா. தலையிட்டு சமரசப் பாதைக்கு கொண்டு வந்தார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், உலகம் ஒரு துருவ மயப் பட்டு விட்டது. அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகளின் பலம் பல மடங்கு அதிகரித்து விட்டது. எங்காவது ஒரு சோஷலிசப் புரட்சி வந்து விடுமோ என்ற அச்சத்தில், உழைக்கும் மக்களைப் பிரித்து விடும் நோக்கில், இனவெறி, அல்லது மதவெறி தூண்டி விடப் படுகின்றது.

சர்வதேச மூலதனம், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அது ஊடுருவாத உலக நாடு எதுவும் கிடையாது. அதனால், கியூபா, வட கொரியா போன்ற சிறிய நாடுகள், சில விட்டுக் கொடுப்புகளை செய்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது ஒரு வகை தப்பிப் பிழைக்கும் அரசியல். அதற்காக, எந்த நாட்டிலும் புரட்சிக்கான தேவை இல்லை என்று ஒரேயடியாக முடிவு கட்டி விட முடியாது. ஒரு ஊரில் ரௌடிகள் அட்டகாசம் செய்தால், நமக்கேன் வீண் வம்பு என்று அடங்கிப் போவோர் தான் அதிகம். அதற்காக, அந்த ஊரில் உள்ளவர்களுக்கு, சுய கெளரவம் கிடையாது என்று நினைப்பது அறியாமை.

அதியமான்: //இந்தியா இன்று ஊழல்மயமாக உள்ளது. சராசரி இந்தியானின் நேர்மை மற்றும் ஊழலுக்கு துணை போகாத ஒழுக்கம் குறைவுதான். எதோ ஒரு வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் மிக பரவலாக வேறூண்றிவிட்டது. அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் உற்பத்தி திறன் பற்றி சொல்லவே வேண்டாம். மொத்த மக்களும் செம்புரட்சியின் மூலம் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே கொடுமையாக உள்ளது.//

இதெல்லாம் இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை. பாராளுமன்ற ஜனநாயக முறை இருக்கும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. சாதாரண வாக்காளர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் கட்சிக்கு பல கோடிப் பணம் ஆதாயமாக வருகின்றது என்று அர்த்தம். இது, ஒரு திருடனை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக, திருட்டை நேரில் பார்த்த ஒருவர் பணத்தில் பங்கு கேட்பது போன்றது. எல்லோருமே திருடர்கள் என்றால், நாங்கள் மட்டும் நாணயமாக இருந்து என்ன பிரயோசனம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது முதலாளித்துவ அமைப்பின் குறைபாடு. அதாவது, தனிநபர்வாதம், சுயநலன் மட்டுமே முக்கியமானது.

அரசு ஊழியர்கள் எல்லோரும் அதிகார தரத்தில் உள்ளவர்கள் அல்ல. ஒரு அரசாங்க நிறுவனத்தில் வேலை செய்யும் சாதாரண தொழிலாளியால், என்ன ஊழலை செய்து விட முடியும்? அதியமான் போன்றோரின் கண்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கும் ஊழல் தென்படாது. கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்வதற்காக, அரசுக்கு கோடிக் கணக்கான பணத்தை இலஞ்சமாக கொடுக்கின்றன.

அதியமான்: //இதற்க்கு மாற்றாக, தனிநபர்வாதத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர சந்தை பொருளாதாரத்தை, ஜனநாயக முறையில், முறையாக பின்பற்றிய பல நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று, வறுமையில் அளவை மிக மிக குறைத்து, இன்று செழிப்பான வளர்ந்த நாடுகளாக மாறின. மே.அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற பல நாடுகளின் economic history அய் பார்த்தாலே புரியும்.//

அமெரிக்காவில் 17 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அது சரி, இங்கே பெயர் குறிப்பிடப் படாத பிற நாடுகள் எல்லாம் சோஷலிச நாடுகளா? எத்தனையோ லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், காலங்காலமாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றன. தனிநபர்வாதம், சுதந்திர சந்தை போன்றன அந்த நாடுகளிலும் உள்ளன. அவை ஏன் இன்னமும் “வறிய நாடுகள்” என்று அழைக்கப் படுகின்றன? எதற்காக “மூன்றாமுலக நாடுகள்” என்ற பாகுபாடு? அந்த நாடுகளின் economic history யும் எடுத்துப் பார்ப்போமே?

அதியமான்: //கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து, அதை நம்ப வைத்து, முழுமையாக ஏற்க்க வைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதையே வரலாறு நிருபிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் இச் சித்தாந்தம் இன்று காலாவதியானதாக கருதப்படுகிறது.//

ஆஹா, அதியமானின் கற்பனை வளம் வியக்க வைக்கிறது. உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அது இந்தியாவாகட்டும், அமெரிக்காவாகட்டும், அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. இசைத் துறையில், விளையாட்டுத் துறையில் நாட்டம் உள்ள ஒருவனிடம், எவ்வாறு அரசியலை திணிக்க முடியும்? கம்யூனிசம், சோஷலிசம் என்பது வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதியமான் தனது கட்டுரை முழுவதும், “வர்க்கம் என்ற சொல்லை தவிர்த்து வந்திருக்கிறார்.” அது ஒன்றும் தற்செயலாக நேர்ந்த தவறு அல்ல.  மனிதர்கள் பல பிரிவுகளாக வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் வர்க்கங்கள் உண்டு. அதற்கென்று தனியான கலாச்சாரம் உண்டு.

முதலாளித்துவ உலகில், ஒரு பொருளை சந்தைப் படுத்தும் பொழுது வர்க்கத்தையும் கவனத்தில் எடுக்கிறார்கள். விலை மலிவான பொருட்கள், அடித்தட்டு அல்லது மத்தியதர வர்க்க மக்களை குறி வைத்து சந்தைக்கு வருகின்றன. அதற்கு மாறாக, அதிக விலையுள்ள பொருட்கள், பணக்கார வாடிக்கையாளர்களை குறி வைத்து விற்பனை செய்யப் படுகின்றன. மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறைக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கும் இடையில், மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. சினிமாக்களை தவிர, நிஜ வாழ்க்கையில், இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் வர்க்கங்களை சேர்ந்தவர்கள், திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை.

அதியமான் சொல்வது போன்று, அனைத்து மக்களையும் கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி அங்கத்தவர்களும், அரசியலில் ஆர்வம் உள்ளவர்களும் மட்டுமே, கம்யூனிசம் என்றால் என்னவென்று படிக்க விரும்புவார்கள். சாதாரண மக்களுக்கு அது தேவையில்லை. அவர்கள் மனதில் வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் போதும். அவர்களுக்கு மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டினால் போதும். மிகுதியை உழைக்கும் வர்க்க மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

"ஒரு முதலாளி எவ்வாறு தொழிலாளியை சுரண்டுகிறான். ஒரு பணக்காரன் எவ்வாறு தீய வழியில் செல்வம் சேர்க்கிறான். ஒரு நிலப்பிரபு எவ்வாறு ஏழைகளின் நிலங்களை அபகரிக்கிறான். ஒரு கந்துவட்டிக்காரன் எவ்வாறு கடன்கார்களின் இரத்தத்தை உறுஞ்சுகிறான். ஒரு எஜமான் எவ்வாறு அடிமைகளை கொடுமைப் படுத்துகிறான்...." உழைக்கும் மக்களிடம் இது போன்ற தகவல்களை சொல்லிக் கொடுத்தால் போதும். அது சிலநேரம் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

 சமூகத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க வேறுபாடுகளை, சமூக அநீதிகளை புரிந்து கொள்வதற்கு, யாரும் கம்யூனிசம் படிக்கத் தேவையில்லை. அது உழைக்கும் மக்களின் அன்றாட அனுபவக் கல்வி. ஆனால், அதியமான் போன்ற மேட்டுக்குடி அறிவுஜீவிகளுக்கு மட்டும், அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. அவர்கள் எந்தளவு தூரம் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.


அதியமான் எழுதிய உபரி மதிப்பு பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக, தோழர் அ.கா.ஈஸ்வரன் எழுதிய கட்டுரையையும் வாசிக்கவும்:
K.R.அதியமான் அவர்களின் “"உபரி மதிப்பு” என்னும் மாயை” என்ற கருத்தின் மீதான எனது எதிர்வினை

Monday, May 26, 2014

"முன் தோன்றிய மூத்த குடி, தொன்மையான மொழி" : சிங்கள பாசிஸ இனப் பெருமிதம்


சிங்கள பாசிஸ்டுகளும், "உலகில் முதலில் தோன்றிய மூத்தகுடி சிங்கள இனம் தான்..." என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதை அரசியல் கொள்கையாக கொண்டுள்ளனர்.

இலங்கையில் பிரபலமான சிங்கள பாசிஸ கட்சியான "ஜாதிக ஹெல உறுமய" கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அண்மையில் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை இங்கே தருகிறேன். சிங்கள இனவாதிகள் பேசுவதற்கும், தமிழ் இனவாதிகள் பேசுவதற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? தமது இனத்தின், மொழியின் பழம் பெருமை பேசுவதில், இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.

சம்பிக்க ரணவக்கவின் உரையில் இருந்து: 

  •  "எமது மொழி மிகவும் பழமையானது. மூவாயிரம் வருடங்களுக்கும் அதிகமாக, இந்தியாவில் சமஸ்கிருதம் வருவதற்கு முன்பிருந்தே, எமது மொழி அழியாமல் இருந்து வருகின்றது."
  •  "இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று எந்த தேசமும், தனக்கென்று பொதுவான மறை நூலைக் கொண்டிருக்கவில்லை. எமக்கும், இஸ்ரேலிய யூதர்களுக்கும் மட்டுமே அது உண்டு. உலகிலேயே தொன்மையான, எமது இனத்திற்கென்று பொதுவான நூல் அது.
  •  "எமது நாடு உலகிலேயே பழமையான நாடு. எமது ஸ்ரீபாத (சிவனொளிபாத) மலை, இமய மலையை விடப் பழமையானது."

"தமது இனம் எந்தத் தவறும் இழைப்பதில்லை. புழு, பூச்சிக்கு கூட தீங்கிழைப்பதில்லை. எதிரி இனத்தவர்கள் மட்டுமே கொடுமைக்காரர்கள்..." இவை உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளின் வழமையான பிரச்சாரம். அதற்காக, தர்க்கங்களையும் தயாரித்து வைத்திருப்பார்கள்.


சம்பிக்க ரணவக்க ஆற்றிய உரையில் இருந்து:

  • "டெல்லியில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப் பட்டார். அதற்கு பதிலடியாக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், எமது ஜனாதிபதி பிரேமதாசவை தமிழ் தீவிரவாதிகள் கொன்றார்கள். நாங்கள் கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் மேல் கை வைத்தோமா?"
  • "குஜராத்தில் கோத்ரா ரயில் வண்டி எரிப்பில் இந்துக்கள் கொல்லப் பட்டார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், புலிகள் கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வைத்து, பல நூறு சிங்கள மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பழிவாங்குவதற்காக தமிழர்களை கொன்றோமா?"
  • "போர் நடந்த காலங்களில், சுரேஷ் பிரேமச் சந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வசித்தார்கள். வடக்கில் ஒரு சிங்களவர் இல்லை. எல்லோரும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப் பட்டதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வடக்கில் இருந்து சிங்களவர்கள் விரட்டப் பட்டதை பற்றி யாரும் பேசுவதில்லை."

சம்பிக்க ரணவக்க முன்வைக்கும் தர்க்கங்கள் தான், சிங்கள பாசிசத்தின் அடிப்படைகள். பாஸிசம் எப்போதும் ஒரு பக்கச் சார்பான கதைகளையும், அரைவாசி உண்மைகளையும், திரிபுபடுத்தப் பட்ட வரலாற்றையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் 83 கலவரம் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டது போன்று, டெல்லி கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப் பட்டது போன்று, கொழும்பு கலவரத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட கும்பலின் கொலைவெறி, பலியான மக்களின் அவலம், கலவரம் நடத்தப் பட்ட பொறிமுறை, எல்லாமே ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன.

83 கலவரம் பழிவாங்கும் நடவடிக்கை என்றால், அதற்கு முன்னர் நடந்த கலவரங்களுக்கு காரணம் என்ன? சிங்கள ஸ்ரீ எழுத்தை அழித்தார்கள், என்பன போன்ற உப்புச் சப்பற்ற காரணத்திற்காக எல்லாம், தமிழர்கள் கொல்லப் படவில்லையா?

பிரேமதாச கொல்லப் பட்ட போதும், கொழும்பில் குண்டுவெடித்த போதும், தமிழர்களுக்கு எதிரான கலவரம் எதுவும் நடக்காத காரணம், "சிங்கள மக்களின் சகிப்புத் தன்மை" அல்ல. கொழும்பில் கலவரம் நடந்தால், அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கெட்ட பெயர் உண்டாகும் என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம். அப்போது போர் நடந்து கொண்டிருந்ததால், வடக்கு கிழக்கில் போரிடும் சிங்களப் படையினர், "பழிவாங்கும் வேலையை" கவனித்துக் கொள்வார்கள் என்ற "நம்பிக்கை", இன்னொரு காரணம்.

முஸ்லிம்கள் மாதிரி, வடக்கில் வசித்து வந்த சிங்கள மக்களும் விரட்டப் பட்டார்கள் என்பது ஒரு திரிபு படுத்தல். பாதுகாப்பு அச்சம் காரணமாக, எண்ணிக்கையில் குறைவாக இருந்த சிங்களவர்கள் தாமாகவே வெளியேறிச் சென்றனர். வவுனியா, கிழக்கு மாகாண எல்லையோரக் கிராமங்களிலும், அது தான் நிலைமை. போரினால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராம மக்கள் மட்டுமே வெளியேறினார்கள். அது கூட, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ்க் கிராம மக்களுடன் ஒப்பிடும் பொழுது, எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனாலும், பாசிஸ்டுகள் எப்போதும், தம்மின மக்களின் பிரச்சினை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். மற்ற இன மக்களின் அவலம் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சம்பிக்க ரணவக்கவின் உரையானது, இஸ்ரேலிய அரசின் பிரச்சாரங்களை நினைவு படுத்துகின்றது. "பாலஸ்தீன தீவிரவாதிகள் எமது மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பதிலடியாக டெல் அவிவ் நகரில் வாழும் அரபு மக்களுக்கு தீங்கு இழைத்தோமா?" என்றெல்லாம் கேட்பார்கள். சிங்களவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக, சம்பிக்க ரணவக்க தனது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். சிங்களப் பாஸிசம், சியோனிசப் பாசிசத்திடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளது என்பது உண்மை தான்.



சம்பிக்க ரணவக்கவின் முழுமையான உரை:





Sunday, May 25, 2014

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள். 
 அமைதி வழி ஆர்ப்பாட்டம் அடக்கப் பட்டால், ஆயுதங்கள் பேசும் 



துருக்கி, இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதியான Okmeydani எனும் இடத்தில், சில ஆயுதபாணி இளைஞர்களின் நடமாட்டம் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். தலைமறைவாக இயங்கும், DHKP எனும் கம்யூனிச கெரில்லா இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களே, ஆயுதங்களுடன் நடமாடுவதாக சந்தேகிக்கப் படுகின்றது. துருக்கியில் ஓர் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி?
இஸ்தான்புல் நகரின் Sarigazi பகுதியும், ஆயுதபாணி இளைஞர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அந்தப் பகுதியில், துருக்கி மாவோயிஸ்ட் கட்சியான TKP/ML உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். பொலிஸ் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, ஆயுதமேந்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 
Footage from last night's clashes in Sarigazi.














"பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது மேட்டுக்குடியினரின் அடியாட் படை," என்பதற்கு இந்தப் படமே சான்று. இஸ்தான்புல் நகரில், சோமா நிலக்கரிச் சுரங்க விபத்து தொடர்பாக, துருக்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவரை, துருக்கி போலீசார் தெருவில் போட்டு அடிக்கின்றனர். பொலிஸ் பக்கத்தில் நின்று கொண்டு, அகப்பட்ட ஆர்வலரை காலால் உதைக்கும், இந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி யார் தெரியுமா? துருக்கி பிரதமர் எர்டோகானின் அந்தரங்க ஆலோசகர். இந்தப் படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உலகெங்கும் பிரபலமாகி விட்டது. அதனால், ஏற்டோகனின் ஆலோசகர் பொது மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். அவர் அன்றே ஒரு வேலை செய்தார். "உதைத்ததால் கால் வலிக்கிறது" என்று சொல்லி, மருத்துவச் சான்றிதழ் எடுத்துக் கொண்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கி விட்டார். 

Turkish PM’s adviser goes on sick leave for injury to leg used to kick Soma protester http://www.hurriyetdailynews.com/Default.aspx?pageID=238&nID=66658&NewsCatID=338




துருக்கியில், எட்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த, இடதுசாரி பெண் ஊடகவியலாளர் Füsun Erdogan, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளார். நெதர்லாந்து குடியுரிமை பெற்ற Füsun Erdogan, இஸ்தான்புல் நகரில் Özgür Radyo (சுதந்திர வானொலி) என்ற வானொலி நிலையத்தை நடத்தி வந்தார்.

இலட்சக் கணக்கான மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரத்தில், பொதுவுடமைக் கருத்துக்களை பரப்பி வந்தது. செய்திகள், நேர்காணல்கள், புரட்சிப் பாடல்கள் என்று, வழமையான வர்த்தக வானொலிகளில் இருந்து மாறுபட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

துருக்கியில் ஒரு மகாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நேரம், Füsun Erdogan னை நேரில் கண்டு பேசியிருக்கிறேன். Özgür Radyo வானொலியில் எனது நேர்காணலும் நேரடி ஒலிபரப்புச் செய்யப் பட்டது. இது நடந்தது 2006 ம் ஆண்டு. மகாநாடு முடிந்து சில மாதங்களின் பின்னர், Özgür Radyo வானொலி நிலையம் மூடப் பட்டது. Füsun மற்றும் சில அரசியல்- சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

Füsun இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அவரது கைது தொடர்பாக, நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப் பட்டது. இருப்பினும், துருக்கி குடியுரிமையும் வைத்திருந்த காரணத்தால், அரசு அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இருப்பினும், நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் சங்கம் (NVJ), ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் சங்கம் (EFJ) ஆகியன, அவரது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தன.

Füsun இன் மகன் Aktas Erdogan, கடந்த இரண்டு வருடங்களாக, தாயின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தார். சங்கீதக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவனான Aktas ஒரு கிட்டார் இசைக் கலைஞன். ஐரோப்பிய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது.

துருக்கியில் அண்மையில் சில சட்டங்கள் திருத்தப் பட்டன. சில குற்றங்களுக்கான தண்டனைக் காலம் குறைக்கப் பட்டது. அதனால் தான், ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட Füsun, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. "ஒரு இடதுசாரி பயங்கரவாத இயக்கத்தை தலைமை தாங்கியதாக" அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. MLKP என்ற கம்யூனிஸ்ட் கட்சியைத் தான், அரசு அவ்வாறு குறிப்பிடுகின்றது.

துருக்கியில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியையும், சட்டப் படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லித் தடைசெயவார்கள். அவ்வாறு தான், MLKP தடை செய்யப் பட்டிருந்தது.

குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, MLKP வேறு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது எந்த ஆயுதபாணி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் என்றால், ஏதாவதொரு பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பது துருக்கியில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

Füsun இனை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்துவதற்காக, பொலிஸ் தயாரித்த ஆவணங்களில் பல குளறுபடிகள் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. எட்டு வருடங்களுக்கு பின்னர், திடீரென விடுதலை செய்யப் பட்டதற்கு, அதுவும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தற்போது விடுதலையாகி உள்ள Füsun, துருக்கியை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. விரைவில் அவர் நெதர்லாந்து வருவார் என்று எதிர்பார்ப்போம்.

Saturday, May 24, 2014

ஐயோ ஆபத்து! சீனா இலங்கையில் ஊடுருவி விட்டது!


ஐயகோ! சீனா இலங்கையில் கால் வைக்கிறது, கை வைக்கிறது என்று இன்னமும் அலறிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் ஒரு தடவை ஐரோப்பாவுக்கு வந்து பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். சீனாவின் முழு உடம்பும் ஐரோப்பாவில் படுத்துக் கிடக்கிறது.

உணவுப் பொருட்களை தவிர, வீட்டுத் தளபாடங்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், இத்தியாதி இத்தியாதி, எல்லாமே Made in China தான். சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு முறிந்து விட்டால், 90% கடைகளை இழுத்து மூட வேண்டியிருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க உற்பத்திப் பொருட்களை விலை கொடுத்து வாங்குமளவிற்கு பெரும்பான்மை மக்களிடம் பண வசதி இல்லை.

ஐரோப்பிய முதலாளிகள், தொழிற்சாலைகளை அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டு போய் சீனாவில் போடுகிறார்கள். ஐரோப்பாவில் ஒரு கம்பனி திவாலானால், எவனாவது ஒரு சீன முதலாளி வந்து காப்பாற்ற மாட்டானா என்று ஏங்குகிறார்கள்.

சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்து வருவதால், ஆரம்ப பாடசாலைகளிலேயே சீன மொழி கற்பிக்கிறார்கள். சீன சுற்றுலாப் பயணிகளையும், மாணவர்களையும் கவர்ந்திழுப்பதற்காக விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளார்கள். லண்டனில் சில ஆடம்பர அங்காடிகளில், சீன மொழி தெரிந்த விற்பனையாளர்களை பணிக்கமர்த்தி உள்ளனர்.

ஐரோப்பிய நிலவரங்களுடன் இலங்கையை ஒப்பிட்டால், அங்கே இப்போது தான் சீனா மெல்ல மெல்ல தொட்டுக் கொண்டிருக்கிறது போலத் தோன்றுகின்றது. அதற்கே இப்படிப் பதறினால், உங்கள் அறியாமை சிலருக்கு ஆதாயமாக மாறி விடும். கண் கெட்ட பின்னர் தான் சூரிய நமஸ்காரம் செய்வேன் என்று அடம்பிடித்தால், அதனால் யாருக்கு நஷ்டம்?

இலங்கையில் "சீனாவின் ஆதிக்கம்" என்பது என்ன? இலங்கையில், இந்தியாவில் அல்லது வேறொரு ஆசிய, ஆப்பிரிக்க நாட்டில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பதை வைத்து அப்படிக் கூறுகின்றீர்களா? இந்த நாடுகளில் இதுவரை காலமும் மேற்கத்திய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றின் ஆதிக்கம் தான் இவ்வளவு காலமும் இருந்தது. இலங்கையிலும் தான். அதை நீங்கள் மறுக்க முடியாது. தற்போது, அவர்களுக்குப் போட்டியாக சீனா வந்துள்ளது.

இலங்கை போன்ற சிறிய நாட்டைப் பொறுத்த வரையில், அங்கு ஏதாவது ஒரு பெரிய நாட்டின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கும். மேற்கத்திய நாடுகளும், இந்தியாவும் செய்யத் தவறிய பெரும் கட்டுமானப் பணிகளில் சீனா முதலிடுகின்றது. "ஆங்கிலேயர்கள் எமக்கு ரோட்டுப் போட்டார்கள், ரயில் பாதை போட்டார்கள்..." என்று, இன்றைக்கும் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது போலத் தான் இதுவும். அன்று ஆங்கிலேயர்கள், இன்று சீனர்கள்.

அனைத்து அந்நிய ஆதிக்க சக்திகளும், தமது நன்மை கருதி தான் நடந்து கொள்கின்றன. அதாவது அவர்களது கம்பனிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவை. கட்டுமானப் பணிகளுக்கு, சீன நிறுவனம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், சீன அரசு இலங்கைக்கு கடன் கொடுக்கிறது. அதைத் தான், இவ்வளவு காலமும் ஜப்பான் செய்தது. IMF, உலக வங்கி போன்றன, மேற்கத்திய நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் கொடுத்தன.

முதலாளித்துவ உலகில் எல்லாமே இலாபம் கருதித் தான் நடக்கிறது. சீனா மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தால் மக்களுக்கு பெரியளவுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த நாடுகளின் ஆதிக்கம் முழுவதும், பெரும் முதலாளிகளை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அந்நிய ஆதிக்க சக்திகளுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம், ஒரு சில உள்ளூர் தரகு முதலாளிகளுக்கு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. அவர்களோடு சேர்ந்து, குறிப்பிட்டளவு மேட்டுக் குடியினரும் பயன் பெறுவார்கள்.

சீனா என்ன தான் முயன்றாலும், அதனால் இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள மேற்கத்திய, இந்திய ஆதிக்கத்தை எதிர்த்துப் போட்டியிட முடியாது. கலாச்சாரத்தை பொறுத்தவரையில், இன்றைக்கும் ஐரோப்பிய, இந்திய ஆதிக்கமே மேலோங்கிக் காணப் படுகின்றது. அதனை சீனாவால் மாற்றியமைக்க முடியாது.

மேட்டுக்குடி இளைஞர்களை உதாரணமாக எடுத்துப் பார்க்கலாம். ஏற்கனவே சில அந்நிய சக்திகள், அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆங்கில மொழி (பிரிட்டிஷ் ஆதிக்கம்) நவ நாகரிகம் (அமெரிக்க ஆதிக்கம்) அரசியல், மதக் கருத்துக்கள் (இந்திய ஆதிக்கம்). இப்படியானவர்கள் தான் இலங்கையில் அதிகமாக உள்ளனர். அவர்கள் மேல் சீனாவின் ஆதிக்கம் செல்லுபடியாகாது. சீன ஆதிக்கம் என்பது ஒரு எல்லை வரையில் தான் செல்லுபடியாகும்.

இன்று சீனாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்குபவர்களில் எத்தனை பேர், நாளைக்கு இலங்கையில் அமெரிக்கா இராணுவ தளம் அமைத்தால் எதிர்க்கப் போகிறார்கள்?

இலங்கையில் சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதாக காட்டிக் கொள்பவர்கள் கூறும் நியாயம் இது:

//இலங்கையில் சீனா இராணுவ தளம் அமைக்க முற்படுகிறது. நமக்கு அமெரிக்கா, சீனாவைவிட அந்நிய நாடு. சீனா தக்க சமயத்திற்கு காத்துக்  கொண்டிருக்கிறது.// 

இதுவரை கால வரலாற்றில், சீனா வேறு ஒரு நாட்டில் இராணுவ தளம் அமைத்ததாக எந்த தகவலும் இல்லை. அமெரிக்கா உலகில் அதிக இராணுவ தளங்களை வைத்துள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், டியாகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன. இலங்கையில் அமெரிக்கா இராணுவ தளம் அமைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏற்கனவே அமெரிக்க படையினர், இலங்கையில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், "சீனாவை விட, அமெரிக்கா நமக்கு அந்நிய நாடு" அல்ல. இலங்கையில் யாரும் சீனக் கலாச்சரத்தை பின்பற்றுவதில்லை. சீன மொழி படிப்பதில்லை. ஆனால், இலங்கையில் அமெரிக்க ஆதிக்கம், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இலங்கையில் இன்றைக்கும் பெரும்பான்மையானோர் ஆங்கில மொழி படிக்கின்றனர். ஆங்கிலேய அல்லது அமெரிக்க கலாச்சாரம், இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. அப்படி இருக்கையில், நாம் எவ்வாறு "அமெரிக்கா எமக்கு அந்நிய நாடு" என்று கூற முடியும்?


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Thursday, May 22, 2014

"தெற்காசிய ஒன்றியம்" : மோடியின் எதிர்காலக் கனவு?



ஐரோப்பிய ஒன்றியம் மாதிரி, மோடி தலைமையில் ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவாகுமா? இன்று (21-05-2014), ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர், "ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு பொது அரசு" உருவாகும் என்று சொன்னால், யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அப்படிச் சொன்னவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். ஏனென்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில், அந்தளவு தூரம் பகைமை நிலவியது.

மொழியால், கலாச்சாரத்தால் மாறுபட்ட ஐரோப்பிய இனங்கள், சதா சர்வ காலமும், ஒருவருடன் ஒருவர் சண்டை போடுவதிலேயே காலம் கழித்து வந்தன. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையிலான வெறுப்புணர்வு, இன்றுள்ள இந்திய, பாகிஸ்தான் பிரச்சினையை விட மிகத் தீவிரமாக இருந்தது. சிங்களவர்களும், தமிழர்களும் மோதிக் கொண்டதை விட மிகவும் மோசமாக, ஐரோப்பிய இனங்கள் தமக்குள் மோதிக் கொண்டன. ஈழப் போரில் இறந்ததை விட, பல மடங்கு அதிகமான ஐரோப்பிய மக்கள் இனப் பகையால் மாண்டனர். இன்று அவை எல்லாம் பழங் கதைகள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதாரணத்தை, இன்று பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பின்பற்ற விரும்புகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம், சார்க் நாடுகள் போன்ற அமைப்புகள், அந்த நோக்கத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்தியப் பிரதமராக தெரிந்தெடுக்கப் பட்ட நரேந்திர மோடி, சார்க் நாடுகளின் தலைவர்களை தனது பதவிப் பிரமாணத்திற்கு அழைத்ததின் பின்னணிக் காரணமும் அதுவாக இருக்கலாம். சார்க் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மாதிரி, தமக்கு இடையிலான பகையை மறந்து, பொதுவான வர்த்தக அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் ஏற்கனவே ஆலோசிக்கப் பட்டுள்ளது.

நீண்ட காலமாகவே, உள்நாட்டு தீவிரவாதத்தை ஒழிப்பது சார்க் நாடுகளின் தலையாய கடமையாக இருந்து வந்தது. அதனால் தான், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் போரில், இந்தியாவும், பாகிஸ்தானும் கை கோர்த்துக் கொண்டு, இலங்கை அரசுக்கு உதவின. உண்மையில், ஈழப் போரின் முடிவானது, தெற்காசிய நாடுகளில் முன்னெப்போதும் நடந்திராத முன்னுதாரணமாக திகழ்ந்தது. அந்த உதாரணம், இனி வருங்காலத்தில், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பின்பற்றப் படலாம்.

"மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை அழித்தது. மோடியின் பாஜக அரசு அமைந்தால், தமிழர்களுக்கு சாதகமாக அமையும்." என்றெல்லாம் பரப்பப் படும் கதைகள், பூகோள அரசியல் குறித்த அறியாமையில் இருந்து எழுகின்றது. இந்திய அரசின் வெளிவிவகார கொள்கை, எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் மாறப் போவதில்லை. மன்மோகன் சிங் தொடக்கி வைத்ததை, நரேந்திர மோடி முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய பொருளாதார பலம் மிக்க நாடான ஜெர்மனி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதே போன்று, தெற்காசிய ஒன்றியம் உருவானால், அங்கே இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இங்கே பாகிஸ்தானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல நூறு வருடங்களாக, ஜெர்மனியுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த பிரான்ஸ், இறுதியில் இணங்கிப் போன மாதிரி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேரலாம்.

தெற்காசிய நாடுகள் ஒன்று சேர்வதற்கு அடிப்படையாக உள்ள பொதுவான குணாம்சம் என்ன இருக்கிறது? அந்தக் கேள்வி ஐரோப்பாவிலும் எழலாம். ஐரோப்பியர்கள், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்டவர்கள் மட்டுமல்ல. பொதுவானதாக கருதப்படும் கிறிஸ்தவ மதம் கூட அவர்களை ஒன்று சேர்க்காமல், பிரித்து வைத்திருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு வெறுப்புக் கொண்டிருந்தார்கள். கிரேக்க (ஒர்தொடக்ஸ்) கிறிஸ்தவ மரபை பின்பற்றுவோருடனும் அப்படித் தான்.

உண்மையில், இருபதாம் நூற்றாண்டில் பரவிய முதலாளித்துவ லிபரல் கலாச்சாரம் தான், அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் ஒன்று சேர்த்தது. 2 ம் உலகப் போருக்குப் பிந்திய ஐரோப்பாவில், மத-இனப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. புதிய தலைமுறை ஐரோப்பியர்கள், வாழ்க்கைக்கு பொருளாதாரமே முக்கியம் என்று உணர ஆரம்பித்தனர். 

இதே மாதிரியான முதலாளித்துவ லிபரல் கலாச்சாரம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. ஆகவே மோடி தலைமையில், ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவானால், அது குறித்து யாரும் ஆச்சரியப் படத் தேவையில்லை. பல்லின, மத வேறுபாடுகளைக் கொண்ட மக்களை ஒன்று சேர்க்கும் வல்லமை முதலாளித்துவத்திற்கு உண்டு.


ஐரோப்பிய ஒன்றியம் குறித்த முன்னைய பதிவுகள்:
ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்

மோடி குறித்த முன்னைய பதிவுகள்:
மோடியால் எதையும் சாதிக்க முடியாது
நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்

Tuesday, May 20, 2014

மோடியால் எதையும் சாதிக்க முடியாது


நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவானதற்கு, மேற்கத்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அது ஏன் என்ற காரணத்தையும் பகிரங்கமாக கூறி விடுகின்றன. அதாவது, மேலைத்தேய மூலதனம் போடும் தாளத்திற்கு ஏற்றவாறு, மோடி ஆடுவார் என்று கணிப்பிடுகின்றன. நிதி மூலதன நிறுவனங்கள் கோரும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவார். "இந்தியாவின் மார்க்கிரட் தாட்சர்" ஆக வருவார் என்றெல்லாம் புகழாரம் சூட்டுகின்றன.

மோடியால் எந்தளவுக்கு சாதிக்க முடியும் என்பது பற்றி, NRC Handelsblad பத்திரிகையில், புருசல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் Jonathan Holslag, மிகவும் ஆழமான ஆய்வொன்றை செய்துள்ளார். அவர் கூறுவதன் படி, மோடி பெரிய சாதனை எதையும் நிகழ்த்திக் காட்டப் போவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கப் படும், பொருளாதார சீர்திருத்தம் வெற்றியடையப் போவதில்லை. மறுபக்கம், இந்திய தேசியவாதிகளையும் அவர் திருப்திப் படுத்தப் போவதில்லை.

"இந்திய மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால், இந்தியா மாற்றமடையும்" என்று வெற்றி விழாவில் மோடி கூறினார். அது ஒரு கனவு. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கலாம். பாராளுமன்றத்தில், பாஜக 51% ஆசனங்களை கைப்பற்றி இருக்கலாம். ஆனால், வெறும் 31% வாக்காளர்களின் ஓட்டுக்களைப் பெற்றுத் தான், பாஜக பெரும்பான்மை ஆசனங்களை வென்றது என்பதை மறந்து விடலாகாது. கிட்டத்தட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், பிராந்திய மட்டத்திலான சிறிய கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். இதன் மூலம், இந்திய வாக்காளர்கள் மிகவும் ஆழமாக பிளவு பட்டிருக்கின்றமை தெளிவாகின்றது.

மோடிக்கு முன்னால் உள்ள முக்கியமான சவால்: பொருளாதாரம். அடுத்த பத்து வருடங்களில், இந்தியாவில் 15 மில்லியன் பேர், புதிதாக வேலை தேடி தொழிற் சந்தையில் நுழையப் போகிறார்கள். அவர்களுக்காக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டி இருக்கும். இந்தியாவின் இரண்டு முக்கியமான பாரம்பரிய பொருளாதார ஆதாரங்கள் சரிவர இயங்குவதில்லை. அளவுக்கு மிஞ்சிய செயற்கை உரங்களின் பாவனை காரணமாக, விவசாய உற்பத்தி துறை பெரிதும் நலிவடைந்துள்ளது. நகரங்களுக்கு தேவையான மலிவு விலைப் பொருட்களை விநியோகித்து வந்த, ஒழுங்கமைக்கப் படாத சிறு வணிகம் தற்போது இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக, உள்கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தப் போவதாக மோடி அறிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின்சாரமயமாக்கல், தொழிற்சாலைகள் எல்லாம் உடனடித் தேவைகள். ஆனால், அதற்காக உள்ளூர் அதிகார பீடங்களுடன் மல்லுக் கட்ட வேண்டியிருக்கும். ஊழலை ஒழிக்க முடியாத அளவிற்கு, அவரது சொந்தக் கட்சியினரே ஊழலில் மாட்டிக் கொண்டுள்ளனர். உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இன்னமும் மீளவில்லை.

அரசாங்கம் உள்நாட்டு நுகர்வோர்களை நம்பி இருக்க முடியாது. இந்தியாவின் உள்நாட்டு நுகர்வோர்களின் அதிசயப் படத் தக்க வளர்ச்சி என்பது ஒரு மிகைப் படுத்தல். நீண்ட காலமாகவே, இந்தியாவின் பொருளாதாரம், சீனாவுடையதை விட நான்கு மடங்கு சிறியதாக இருந்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரம் பல பற்றாக்குறைகளின் மேலே கட்டியெழுப்ப பட்டது. வணிக நிலுவையில் பற்றாக்குறை. அதிகரித்துச் செல்லும் கடன் சுமை. இதை விட அரசாங்கத்தின் பற்றாக்குறை தனியானது.

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை,இந்திய அரசு மானியங்களுக்காக செலவு செய்கின்றது. அதன் உதவியால் தான், வறிய குடும்பங்களை தலைநிமிர வைக்க முடிகின்றது. மோடி அதில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார். ஆனால், வேறு மாற்றீடு எதுவும் இல்லாமல், மானியங்களை குறைப்பது ஒரு அரசியல் தற்கொலை செய்வதற்கு சமமானது. ஆனால், மானியங்களை தொடர்ந்தும் வைத்திருந்தால், மோடி வாக்குறுதி அளித்த கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற முடியாது.

இந்தியாவின் புதிய அரசியல் நட்சத்திரம், அந்த நாட்டை சூழவுள்ள சிக்கலான பாதுகாப்பு நிலவரங்களுக்கு வாரிசு உரிமை பெற்றுள்ளது. அவரது கட்சியினர் எதிர்பார்ப்பது போல, பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்து கொள்ள முடியாது. பங்களாதேஷ் விஷயத்திலும் அதுவே நடக்கும். சீனா மென்மேலும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில், வாக்குறுதி அளித்த பொருளாதார மாற்றம் எதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், அவரால் தேசியவாத உணர்வுகளை எதிர்த்து நிற்க முடியுமா? நான் எதிர்பார்க்கும் பதில்: "முடியாது, அது அவரால் முடியாது."

(நன்றி:NRC Handelsblad, 19-05-2014)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Sunday, May 18, 2014

நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்


ஒரு இனப்படுகொலையாளி பிரதமராகிறார்! நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பலர் துள்ளிக் குதிக்கின்றனர். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வென்ற பொழுது கூட, இலங்கையில் பலர் இவ்வாறு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மோடி ஆதரவாளர்களில், கணிசமான அளவு தமிழர்களும் அடங்குவார்கள். அவர்கள் யாரும் ஈழப் போரின் துயர முடிவில் இருந்து, எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகின்றது.


முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஐந்தாண்டு நினைவு தினமும், நரேந்திர மோடி இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தினமும் அடுத்தடுத்து வந்தது, ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வரப்போகும் பேரழிவை அது கட்டியம் கூறுகின்றது. 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது, அவர் தமிழ்த் தீவிரவாதத்தை, அல்லது புலிகளை அழித்தொழிப்பார் என்ற என்ற எதிர்பார்ப்பில் பலர் அவருக்கு ஓட்டுப் போட்டிருந்தனர். அதன் விளைவு தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள். 

நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களின் மனநிலையும், அதற்கு சற்றேனும் குறைந்தது அல்ல. இஸ்லாமிய தீவிரவாதத்தை, காஷ்மீர் இயக்கங்களை, நக்சலைட்டுகளை அழித்தொழிப்பார் என்று எதிர்பார்த்து, மோடிக்கு ஓட்டுப் போட்டதாக பலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச முதல்தடைவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நேரம், "அவர் ஒரு மிகத் தீவிரமான சிங்களப் பேரினவாதி, இதற்கு முன்னர் இருந்த எல்லா சிங்களத் தலைவர்களையும் விட கடும்போக்காளர், அவர் ஜனாதிபதியாக தெரிவானால், தமிழர்களுக்கு அழிவுகாலம் நிச்சயம்...." என்றெல்லாம் கூறி, புலிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அன்று, புலிகளின் ராஜபக்ச எதிர்ப்புப் பிரச்சாரங்களை யாரும் பொருட் படுத்தவில்லை. நல்லாட்சி தருவார் என்ற எதிர்பார்ப்பில், பெரும்பாலான மக்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள். 

2005 ம் ஆண்டு, புலிகள் விடுத்த ராஜபக்ச அபாயம் பற்றிய எச்சரிக்கைகள் யாவும், 2009 ம் ஆண்டு உண்மையென மெய்ப்பிக்கப் பட்டது. இலங்கையில் நல்லாட்சி தருவார் என நம்பப் பட்ட கடும்போக்காளர், புலிகளையும், அவர்களோடு ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் படுகொலை செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஒரு பெரும் மனிதப் பேரவலம் நடந்த அந்த நாட்களை, உலகெங்கும் வாழும் புலி ஆதரவாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், மே 18 இனப்படுகொலை தினமாக நினைவுகூர்கின்றனர். 

இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடும் நரேந்திர மோடி பிரதமராக தெரிவானால் ஏற்படப் போகும் ஆபத்துகள் குறித்து, ஏற்கனவே பலர் எச்சரித்திருந்தனர். ஆனாலும், பெரும்பான்மை இந்திய மக்கள், அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு காலத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் மட்டுமல்ல, தன்னை எதிர்த்தவர்களையும் கூட, நரேந்திர மோடி ராஜபக்சவின் பாதையை பின்பற்றி அழித்தொழிக்கலாம். 

இந்தியாவிலும், ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்க விட மாட்டோம் என்று, மே 18 நினைவுநாளில் உறுதி பூணுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து, ஐந்தாண்டுகளுக்கு பின்னரும், ராஜபக்ச எதிர்ப்பு போராட்டம், அயல்நாடான இந்தியாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், உயிர்ப்புடன் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. அதே மாதிரி, மோடி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப் படும்.

Saturday, May 17, 2014

தமிழரை கியூபாவுக்கு அனுப்பி விடத் துடிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்

"சோஷலிசம் சிறந்தது என்று பேசும் தமிழர் எல்லோரும், கியூபாவுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே அகதித் தஞ்சம் கோருமாறு.... " ஒரு அறிவுஜீவி நண்பர், ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவரது ஆலோசனைக்கு முதற்கண் நன்றிகள்.

ஈழத் தமிழர்கள் யாராவது தமிழீழத்திற்கு ஆதரவாக பேசினால், அவர்களை தமிழ்நாட்டுக்கு போகுமாறு சொல்வதைப் போன்றுள்ளது மேற்படி நபரின் கூற்று. சிங்கள இனவாதிகளும், அதைத் தானே காலங்காலமாக ஈழத் தமிழர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

 ஈழத்தில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழர்கள் கம்யூனிசம், சோஷலிசம் பேசுகிறார்கள் என்பதற்காக, அவர்களை எல்லாம் பிடித்து கியூபாவுக்கு நாடு கடத்தி விட்டால், அப்புறம் அங்குள்ள வேலைகளை யார் செய்வார்களோ தெரியவில்லை. மேட்டுக்குடியினரிடம் பணம் இருப்பதால், பங்களாதேஷ்ஷில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வார்களோ தெரியாது. சரி, அது போகட்டும். அது அவர்களது பிரச்சினை.

தற்போது, என்னிடம் பல அறிவுஜீவிகளும், "கியூபாவுக்கு போ!" என்று சொல்லி இருப்பதால், கியூபாவில் அகதித் தஞ்சம் கேட்பது எப்படி என்று விசாரித்துப் பார்த்தேன். கியூபாவில் எப்படிப்பட்ட அகதிகளை அனுமதிப்பார்கள்? தஞ்சம் கோரும் அகதிகள் என்ன காரணத்தை சொன்னால் அங்கீகரிப்பார்கள்? இது பற்றி எல்லாம் விசாரித்துப் பார்த்தேன்.

கியூபா இன்னமும் ஒரு வறிய நாடு தான். இருப்பினும், பல தசாப்த காலமாக கியூபாவில் பல வெளிநாட்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோஷலிசப் புரட்சிக்கான கெரில்லாப் போர் நடக்காத லத்தீன் அமெரிக்க நாடு எதுவும் இருக்கவில்லை. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் பலருக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டுள்ளது.

எல் சல்வடோர், பிரேசில் ஆகிய நாடுகளில் ஏழை மக்களின் விடுதலைக்காக, மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து போதித்து வந்த கத்தோலிக்க பாதிரியார்கள் இருந்தனர். "விடுதலை இறையியல்" என்ற சித்தாந்தத்தின் கீழ், வர்க்கப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள், அந்த நாடுகளில் இருந்த வலதுசாரி இராணுவ சர்வாதிகாரிகளினால் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். அதனால், நிறைய மார்க்சிய- கத்தோலிக்க பாதிரியார்கள் கியூபாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

சிலியில் சி.ஐ.ஏ. ஆதரவுடன் திடீர் சதிப்புரட்சி நடந்தது. இராணுவ ஆட்சியாளர்கள், வீடு வீடாகச் சென்று, நாட்டில் இருந்த கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளை எல்லாம் கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தார்கள். ஆயிரக் கணக்கானோரை சித்திரவதை செய்து, கொலை செய்தனர். அதனால், சிலியில் இருந்து தனியாகவும், குடும்பமாகவும் தப்பியோடிய, ஆயிரக் கணக்கான இடதுசாரிகளுக்கு, கியூபாவில் அகதித் தஞ்சம் வழங்கப் பட்டது. கியூப அரசு, அவர்களுக்கான புதிய வீடுகளை கட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

லத்தீன் அமெரிக்க நாட்டு அகதிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு அமெரிக்க அகதிகளும் கியூபாவில் வாழ்கின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி இருந்த, "கருஞ் சிறுத்தைகள்" அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் பலர், கியூபாவில் அரசியல் தஞ்சம் கோரி, இன்னமும் அங்கே வாழ்கின்றனர்.

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, கியூபாவில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவருக்கு அகதித் தஞ்சம் வழங்கப் படுகின்றது: அகதியாக புலம்பெயர்ந்தவரின் சொந்த நாட்டில், 
  1. வர்க்கப் போர் நடந்து கொண்டிருக்க வேண்டும். 
  2. ஒரு ஆயுதபாணி விடுதலை இயக்கம், அந்த நாட்டில் உள்ள முதலாளித்துவ அரசை கவிழ்த்து அங்கே சோஷலிச அரசை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்க வேண்டும். 
  3. ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர், கம்யூனிச அல்லது இடதுசாரி சிந்தனையாளர்களை வேட்டையாடி கொன்று, சித்திரவதை செய்திருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இருந்து, புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் கொடுப்பார்களாம். 

ஆகவே, அறிவுஜீவி நண்பர்கள் என்னை கியூபாவுக்கு போகுமாறு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், கியூபாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு தேவையான பின்வரும் ஆதாரங்களை திரட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்: 
  •  இலங்கையில் இன முரண்பாடு எதுவும் இல்லை, அங்கே நடந்தது ஒரு வர்க்கப்போர். 
  •  ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகள் ஒரு கம்யூனிசப் புரட்சி இயக்கம். 
  •  அவர்கள் அமைக்க விரும்பிய தமிழீழம் சோஷலிசப் பொருளாதாரத்தை கொண்டிருக்கும். 
  • இலங்கையில் மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் பேசுவது தடை செய்யப் பட்டுள்ளது. 
  • ஸ்ரீலங்கா இராணுவம், கம்யூனிச, சோஷலிச நம்பிக்கையாளர்களை வேட்டையாடிக் கொன்று குவித்து வருகின்றது.


ஓர் அகதி, உலகில் எந்த நாட்டில் தஞ்சம் கோரினாலும், என்ன பிரச்சினை காரணமாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தார் என்பதற்கான காரணத்தைக் கூற வேண்டுமென்பது, உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகவே, காலதாமதம் செய்யாமல், மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை கொண்டு வந்து வந்து சமர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, May 16, 2014

தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை, அகதிக்கு மெய்யுரைக்க யாருமில்லை

அகதி முகாம் ஒன்றினுள், பல்லின அகதிகள் 
"சோஷலிச நாடுகளில், மக்களின் வாழ்க்கைத்தரம் நன்றாக இருந்தது என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். நீங்கள் எதற்காக சீனா, கியூபா மாதிரி கம்யூனிச நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழாமல், முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றீர்கள்?" என்று பல அறிவுஜீவிகள், என்னைப் பார்த்து கேட்கின்றனர். அப்படிக் கேள்வி கேட்டு விட்டு, தங்களது புத்திசாலித்தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

வாஸ்தவம் தான். நானும் அவர்கள் அளவிற்கு மெத்தப் படித்திருந்தால், "உலகில் முதலாளித்துவ நாடுகள், கம்யூனிச நாடுகள் என்றெல்லாம் இருக்கின்றன" என்று தெரிந்து வைத்திருப்பேன். அவர்கள் படித்த பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு நானும் சென்றிருந்தால், முதலாளித்துவ, சோஷலிச நாடுகளில் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்பதை அறிந்து வைத்திருந்திருப்பேன். என்ன செய்வது? நான் உலகப் பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன். அதனால் தான், அனுபவத்தின் மூலம், இந்த உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு சிறிது காலம் எடுத்தது.

என்னிடம் கேள்வி கேட்ட அறிவுஜீவிகள் பிறந்த நாட்டில் தான் நானும் பிறந்தேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் "தமிழனுக்கு தாய்நாடு இல்லை" என்பது மட்டும் தான். "உலகில் உள்ள எல்லா இனங்களுக்கும் ஒரு தாய்நாடு இருக்கிறது. ஆனால், தமிழனுக்கு மட்டும் இல்லை." என்று தான், நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். தமிழ் தேசியவாத அரசியல் ஆதிக்கம் செலுத்திய ஊரில் பிறந்து வளர்ந்த என்னிடம், வேறெந்த அரசியல் கொள்கையை எதிர்பார்க்கின்றீர்கள்?

ஒரு மேற்கத்திய நாட்டுக்கு அகதியாக சென்று புகலிடம் கோரும் வரையில், "உலகில் தமிழனுக்கு மட்டுமே பிரச்சினை இருக்கிறது." என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன். அகதி முகாம்களில் தமிழர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் நினைத்தேன். ஆனால், "தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் பல இனங்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது," என்பது, நான் புலம்பெயர்ந்த பின்னர் தான் தெரிந்தது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில், தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், முஸ்லிம்களும் இருந்தார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், ஈரான், துருக்கி, சூடான், சோமாலியா, எத்தியோப்பியா, சியாரா லியோன், ஆர்மீனியா, ரஷ்யா, யூகோஸ்லேவியா, பொஸ்னியா... இப்படி உலகின் பல பாகங்களில் இருந்தும் அகதிகள் வந்திருந்தார்கள். "அடடே... இவர்கள் எல்லோருக்கும் ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறதா?"

அப்போது தான், உலகில் தமிழனுக்கு மட்டுமல்ல, இன்னும் பல இனங்களுக்கும் இதே பிரச்சினை இருக்கின்றது என்பது, இந்த மர மண்டையில் உறைத்தது. ஊரில் வாழ்ந்த காலத்தில், இந்த உண்மை தெரியாமல் இருந்து விட்டேனே, என்று என் அறியாமையை சபித்துக் கொள்ள நேரிட்டது.

முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை, அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகள் தான் எனக்குச் சொன்னார்கள். அதற்குப் பிறகு தான், சோஷலிசம், கம்யூனிசம் என்பதற்கு அர்த்தம் என்னவென்று புரிந்தது.

உலகில் இப்படி எல்லாம் இருக்கிறது என்பதை, உங்களை மாதிரி பல்கலைக்கழக பட்டம் வாங்கிய அறிவுஜீவிகள் சொல்லிக் கொடுத்திருந்தால் தெரிந்திருக்கும். எங்களைப் போன்ற பாமர மக்கள், உலகம் முழுவதும் அகதியாக சென்று தான், இதை எல்லாம் அறிய வேண்டி இருக்கிறது.

தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை, 
அகதிக்கு மெய்யுரைக்க யாருமில்லை

Thursday, May 15, 2014

ஐரோப்பாவில் கல்வி : முற்றிலும் இலவசம் அல்ல

"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

கல்வி கற்க விரும்புவதும், அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வசதி செய்து கொடுப்பதும், ஒரு சிலரின் பார்வையில் "கம்யூனிசம்" என்றால், சாதாரண பாமர மக்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே விரும்புவார்கள். தமது சொந்தக் காசை செலவு செய்து வெளிநாட்டில் படிப்பவர்கள், தமது மூளை உழைப்பை பணக்கார நாடுகளின் அபிவிருத்திக்கு காணிக்கை ஆக்குபவர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை உயர்கல்வி வரையில், கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு மாணவர்களும் இலவசமாக கல்வி கற்கலாம். ஆனால், "முற்றிலும் எல்லாம் இலவசம்" என்று கருதி விட முடியாது. நான் நோர்வேயில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். அந்த நாட்டில், இடைத்தர தொழிற்கல்வி இலவசமாக கிடைப்பதில்லை.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பல்கலைக்கழக கல்வி கற்பவர்களை விட, தொழிற்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். நோர்வேயும் அதற்கு விதிவிலக்கல்ல. குடும்பக் கஷ்டம் காரணமாக, உடனடியாக வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள், ஏதாவதொரு தொழிற்கல்வியை தான் தேர்ந்தெடுப்பார்கள். கஷ்டப் பட்டவனிடம் பணம் பறிப்பது, என்ன வகை நியாயம் என்று தெரியவில்லை.

உயர்கல்விக்கு கட்டணம் எதுவும் அறவிடுவதில்லை. ஆனால், மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக, அரசு கல்விக் கடன் கொடுக்கிறது. இந்தக் கடனை, வேலை செய்யும் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், தற்போது பல தனியார் பாடசாலைகளும், தனியார் கல்லூரிகளும் வந்து விட்டன. அவர்கள் நிர்ணயிக்கும் விலையை கொடுத்து படிப்பது, பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே முடிந்த காரியம்.

முன்னொரு காலத்தில், ஜெர்மனியில் கல்வி இலவசமாக கிடைத்தது. அனால், இப்போது நிறைய கட்டணம் வசூலிக்கிறார்கள். முன்பு, கிழக்கு ஐரோப்பாவில் பல சோஷலிச நாடுகள் இருந்த படியால், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இலவசக் கல்வி வழங்கி வந்தார்கள். பெர்லின் மதில் விழுந்து, சோவியத் யூனியனும் உடைந்த பின்னர் அந்த தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கல்விக் கட்டணத்தை கூட்டி வருகின்றனர். இன்னொருவிதமாக கூறினால், இதுவரை காலமும் கல்விக்கு அரசு கொடுத்து வந்த மானியத்தை குறைத்துக் கொண்டு வருகின்றது.

சோஷலிச நாடுகளில் கல்வி முற்றிலும் இலவசம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்கள் சிலரை சந்தித்துப் பேசினேன். ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, கியூபா ஆகிய பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், புலமைப்பரிசில் (Scholarship) கிடைத்து, மொஸ்கோவில் படித்து விட்டு வந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்பதற்கு, குறிப்பிட்டளவு அதி புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே புலமைப் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால், அது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே நன்மை பயக்கின்றது.

தங்களது சொந்தக் காசில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களானாலும், ஸ்காலர்ஷிப் கிடைத்து செல்லும் ஏழை மாணவர்கள் ஆனாலும், பெரும்பாலானோர் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்து தங்கி விடுகின்றனர். இதன் மூலம், மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த புத்திசாலி மாணவர்களின் மூளை உழைப்பை பயன்படுத்திக் கொள்ளும் பணக்கார நாடுகள், காலப்போக்கில் அந்த "சொத்தை" தமதாக்கிக் கொள்கின்றன. வறிய நாடுகளில் இதனை மூளை வெளியேற்றம் (brain drain) என்று அழைப்பார்கள். அதாவது, வறிய நாடுகளை சேர்ந்த அறிவுஜீவிகளின் திறமை, அந்த நாட்டு மக்களுக்கு பயன்படுவதில்லை. பணம் உள்ள நாடுகள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன.

முன்னாள் சோஷலிச நாடுகளில் அப்படி அல்ல. அந்த நாடுகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், சோவியத் யூனியனில் உயர்கல்வியை முடித்து விட்டு, தமது சொந்த நாடுகளில் வேலை செய்து வந்தனர். சோவியத் யூனியனில் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒரு சில "அதி புத்திசாலி மாணவர்களுக்கு" மாத்திரம் கிடைக்கும் சலுகையா? அப்படி அல்ல. இது குறித்து, சோவியத் யூனியலில் கல்வி கற்ற எனது ஆப்கானிய நண்பர்களிடம் வினாவினேன். 

எண்பதுகளில், ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலங்களில், "சோவியத் ஒன்றியத்தில் உயர்கல்வி கற்க விரும்புவோர் பதிவு செய்யுமாறு" இடைத்தர, உயர்தர வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் வகுப்பாசிரியர் வந்து கேட்பார். வெளிநாட்டில் படிக்கும் ஆர்வமுள்ள எல்லா மாணவர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும். இறுதித் தேர்வில் அதி கூடிய புள்ளிகள் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. 

ஒரு காலத்தில், சோவியத் யூனியனுடன் நட்புறவு பேணிய, முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த பிரஜைகள் எல்லோருக்கும், மேற்படிப்புக்காக சோவியத் யூனியனுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவை சோஷலிச நாடுகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. பிரேசில், இந்தியா, இலங்கை போன்ற சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பேணிய பன்னாட்டு மாணவர்களுக்கு அந்தச் சலுகை கிடைத்து வந்தது. 

சோவியத் யூனியனில், கல்விக் கட்டணம் கிடையாது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கைச் செலவையும் அரசே கொடுத்து வந்தது. மேலும் அது கடன் அல்ல. வெளிநாட்டு மாணவர்களாக இருந்தாலும், திருப்பிக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதனால், பண வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும், வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியது.

அது மட்டுமல்ல, கோடை கால விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அல்லது விரும்பாதவர்கள், ஏதாவதொரு வேலை செய்து சம்பாதிக்க முடிந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு படிக்கச் சென்றால் தான் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தகவல் நம்ப முடியாமல் இருக்கலாம். சோவியத் யூனியனில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு தொழிலாளிக்கு கிடைத்த குறைந்த பட்ச சம்பளம் கூட, அண்ணளவாக மாதமொன்றுக்கு 1000 டாலர்கள்.

சோவியத் யூனியனில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வேலை செய்வதற்கு விசேட அனுமதி பெற்றிருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதே நேரம், கஷ்டப் பட்டு தேட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. வேலை செய்ய விரும்பியவர்கள், சும்மா ஒரு தொழிற்சாலைக்கு நேரில் சென்று கேட்டால் போதும். அங்கே எப்போதும் ஏதாவதொரு வேலை இருக்கும். ஒரு மாத கோடை கால விடுமுறையில், வேலை செய்து சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பி விட்டு படித்தவர்கள் நிறையைப் பேர். இந்தத் தகவல்கள் யாவும், அங்கு கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பெறப் பட்டவை.


"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

Tuesday, May 13, 2014

இலங்கையில் பௌத்த மதத்தை உயிர்ப்பித்த டச்சு காலனியாதிக்கம்

இலங்கையில் வாழும்
நெதர்லாந்து பௌத்த துறவி
ஆனந்தா ஒலாண்டே, தலாய் லாமாவுடன்.
இலங்கை  சுமார் 500 வருட காலமாக ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. ஆயினும், 2000 வருடங்களுக்கும் அதிகமாக, அங்கே பௌத்த மதம் அரச மதமாக வீற்றிருக்கின்றது. பௌத்த மதம் 2000 வருட தொடர்ச்சியை இலங்கையில் மட்டுமே பேணி வருகின்றது என்பதால், சிங்கள பௌத்தர்களுக்கு அது குறித்த கர்வமும் உண்டு. மிகக் கடும்போக்கான மதவாத, இனவாத அரசியலும் அதிலிருந்தே பிறக்கிறது. அந்நிய மேலாதிக்க சக்திகளிடம் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு, சிங்கள- பௌத்தர்களை எத்தகைய தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கவும் தூண்டி விடுகின்றது.

இன்று சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள காலத்தில், மகாவம்ச கால கதைகளை புதுப்பித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சோழர்கள் காலத்தை விட, போர்த்துக்கேயர் காலத்தில் தான் பௌத்த மதம் பேரழிவைக் கண்டது. கடும்போக்கு கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளான போர்த்துக்கேயர்கள், இலங்கையில் வேறெந்த மதத்தையும் அனுமதிக்கவில்லை. பௌத்த, இந்து, இஸ்லாமிய  மத நம்பிக்கையாளர்களை படுகொலை செய்து, அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களை அழித்தார்கள். உடைக்கப்பட்ட இந்து, பௌத்த ஆலயங்களில் இருந்த கற்களை பெயர்த்தெடுத்து, கத்தோலிக்க தேவாலயங்களை கட்டினார்கள்.

போர்த்துகேயர்களின் மத அடக்குமுறையானது, இலங்கையை 100% கிறிஸ்தவ நாடாக மாற்றும் நோக்கத்தை கொண்டிருந்தது. பிற மதங்களுக்கான சுதந்திரம் மறுக்கப் பட்டதால், கிறிஸ்தவர்களாக மாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. யாழ் குடாநாட்டில் தொண்ணூறு சதவீதமான தமிழர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள்.

போர்த்துக்கேயர்கள், இலங்கையில் இருந்த பௌத்த மத சங்கங்களை, விகாரைகளை எல்லாம் அழித்தார்கள். அங்கிருந்த பிக்குகளை கொன்றார்கள். அதனால், ஒரு கால கட்டத்தில், இலங்கையில் பௌத்த மதக் கல்வி போதிப்பதற்கு ஆள் இருக்கவில்லை. ஒரு சாதாரணமான வழிபாட்டுக்கு தலைமை தாங்கவும், மக்களின் மதச் சடங்குகளை செய்யவும், பிக்குகள் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றில் கொலை செய்யப்பட்டு விட்டனர், அல்லது வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனர்.

இதற்கிடையே, ஐரோப்பாவில், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய தாழ்நில மாநிலங்கள், ஸ்பெயின் சாம்ராஜ்யத்தில் இருந்து விடுதலை அடைவதற்காக போராடிக் கொண்டிருந்தன. 80 ஆண்டு கால போரின் இறுதியில், நெதர்லாந்து என்ற தனி ராஜ்ஜியம் உருவானது. ஸ்பானிஷ் காரர்கள் கத்தோலிக்கர்கள் என்பதும், டச்சுக் காரர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் என்பதும் போருக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது. கடல் கடந்து வாணிபத்தில் ஈடுபட்ட புரட்டஸ்தாந்து டச்சு வணிகர்கள், ஸ்பானிஷ்காரர்களின் எதிரிகளான துருக்கி, மொரோக்கோ போன்ற இஸ்லாமிய நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். பிற்காலத்தில், நவீன முதலாளித்துவ சமுதாயம் உருவாவதற்கு, இது போன்ற அரசியல் மாற்றங்களும் காரணமாக அமைந்தன.

அன்றிருந்த போர்த்துக்கேயர்கள், ஸ்பானிஷ்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பல உலக நாடுகளை காலனிப் படுத்தி இருந்தனர். அதனால், இலங்கைத் தீவை போர்த்துக்கேயர்கள் ஆண்டாலும், ஸ்பெயினின் கூட்டாளிகள் என்பதால், டச்சுக் காரர்கள் படையெடுத்தனர். போர்த்துக்கேயர்கள் வெளியேறிய பின்னர், VOC எனப்படும் கிழக்கிந்தியக் கம்பனி, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. VOC இனை, உலகின் முதலாவது தேசங் கடந்த வர்த்தகக் கழகம் என்று கூறலாம். அதனால், VOC ஆட்சிக் காலத்தில் இலங்கையில் நடந்த மாற்றங்கள் சில, இன்றைய முதலாளித்துவ காலகட்டத்துடன் பெரிதும் ஒத்துப் போகின்றது. இந்தப் பின்னணியிலேயே, மதம் குறித்த டச்சு ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

டச்சுக் காரர்கள், இலங்கையில் மீண்டும் பௌத்த, இந்து மதங்கள் தழைப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். பௌத்த மதத்தை பொறுத்தவரையில், மீண்டும் எழுந்திருக்க முடியாதவாறு வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கையில் பௌத்த மதத்தை மீள உயிர்ப்பிக்க வேண்டுமானால், மதக் கல்வி கற்ற பிக்குகள் அவசியம். அப்படி யாரும் அங்கே இருக்கவில்லை. அந்தத் தருணத்தில், கிழக்கிந்தியக் கம்பனி, சிங்கள பௌத்தர்களுக்கு உதவ முன்வந்தது. VOC வணிகக் கப்பல் ஒன்று, பர்மாவில் (இன்று மியான்மார்) இருந்து ஆயிரக் கணக்கான பௌத்த பிக்குகளை ஏற்றிக் கொண்டு வந்து இறக்கியது. அதற்குப் பிறகே, இலங்கையில் மீண்டும் பௌத்த மதம் பல்கிப் பெருகியது. அது வரலாறு.

இன்றைய நெதர்லாந்து நாட்டில், சில நூறு பௌத்தர்கள் வாழ்கிறார்கள். அதாவது, பௌத்த மதத்திற்கு மாறிய பூர்வீக டச்சு வெள்ளையினத்தவர்கள். அவர்கள் தமக்கென வீடியோ நிகழ்ச்சிகளை தயாரித்து, அரச தொலைக்காட்சி சேவையில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்புவார்கள். இந்த வார நிகழ்ச்சியில், இலங்கையில் பௌத்த மதம் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பினார்கள். "இலங்கை, அத்துமீறப் பட்ட சொர்க்கம்" (Sri Lanka, het geschonden paradijs) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியின் தொடக்கத்தில், 83 கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் பேட்டி காண்கிறார்கள். அவர் ஒரு பறங்கிய (கலப்பினம்) பெண்மணி, ஆனால் தமிழரை திருமணம் முடித்தவர். 83 கலவரமானது ஒரு தமிழினப் படுகொலை என்று வர்ணித்து, அப்போது நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

அதற்கு அடுத்ததாக, சர்வோதய அமைப்பின் தலைவரை (A.T. Ariyaratne) பேட்டி கண்டார்கள். காந்தீயத்தில் நம்பிக்கை கொண்ட, இலங்கையில் எழுபதுகளில் இயங்கிய ஒரேயொரு அரசு சாரா நிறுவனம் (NGO) அதுவாகும். ஈழப்போரின் ஆரம்பத்தில், தமது அமைப்பின் யாழ்ப்பாண பொறுப்பாளர் கதிரமலை புலிகளால் கொலை செய்யப் பட்டதாகவும், ஆயினும் போர் நடந்த காலம் முழுவதும் அஹிம்சையை போதித்து வந்ததாகவும் கூறினார். சர்வோதயம் ஒரு தொண்டு நிறுவனமாக இருந்த போதிலும், அதில் மிதவாத பௌத்த சிந்தனைகளும் காணப் படுகின்றன. இது கிட்டத்தட்ட காந்தியின் அரசியல் சித்தாந்தம். இந்தியாவில் மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்ட இயக்கம் அனைத்து மத மக்களையும் உள்வாங்கி இருந்தாலும், மிதவாத இந்து மதக் கொள்கையும் அதற்குள் இழையோடியது.

ஆவணப் படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையில் அவர்கள் வலியுறுத்துவது இதைத் தான். இலங்கையில் பொது பல சேனா போன்ற மதவெறியர்கள், பௌத்த மதத்திற்கு களங்கம் கற்பிக்கிறார்கள். அதுவல்ல பௌத்த மதம். சமாதானத்தையும், கருணையையும் போதிக்கும் மிதவாத பௌத்த மதமே இலங்கைக்கு தேவையானது. அதற்காக, இலங்கையில் நாற்பது வருடங்களாக வசித்து வரும், பூர்வீக டச்சு பௌத்த துறவி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பினார்கள்.
 
ஆனந்தா ஒலாண்டே (Ananda Olande) என்ற டச்சுக்காரர், தேரவாத பௌத்த மதத் துறவியாக, இலங்கையில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். அவரின் கூற்றுக்கள் சில:

- பி.பி.சி. போன்ற வெளிநாட்டு ஊடகங்களில், "பௌத்த- சிங்களவர்களுக்கும், இந்து- தமிழர்களுக்கும் இடையில்" யுத்தம் நடப்பதாக, அடிக்கடி கூறுகின்றார்கள். அது தவறு. இலங்கையில் நடப்பது மதங்களுக்கு இடையிலான யுத்தம் அல்ல. வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் விடுதலைப் போராட்டமாக அது உள்ளது. அங்கே மதம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கவில்லை.

- ஆயுதமேந்திப் போராடிய புலிகள், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தமது தாயகமான தமிழீழம் என்று கூறி உரிமை கோரினார்கள். அவர்களது தமிழீழ வரைபடத்தில், இலங்கையின் 75% கடல் பகுதி அடங்கியிருந்தது. அந்தளவுக்கு விட்டுக் கொடுப்பதற்கு யாரும் சம்மதிக்க மாட்டார்கள்.

- இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து. பௌத்தர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அபாயம். இது போன்ற அச்சங்களை காரணமாக கட்டி, பல பௌத்த துறவிகள் அரசியலில் ஈடுபடுகின்றனர்.

- இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு, புதிய பிக்குகளாக சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றமை ஒரு காரணம். முன்பெல்லாம், ஒரு குடும்பத்தில் ஆறேழு பிள்ளைகள் இருந்தால், ஒரு பிள்ளையை பிக்குவாக்குவதற்கு பெற்றோர் முன்வருவார்கள். இந்தக் காலங்களில், மிகவும் வறுமைப் பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் தான் பிக்குவாக முன்வருகிறார்கள்.

- பொது பல சேனா போன்ற மதவெறியர்கள் பேசுவது பௌத்த மதம் அல்ல. சமாதானத்தை போதிக்கும் பௌத்த மதத்தில், வன்முறைக்கும், துவேஷத்திற்கும் இடமில்லை.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கையில் புத்தம் பற்றிய நிகழ்ச்சியின் வீடியோவை பார்ப்பதற்கான இணைப்பு:

Sri Lanka, het geschonden paradijs

http://www.bosrtv.nl/uitzending.aspx?lIntEntityId=1715



இது தொடர்பான முந்திய பதிவுகள்: