Monday, October 27, 2014

யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!


தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்காக, தம்மை ஆண்டவர் தேர்ந்தெடுத்தார் என்று நினைத்துக் கொள்ளும், போலித் தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள், தங்களை மட்டுமே புனிதர்களாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கோடிக் கணக்கான பணம் கைமாறும். அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. 

போலித் தமிழ் தேசியவாதிகள், தங்களை ராஜபக்ச கும்பலுக்கு சமமான வர்த்தகக் கூட்டாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணம் தவறானதும் அல்ல. கொழும்பு பங்குச் சந்தையில், கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக முதலிட்டு வருபவர்கள் தான், இந்த புலம்பெயர்ந்த தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள். மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. 

இந்தியாவில் அரசியல் தரகு வேலை பார்க்கும், CIA உளவாளி சுப்பிரமணியசாமியுடன், Tom & Jerry மாதிரி ஒளித்துப் பிடித்து விளையாடுவார்கள். சகோதரர்களுக்கு இடையில் சண்டை வரும். ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், பாஜக தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்திருப்பார்கள். அதனால் தான், கடந்த பொதுத் தேர்தலில், "நரேந்திர மோடி - சுப்பிரமணிய சாமி கோஷ்டியை" ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். 

அந்த அரசியல் அலங்கோலங்களை, தமிழ் மக்கள் மறந்து விட வேண்டுமாம். போலித் தமிழ் தேசியத்தின் சித்தாந்தம் இந்துத்துவா மதவாதம் என்பது இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் என்தால் தான், சிஐஏ எஜன்ட் சுப்பிரமணியசாமிக்கும், போலித் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையில் ஓர் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலவுகின்றது.

யார் இந்த சுப்பிரமணிய சாமி?
தமிழ் (தேசிய) ஊடகங்கள், அவரை மக்கள் ஆதரவற்ற தனி நபர் போன்றும், அரசியல் கோமாளி போன்றும் சித்தரித்து வருகின்றன. அவர்களில் பலருக்கு சு.சாமி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது மட்டுமே பிடிக்கவில்லை. ஆனால், அதே சு.சாமி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் நேரத்தில் யாரும் கண்டிப்பதில்லை. 

சு. சாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விடயம் தான். ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் அது விபரமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சுப்பிரமணிய சாமி மட்டுமல்லாது, புலிகள், சி.ஐ.ஏ., மொசாட் ஆகிய அந்நிய சக்திகளும், ராஜீவ் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளதாக, ஜெயின் கமிஷன் எழுதி இருந்தது. ஆனால், தமிழினவாதக் குழுக்களும், தமிழ் ஊடகங்களும், சுப்பிரமணிய சாமி மட்டுமே ராஜீவ் காந்தியை கொலைக்கு காரணம் என்பது போல, கால்வாசி உண்மையை சொல்லிக் கொண்டிருந்தன.

சு.சாமிக்கும், சி.ஐ.ஏ.க்கும் இடையிலான உறவு, இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. எழுபதுகளில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, காங்கிரஸ் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அது பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் கருதி, சோவியத் யூனியன் அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அளவு கடந்த சோவியத் இராணுவ, நிதியுதவி பெற்று வந்த, சோஷலிச முகாமை சேராத நாடு இந்தியா ஆகும். 

இந்தியாவில் இந்திரா காந்தி நடைமுறைப் படுத்திய அவசர கால சட்ட ஆட்சியின் விளைவாக பாதிக்கப் பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்தன.  1977 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நேரம், எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதாக் கட்சி உருவானது. சுப்பிரமணிய சாமி அதன் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இந்திரா காந்தியின் அவசரகால ஆட்சி, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி இருந்ததால், தேர்தலில் ஜனதாக் கட்சியை வெல்ல வைத்தனர். மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆனார். 

அமெரிக்காவில் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் Seymore Hersh, எழுதிய  The Price of Power எனும் நூலில், மொரார்ஜி தேசாய் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. மொரார்ஜி தேசாய் அந்த எழுத்தாளருக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆரம்பத்தில் அதனை அலட்சியப் படுத்தியதாக காட்டிக் கொண்ட சி.ஐ.ஏ., ஜனதாக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த சு.சாமிக்கு ஒரு டெலேக்ஸ் அனுப்பியது. சி.ஐ.ஏ. யின் மும்பைக் கிளை அலுவலகத்தில் இருந்து, மொரார்ஜி தேசாயின் கட்சியை தொடர்பு கொண்ட விபரம் கூட சு.சாமி மூலம் தான் வெளியானது. (ஆதாரம் : CIA: Club der Mörder, Kunhanandan nair, Michael Opperskalski)

எழுபதுகளில் ஜனதாக் கட்சியை ஆதரித்து வந்த சி.ஐ.ஏ., பின்னர் அதன் தேவை முடிந்ததும் கை விட்டு விட்டது. தொண்ணூறுகளின் பின்னர், பாஜக என்ற குதிரையின் மேல் பந்தயம் கட்டி வந்தது. அதனால், சி.ஐ.ஏ.யின் நம்பிக்கைக்குரிய முகவர் சுப்பிரமணிய சாமி, 2013 ஆம் ஆண்டு, ஜனதாக் கட்சியை கலைத்து விட்டு, பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து விட்டார். 

2009 ஆம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் திடீரென முளைத்த "நாம் தமிழர்", "மே 17" போன்ற தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், "தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது தான் தமது இலட்சியம்" என்று பகிரங்கமாகவே சொல்லி வந்தன. அதற்காக, வெளிப்படையாகவே நரேந்திர மோடியையும், பாஜக வையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தன. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் இயங்கும் தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், தம்மை "புலி ஆதரவாளர்கள்" போன்று காட்டிக் கொண்டன. சுப்பிரமணிய சாமி தன்னை ஒரு "புலி எதிர்ப்பாளர்" போன்று காட்டிக் கொண்டார். ஆனால், இரண்டு தரப்பினரும், பாஜக வின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டார்கள். இன்று, "புலி ஆதரவாளர்களின்" தயவில், ஒரு "புலி எதிர்ப்பாளர்" மோடியின் அரசாங்கத்தில் வீற்றிருக்கிறார்! உலகில் வேறெந்த நாட்டிலும், இப்படி ஒரு வினோதமான கூட்டணியை காண முடியாது.

இதிலே முரண்நகை எதுவும் கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கின் விடை சரியாகத் தான் வருகின்றது. பல உலக நாடுகளிலும் உள்ள, குறுந் தேசியவாத, மதவாத அரசியல் சக்திகள், சும்மா பாசாங்குக்குக் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசுவதில்லை. இந்தியாவில் இன்னும் எத்தனை பேர் சி.ஐ.ஏ. சம்பளப் பட்டியலில் இருக்கிறார்கள் என்ற விபரம், விக்கிலீக்ஸ் மாதிரி, யாராவது அமெரிக்க தூதரக கேபிள்களை வெளியிட்டால் தான் தெரிய வரும். 

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

இன்னமும் இந்த ஆட்சியில் அமைச்சர் ஆக வில்லை.

Kalaiyarasan said...

நன்றி, தவறை திருத்திக் கொண்டேன்.

SaraK said...

என்ன ஒரு வேடிக்கையான அரசியல் சூழ்நிலை இங்கு நிலவுகிறது பார்திர்களா...

அனேகமாக இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.இப்பொழுது நாம் தமிழர்கள், வீர தமிழர்கள் என ஒரு இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர் இதன் மூலம் பெரியார் சிந்தனைக்கு எதிர்பாகவும் பேச தொடங்கியுள்ளனர், மறை முகமாக ஜாதியையும் ஆதரிக்க தொடங்கியுள்ளனர். கோகுல் ராஜ் என ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டதை பற்றி அவர்களின் பேட்டிகளில் அது புரிகிறது.


இளந்தமிழகம் (save tamils) என்ற ஒரு இயக்கம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது அல்லது பெயர் மாற்றம் பெற்றது. இது ஒரு பொதுவுடைமை சிந்தனை உள்ள இயக்கம். இதை பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்க....!!!