Saturday, September 13, 2014

சினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ் இன உணர்வு!


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், மணிரத்தினம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் வெளியாகியது. அது, இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த காலத்தில், புலிகளின் போராட்டத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படமாகும். அதனை இயக்கிய மணிரத்தினம் ஓர் இந்திய தேசியவாதி, இந்திய அரச ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஓர் அப்பட்டமான புலி எதிர்ப்புப் படம் ஆகும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் வருவது போன்றே, ஈழப் போரின் இறுதி யுத்தமும் அமைந்தது ஒரு தற்செயலாக இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியான நேரம், அதனை எல்லாத் தமிழர்களும் பார்க்க வேண்டும் என்று, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் கூட கூறி வந்தனர். கனடாவில், டொரோண்டோ திரைப்பட விழாவில் காட்டப் பட்ட பொழுது, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும் டொரோண்டோ மாநகரில் இருந்து எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் "ஹவுஸ் புல்" காட்சிகளாக காண்பிக்கப் பட்டது. அதன் வீடியோ டிவிடிக்கள் அமோகமாக விற்பனையாகியது. ஐரோப்பா, கனடாவில் கன்னத்தை முத்தமிட்டால் படத்தை விநியோகம் செய்தவர்கள், விற்றவர்கள், அனேகமாக புலி ஆதரவாளர்கள் தான். இது குறித்து எந்தவொரு போலித் தமிழ் இன உணர்வாளரும் விமர்சிக்கவில்லை. எந்தவொரு "மாற்றுக்"கருத்தாளரும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஏனென்றால், நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.

தமிழ் சினிமா என்பது, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் வணிக ரீதியாக அதிக இலாபம் தரும் தொழிற் துறையாக கருதப் படுகின்றது. கடந்த இருபதாண்டு காலமாக, தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாயகர்களின் புதுப் படம், அதே காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திரையிடப் படும். அவை எல்லாம் வணிகப் படங்கள் தான்.

தமிழகத்தில் வெளியான ஒரு சில நல்ல தரமான படங்களை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்க முடியாது. எத்தனை வருடம் காத்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தவொரு விநியோகஸ்தருக்கும் அதிலே அக்கறை கிடையாது. என்ன செய்வது? தரமான தமிழ்ப் படங்களை, டிவிடியில் அல்லது இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் பலர் ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் யாரும் அந்த நல்ல படங்களின் பெயர்களைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கத்திய நாடுகளில், தமிழகப் படங்களை காசு கொடுத்து பார்க்கும் இரசிகர்களில் பெரும்பான்மையானவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.

ஒரு தசாப்த காலமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் செல்வந்தர்கள் பலர், தமிழ்ப் படத் தயாரிப்புகளில் முதலிட்டு வருகின்றனர். அவை எல்லாம் வணிகப் படங்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அந்த முதலீட்டாளர்கள் எவராவது, ஈழத் தமிழரின் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் கலைப் படம் ஒன்றில் முதலிட்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான தமிழர்களால், ஒரு காலத்தில் "அடுத்த தேசியத் தலைவர்" ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட சீமான் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசிய அரசியலை மிகச் சரியாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீமான் அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

ஒரு சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம். ஆனால், ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும், புலி ஆதரவு அரசியலை ஏற்றுக் கொண்ட பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புலி ஆதரவு ஊடகங்களில் அவரது திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் எழுதப் பட்டதும் ஒரு காரணம்.

பிரசன்ன விதானகே சிங்களத் திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் ஒரு சிங்கள இயக்குனர் என்பதால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரு திரைப் படத்தை தயாரிப்பார். அந்த உண்மையை புலிகளும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால், அவரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

பிரசன்ன விதானகேயின் திரைப்படம் தமிழ்நாட்டில் காட்டப் பட்ட உடனே, போலித் தமிழ் தேசியர்கள் பலருக்கு திடீர் தமிழ் இன உணர்வு பொங்கி எழுந்தது. பிரசன்ன விதானகே இப்படித் தான் படம் எடுக்க வேண்டும் என்று, ஆளாளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். இது, "ஒருவர் தனது அரசியல் கருத்துக்களை இன்னொருவரின் தலைக்குள் திணித்து, தன்னை மாதிரியே பேச வேண்டும் எனும் எதிர்பார்ப்பு" ஆகும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்கள் சொல்வது போல யாருமே படம் எடுக்க முடியாது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் அப்படி ஒரு படம் ஓட முடியாது.

சிறிலங்கா அரசு உடனே அதனை "புலி ஆதரவு படம்" என்று கூறி முத்திரை குத்தி தடை செய்து விடும். சுதந்திரமாக ஓட விட்டாலும், அது சிங்கள சினிமா இரசிகர்களினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்று கூற முடியாது. குறிப்பாக, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், தமிழீழம் என்ற தனிநாடு பிரிவதை ஆதரிப்பதும், பெரும்பான்மை சிங்கள மக்களினால் இன்றைக்கும் நிராகரிக்கப் பட்டு வரும் கருத்துக்களாக உள்ளன. ஆகவே, அப்படி எந்த எண்ணமும் தோன்றாதவாறு திரைப் படம் தயாரிக்க வேண்டும். முடியுமா? இது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது.

தமிழ் நாட்டில் நிறைய "தீவிரவாதிகள்" பற்றிய சினிமாக்கள் வெளியாகி உள்ளன. இன்று வரையில், ஏதாவது ஒரு திரைப் படத்திலாவது, "தீவிரவாதிகள்" பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவில்லை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளது. அந்த சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் கூட தெரிவிக்கப் படுவதில்லை. விஜயகாந்த், அர்ஜுனின் படங்கள் மட்டுமல்லாது, மணிரத்தினத்தின் ரோஜா, கமலின் விஸ்வரூபம் ஆகியன அரசுக்கு சார்பான பிரச்சாரப் படங்களாகவே வெளிவந்தன.

அரச படைகள் புரிந்த போர்க்குற்றங்களை மறைத்து, விடுதலைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்தன. அந்த திரைப்படங்கள் வெளியான நேரம், இலட்சக் கணக்கான தமிழ் இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். போலித் தமிழ் இன உணர்வாளர் யாரும், அந்தத் திரைப்படங்கள் வெளியான நேரம் கண்டனம் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் நண்பர்கள், உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களை விநியோகித்த போதிலும், ஒரு தடவையேனும் எதிர்ப்புக் காட்டவில்லை.

சினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களில் வசதி படைத்த பிரிவினர், ஈழத்தில் வாழும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து திரைப் படம் தயாரிக்க முன்வரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே துணிந்து களத்தில் இறங்கினார்கள்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் முதலீட்டாளர்கள், திரும்பத் திரும்ப தமிழ் நாட்டில் தயாராகும் வணிகப் படங்களில் மட்டுமே முதலிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பணம், பணம், பணம் மட்டுமே. தமிழக சினிமாத் தொழிற் துறையினுள் நடக்கும் வர்த்தகப் போட்டிகள், பொறாமைகள், காட்டிக் கொடுப்புகள், கவிழ்ப்புகள், சுத்துமாத்துகளை மறைப்பதற்காக, பலர் "தமிழ் தேசிய" அரசியல் பேசுகின்றார்கள். இது வணிகம் சார்ந்த அரசியல். தமிழ் இனத்தின் நலன்களை விட, தமது வணிக நலன்களே தமிழ் முதலாளிகளுக்கு முக்கியமானவை. போலித் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பல "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும் இந்த உண்மை தெரியும். சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அப்படித் தான் வாழ வேண்டும்.

ஒரு திரைப்படம் தயாரித்து தமிழீழப் புரட்சியை உண்டு பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை யாரிடமும் கிடையாது. பெரும்பாலான தமிழ் இரசிகர்களும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்து இரசிக்கிறார்கள். சினிமாவில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் எண்ணமும் அவர்களிடம் கிடையாது. பிறகு எதற்காக, சில குறிப்பிட்ட சினிமாப் படங்களைப் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்?

வேறொன்றுமில்லை. "இது நம்ம ஏரியா, இதற்குள் நுளையாதே!" என்பதை கொஞ்சம் "நாகரிகமாக" எடுத்துக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களாக, சினிமாத் தொழிற் துறை, தமிழ்நாட்டு மாநிலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தருகின்றது. பலருக்கு அதனால் ஆதாயம் கிடைப்பது புரிந்து கொள்ளத் தக்கது. வலதுசாரி தமிழ் தேசியவாதத்திற்கும், தமிழ் முதலாளியத்திற்கும் இடையிலான உறவு அந்த இடத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. அந்த உறவு தான், இன்று சமூகத்தில் பரப்பப் படும் பல அரசியல் கருத்துக்களின் ஊற்றுக்கண்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்
2. உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது
3.அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!

3 comments:

வலிப்போக்கன் said...

நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.
-இது சினிமாகாரர்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் தோழரே.......

வலிப்போக்கன் said...

நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.
-இது சினிமாகாரர்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் தோழரே.......

Unknown said...

சினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. // சில நல்ல படங்கள் படங்கள் இருந்தால் பதிவிடவும்..ஈழ தமிழில் படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..