Friday, August 22, 2014

அமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்


அமெரிக்கக் கண்டத்திற்கு ஆப்பிரிக்க கருப்பர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், "புதிய உலகம்" என அழைக்கப் பட்ட அமெரிக்கக் கண்டத்தில், வெள்ளையின அடிமைகளும் விற்கப் பட்டனர். இங்கிலாந்தின் முதலாவது காலனியான, அயர்லாந்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், அங்கு வாழ்ந்த ஐரிஷ் மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். ஐந்து இலட்சம் ஐரிஷ் பெண்கள், அமெரிக்காவில் பாலியல் அடிமைகளாக விற்கப் பட்டனர். 

உலகில் பல நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், இனச் சுத்திகரிப்புகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடுகளில் தான் அதிகளவில் நடந்துள்ளன. பாராளுமன்ற ஜனநாயகம் சுதந்திரமான தேர்தல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 19 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் சில நாடுகளில் இருந்த மன்னராட்சி முறைக்கு மாற்றாகத் தான் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டு வரப் பட்டது.

உலக வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்தில் தான் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்பட்டது. மன்னராட்சிக்கு எதிராக கலகம் செய்த, ஆங்கிலேய மேட்டுக் குடியினரின் பிரதிநிதியான ஒலிவர் குரொம்வெல், பேரழிவைத் தந்த உள்நாட்டுப் போரை வழிநடத்தினார். போரின் முடிவில், இங்கிலாந்து மன்னர் சிரச் சேதம் செய்யப் பட்டார். பாராளுமன்றம் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. உலகில் முதல் தடவையாக பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய குரொம்வெல், ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

குரொம்வெல் தலைமையிலான புரட்டஸ்தாந்து படையினர், புரட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மன்னருக்கு ஆதரவான நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை ஒழித்தார்கள். ஆனால், பழைய நிலப்பிரபுக்களின் நிலங்கள், குரொம்வெல்லின் போர்வீரர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பங்கிடப் பட்டது. இன்று பிரிட்டனில் உள்ள நிலவுடமையாளர்கள் பலர், குரொம்வெல் காலத்தில் நிலங்களை அபகரித்தவர்கள் தான். வட அயர்லாந்தில், அது இன்றைக்கும் எரியும் பிரச்சினையாக உள்ளது.

பிரிட்டிஷ் காரர்கள், அயர்லாந்தில் நடத்திய இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்புகளை, பிற்காலத்தில் அனைத்துக் காலனிகளிலும் அறிமுகப் படுத்தினார்கள். வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஐரோப்பிய காலனியவாதிகள், ஆரம்பத்தில் செவ்விந்திய பூர்வ குடிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். கனடா முதல் மெக்சிகோ வரையில், ஆயிரக் கணக்கான கலப்பின காலனிகள் உருவாகி இருந்தன.

அதாவது, ஐரோப்பிய குடியேறிகளும், செவ்விந்தியர்களும் அருகருகே அயல் கிராமங்களாக வாழ்ந்து வந்தனர். நிறைய கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. ஆனால், பிற்காலத்தில் அமெரிக்காவில் அரசு அதிகாரத்தை நிலைநாட்டிய அதிகார வர்க்கத்தினர், இனக் கலப்பை தடை செய்தார்கள். அதற்குப் பிறகு தான், காலனிய விஸ்தரிப்பு யுத்தங்கள் நடந்தன. செவ்விந்திய பூர்வ குடிகள் இனவழிப்பு செய்யப் பட்டனர்.

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மன்னராட்சியை தூக்கியெறிந்து புரட்சி செய்த ஒலிவர் குரொம்வெல், அயர்லாந்து புரட்சியை மிகக் கொடூரமாக ஒடுக்கினார். அயர்லாந்து தீவில், பெருமளவு விவசாய நிலங்கள் ஆங்கிலேய நிலப்பிரபுக்களின் கீழ் இருந்தன. நிலப்பிரபுக்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அந்த மக்கள் எழுச்சியின் போது சுமார் 4000 பேர் கொல்லப் பட்டனர். ஆங்கில நிலப்பிரபுக்கள், ஐரிஷ் தொழிலாளர்களினால் படுகொலை செய்யப் பட்டனர். அது ஒரு வர்க்கப் புரட்சியாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் (17 ஆம் நூற்றாண்டு)கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களுக்கு இடையிலான மதப் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது.

குரொம்வெல் அனுப்பிய ஆங்கிலேயப் படைகள், ஐரிஷ் மக்கள் எழுச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கிலிடப் பட்டனர். அவர்களை பின்பற்றியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால், இரண்டு நிபந்தனைகள். இங்கிலாந்துடன் போரில் ஈடுபட்டிருக்கும் எதிரி நாட்டிற்கு செல்லக் கூடாது. மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும். பெருமளவு ஐரிஷ் கிளர்ச்சியாளர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள். அதனால், அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களும் குழந்தைகளும் தனித்து விடப் பட்டனர்.

அயர்லாந்தின் நிலங்கள் மறு பங்கீடு செய்யப் பட்டன. கிளர்ச்சியை நசுக்குவதற்கு உதவிய பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு ஊதியமாக நிலங்கள் வழங்கப் பட்டன. எஞ்சிய ஐரிஷ் நிலவுடமையாளர்களுக்கு, பிரயோசனமற்ற தரிசு நிலங்கள் ஒதுக்கப் பட்டன. நாடுகடத்தப் பட்ட புரட்சியாளர்களின் குடும்பத்தினர், அந்த நிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1652 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றியது. "தன்னைத் தானே பராமரிக்க முடியாத, அதாவது போதிய வருமானம் இல்லாத ஐரிஷ் பெண்கள், அடிமை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப் படலாம்." அயர்லாந்தை ஆக்கிரமிக்கும் போர் முடிந்த பின்னர் வேலையற்று இருந்த முன்னாள் போர்வீரர்கள், ஐரிஷ் பெண்களையும், குழந்தைகளையும் சுற்றி வளைத்து பிடித்து விற்று விடத் தொடங்கினார்கள். மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து குறி சுடுவது போன்று, பிடிபட்ட ஐரிஷ் அடிமைகளுக்கும் செய்தார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலுடன், அடிமை வியாபாரிகள் ஐரிஷ் பெண்களை கப்பல்களில் கொண்டு சென்று, அமெரிக்காவில் விற்றார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறி இருந்த வசதி படைத்த ஆங்கிலேயர்கள், அழகான இளம் வயது ஐரிஷ் பெண்களை வாங்கி, தமது வீடுகளில் பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். அழகில்லாத பெண்கள், பெருந்தோட்ட முதலாளிகளின் வீடுகளில் பணிப் பெண்களாக விற்கப் பட்டனர். சிலர் சிறுமிகளைக் வாங்கிச் சென்று பாவித்து விட்டு விபச்சார விடுதிகளில் தள்ளி விட்டார்கள்.

பார்படோஸ் தீவுக்கு கொண்டு சென்று இறக்கப் பட்ட வெள்ளையின ஐரிஷ் அடிமைகள், அங்கிருந்த பெருந்தோட்ட முதலாளிகளினால் கால்நடைகளைப் போன்று நடத்தப் பட்டனர். ஐரிஷ் பெண் அடிமைகளுடன் உறவு கொள்ளும் முதலாளிகள், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை விபச்சார விடுதிகளுக்கு விற்றனர். தம்மிடம் இருந்த கறுப்பின அடிமைகளை உறவு கொள்ள வைத்து, ஐரிஷ் பெண்களை பிள்ளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக வைத்திருந்தார்கள். ஏனெனில், கறுப்பு - வெள்ளை கலப்பில் பிறந்த சிறுமிகளை, விபச்சார விடுதிகளில் நல்ல விலைக்கு விற்க முடிந்தது.

பார்படோசில் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஐரிஷ் பெண்களின் வழித்தோன்றல்கள் இன்றைக்கும் அங்கே வாழ்கின்றனர். சுமார் 400 பேரளவில், மிகவும் வறுமையான நிலையில் சேரிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மட்டுமே தமது முன்னோரின் அயர்லாந்து பூர்வீகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில் மிகச் சிறுபான்மையான இனம் என்பதால், பகை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக ஒதுங்கி வாழ்கின்றனர்.

குறைந்தது ஐந்து இலட்சம் ஐரிஷ் அடிமைகள், அமெரிக்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பப் பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப் படும் வரையில், இந்த அடிமை வாணிபம் தொடர்ந்திருக்கிறது. கூடவே இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது. அடிமை வாணிபத்தில் ருசி கண்ட முன்னாள் பிரிட்டிஷ் படையினர், ஏழை ஆங்கிலேய சிறுமிகளை பிடித்தும் அடிமைகளாக விற்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், வெள்ளையின அடிமைகள் தொடர்பாக இங்கிலாந்தில் பல பக்கங்களில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் நூல்களை வாசிக்கவும்: 
White Cargo: The forgotten history of Britain's white slaves in America 
To Hell or Barbados: The Ethnic Cleansing of Ireland

No comments: