Saturday, October 18, 2014

புதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலை

தமிழினப் படுகொலை நடந்த புதுக்குடியிருப்பில், ஏகாதிபத்திய தரகு முதலாளிகளின் சுரண்டல் ஆரம்பம். தமிழ்ப் பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, அமெரிக்கர்களின் பாவனைக்கான மலிவு விலை ஆடைகளை தயாரிப்பதற்கு, வன்னியை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் உதவி வருகின்றது.

தமிழர்களுக்கு எதிரான, சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கும், தரகு முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு? "இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டுமே.... முதலாளித்துவ/ஏகாதிபத்திய பிரச்சினை அல்ல..." என்று பல படித்த மேதாவிகள் கூட நம்புகிறார்கள். அவர்கள் தேசியவாதம் என்ற வரட்டு சூத்திரத்தை நம்பி, தாங்களும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

ஹிர்டாரமணி குரூப் (The Hirdaramani Group), இலங்கையின் மூன்றாவது பெரிய ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனம். கடந்த பல தசாப்தங்களாக, மலிவு விலை ஆடைகளை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இது வரை காலமும் தென்னிலங்கை தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்த தரகு முதலாளிய நிறுவனம், ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் வட இலங்கைத் தொழிலாளர்களையும் சுரண்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் போட்டுள்ள தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது புதுக்குடியிருப்பில் புதிதாக இன்னொரு தொழிற்சாலையை கட்டவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்மையான ஆட்சியாளர்களான இராணுவ அதிகாரிகளே, புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை, அடுத்த வருடம் அளவில் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது. முதற் கட்டமாக, 450 தமிழ்ப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அடுத்த சில வருடங்களில், ஆயிரக் கணக்கான தமிழ் யுவதிகள் அங்கே வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஹிர்டாரமணி குரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் டோனி நடராஜா என்ற ஒரு தமிழர் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

முல்லைத்தீவில், சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ், புதிய தொழிலாளர்களுக்கான தொழிற்பயிற்சி இப்போதே ஆரம்பமாகி விட்டது. வெகு விரைவில், ஈழத் தமிழ்ப் பெண்களிடம் சுரண்டப் பட்ட உழைப்பு, அமெரிக்கக் கடைகளில் மலிவுவிலை ஆடைகளாக விற்பனை செய்யப் படும்.

ஈழப் போர் - சிங்கள பேரினவாதம் - அமெரிக்க ஏகாதிபத்தியம், இவற்றுக்கு இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், கண்களை மூடிக் கொண்டிருக்கலாம். "ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டும் தான்..." என்று ஒரே பல்லவியை திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கலாம்.

எதற்காக மூலதனமும், தரகு முதலாளிய நிறுவனங்களும் வன்னியை தேர்ந்தெடுத்தன? சீனாவில் உள்ள ஆடை ஏற்றுமதித் தொழிற்துறைக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, வட இலங்கைக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. தென்னிலங்கையில், கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக, சிங்களத் தொழிலாளர்கள் தமது உரிமைகளை கேட்டுப் போராடி வருகின்றனர். தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமைகளை அரசே மறுத்து வந்த போதிலும், தொழிலாளர்களின் இடையறாத போராட்டம் காரணமாக உத்தியோகபூர்வமற்ற தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின.

வட இலங்கையில் இடதுசாரிகளின் தொல்லை கிடையாது. தமிழ்த் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு, இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம். மேலும், முதலாளியத்திற்கு ஆதரவான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்கள் தேசியவாத மாயைக்குள் கட்டுண்டு கிடக்க உதவுகின்றனர். இது போன்ற அரசியல் நிலைமை, ஏகாதிபத்தியத்திற்கும், சிங்கள தரகு முதலாளித்துவத்திற்கும் மிகவும் உகந்தது. 

தமிழினப் படுகொலை நடந்த வன்னிப் பிரதேசம், வருங்காலத்தில்  தரகு முதலாளிகளின் சொர்க்கபுரியாக மாறப் போகின்றது. அன்று நடந்தது தமிழினப் படுகொலை, இனிமேல் நடக்கப் போவது தமிழின சுரண்டல். புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாது, கிளிநொச்சியிலும் ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் உருவாகி வருகின்றன. அதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டன. 

வன்னியில் தரகு முதலாளிகளின் ஊடுருவல் காரணமாக தொழிற்துறை வளர்ச்சி அடையும் பொழுது, அங்கே தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கமும் பெருகும். காலப்போக்கில், தமிழ்த் தொழிலாளர்களும் தமது உரிமைகளை கேட்டுப் போராடுவார்கள். அப்போது அந்த உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு தயாராக, அருகிலேயே இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஈழப் போரின் முடிவில், வட இலங்கையை ஆக்கிரமித்த சிங்கள இராணுவம் வெளியேற்றப் பட வேண்டும் என்று, ஏகாதிபத்தியம் பாசாங்குக்கு கூட முணுமுணுக்காத காரணமும் அது தான்.

மேலதிக தகவல்களுக்கு: 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

No comments: