Saturday, April 19, 2014

நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்



மீண்டும் எழுந்து வரும் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி.
"விழ விழ எழுவோம், ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்"
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை" மாதிரி, உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக் கும்பலுக்கு உதவச் சென்ற மேற்குலகிற்கு, அடி மேல் அடி விழுவதால் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை வைத்து மணல் கோட்டை கட்டிய ஏகாதிபத்திய கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தனது தோல்வி கண்டு பொறுக்க முடியாத மேற்குலகம், பொய்களையும், கட்டுக்கதைகளையும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சி காரணமாக, அந்த மாநிலம் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" என்ற பெயரில் தனி நாடாக இயங்கப் போவதாக அறிவித்தது. அங்குள்ள அரசாங்க கட்டிடங்கள், தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத மேற்குலகமும், கீவில் உள்ள பாசிச அரசும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டின. தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசின் பெயரில், யூதர்களுக்கு எதிராக, போலியான துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசில் வாழும் யூதர்கள் அனைவரும், உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவுத் தொகையாக முப்பது டாலர் கட்ட வேண்டும்..." என்று அதிலே எழுதப் பட்டிருந்தது. 

ஒரு யூத ஆலயத்தில் ஒட்டப் பட்டிருந்த துண்டுப்பிரசுரம், டிவிட்டர் இணையம் மூலம் பரவலாக்கப் பட்டது. குறிப்பாக, உக்ரைனிய பாசிச அரசை ஆதரிக்கும் அரசியல் ஆர்வலர்கள், அதனை பரப்புவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்களிலும் அந்தத் தகவல் வெளியானது. ஜெனீவாவில் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி, "யூத விரோத துண்டுப்பிரசுரம்" குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள், யூதர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் போலியானது என்ற உண்மை, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. கிழக்கு உக்ரைனிய மாநிலமான தொனியேட்ஸ்க்கில் வாழும் யூதர்களின் கருத்தும் அதுவாக உள்ளது. இது அநேகமாக, உக்ரைனிய அரச கைக்கூலிகளின் வேலையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். (பார்க்க: Antisemitic flyer 'by Donetsk People's Republic' in Ukraine a hoax)

மேற்குலக கைக்கூலிகள் தாமாகவே ஒரு போலியான துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு விட்டு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதாவது, தோல்விக்கு மேலே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் உக்ரைனிய பாசிஸ்டுகளும், அவர்களுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலகமும் செய்வதறியாது நிற்கின்றனர். அவர்களது தான்தோன்றித்தனமான செயல்கள் எல்லாம், கடைசியில் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகின்றன.

ஜெனீவாவில் நடந்த, ரஷ்ய, அமெரிக்க, உக்ரைனிய, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப் பட்ட தீர்மானம், உக்ரைன் நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கிழக்கு உக்ரைனில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவற்றைக் காலி செய்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், கிழக்கு உக்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களைக் காரணம் கேட்டால், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லாவ்ரோவ், ரஷ்யாவுக்கு மட்டுமே வெளிநாட்டு அமைச்சர். நாங்கள் உக்ரைனியர்கள்." என்று சொல்கின்றனர். அதே நேரம், "உக்ரைனிய தலைநகர் கீவில், அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள Euromaidan ஆர்ப்பாட்டக் காரர்கள் முதலில் வெளியேற வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைனிய அரசாங்கத்தை, சட்டபூர்வமான அரசாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அவர்களை சதிப்புரட்சியாளர்கள் என்று கூறி, அனைத்துத் தொடர்புகளையும் முறித்துக் கொண்டுள்ளது. உக்ரைனிய ஆட்சியாளர்களும், ஆர்ப்பாட்டங்கள் செய்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து தான், ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மறுத்து வருகின்றன. அதனால், கிழக்கு உக்ரைனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் செல்வாக்குப் பிரயோகிக்கும் அளவிற்கு, ரஷ்யாவும் நடந்து கொள்ளவில்லை. அது தன்னை ஒரு சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இதற்கிடையே, ரஷ்யா மீது மென்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகின்றது. அதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அரசு, "அமெரிக்கா தன்னை வீட்டு வேலை செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்று நடத்துவதாகவும், அது இராஜதந்திர பொறிமுறை ஆகாது" என்று கூறியுள்ளது.

அமெரிக்கா பயமுறுத்துவது போன்று, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஏனென்றால், அமெரிக்க கார் கம்பனிகள், ரஷ்ய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டச்சு- ஆங்கிலேயே ஷெல் நிறுவனம், ரஷ்ய எரிவாயு துறையில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இவர்கள் யாரும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலமாக, ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகின்றமை, இங்கே கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம். மேற்கத்திய முதலீட்டாளர்கள் ரஷ்யாவை புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் நிறையப் பேசும் அளவிற்கு, உக்ரைனிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே பலவீனமான உக்ரைனிய பொருளாதாரம், நெருக்கடி காரணமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனிய நாணயமான ஹிர்வினியாவின்(hryvnya) பெறுமதி பாதியளவு குறைந்துள்ளது. கிழக்கு உக்ரைனிய தொழில்துறை, பெருமளவு ரஷ்ய சந்தையை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், அங்கு நடக்கும் "ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு" பின்னணியில், பொருளாதாரக் காரணங்களும் உள்ளன. ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு, பொருளாதாரப் பிரச்சினை உக்ரைனிய அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.


உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன.

உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்குலகம் ஆதரிக்கும் உக்ரைனிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம், "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும்" எதிர்த்து சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சி. கிழக்கு உக்ரைனில் "உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருப்பதால்," நேட்டோ இராணுவ உதவி கோரப் படுள்ளது.


முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய கிரேக்க ஆவணப் படம்: 


FASCISM INC MULTILINGUAL from infowar on Vimeo.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

2 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

suvanappiriyan said...

பாஜக வைப் பற்றி சிறந்த அலசலோடு வந்துள்ள கட்டுரை. அதனை நான் இன்று பதிந்துள்ளேன். நேரமிருப்பின் படித்துப் பார்க்கவும்.

http://suvanappiriyan.blogspot.com/2014/04/2014.html