Wednesday, January 30, 2013

கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 18

(பதினெட்டாம் பாகம்)

"பெலோப்பெனோஸ் நாட்டிற்கு எகிப்தியர்கள் எவ்வாறு வந்தார்கள்? இந்த கிரேக்கப் பகுதியில் எவ்வாறு அரசர்களானார்கள்?" - ஹெரோடொதுஸ் (வரலாறு, VI.55) 

 ஐரோப்பியர்கள், தமது நாகரீகம் பிறந்த இடம் என்று பெருமைப் படும், கிரேக்கத்தில் வாழ்ந்த ஹெரோடொதுஸ் என்பவர் தான், முதன் முறையாக கிரேக்கர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாகரீகம் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஹெரோடொதுஸ் எழுதிய குறிப்புகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் எழுதியவை எல்லாம் உண்மைகள் அல்ல. பல நாடுகளை, மக்களை பற்றிய தவறான தகவல்களும் அவரது எழுத்துக்களில் காணப்படுகின்றன. அனேகமாக, பிற இனங்களின் நாகரிக முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட ஒருவரின் கருத்துக்களாகவே அவை தெரிகின்றன. ஆயினும், பண்டைய கால ஐரோப்பா பற்றி மட்டுமல்ல, மத்திய கிழக்கு, எகிப்து போன்ற நாடுகளை பற்றி அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில், கிரேக்கத்தின் பெலோப்போனோஸ் பகுதியில், எகிப்தியர்கள் (கறுப்பினத்தவர்) வாழ்ந்து வந்ததை ஹெரோடொதுஸ் எழுதிய சரித்திரத்தில் இருந்து தெரிகின்றது. நான் ஒரு சுற்றுலா பயணியாக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த பொழுது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே, சுருளான தலைமுடியுடன் ஆப்பிரிக்க கறுப்பின தோற்றத்தை கொண்ட ஒரு பெண்ணின் சிலை ஒன்று இருந்தது. அதைத் தவிர, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில், கறுப்பின மக்கள் போன்று தோற்றம் கொண்டவர்களின் ஓவியங்கள் காணப்பட்டன. ஆகவே, ஒரு காலத்தில் இன்றைய கிரேக்கப் பகுதிகளில் கறுப்பின மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.

இன்றைய எகிப்துக்கும், கிரீஸுக்கும் நடுவில் கிரேட்டா  (Creta) தீவு அமைந்துள்ளது.  அந்த தீவை ஆண்ட மீனோ அரச வம்சத்தினர், அந்தப் பிராந்தியத்தில் வல்லமை மிக்க கடற்படையை கொண்டிருந்தனர். கிரேக்க நாடு அவர்களுக்கு அடங்கி திறை செலுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் இயற்கைப் பேரழிவு, கிரேக்கப் படையெடுப்புகள் காரணமாக, கிரேட்டாவின் மீனோ நாகரீகம் அழிந்து விட்டது. அதன் பிறகு தான் கிரேக்க நாகரீகம் ஆரம்பமாகியது. இதிலே கவனிக்கப் பட வேண்டிய விடயம், கிரேட்டா நாட்டவர்கள் கிரேக்க இனத்தவர் அல்ல. அவர்கள் தனியான மொழியை பேசினார்கள். எகிப்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். ஆகவே அவர்கள் பண்டைய எகிப்தில் இருந்து குடியேறிய இனமாக இருக்கலாம். கிரேட்டா அரச வம்சமான மீனோ என்ற பெயர், தமிழ்ச் சொல்லான மீனில் இருந்து வந்திருக்கலாம் என, பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அதனை நிரூபிப்பது போல, அண்மையில் ஆராயப்பட்ட கல்வெட்டு ஒன்றில், "மீனு ரொஜா" (மீன் ராஜா) என்று மன்னரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது.

ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட இந்தியாவிலும், சீனாவிலும், வெள்ளையினத்தவர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்த காலம் அதிகமில்லை. எப்படியும், மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அந்த குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அனேகமாக, இன்று நடைபெறும் குடிசனப் பரம்பல் போன்று, தனி நபர்களாக, சிறு குழுக்களாக வந்து குடியேறினார்கள். கறுப்பினத்தவரின் நாடுகளில், மன்னர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளாக இருந்துள்ளனர். அவ்வாறு இராணுவத்தில் சேவையாற்றிய வெள்ளையின ஆண்கள், உள்ளூர் பெண்களை மணம் முடித்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களின் மொழிகளை பேசக் கற்றுக் கொண்டனர். அந்தக் காலங்களில், இன்றிருப்பதைப் போன்ற இன/மத துவேஷங்கள் இருக்கவில்லை. அந்நியர்களாக இருந்தாலும், குடியேறிய நாட்டின் மொழியை பேசி, அந்நாட்டு மக்களைப் போன்றே வாழ்வதற்கு தடையேதும் இருக்கவில்லை. அதனால் தான், இன்றைக்கு வெள்ளை நிறம் கொண்ட மக்கள், பல்வேறு மொழிகளை பேசுகின்றனர். அரபு மொழி பேசும் நாடுகளில் குடியேறியவர்கள் அரபி பேசினார்கள். சமஸ்கிருதம் பேசும் இந்திய நாடுகளில் குடியேறியவர்கள், சமஸ்கிருதம் (இன்று உருது அல்லது ஹிந்தி) பேசினார்கள்.

வெள்ளையின மக்கள், கறுப்பின அரசர்களின் கூலிப் படைகளாக இருந்ததால், இராணுவ அறிவு கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவரின் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலங்களில், புதிதாக தோன்றிய ராஜ்யங்களில் வெள்ளையின அல்லது கலப்பின மக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் மத்தியில் இருந்து புதிய அரச வம்சங்கள் தோன்றவாரம்பித்தன. உண்மையில், அவர்களின் தோல் நிறம் மட்டுமே வெள்ளையாக இருந்தது. ஆனால், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் மாறுபட்டிருந்தது.

உதாரணத்திற்கு, லைபீரியா என்ற நாட்டில் பெருமளவு அமெரிக்க கருப்பர்கள் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கும், சுற்றவர உள்ள பிற ஆப்பிரிக்க இனங்களுக்கும் இடையில் தோல் நிறத்தில் மட்டுமே ஒற்றுமையுண்டு. மற்றும்படி, அவர்களது மொழி, கலாச்சாரம், நடையுடை பாவனை யாவும் அமெரிக்கர்களை போன்றிருக்கும். அவ்வாறு தான், பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள், எகிப்தியரிடம் இருந்து நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். அவ்வாறு நாகரீகமடைந்த வெள்ளையர்கள், தமது அயலில் வாழ்ந்த பிற வெள்ளை இனங்களை "காட்டுமிராண்டிகள்" என்று அழைத்தார்கள். வட ஈராக்கில் தோன்றிய மித்தானி என்ற நாட்டை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அங்கு அரச கரும மொழியாக சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழி அல்லது, புராதன இந்திய மொழி கோலோச்சியது. நமக்கு நன்கு அறிமுகமான இந்து மத தெய்வங்கள், புராணக் கதைகள் என்பன, இன்றைய ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை நாம் விரிவாக ஆராய்வோம்.

விநாயகர் என்ற இந்து தெய்வத்திற்கு, கணபதி, கணேஷ் என்ற பெயர்கள் உண்டு. கணபதி என்றால், இராணுவ தளபதி என்ற பொருள் படும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வெள்ளையின மக்கள், இராணுவ மயமாக்கப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வந்தனர். ஸ்பார்ட்டா (தென் கிரேக்கம்), ஹதூசா (மத்திய துருக்கி) போன்ற இடங்களில் தோன்றிய ஆதி கால வெள்ளையின நாகரீகங்கள், முழுக்க முழுக்க இராணுவ அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆண்கள் சிறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்களது வாழ்நாளில் பெரும் பகுதியை இராணுவ முகாம்களில் கழிக்க வேண்டும். அந்த நகர-தேசங்களின் வளங்கள் முழுவதும் இராணுவத்தை பராமரிப்பதிலேயே செலவிடப் பட்டன. அவ்வாறான இராணுவவாத கொள்கை கொண்ட சமுதாயத்தில், "கணபதி" என்ற தெய்வத்தை  வழிபட்டிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. 

"கணேஷ்" என்ற பெயரில் ஒரு பண்டைய நகரம் இருந்தது. ( Kanesh, http://en.wikipedia.org/wiki/Kültepe) இன்றைய துருக்கி நாட்டில், Kayseri எனும் நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அது உள்ளது.  கணேஷ் நகரம் பாபிலோனியருடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் வெளிநாடுகளிலும் உணரப் பட்டது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு வாகனமாக விலங்கினங்கள் இருந்துள்ளன. எலி, மாடு, மயில் போன்ற விலங்கினங்களை வாகனங்களாக கொண்ட இந்து மத கடவுளரை இது நினைவுபடுத்துகின்றது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள், ஹித்தித் அல்லது ஹத்தி இனத்தவர் எனத் தெரிகின்றது. ஏதோ காரணத்தால் கணேஷ் நகரம் கைவிடப் பட்டு, ஹதூசா என்ற புதிய நகரம் உதயமாகியது. அவர்கள் அங்கிருந்த படியே ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள்.

இன்றைய துருக்கி பகுதிகளில் வாழ்ந்த வெள்ளயின ஹித்தித் மக்களுக்கும், இன்றைய ஈராக்கில் வாழ்ந்த அசிரியர்களுக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. அவை எல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போர்களே அன்றி, இன மேலாண்மைப் போர்களல்ல. அவர்களுக்கு சவாலாக விளங்கிய அசிரிய பேரரசன் ஒருவனின் பெயர் "நரம் சின்". இந்தப் பெயர், விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன் என்ற மன்னனை நினைவு படுத்துகின்றது அல்லவா? அசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களால் தோற்கடிக்கப் பட்ட நாடுகளில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். அதனால், அவர்களால் பாதிக்கப்பட்ட பிற இனங்கள் அசிரியர்களை கொடியவர்களாக கருதியிருக்க வாய்ப்புண்டு. அனேகமாக, இந்து மத புராணங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் "அசுரர்கள்" என்ற சொல் அங்கிருந்து தோன்றி இருக்கலாம். ஏனெனில், அசிரியர்களின் தலைநகரத்தின் பெயர் "அசுரா"! 

அசிரியர்களின் சாம்ராஜ்யத்தில் பல்லின மக்கள் வாழ்ந்தனர். அந்தக் காலத்திலேயே பிரஜைகள் மதித்து நடக்க வேண்டிய சட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்பது ஒரு சிறப்பம்சம். இருந்தாலும் சில சட்டங்கள் பிற்போக்கானவையாக இருந்தன. உதாரணத்திற்கு, பெண்கள் வெளியே போகும் பொழுது, உடலையும், முகத்தையும் மூடும் பர்தா (அல்லது பூர்க்கா) என்ற ஆடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. விலை மாதுக்கள் மட்டுமே முகத்தை மூடாமல் ஆடை அணிந்திருக்க வேண்டும். (The Code of the Assyrians, http://www.fordham.edu/halsall/ancient/1075assyriancode.asp) இந்த வழக்கம் பிற்காலத்தில், பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப் பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, வட இந்தியாவை சேர்ந்த இந்துப் பெண்களும், கிரேக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண்களும், முகத்தை மூடி பர்தா அணிந்து தான் வெளியே சென்றனர்.

கற்பு என்ற ஒழுக்க நெறி கூட, மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த கலாச்சாரம் தான். பெரியாரும், திராவிட இயக்க அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்தனர். நான் முன்பு ஒரு தடவை எழுதியது போல (பார்க்க: கோயிலில் பாலியல் தொழில்) தமிழர்களும் ஒரு காலத்தில் தாய்வழிச் சமுதாயமாக இருந்தனர். மத்திய கிழக்கில் மாறிக் கொண்டு வந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு, தமிழர் மத்தியிலும் பரவியது. திராவிட கொள்கையாளர்கள், அதனை ஆரியர்கள் புகுத்தினார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் யார் அந்த ஆரியர்கள்? தமது கலாச்சாரம், மொழி என்பனவற்றை அவர்களால் எவ்வாறு எம்மீது திணிக்க முடிந்தது ?

உண்மையில், நாங்கள் தான் அந்த ஆரியர்கள்! அங்கிலேயரின் காலனிய ஆட்சிக் காலத்தில், நாங்கள் ஆங்கில மொழி பேசவும், ஆங்கிலேயரை போன்ற நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொள்ளவில்லையா? அதே போன்று,  நாங்களாகவே  ஆரியரின் மதத்தை, கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினோம்! அந்தக் கருதுகோளை நிரூபிக்கும் ஆதாரங்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், ஈரானில் இருந்து வந்த வெள்ளை இனத்தவர்கள். அவர்கள் தமது ஈரானிய (ஆரிய) கலாச்சாரத்தை கொண்டு வந்து புகுத்தி இருப்பார்கள். ராஜராஜ சோழன் காலத்தில் சைவ மதத்துடன், ஆரிய மயமாக்கலும் விரைவாக பரவியது.

பண்டைய காலத்து வரலாற்றை தேட வேண்டுமானால், அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம். உலகம் முழுவதும் வென்ற அலெக்சாண்டர் இந்தியாவில் தோற்று திரும்பினான். இந்த வரலாறு ஒரு பாதி மட்டுமே உண்மை. இன்னொரு பாதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வட-மேற்கு இந்தியாவில் சில பகுதிகளை அலெக்சாண்டரின் படைகள் கைப்பற்றின. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில், உள்ளூர் பெண்களை மணம் முடித்துக் கொண்டு, அலெக்சாண்டரின் கிரேக்க படையினர் தங்கி விட்டார்கள். பிற்காலத்தில் அங்கே பல வெள்ளையின ராஜ்ஜியங்கள் தோன்றின. அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தமது ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்தார்கள். அவர்கள் மூலம் கிரேக்கர்களின் கலாச்சாரம், இந்தியாவில் பரவி இருக்கலாம் அல்லவா? கிரேக்க கலாச்சாரம் என்றால் என்ன?

கிரேக்கர்களின் புராணக் கதைகளில், "மெடூசா" என்ற அரக்கி பற்றிய கதை பிரபலமானது. தலையில் பாம்புகள் நெளியும், விகாரமான தோற்றம் கொண்ட சூனியக் கிழவி போன்ற மெடூசாவின் கதையை, குழந்தைகளை பயமுறுத்த சொல்லப் படுவதுண்டு. அந்தக் கதையின் படி, மெடூசா ஒரு காலத்தில், கிரேக்க நாட்டின் பேரழகியாக இருந்தவள். அவளை மணம் முடிப்பதற்கு எத்தனையோ ஆண்கள் போட்டி போட்டார்கள். ஏதென்ஸ் நகர தேவதையான அதினாவின் கோயிலுக்கு, மெடூசா வழிபட செல்வது வழக்கம். ஒரு நாள், யாருமற்ற நேரத்தில் அங்கு வந்த பொசெய்டொன், மெடூசாவை கோயிலில் வைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். தனது கோயிலிலேயே இவ்வாறான அக்கிரமம் நடந்ததால், அதினா கோபமுற்றாள். ஆனால், பொசெய்டொன் கிரேக்கர்களின் சமுத்திரக் கடவுள். அதனால் அவனை தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணான மெடூசா மீது பழி போடப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் கற்பிழந்த மெடூசா, அந்தக் கணமே விகாரமான வயோதிப மாதுவாக மாற வேண்டுமென சபிக்கப் பட்டாள். 

"சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான்..." என்று பெண்ணின் கற்பை பத்திரமாக பாதுகாக்கக் கோரும், பிற்போக்கான இந்தியக் கலாச்சாரம் உங்கள் மனக்கண்ணில் வரலாம். கிரேக்கர்கள் மத்தியிலும் அதே மாதிரியான கலாச்சாரம் இருந்ததை மெடூசா கதை மூலம் அறிய முடிகின்றது.  ஹோமர் எழுதிய காவியமான "ஒடிசி"யிலும், ஒரு திருமணமான பெண், கணவன் கடல் கடந்து சென்று வருடக் கணக்காக திரும்பி வரா விட்டாலும், சோரம் போகாமல் கற்பெனும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று போதிக்கின்றது. ஹோமர் எழுதிய ஒடிசி எனும் காவியத்தில், பல இடங்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன. ஒடிசி காவியத்தில்,  த்ரோய் நாட்டவரால் கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க அரசியை  மீட்பதற்காக பெரும் போர் நடந்தது. இராமாயணத்தில் இலங்காபுரியை சேர்ந்த இராவணனால் கடத்தப் பட்ட  சீதையை மீட்பதற்காக போர் நடந்தது.  "யாராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்த கதை", இராமாயணத்திலும், ஓடிசியிலும் ஒரே மாதிரி சொல்லப் படுகின்றது.

த்ரொய் நாட்டுடன் போருக்கு சென்ற ஓடிசியின் கப்பல், திரும்பி வரும் வழியில் திசை மாறி கடலில் தத்தளிக்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல புதிய நாடுகளை கண்டு, அங்கெல்லாம் தீரச் செயல்களை செய்து களைத்த ஒடிசி, இறுதியில் தாயகம் திரும்புகின்றான். வீடு வந்து சேர்ந்த பின்னர், தனது மனைவி இத்தனை வருடங்களாக கற்புடன் இருந்தவளா என்று சோதிப்பதற்காக ஒரு பரீட்சை வைக்கிறான். இது சீதையின் கற்பை சோதித்த இராமனின் கதையை நினைவுபடுத்துகின்றது. இதே நேரம், ஒடிசி கண்டுபிடித்த நாடுகளில் எல்லாம், பல பெண்களுடன் உறவு கொள்கிறான். இந்தக் காவியத்தை எழுதிய ஹோமருக்கு, அது தவறாக தெரியவில்லை. அதாவது, வெளிநாடு சென்ற  ஆண் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால், கணவன் வெளிநாட்டுக்கு  சென்றதால் தொடர்புகள் அறுந்து விட்ட நிலையிலும், அவனை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாலும்,  தனிமையில் வாடும் மனைவி, வேறெந்த ஆண்  மகனையும் மனத்தால் கூட தீண்டக் கூடாது. அதுவே பெண்களை மகிமைப் படுத்தும் கற்பெனும் ஒழுக்க நெறி.   கிரேக்க புராணக் கதைகள் போதிக்கும் நீதி நெறியும் அது தான்.இந்திய புராணங்களையும், கிரேக்க புராணங்களையும் ஒப்பிட்டால், இது போன்ற பல ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு "கற்பின் சிறப்பை" எடுத்துக் கூறும் கிரேக்க கதைகள் பல உள்ளன.

கிரேக்கர்களின் ஒர்பெயுஸ் (Orpheus), எயுரிடிசே (Eurydice) என்ற புராணக்கதையும், இந்தியர்களின் சத்தியவான்-சாவித்திரி கதையும் ஒரே மாதிரி அமைந்துள்ளன. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒபெயுஸ் ஒரு சிறந்த இசைக் கலைஞன். அவன் யாழ் இசைத்துப் பாடினால் மயங்காதவர் எவருமில்லை. ஒபெயுஸ், எயுரிடிசே என்ற அழகிய நங்கையை காதல் திருமணம் செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அவர்களது மணவாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. சத்தியவான், சாவித்திரி கதையிலும் அவர்களின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது. எயுரிடிசே காமுகன் ஒருவனால் கானகத்தில் விரட்டப்பட்டு, பாம்பு கடித்து இறந்து போகிறாள். அவளது உயிர் மாண்டவர் வாழும், (எமலோகமான) பாதாள லோகத்திற்கு செல்கின்றது. சத்தியவான் கானகத்தில் கனி பறிக்க சென்ற வேளை உயிர் பிரிகிறது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத ஒர்பெயுஸ், எமலோகத்திற்கு சென்று உயிரை மீட்டு வருவதாக சூளுரைக்கிறான். யாரும் துணியாத காரியமாக, பாதாள லோகம் நோக்கிச் செல்கிறான். 

கணவனின் இழப்பை ஏற்றுக் கொள்ளாத சாவித்திரி, சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமதர்மனை பின்தொடர்ந்து செல்கிறாள். கிரேக்க பாதாள லோகத்தில், அதன் அதிபதியான ஹாடெஸின் (எமதர்மன்) காவல் நாய்கள் (எருமை வாகனம்?) ஒர்பெயுசை மேற்கொண்டு செல்ல விடாது தடுக்கின்றன. அதனால் வாசலில் உட்கார்ந்து கொள்ளும் ஒர்பெயுஸ், யாழ் எடுத்து கல்லும் கரையும் வண்ணம் சோக கானத்தை இசைக்கிறான். அவனது இசை காலனையும் கரைய வைக்கிறது. இசையினால் இளகிய ஹாடெஸ், எயுரிடிசேயை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என வரம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. ஒர்பெயுஸ் திரும்பிப் பாராமல் நடந்து செல்ல வேண்டும். அவன் மனைவி அவனைத் தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவன் மனைவி மீண்டும் எமலோகத்திற்கே திரும்பி விடுவாள். நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஒர்பெயுஸ், தனது மனைவியை கூட்டிச் செல்கிறாள். வழி நெடுகிலும், அவள் தன்னை பின்தொடர்ந்து வருகின்றாளா என்ற சந்தேகம் வருகின்றது. ஒர்பெயுஸ் பூலோகத்தை வந்தடையும் நேரத்தில், சந்தேகம் வலுக்கவே திரும்பிப் பார்க்கிறான். அந்த நிமிடமே எயுரிடிசே மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் சென்று விடுகிறாள். கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் மனைவியின் உயிரை மீட்டு வந்து பறிகொடுத்த ஒர்பெயுஸ், எமலோகம் சென்று திரும்பிய அனுபவத்தை பாடி பொழுதைப் போக்கினான். கிரேக்க மக்கள் மத்தியில் ஒர்பெயுஸ் - எயுரிடிசே கதை காலத்தால் அழியாத காவியமாகி விட்டது.

"சத்தியவான்-சாவித்திரி-எமதர்மன்" கதை, வட இந்தியர்களுடையது. வட இந்தியர்களும், ஈரானியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஐரோப்பிய இனமான கிரேக்கர்களுக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒரே மாதிரியான புராணக் கதைகளை கேள்விப்பட முடிகின்றது. இந்த மக்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், சில பாரம்பரிய பிணைப்புகள் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது நவீன கால தேசியவாத கற்பிதங்களை தகர்க்கின்றது. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு மொழிகளை பேசி வருகின்றனர். அது தான் உலக நியதி.

இந்து மத கடவுளரும், இந்திய புராணக் கதைகளும், அசுரர்கள் பற்றிய கதைகளும், சமஸ்கிருதத்திற்கு முந்திய புராதன இந்திய மொழியும்; ஈராக், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியிருக்கலாம் என்பதை பார்த்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தால், அதாவது இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள ஈரானுக்குள் நுழைந்தால், இதை விட ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும்.  இந்திய இந்துக்கள் எம தர்மனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிப்பதில்லை. எமனை அச்சத்திற்குரிய மரண தேவதையாக உருவகிக்கின்றனர். இது அனேகமாக, கிரேக்க கலாச்சாரத்தின் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கிரேக்கர்களின் மரண தேவதையான ஹாடெஸ், எமனைப் போன்ற பாதாள லோகத்தின் அதிபதி ஆகும். ஆனால், எம தர்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. ஈரானில், எம தர்மன்  ஒரு தேசத்தை ஸ்தாபித்த அரசனாக போற்றப் படுகிறான். ஆதி கால ஈரானிய அரசர்கள், எமனின் பெயர் வருமாறு பதவிப் பெயரை சூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஈரானியரின் புராதன தலைநகரமும் எமனின் பெயரால் சிறப்புற்று விளங்கியது. சில நேரம், கற்பனையை விட நிஜம் எம்மை ஆச்சரியக் கடலுக்குள் மூழ்கடித்து விடும். 

(தொடரும்)

***********************


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, Christopher I. Beckwith

Friday, January 25, 2013

வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி


வத்திக்கான் உலகிலேயே மிகவும் சிறிய "நாடு". அதனை நாடென்று அழைக்க முடியுமா என்பதே சந்தேகம். ஏனெனில், ரோம் நகரத்தில் ஒரு சிறிய பிரிவு தான் வத்திக்கான். அப்படியானால் அதனை எதற்காக தனி நாடு என்று அழைக்கிறார்கள். அதற்கு சரித்திரப் பின்னணி உண்டு. 20 ம் நூற்றாண்டு வரையில், அது உண்மையிலேயே ஒரு தனியான நாடு தான். ரோம் நகரமும், அதனை சுற்றியுள்ள மத்திய இத்தாலியின் சில பகுதிகளும் வத்திக்கானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் ஆட்சியை பிடித்த முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், வத்திக்கானின் ஆட்சிக்குட்பட்ட  பகுதிகளை இத்தாலியுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக, இன்றுள்ள வத்திக்கான் நகரின் சுதந்திரம் அங்கீகரிக்கப் பட்டது. அதாவது இரண்டு அரசியல் சக்திகளும், ஒருவரின் சுதந்திரத்தை மற்றவர் அங்கீகரித்தார்கள். வத்திக்கானுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வாறு தான் ஆரம்பமாகின. இந்த நெருக்கத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. வத்திக்கானுக்கும், பாசிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளை கண்டால் பிடிக்காது. அன்று இத்தாலி இருந்த நிலையில், கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனை தடுப்பது அவசியம் என்று நினைத்தார்கள். கம்யூனிசத்தை வர விடாமல் தடுப்பதற்காக, வத்திக்கான் உலகம் முழுவதும் தோன்றிய  பாசிச சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டமை ஒன்றும் புதினமல்ல. சோஷலிச கிழக்கு ஐரோப்பாவின் ஒரேயொரு கத்தோலிக்க நாடான போலந்தில் சதி செய்து குழம்ப நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் "கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு" வழிவகுத்ததும் உலகம் அறிந்த விடயங்கள். 

முசோலினி, வத்திக்கானின் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. பாசிஸ்டுகள் இத்தாலி மக்களிடம் இருந்தும், எத்தியோப்பியா போன்ற காலனிகளிடம் இருந்தும் கொள்ளையடித்த பெருந்தொகை பணத்தை, பாதுகாப்பாக வத்திக்கானிடம் கொடுத்து வைத்தார்கள். இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அந்தப் பணம் வத்திக்கானிடம் பத்திரமாக இருந்தது. அதனை அவர்கள் என்ன செய்தார்கள்? பிற ஐரோப்பிய நகரங்களில், அசையா சொத்துக்களில் முதலீடு செய்தார்கள். இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்களில் மிகவும் செலவு பிடிக்கும் மாவட்டங்களில் உள்ள ஆடம்பர வீடுகளின், அடுக்குமாடி கட்டிடங்களின் உரிமையாளர் வத்திக்கான் என்றால் நம்புவீர்களா? பிரிட்டனில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை, அது சம்பந்தமான விபரங்களை வெளியிட்டுள்ளது.(How the Vatican built a secret property empire using Mussolini's millions)  

வத்திக்கான் வசம் இருக்கும் முசோலினியின் பணத்தின், இன்றைய மதிப்பு 680 மில்லியன் யூரோக்கள். அதில் ஒரு பகுதி வீட்டு மனைகளில் முதலீடு செய்யப் படுகின்றது. வத்திக்கானுக்கு விசுவாசமான வங்கியாளர்கள் அதனை நிர்வகித்து வருகின்றனர். அனேகமாக அவை வத்திக்கானுக்கு சொந்தமான பினாமி முதலீட்டு நிறுவனங்களாக இருக்கும். Paolo Mennini, மற்றும்  John Varley ஆகியோர் வத்திக்கானுக்கு விசுவாசமான குறிப்பிடத் தக்க முக்கியமான வங்கியாளர்கள் ஆவர். பிரிட்டனின் கத்தோலிக்க வங்கியாளரான John Varley, பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்திருக்கும்  Barclays வங்கியின் தலைமை நிர்வாகி ஆவர். இந்த முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் எங்கே போகின்றது என்பன போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. வத்திக்கானும், அதனோடு சம்பந்தப் பட்ட நிறுவனங்களும் இரகசியமாக வைத்திருக்கின்றன. அந்த நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் எதுவும் பகிரங்கப் படுத்தப் படுவதில்லை. சுதந்திரமான கணக்காளர் எவரையும் பரிசோதிக்க அனுமதிப்பதில்லை.  

வத்திக்கானுக்கு சொந்தமான மூலதனம், பல நாடுகளுக்கு  கைமாறியுள்ளது. 1930 ம் ஆண்டு, பாசிஸ்டுகளின் பணம், லக்சம்பேர்க் நாட்டை சேர்ந்த வங்கி ஒன்றின் கணக்கில் வைக்கப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், அங்கிருந்து "போரில் நடுநிலை வகித்த" சுவிட்சர்லாந்துக்கு மாற்றப் பட்டது. அதில் ஒரு பகுதி, பின்னர்  அமெரிக்க வங்கிகளிலும் வைப்பிலிடப் பட்டது. லக்சம்பேர்க், சுவிட்சர்லாந்து என்பன, சர்வதேச கறுப்புப் பணத்தை கவரும் நோக்குடன், வரிச் சலுகை வழங்கும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. முசோலினியின் பணம் வத்திக்கானிடம் இருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். இது சம்பந்தமான விபரங்கள், ஏற்கனவே பல நூல்களில் வெளியாகி உள்ளன. இதை விட, "மதக் கடமைகளுக்கான நிறுவனம்" (IOR) என்ற பெயரில் வத்திக்கானின் உத்தியோகபூர்வ வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. அதன் நிலையான சொத்தின் மதிப்பு  6 கோடி யூரோக்களுக்கு மேல் தேறும். அந்த வங்கியின் நிர்வாகி  Paolo Cipriani, தாங்கள் "மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், கருப்பு பணத்தை பதுக்கி வைக்கும் நாடுகளுடன் தொடர்பு வைப்பதில்லை..." என்று கூறுகின்றார். ஆனால் உண்மை என்ன என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அந்த வங்கியில் முப்பத்தி ஐயாயிரம் கணக்குகள் இருப்பதாகவும், அவை யாவும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க பங்குத் தந்தைகள் போன்றோருக்கு சொந்தமானவை என்றும் கூறுகின்றனர். 

வத்திக்கானின் வங்கியானது உலகிலேயே மிகவும் இரகசியமான வங்கி ஆகும். வத்திக்கானின் வங்கி நிர்வாகிகளில் ஒருவர், 1982 ம் ஆண்டு பாலம் ஒன்றின் கீழ் பிணமாக கண்டெடுக்கப் பட்டார். அது ஒரு கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. வத்திக்கான், சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகின்றது என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. வத்திக்கான் வங்கி, கிரிமினல்களின் கறுப்புப் பணத்தை வெளுப்பதற்கு உதவுகின்றது என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்து வருகின்றது. ஏற்கனவே அந்த சந்தேகம் காரணமாக, 23 மில்லியன் யூரோ பெறுமதியான பங்குகள், நீதி அமைச்சின் உத்தரவின் பேரில் முடக்கி வைக்கப் பட்டுள்ளது. அமெரிக்க வங்கியான JP Morgan Chase,  வத்திக்கானின் கணக்கு ஒன்றை மூடி வைத்துள்ளது. போதுமான தகவல்கள் இல்லாத, சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த கணக்கு முடக்கப் பட்டது. 

மேலதிக தகவல்களுக்கு: 
1.How the Vatican built a secret property empire using Mussolini's millions
2.Bank Vaticaan opent de boeken: transparantie en rode cijfers
3.Vaticaan stak miljoenen van Mussolini in geheim vastgoedproject

***********************

வத்திக்கான் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.வத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம் 
2.வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!
3.கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!
4.கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்

Tuesday, January 22, 2013

தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 17



(பதினேழாம் பாகம்)


வெள்ளையின மக்களின் பூர்வீகம் என்ன? அவர்கள் தான் ஆரியர்களா? இது போன்ற "இனவாத அறிவியலை" நான் ஆராயவில்லை. மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்றுக் காலகட்டத்திலே இந்தியா நோக்கிய வெள்ளையின குடிப்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான வரலாற்று, கலாச்சார சான்றுகளை மட்டுமே ஆராய்கின்றேன். பிரதேச மேலாதிக்கத்திற்காக, இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக அன்றும், இன்றும் பல போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தப் போர்கள் எல்லாமே, கருப்பினத்திற்கும், வெள்ளை இனத்திற்கும் இடையிலான இன ஆதிக்க போட்டியாக இருந்ததில்லை. கருப்பு நிற இனங்களும், வெள்ளை நிற இனங்களும் தமக்குள்ளேயே போர் புரிந்த கதைகள் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கின்றன. அதே நேரம், சில நாகரீகங்கள் கருப்பரும், வெள்ளையரும் கலந்து உருவாகி இருந்தன. இது ஒரு முக்கியமான விடயம் ஆகும். 

உலகில் எந்தவொரு இனமும், இன்னொரு இனத்துடன் கலக்காமல் நாகரீகம் அடைந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இனக்கலப்பு செய்யாமல், இனத் தூய்மை பேணிய இனங்கள் எல்லாம் ஒன்றில் அழிந்து விட்டன, அல்லது காட்டுவாசிகளாக வாழ்கின்றன. உதாரணத்திற்கு, அவுஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவில் வாழ்ந்த இனம், தனிமைப் படுத்தப் பட்ட புவியியல் அமைப்பு காரணமாக, உலகில் வேறெந்த இனத்துடனும் தொடர்பற்று வாழ்ந்து வந்தது. அதனால் அவர்கள் பல தொழில்நுட்ப நிபுணத்துவங்களை  மறந்து விட்டார்கள். புதிய கருவிகளை உருவாக்கவோ, அல்லது வள்ளம் கட்டவோ அவர்களால் முடியவில்லை. இதன் விளைவாக, 19 ம் நூற்றாண்டில் குடியேறிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் அந்த மக்களை இலகுவாக இனவழிப்பு செய்ய முடிந்தது. 

நமது காலத்திற்கு முன் (கி.மு.) பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், சைபீரியா, வட ஐரோப்பிய பகுதிகளில் காலநிலை மாறியது. உறைநிலையும், பனி மூடிய நிலங்களும், இரத்தத்தை உறைய வைக்கும் குளிரும், மனிதர்கள் வாழ முடியாத சூழலை தோற்றுவித்தது.  அங்கு வாழ்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் நாடோடி மக்களாக இருந்ததால், குதிரை வளர்ப்பு அவர்கள் வாழ்வில் முக்கிய இடம்பிடித்தது. சமஸ்கிருதத்தில் குதிரைக்கு அஸ்வம் என்று பெயர். லிதுவேனியாவிலும் குதிரைக்கு அதே பெயர் என்பது, இவ்விரு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது அல்லவா?  மாட்டைக் குறிக்க, சமஸ்கிருதத்தில் "கோ", ஜெர்மன் மொழியில் "கூ" (Kuh). இவ்வாறு நிறைய உதாரணங்களை காட்டலாம். மேலும், இன்றைக்கும் மத்திய ஆசிய துருக்கி இன மக்கள், தமது கூடார வீடுகளை இடத்திற்கு இடம் நகர்த்துவது வழக்கம். அங்கே நீங்கள் ஒரு வீட்டின் முகவரியை தேடிச் சென்று, அந்த இடத்தில் வீடு இருந்த தடயமே இல்லை என்றால் ஆச்சரியப் படாதீர்கள். 

அது மட்டுமல்ல, பெண்களின் கற்பு நெறி "இந்திய-இந்து" சமூகத்தில் எந்தளவு முக்கியமாக கருதப்பட்டதோ, பண்டைய கிரேக்க சமுதாயத்தில் அதேயளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. இன்று துருக்கி மொழி பேசும் மத்திய ஆசிய நாடுகளில், பெண்களின் கற்பு நெறி, "இஸ்லாமிய நெறி" என்ற போர்வையின் கீழ் பின்பற்றப் பட்டு வருகின்றது. இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தோற்றத்தில் வேறு விதமாக இருந்தாலும், வெவ்வேறு மொழிகளை பேசினாலும்; இவர்கள் அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், அல்லது ஒரே மரபை பின்பற்றி வருகின்றனர். இன்றைக்கும் நம் மத்தியில் வாழும் எத்தனையோ பேர், "கலாச்சாரம், பாரம்பரியம்," என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையா? 

ஈரானுக்கு மேலே இருக்கும், ஆர்மேனியா என்ற சிறிய தேசத்தை "ஐரோப்பிய நாடு" என்று வரையறுக்கிறார்கள். அது ஒரு காலத்தில்,  ஈரானிய சாம்ராஜ்யத்திற்குட்பட்ட  ஒரு மாகாணமாக இருந்தது. இன்று எல்லோரும், ஆர்மேனியாவை ஐரோப்பா என்றும், ஈரானை ஆசியா என்றும் கூறுகிறார்கள். 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஆர்மேனிய தேசத்தின் அரைவாசிப் பகுதியை துருக்கி விழுங்கி விட்டது. ஆனால், துருக்கி ஒரு ஆசிய நாடு என்று சொல்கிறார்கள். இந்த முரண்நகை எப்படி தோன்றியது? எந்த நாடு ஐரோப்பாவுக்குள் அடங்குகின்றது? எந்த நாடு ஆசியாவுக்குள் அடங்குகின்றது? இதிலே நிறைய குழப்பம் இருப்பது தெரிகின்றது அல்லவா? ஏனென்றால், இவை எல்லாம் தற்கால அரசியல்வாதிளால் ஏற்படுத்தப் பட்ட பிரிவுகள். ஒரு காலத்தில் ஆர்மேனியர்களின் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரையில் விரிந்திருந்தது. அதை நிரூபிக்கும் வகையில், இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் ஆர்மேனியர்களின் பகுதி ஒன்றுண்டு.  மேலும், லெபனான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலும் ஆர்மேனியர்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர்.இன்றைக்கும், அந்த நாடுகளில் எல்லாம், ஆர்மேனியருகென  தனியான தேவாலயங்கள் உள்ளன.

சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆர்மேனியர் என்ற வெள்ளை இனம் பாபிலோனியர்களின் சாம்ராஜ்யத்திற்குள் பல சிறுபான்மை இனங்களுள் ஒன்றாக வாழ்ந்தனர். அனேகமாக பாபிலோனிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து வீழ்ந்த காலத்தில், வடக்கே ஆர்மேனியர்களின் அரசு தோன்றியது. அப்போது தோன்றிய மித்தானி (இது பற்றி கீழே விரிவாக எழுதப் பட்டுள்ளது.) என்ற ராஜ்யத்தில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளை இனம், ஆர்மேனியரின்  மூதாதையராக இருக்கலாம். அன்றைய காலத்தில், தெற்கில் இருந்த கறுப்பர்களின் நாடான எகிப்து, உலகில் பலமான வல்லரசாக திகழ்ந்தது.மித்தானியர்கள், பிராந்திய மேலாதிக்கத்திற்காக எகிப்தியர்களுடன் போரிட்டு வந்தாலும், பல தடவை அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தனர். எகிப்திய அரச பரம்பரையினர், ஆர்மேனிய- மித்தானி அரச வம்சத்து மணமக்களை மணந்து கொண்டனர். எகிப்தின் பிரபலமான பாரோ மன்னர் அகநாதன், மற்றும் இராணி நெபெர்தித்தி ஆகியோர் ஆர்மேனிய- ஆப்பிரிக்க கலப்பினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 

அரச குடும்பங்களின் மண உறவுகள் என்பதால், அந்தத் தகவல்கள் வரலாற்றில் பதியப் பட்டுள்ளன. அப்படியானால், சாதாரண பொது மக்களும் ஒன்று கலந்திருக்க வாய்ப்புண்டல்லவா? நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, இனக்கலப்பு காரணமாக எகிப்திய, ஆர்மேனிய நாகரீகங்கள் வளர்ந்தனவே ஒழிய, யாருக்கும் எந்த தீங்கும் நேரவில்லை. நான் சொல்வது சரியானால், எதற்காக ஐரோப்பாவில் எங்கேயும் கறுப்பின மக்களை காணவில்லை என்று யாராவது எதிர்க்கேள்வி கேட்கலாம். அன்றைய காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று ஆயிரக்கணக்கான தெற்காசிய மக்கள், அமெரிக்காவிலோ,மேற்கு ஐரோப்பாவிலோ வேலை வாய்ப்பு, வசதியை பெருக்கிக் கொள்வதற்காக  குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, அமெரிக்க, மேற்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசிய நாடுகளில் குடியேறியோர் எத்தனை பேர்? அப்படி நடக்காததற்கு என்ன காரணம்? பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வாழும் மக்கள், வளர்ச்சி அடைந்த பொருளாதார மையங்களை நோக்கி இடம்பெயர்வது புராதன நாகரீகங்களின் காலத்திலும் நடந்தது. 

முதலில் மத்திய கிழக்கில் குடியேறிய வெள்ளையின மக்கள், வட ஆப்பிரிக்காவில் மொரோக்கோ வரை சென்றனர். அவர்கள் எங்கெங்கு குடியேறினார்களோ, அங்கு பேசப்பட்ட மொழிகளையும், கலாச்சாரங்களையும் பின்பற்றினார்கள். இன்று மேற்கத்திய நாடுகளில், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், சொந்த இனத்தின் பிறப்புவீதம் குறைவாக இருப்பதாலும், பொருளாதார அபிவிருத்திக்காக மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். அது போன்ற சூழ்நிலை, அன்றிருந்த எகிப்திய, பாபிலோனிய நாகரீகங்களிலும் ஏற்பட்டிருக்கலாம். "பிலிஸ்தீன்" என்ற கிரேக்க பழங்குடி இன மக்கள் இஸ்ரேலில் குடியேறி, நாகரிக சமுதாயமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. (பிலிஸ்தீன் என்ற சொல்லில் இருந்து தான் பாலஸ்தீனம் பிறந்தது.) வட ஆப்பிரிக்காவில் வாழும், பெர்பர் மக்களும் வெள்ளையினத்தவர்கள் ஆவர். 15 ம் நூற்றாண்டு வரையில் கூட, வெள்ளையின பெர்பர் மக்கள் செறிவாக வாழ்ந்த நகரங்கள், கானா சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளன.

இன்று துருக்கி என்று அறியப்படும் நாட்டின் மத்தியில், ஹித்தித் நாகரீகம் தோன்றியிருந்தது. (Hittites, http://en.wikipedia.org/wiki/History_of_the_Hittites) ஐரோப்பிய கண்டத்தில் முன்தோன்றிய வெள்ளையின நாகரீகம், அல்லது முழுவதும் வெள்ளையின மக்களைக் கொண்ட  இராஜ்ஜியம், அதுவாகத் தான் இருக்க வேண்டும். ஹித்தித் இன மக்களின் அரசு போர்வெறி கொண்டது. அதனால், தனது பிரஜைகளை சிறந்த இராணுவவீரர்களாக மாற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டது. (கிரேக்கத்தில் இருந்த இன்னொரு ஆதிகால ஐரோப்பிய நாகரீகமான ஸ்பார்ட்டா வும், ஒரு இராணுவ சமுதாயமாகவே திகழ்ந்தது.)  ஹித்தித் தலைநகரமான "ஹதுசா" வில், கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள், எவ்வாறு அந்நாட்டு பிரஜைகளின் அன்றாட வாழ்வை பாதித்தன, என்பன போன்ற  விபரங்கள் களிமண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அழிந்து போன ஹித்தித் தலைநகர இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டன. 

ஹித்தித் நாட்டவர்கள், சுமேரியர்கள், அல்லது பாபிலோனியரிடம் இருந்து எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். அதாவது இன்று ஐரோப்பிய மொழிகள், லத்தீன் எழுத்துக்களில் எழுதப் படுவதைப் போல, அன்று பல இனங்கள் சுமேரியரின் எழுத்து வடிவங்களை கடன்வாங்கி பயன்படுத்தினார்கள். சுமேரிய மொழி தெரிந்த ஒருவர் அதனை வாசிக்கலாம், ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது. ஹித்தித் மக்களுக்கு அருகாமையில், ஹூரியன் (அல்லது கூரியன்) என்ற இன்னொரு வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். ஹூரியன் நாகரீகமும் அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியது.

குர்து மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், இன்றைய ஈராக்கின் வட பகுதியில், துருக்கி எல்லையோரம் "இசுவா" என்றொரு நாடு இருந்தது. (Isuwa, http://en.wikipedia.org/wiki/Isuwa) இசுவா என்றால் "குதிரைகளின் நாடு" என்று அர்த்தம். சம்ஸ்கிருத சொல்லான அஸ்வம் என்ற குதிரையை குறிக்கும் சொல்லின் மூலமும், இசுவா நாடாக இருக்கலாம். கூரியன், ஹித்தித் இன மக்கள், குதிரைகளை போருக்கு பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். அந்தத் திறமை, பிற்கால உலக சரித்திரத்தை மாற்றி அமைத்தது. கூரியன், ஹித்தித் மக்களின் வரலாற்றை பார்க்கும் பொழுது, "வேத கால ஆரியர்கள் குதிரைகளில் படையெடுத்து வந்த கதையை" பெருமளவு ஒத்துள்ளது.  மகாபாரதக் கதையில் குறிப்பிடப் படுவது போன்ற குதிரை வண்டிகளையும், போருக்கு பயன்படுத்தி வந்தனர்.

டேவிட் மன்னனின் ராஜ்ஜியம் தோன்றுவதற்கு முன்னர், ஜெருசலேமில் "யெபுசீத், அல்லது ஹொரித்" என்ற இன மக்கள் வாழ்ந்ததாக, யூதர்களின் பைபிளில் (பழைய ஏற்பாடு) எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின் டேவிட் மன்னனும், இஸ்ரேலின் பிரஜைகளும் கறுப்பர்களாக இருந்திருக்க வேண்டும். பெரும்பான்மை கறுப்பர்களைக் கொண்ட மத்திய கிழக்கில், சிறுபான்மை வெள்ளையின மக்கள் குடியேறி வாழ்ந்தார்கள் என்ற எனது கூற்றை, விவிலிய நூல் நிரூபிக்கின்றது. இன்றைய நவீன துருக்கி நாட்டில், "ஹூரியத்" என்றால் குடியரசு என்று அர்த்தமாகும். அந்தச் சொல்லின் மூலம், ஹூரியன் இன மக்கள் என்பதில் சந்தேகமில்லை. ஹூரியன் இன மக்கள், ஒரு காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கிய "மித்தானி" என்ற நாட்டின் நாகரீகத்தை உருவாக்கி இருக்கலாம்.(Mitanni, http://en.wikipedia.org/wiki/Mitanni) 

மித்தானி ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும். மேலும், அந்நாட்டு மக்கள் இந்திரன், மித்ரா, வர்ண பகவான், போன்ற பல "இந்துக்" கடவுளரை வழிபட்டு வந்துள்ளனர். ஆனால், மித்தானி நாட்டின் பிரஜைகள் அனைவரும் வெள்ளையின மக்கள் என்று உறுதியாக கூற முடியாது. சில ஐரோப்பிய மையவாத சரித்திர ஆசிரியர்கள், வெறும் பத்து அல்லது இருபது சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்த முடிவுக்கு வருகின்றனர். ஏனெனில், அந்த சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மூலத்தை கொண்டிருக்கின்றன. மித்தானி ராஜ்யத்தின் சனத்தொகை வெள்ளையர், கறுப்பர், அல்லது இரண்டும் கலந்த கலப்பினத்தவரைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், ஆட்சியாளர்களான மேட்டுக்குடி சமூகம், முழுக்க முழுக்க வெள்ளையராக இருந்திருக்கலாம். அதுவே வர்ணாச்சிரம நால்வர்ண சாதி அமைப்பின் தோற்றுவாயாக இருக்க வேண்டும். பண்டைய இந்தியாவில் மட்டுமல்லாது ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் நால்வர்ண சாதியமைப்பு இருந்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

கூரியன், ஹூரியன் என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்ட வெள்ளையின மக்களின் பூர்வீகம் எது? அவர்களின் ஹூரிய மொழி, இன்றைய குர்து மொழியுடனும், ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் வாழும், செச்செனியர் போன்ற கொகேசிய இனங்களின் மொழியையும் ஒத்துள்ளது. (இன்றைக்கும் உத்தியோகபூர்வ படிவங்களில், வெள்ளையின மக்களை "கொகேசியன்" என்று வகைப் படுத்துகின்றனர்.) அவர்களுக்கு ஹூரியன் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது? பல இன மக்களின் பெயர்கள், காரணப் பெயராக இருந்து புழக்கத்தில் வந்தவை தான். ஆகவே, ஹூரிய மக்களின் பெயரும் ஏதாவது காரணத்தை அடியொற்றி வந்திருக்கலாம். அந்தப் பிரதேசத்தில் இன்றைக்கும் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழியான பார்சி (ஈரான்) மொழியில், "ஹரா" என்றால் மலை என்று அர்த்தம். அதே மொழிக் குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருதத்தில், ஹரா அல்லது ஹரி  (ஹிரான்) என்றால் தங்கம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. 

துருக்கியில் குடியேறிய, ஐரோப்பியரின் மூதாதையரான, ஹூரிய மக்களின் பூர்வீகம் பற்றிய கதைகளில், அவர்கள் "ஹரியின் மக்கள்" என்று குறிப்பிடப் படுகின்றனர்.  ஹூரியர்களின் முன்னோர்கள், "வடக்குத் திசையில் உள்ள தங்க மலையில் இருந்து" வந்து குடியேறியதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. வேதங்களில் சில இடங்களில், இந்திரன் தங்கமலையை காக்கும் கடவுளாக குறிப்பிடப் படுகின்றார். பிற்காலத்தில் மகாத்மா காந்தி கண்டுபிடித்த "ஹரிஜன்" என்ற சொற்பதம், வேத கால ஆரியர்களின் மூலத்தைக் குறித்தது என்பது ஒரு முரண்நகை.  இந்த "தங்கமலை இரகசியம்" வெறும் புராணக் கட்டுக்கதை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஹூரிய புராணக் கதைகளை ஆழமாக ஆராய்ந்தால், அவர்களின் பூர்வீகம் தெளிவாகத் தெரிகின்றது. அந்த இன மக்கள் உயரமான மலைகளை கடந்து வந்திருக்கிறார்கள். அந்த மலைகள், தெற்கு ரஷ்யாவில் உள்ள யூரல் மலைகளாக இருக்கலாம். அப்படியானால், அந்த மக்களின் தாயகம் அதற்குமப்பால் வடக்குத் திசையில் இருக்க வேண்டும். தமது முன்னோரின் பூமியில், நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதால், அதனை தங்கம் என்ற அடைமொழியில் அழைத்து வந்தனர். வட துருவத்தை அண்டிய, ரஷ்யாவின் வட பகுதியில், கோடை காலத்தில் சூரியன் மறைவதில்லை. பகல் போன்று, இரவிலும், 24 மணிநேரமும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். ஆகவே, ஹூரிய இன மக்கள், ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது இத்தால் உறுதியாகின்றது.  மேலும், "சூரியன்", "ஹரி " போன்ற, எமக்கு நன்கு தெரிந்த சம்ஸ்கிருத சொற்களுக்கும், ஹூரியன் என்ற ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லுக்கும் இடையிலான  ஒற்றுமையை கவனிக்கவும். 

(தொடரும்)  

************************************

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber

Friday, January 18, 2013

மாலியில் கேலிக்குள்ளான பிரான்ஸின் நவ காலனிய ஆக்கிரமிப்பு

மீண்டும் ஒரு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". பின்லாடனின் மரணத்தோடு, "அல்கைதா அழிந்து விட்டது" என்று பெரு மூச்சு விட்டவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி. மாலி என்ற ஆப்பிரிக்க நாட்டில், பிரான்சின் வான் படைகள் "அல்கைதாவுக்கு எதிராக போரிடுவதாக" அறிவித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் மாலியில் என்ன நடக்கின்றது? இது ஒரு நவ -காலனித்துவ ஆக்கிரமிப்பாகுமா? அல்லது பிரான்ஸ் கூற விரும்புவது போல, "அல்கைதாவுக்கு எதிரான போர்" ஆக கருதலாமா? 

வடக்கு மாலியில், துவாரக் இன மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய கட்டுரையை வாசிக்கவும்.(சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை) இம்முறை வடக்கு மாலியினை ஆக்கிரமிக்க விரும்பும் ஏகாதிபத்திய தலையீடு பற்றி ஆராய்வோம். உலகம் முழுவதும் தனி நாடு கோரிப் போராடும் இயக்கங்களும், அதன் ஆதரவாளர்களும் மாலியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது.  மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள், ஏற்கனவே தமது காலனிகளின் எல்லைகளை தமது நிர்வாக வசதிக்கேற்ப பிரித்துள்ளன. அவற்றை மாற்ற விரும்பும் சக்திகள் யாராக இருந்தாலும், ஐ.நா. தலைமையிலான ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

"இந்தியாவில் வாழும் தமிழர்களையும், இலங்கையில் வாழும் தமிழர்களையும், இடையிலே புகுந்த ஆங்கிலேயர்கள் இரண்டாக பிரித்து விட்டார்கள். ஈழத் தமிழர்களை சிங்களவன் கையிலும், தமிழ்நாட்டு தமிழர்களை ஹிந்திக்காரன் கையிலும் ஒப்படைத்து விட்டார்கள். அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்..." என்று பலர் அங்கலாய்ப்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள். மாலியில் வாழும் துவாரக் இன மக்களும் அதே மாதியான முறைப்பாடுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 1936 ம் ஆண்டு வரையில் கூட, பிரெஞ்சு காலனிகளான  மாலி, நைஜர், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள், ஒரே நாடாக இருந்ததை அந்தக் கால வரைபடத்தை பார்ப்பவர் புரிந்து கொள்ளலாம். (பார்க்க: 1936 ல் பிரெஞ்சுக் காலனிகளின் வரைபடம், http://upload.wikimedia.org/wikipedia/commons/3/38/AOFMap1936.jpg) பிரெஞ்சுக் காரர்கள் தமது நிர்வாக வசதி கருதி இன்றுள்ள எல்லைகளை பிரித்து விட்டார்கள். அன்றிலிருந்து, "இது இராமன் கிழித்த கோடு. இதை தாண்டினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்..." என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு மாலியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், தங்களை மாலியின் பிற இனங்களிடமிருந்து, வேறுபடுத்திக் காட்டிக் கொள்கின்றனர். நிறவேற்றுமை ஒரு முக்கிய அடையாளம். மாலியின் தெற்குப் பகுதியில் வாழும் இனங்கள், பிற ஆப்பிக்கர்களைப் போல கருப்பாக இருக்கையில், துவாரக் மக்கள் சிவப்பாக இருக்கின்றனர். அதனால் தாம் வெள்ளையர் என்ற எண்ணமும் அவர்களிடம் உண்டு. (இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் ஆரியர் வருகை போன்று, ஆப்பிரிக்காவில் வெள்ளையினத்தவரின் குடியேற்றங்கள் இடம்பெற்ற வரலாற்றையும் மறுப்பதற்கில்லை.) துவாரக் மக்கள், ஒரு பாரம்பரிய நாடோடிக் குழுமம் ஆகும். இஸ்லாம் பரவிய தொடக்க காலத்தில் இருந்தே அரேபியருடன் வாணிபம் செய்து வருவதால், இன்று பெருமளவு அரபி மொழி பேசுகின்றனர். ஆனால், அவர்களுக்கென்றொரு தனியான மொழி உள்ளது. ஒரு காலத்தில் அதற்கு தனியான எழுத்து வடிவமும் இருந்தது. (பார்க்க: Berber languages, http://en.wikipedia.org/wiki/Berber_languages)

ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் கால் பதிப்பதற்கு முன்னர், அதாவது 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, சஹாரா பாலைவனத்திற்கு ஊடான சர்வதேச வர்த்தகம், துவாரக் வியாபாரிகளின் கைகளில் இருந்தது. அவர்கள் ஒட்டகங்களில் பொதிகளை ஏற்றிக் கொண்டு, சஹாரா பாலைவனத்திற்கு ஊடாக பயணம் செய்து வந்தனர். அதனால் சஹாரா பாலைவனத்தில் எல்லா இடங்களும் அவர்களுக்கு பரிச்சயமானவை. அந்தக் காலங்களில், தங்கம், யானைத் தந்தம், அடிமைகள் போன்ற சர்வதேச சந்தைக்கு பிரதானமான பண்டங்களை, ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு விநியோகம் செய்து வந்தனர். சஹாரா பிரதேசத்தை காலனிப் படுத்திய பிரான்ஸ், இன்றைய தேசங்களின் எல்லைகளை பிரித்தது. அதனால், துவாரக் இன மக்கள், அல்ஜீரியா, மொரிட்டானியா, மொரோக்கோ, மாலி ஆகிய நவீன தேசிய எல்லைகளினால் துண்டாடப் பட்டனர். "துவாரக் இன மக்கள் பல நாடுகளில் வாழ்ந்த போதிலும், அவர்களுக்கென்றொரு நாடில்லை," என்ற தேசியவாத இயக்கமும் அப்போது தான் ஆரம்பமாகியது. குறிப்பாக, வடக்கு மாலியில் வாழ்ந்த துவாரக் இன மக்கள், மாலி அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி ஒன்றை ஆரம்பித்தனர்.

இருபது வருடங்களுக்கு முன்னர், தொன்னூறுகளில் வெடித்த துவாரக் தேசிய எழுச்சி கொடூரமாக அடக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் வாழும், வேற்றின மக்களின் உதவியோடு, மாலியின் தேசிய இராணுவம் ஒரு இனவழிப்பு போரை நடத்தியது. அப்போது நடந்த இனப்படுகொலைகளை, ஐ.நா., அல்லது சர்வதேச சமூகம் நீண்ட காலமாக புறக்கணித்து வந்தது. போரில் தோற்கடிக்கப்பட்ட துவாரக் விடுதலைப் போராளிகள், லிபியாவில் தஞ்சம் கோரினார்கள். லிபியாவில் அன்றிருந்த கடாபி அரசு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு நில்லாது, லிபிய இராணுவத்திலும் சேர்த்துக் கொண்டது. கடாபியினால் வளர்க்கப்பட்ட துவாரக் போராளிகள், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கொள்கைகளை கற்றுக்  கொண்டனர். லிபியாவில் கடாபியின் வீழ்ச்சியின் பின்னர், புதிய உத்வேகத்துடன் தமது தாயகம் திரும்பினார்கள். போகும் பொழுது, லிபிய இராணுவ முகாம்களில் இருந்த நவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். 

தமது தாயகத்தை வந்தடைந்த துவாரக் போராளிகள், அங்கிருந்த மாலி தேசிய இராணுவத்துடன் போரிட்டு வென்று, பல பிரதேசங்களை கைப்பற்றினார்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், துவாரக் இன மக்களுக்கான "அசாவத்" என்ற தனி நாட்டை பிரகடனம் செய்தனர். ஆனால், உலக வரைபடத்தில் புதிதாக உதயமான நாட்டை சேர்த்துக் கொள்ள ஐ.நா. சபை முன்வரவில்லை. மாறாக, பிரிவினைவாதிகளை  ஒடுக்க விரும்பிய மாலி அரசுக்கு சார்பாக நடந்து கொண்டது. வல்லரசு நாடுகள் அந்த தனி நாட்டை அழிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. உலகில் எந்த நாட்டிலும், குறிப்பிட்ட இனத்திற்கான தாயகம் அமைக்க விரும்பும் இயக்கம், தனது சொந்த பலத்தில் உரிமை கோரும் பிரதேசங்களை விடுதலை செய்தால், அவர்களுக்கும் இது தான் கதி, என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஏன் என்று கேட்டால், அது தான் நவ-காலனித்துவம். அதாவது ஐரோப்பிய காலனிய காலகட்டம், வரலாற்றில் இன்னும் முற்றுப் பெறவில்லை. அது வேறு வடிவில் தொடர்கின்றது. 

இது வரையும், முன் கதைச் சுருக்கத்தை பார்த்தோம். இனி, இன்றைய பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைக்கான காரணங்களை விரிவாக ஆராய்வோம்:

1. பிரான்ஸ் இதனை அல்கைதாவுக்கு எதிரான போர் என்று அறிவித்துள்ளது. உண்மையில் அங்கே அல்கைதா இருக்கின்றதா? 

அமெரிக்காவில் தாயாரிக்கப் பட்ட, பின்லாடன் நடித்த அல்கைதா என்ற சினிமாவுக்கும், மாலியில் இருப்பதாக கருதப்படும் அல்கைதாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. துவாரக் மக்கள் தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். அங்கு ஏற்கனவே சவூதி அரேபியாவின் பணத்தில் வளர்ந்த மத அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் ஆப்கானிய தாலிபான்களைப் போன்று நடந்து கொள்கின்றனர். சவூதி அரேபியாவில் இருப்பதைப் போல, கடும்போக்கு ஷரியா  சட்டத்தை அமுல் படுத்தி இருக்கின்றனர். திருட்டுக் குற்றத்திற்கு கை வெட்டுதல், கள்ள உறவு வைத்த குற்றத்திற்கு கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நிறைவேற்றுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில், மாலி நாட்டு இசை உலகப்புகழ் பெற்றது. அப்படிப்பட்ட நாட்டில், இசை கேட்பதை தடை செய்துள்ளனர். மேலும் இஸ்லாமிய மத புனிதர்களுக்கு கட்டிய சமாதிகளை கூட விடாமல், புராதன சின்னங்களை உடைத்து நொறுக்கி உள்ளனர்.  

ஆரம்பத்தில் MNLA (பிரெஞ்சு மொழியில்:Mouvement National pour la Libération de l'Azawadhttp://en.wikipedia.org/wiki/National_Movement_for_the_Liberation_of_Azawad) என்ற மதச் சார்பற்ற இயக்கம் தான் தனி நாடு கேட்டு ஆயுதமேந்தி போராடியது. அது ஒரு தேசியவாத இயக்கமாக தொடங்கினாலும், காலப்போக்கில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. இதனால் மதச்சார்பற்ற தேசியவாதிகள் ஓரங்கட்டப் பட்டனர். அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற "அன்சார் தினே", இஸ்லாமியவாதத்தை இயக்க சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. முன்னொரு காலத்தில், அந்தப் பிரதேசத்தில் "இஸ்லாமிய மஹ்ரப் கோரும் அல்கைதா"  (AQMI) என்ற ஒன்று இயங்கியது. அவர்களில் சிலர், முன்பு ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக போராடிய அரேபியர்கள் என்பது உண்மை தான். இன்று அந்த இயக்கம் சிதைந்து, அன்சார் தினே யுடன் சேர்ந்து விட்டார்கள். இவற்றை விட இன்னும் இரண்டு சிறிய குழுக்கள் இயங்குகின்றன. 

2. வடக்கு மாலியில், அசாவத் என்ற தனி நாடு கிடைத்தவுடன் திருப்திப் படாது, மாலியின் பிற பகுதிகளையும் பிடிக்க வேண்டிய தேவை என்ன? 

வடக்கத்திய கிளர்ச்சியாளருக்கு எதிரான போரில், மாலி இராணுவம் வெல்ல முடியவில்லை. அதன் விளைவாக, தலைநகர் பமாக்கோ வில் ஒரு இராணுவ சதிப்புரட்சி நடந்தது. மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் இயலாமையை காரணம் காட்டி, இராணுவ அதிகாரிகள் அரசைப் பொறுப்பேற்றனர். இராணுவ ஆட்சியாளர்களின் தலைவர், அமெரிக்காவில் இராணுவ பயிற்சி பெற்ற, அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமான ஒருவர். இராணுவ ஆட்சி ஏற்பட்ட பின்னரும், போரில் வெற்றி கிட்டவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எதிர்பார்த்ததற்கு மாறாக, நிலைமை தலைகீழாக மாறியது. நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகியதால், இராணுவத்திற்குள் ஒழுக்கம் சீர்குலைந்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிளர்ச்சிப் படையினர், ஆச்சரியப் படுமளவுக்கு விரைவாக பல இடங்களை கைப்பற்றினார்கள். சில நாட்களுக்குள், ஒவ்வொரு நகரமாக கிளர்ச்சிப் படையினரிடம் வீழ்ந்தன. 

மாலி நாட்டின் சனத்தொகையில் 90% மானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். ஆகவே, இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், "அசாவத்" என்ற தனி நாட்டின் எல்லைகளை தாண்டி, பிற பிரதேசங்களையும் கைப்பற்ற போரிட்டு வருகின்றன. இதனால், மாலி நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் செல்வாக்குட்பட்ட பிரதேசமாகியது. குறிப்பாக வடக்குக்கும், தெற்குக்கும் நடுவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொன்னா என்ற நகரத்தை கைப்பற்றியதுடன், பிரான்ஸ் களத்தில் இறங்கியது. முன்பு அமெரிக்கா அறிவித்ததைப் போல, "அல்கைதாவுக்கு எதிரான அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. பிரான்சுக்கு ஆதரவாக பெயர் குறிப்பிட விரும்பாத பிற ஐரோப்பிய நாடுகளும் தமது போர் விமானங்களை அனுப்பி வைத்தன. அமெரிக்கா ஆதரவு தெரிவித்த போதிலும், முழுப் பொறுப்பையும் பிரான்சிடம் விட்டு விட்டது. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், ஏற்கனவே மாலியின் தேசிய இராணுவத்திற்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி வழங்கப் பட்டிருந்தது. அன்று அமெரிக்கா, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஒரு கூட்டாளி நாட்டை தயார் படுத்துவதாக கூறியது. இன்று நடப்பதை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போர் படுதோல்வியை தழுவியுள்ளது. வடக்கத்திய போராளிகளின் கை ஓங்கிக் கொண்டு வருகையில், மாலியின் தேசிய இராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பலர், இராணுவத்தை விட்டோடி போராளிகளுடன்  சேர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் சிறப்பு இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் பலர், அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள். குறைந்தது 1600 வீரர்கள், இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.  அதனால், இன்று மேற்கத்திய நாடுகள், தாம் வளர்த்து விட்ட பிள்ளைகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் பிரான்சும், பெரும் எதிர்பார்ப்புகளுடன் வழங்கிய ஆயுதங்கள், பயிற்சி, இராணுவ தந்திரோபாயங்கள் எல்லாம், இன்று அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகின்றன. 

3. பிரான்சின் படையெடுப்புக்கு பின்னணியில், அதன் நவ-காலனிய அபிலாஷைகள் உள்ளனவா?

நவ காலனியம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டால், பிரான்சின் முன்னாள் காலனி ஒன்றை உதாரணத்திற்கு காட்டலாம். 19 ம் நூற்றாண்டின் காலனிய மேலாதிக்கம், 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை பிரான்ஸ் என்றைக்கும் மறைத்ததில்லை. பிரான்ஸ் தனது முன்னாள் ஆப்பிரிக்க காலனி நாடொன்றில் தலையிடுவது, இதுவே முதல் தடவை அல்ல. எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினையும் இல்லாமல், அமைதியாக இருக்கும் முன்னாள் காலனி நாடுகளில் கூட பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப் பட்டுள்ளன. எங்காவது ஒரு நாட்டில், பிரான்சின் நலன்களுக்கு எதிரான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், அதனை கவிழ்ப்பதற்கு பின் நிற்பதில்லை. 

வடக்கு மாலியில், அதாவது கிளர்ச்சியாளர் வசம் உள்ள அசாவத் என்ற தனி நாட்டில், பெருமளவு யுரேனியம் காணப் படுகின்றது. மேலும் இன்னமும் அகழப் படாத எண்ணை வளமும் இருக்கின்றது. குறிப்பாக யுரேனியப் படிமங்கள் பற்றிய தகவல், பிரான்சுக்கு மிகவும் முக்கியமானது. பிரான்ஸ் நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் 70% மாகிலும், அணுசக்தி மூலம் உற்பத்தியாகின்றது. அதற்கான மூலப்பொருளான யுரேனியம் மாலியில் கிடைக்கின்றது என்றால் சும்மா விடுவார்களா? மாலியில் மட்டுமே அல்கைதா போன்ற இஸ்லாமிய தீவிரவாதம் தலை தூக்கியுள்ளதாக இருப்பதாக பசப்புவது உலகை ஏமாற்றுவதற்கு மட்டுமே. அந்தக் காரணம் உண்மையானால், சிரியாவில் அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்களை பிரான்ஸ் ஆதரிப்பது, முரண்நகையாக தோன்றவில்லையா? அங்கே ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், கொடூரமான மதவாத சட்டங்கள் அமுல்படுத்தப் படுவதை அறியவில்லையா? சிரிய கிளர்ச்சிக் குழுக்களில், பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் இருப்பதைப் பற்றி எல்லாம் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளனவே? 

மாலியில் பிரான்சின் இராணுவ நடவடிக்கை, இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியாது. இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்து விடும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா புகுந்த கதையாகிப் போவதற்கு வாய்ப்புண்டு. அங்கே பத்தாண்டுகள் கடந்த பின்னரும் தாலிபான்களை அழிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாது, அயல் நாடான பாகிஸ்தானிலும் புதிதாக ஒரு தாலிபான் முளைத்தது. அந்த நிலைமை மாலியிலும் ஏற்படலாம். துவாரக் இன மக்கள், வடக்கு மாலியில் மட்டுமல்லாது, நைஜர், அல்ஜீரியா போன்ற அயல் நாடுகளிலும் உள்ளனர். தமிழகத் தமிழர்கள் ஈழப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்ததைப் போல, அயல் நாடுகளில் வாழும் துவாரக் மக்களும், மாலியின் அசாவத் என்ற தனி நாட்டுக்கான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். 

மாலி மீதான பிரான்சின் ஆக்கிரமிப்பு போருக்கு பதிலடியாக, அல்ஜீரியாவில் எரிவாயு தொழிலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப் பட்டமை, நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்த்துகின்றன. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போல என்றொரு பழமொழி உண்டு. வடக்கு மாலியை பிரெஞ்சுப் படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாலும், சஹாரப் பாலைவனத்திற்குள் எலிகளைப் போன்று பதுங்கிக் கொள்ளும் போராளிகளைப் பிடிப்பது கடினமாக இருக்கலாம். சஹாரா பாலைவன மண்ணின் மைந்தர்களுக்கு, அங்கிருந்து கெரில்லாப் போரை நடத்துவது இலகுவாக இருக்கலாம். இறுதியாக ஒரு தகவல், அசாவத் என்ற வடக்கு மாலியின் நிலப்பரப்பு, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு சமமானது. 

மேலதிக தகவல்களுக்கு:
French Strikes in Mali Supplant Caution of U.S.
Mali: France’s Neo-Colonial War for Uranium?
France Sends Reinforcements to Confront Islamist Forces in Mali
Mali conflict: France has opened gates of hell, say rebels


**************************************

மாலி பற்றிய முன்னைய பதிவுகள்:
சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை


Wednesday, January 16, 2013

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

"ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." (திரு விவிலியம், லூக்கா 6:20)

இங்கே குறிப்பிடப்படும் "ஆண்டவரின் இராஜ்ஜியம்" என்பது மனிதர்களால் பூமியில் உருவாக்கப்படும் புதிய அரசைக் குறித்தது. ஆனால், பிற்கால கிறிஸ்தவர்கள் அதனை "பரலோகத்தில் உள்ள ஆண்டவரின் ராஜ்ஜியம்" என்று வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார்கள்.

உலகிலேயே மிகவும் பழமையான கிறிஸ்தவர்கள் யார்? அநேகமானோர் கத்தோலிக்கர்ள் என்று பதில் சொல்வார்கள். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்றால், கிரேக்க ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களை கைகாட்டுவார்கள். ஆனால், அவை இரண்டும் தவறானவை. வரலாற்றில் முதன் முறையாக இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் படி வாழ்ந்தவர்கள் "எபியோனி" (Ebionites) என்றழைக்கப் பட்ட யூதர்கள். ஹீபுரு மொழியில் எபியோனி என்றால் ஏழைகள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றுபவர்கள் ஏழ்மையான வாழ்க்கை வாழ வேண்டுமென போதித்ததாக, எபியோனி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். உண்மையில், அது வரையில் கீழானவர்களாக இழிவு படுத்தப்பட்ட ஏழைகளை, இயேசுவின் போதனைகள் மகிமைப் படுத்தின. ஏழைகள் தமது நிலைமைக்காக வெட்கப் படத் தேவையில்லை. அவர்களே ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இயேசு போதித்தார். "ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." என்று அவர்களை உற்சாகப் படுத்தினார்.

எபியோனி கிறிஸ்தவர்களின், சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிற யூதர்கள், அவர்களை "ஏழைகள்" என்று நினைத்து பரிதாபப் பட்டார்கள். அதனால், அந்தப் பெயரே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. அந்தக் காலத்தில், "கிறிஸ்தவர்" என்ற சொல் உருவாகி இருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் எல்லோரும் "எபியோனிகள்" என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஆதி கிறிஸ்தவர்கள், ஒரு பொதுவுடைமை சமுதாயமாக வாழ்ந்தனர். பொருளாதார தேவைகளுக்காக பிறரிடம் தங்கியிராமல், தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொண்டனர். தம்மிடம் இருந்த சொத்துக்களை துறந்து, ஏழைகள் போன்று வாழ்ந்தார்கள். அது ஒரு கம்யூனிச சமுதாயமாக இருந்தது. சோவியத் யூனியன், செஞ் சீனாவில் உருவான நவீன கம்யூன் அமைப்பை பெருமளவு ஒத்திருந்தது.

லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.

எபியோனி கிறிஸ்தவர்கள் உண்மையில் யூதர்கள் ஆவர். இன்றைக்கும் யூதர்களில் ஒரு சிறு பிரிவினர், இயேசு கிறிஸ்துவை 'மேசியா'வாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தம்மை பண்டைய எபியோனிகளின் வம்சாவளியினர் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவை, யூதர்கள் ஹீபுரு மொழியில் "யேஷுவா" என்று அழைப்பார்கள். இயேசு, அவரது தந்தை ஜோசெப், தாய் மரியாள் எல்லோரும் யூதர்கள் தான். இயேசுவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். அதனை எபியோனிகளும் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், யூத பண்டிகை தினங்களை கொண்டாடினார்கள். இயேசுவை பின்பற்றி, தாமும் சுன்னத்து செய்து கொண்டார்கள். வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்களையும் அவ்வாறு வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.

அந்தக் காலத்தில், இன்றைக்கு நாங்கள் வைத்திருக்கும் விவிலிய நூல் தோன்றி இருக்கவில்லை. மார்க்கு, மாத்தேயுஸ், லூக்கா, பவுல் போன்ற பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தனித் தனியாக இருந்தன. எபியோனி கிறிஸ்தவர்கள், மாத்தேயுஸ், மார்க்கு ஆகியோரின் சுவிசேஷங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சித்தாந்த எதிரியான பவுலின் சுவிசேஷத்தை நிராகரித்தார்கள். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், "இயேசு கடவுளின் குமாரராக மரியாள் என்ற கன்னித் தாய்க்கு பிறந்தார்..." என்பதை எபியோனி கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு எல்லா மனிதர்களையும் போல, சாதாரண தாய், தந்தைக்கு மகனாக பிறந்தார் என்று நம்பினார்கள். அவர் வளர்ந்த பின்னர், ஆண்டவரால் தத்தெடுக்கப் பட்டார் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். "இயேசு மரியாள் என்ற கன்னித் தாய்க்கு மகனாக பிறந்த கதை", இகாரியுஸ் ஹீபுரு மொழியில் எழுதிய சுவிசேஷத்தை, கிரேக்க மொழியில் தவறாக மொழிபெயர்த்தமையினால் ஏற்பட்ட தவறு என்று கூறுகின்றனர்.

அப்போஸ்தலர் பவுல் இன்றைய துருக்கி நாட்டில் பிறந்தவர். கிரேக்க மொழியை தாய் மொழியாக கொண்டவர். அவர் கிறிஸ்துவின் போதனைகளை கிரேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். கிரேக்க மக்களுக்கு அதனை போதித்தார். கிறிஸ்தவராக மதம் மாறுவோர், சுன்னத்து செய்வது போன்ற யூத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்தார். அதனால், அவர் பின்னால் பெருமளவு கிரேக்க மக்கள் சேர்ந்தனர். எபியோனி கிறிஸ்தவர்களின் கொள்கைக்கு மாறாக, பணக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால், பவுலின் குழுவினருக்கு, கொரிந்தியாவில் வாழ்ந்த பெரிய வணிகர் போன்ற சில வர்த்தகர்களின் பணக் கொடை தாராளமாக கிடைத்தது.

புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.

உண்மையில் பிற்கால கிறிஸ்தவ சமூக-பொருளாதார கட்டமைப்பு பவுலின் காலத்திலேயே உருவாகி விட்டதெனலாம். பிஷப் என்ற பெயரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருக்கள் அதிகார பலம் பெறத் தொங்கியதும் அந்தக் காலத்தில் தான். அந்தியோக்கியா நகர பிஷப் இக்னாத்தியுஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது, கிறிஸ்துவின் மகிமைக்குள் வாழ்வதை பெருமையாக நினைக்க வேண்டும்...." என்றெல்லாம் எழுதி இருக்கிறார். இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என பவுல் எதிர்பார்த்தார். ஆனால், வர்க்க வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருந்த கிரேக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் என்ற சொல்லைக் கேட்டவுடன், இன்று பலர் ரஷ்யாவையும், சீனாவையும் நினைக்கும் அளவுக்கு, முதலாளித்துவம் எமது மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நடைமுறைப் படுத்த எண்ணிய கம்யூனிசம், நவீன காலத்திற்கேற்ப இயங்கியல்-பொருள்முதல்வாத கோட்பாட்டின் வழியே உருவாக்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சியில், சோஷலிச சமுதாயமும், அதன் வீழ்ச்சியில் கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பது அவர்களது தத்துவார்த்த முடிவுகள். கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே, 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி François-Noël Babeuf கம்யூனிச கொள்கையை முன்மொழிந்தார். மேலும் அன்னார்கிச அமைப்புகளின் தத்துவ ஆசிரியர்களான பகுனின், புரூடொன் போன்றோரும் கம்யூனிச சமுதாயத்தை மனித குலத்தின் விடிவுக்காக தெரிவு செய்தார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான  கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள்  வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:
Ebionites
EBIONITES (from = "the poor")
CATHOLIC ENCYCLOPEDIA

******************

கிறிஸ்தவ மதம் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
2. மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து
3.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
4.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

Saturday, January 12, 2013

பாரிஸ் படுகொலைகள்: பலியாடுகளான LTTE , PKK முக்கியஸ்தர்கள்


பாரிஸ் நகரில், அண்மையில் (10.1.2013) இடம்பெற்ற PKK முக்கியஸ்தர் சாகினே கான்சிஸ்  (Sakine Cansız)  கொலை, சில மாதங்களுக்கு முன்பு நடந்த புலிகளின் முக்கியஸ்தர் பரிதியின் கொலையை பெருமளவு ஒத்துள்ளது. பரிதியின் கொலையும், கொலையும், ஒரே பகுதியில், அதாவது பாரிஸ் நகரில் வெளிநாட்டவர் அதிகமாக நடமாடும் இடத்தில் நடந்துள்ளன. இரண்டிலும் கொலையாளிகள் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பரிதியின் கொலைக்கு இலங்கை அரசு பொறுப்பு என்று, புலிகளின் ஆதரவு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. அதே போல, சாகினே மற்றும் இரு பெண் ஆர்வலர்களின் கொலைகளை நடத்தியது துருக்கி அரசு என்று, PKK ஆதரவு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. பரிதி கொலை நடந்த இடத்தில், ஸ்ரீலங்கா அரசை கண்டிக்கும், புலி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதே போன்று, குர்திஷ் அரசியல் ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில், துருக்கி அரசை கண்டிக்கும் PKK ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. "இரண்டாக உடைந்துள்ள, புலம்பெயர்ந்த புலிகளுக்கு இடையிலான மோதல் தான், பரிதி கொலைக்கு காரணம்," என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன. அதே போன்று, "இரண்டாக உடைந்துள்ள PKK குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவு தான், பாரிஸ் படுகொலைகள்", என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதே நேரம், பிரஞ்சு அரசு கொலையாளிகளுடன் ஒத்துழைப்பதாக புலி ஆதரவாளர்களும், PKK ஆதரவாளர்களும் பிரெஞ்சு அரசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வருகின்றனர். 

துருக்கியில் குர்திஷ் சிறுபான்மை இனத்திற்கு தனி நாடு கோரிப் போராடும் "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (PKK) க்கும், தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. பல விடயங்கள் ஒரே மாதிரி நடக்கின்றன. இரண்டு இயக்கங்களும், எண்பதுகளின் தொடக்கத்தில் வளர்ந்து, பலம் பெற்று விளங்கின. விடுதலைப் புலிகளில் தலைவர் பிரபாகரனின் தலைமை கேள்விக்குட்படுத்த பட முடியாது. அவரின் முடிவுகள் இறுதியானவை. அதே போன்று, PKK யில், தலைவர் ஒச்சலானின் தலைமை கேள்விக்குட்படுத்தப் பட முடியாதது. அவரின் முடிவுகள் இறுதியானவை. இரண்டு தலைவர்களும், இறுதியில் பன்னாட்டு சதிவலையில் சிக்க வைக்கப்பட்டு பிடிபட்டனர். அமெரிக்கா, இந்தியாவின் செய்மதி கண்காணிப்புகளும், இஸ்ரேல், சீனா வழங்கிய கனரக ஆயுதங்களின் தாக்குதலும், பிரபாகரனின் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தது. ஒச்சலான் பிடிபட்டு, இன்னமும் துருக்கி சிறையில் உயிரோடு அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம். 

ஒச்சலான் அகப்பட்ட சம்பவமும், பன்னாட்டு கூட்டு நடவடிக்கையின் விளைவு தான். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் வழங்கிய கனரக ஆயுதங்களின் துணை கொண்டு தாக்கி வந்த துருக்கி இராணுவம், PKK தளங்கள் அமைந்துள்ள சிரியா மீது படையெடுக்கப் போவதாக அறிவித்தது. அதனால், சிரியாவில் இருந்த ஒச்சலான், தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென சிரிய அரசு அழுத்தம் கொடுத்தது. புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்தது போல, PKK  இடம் இருந்தது. அப்படியான விமானம் ஒன்றில், ஒச்சலான் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்து சென்று, அரசியல் தஞ்சம் கோரினார். அவர் பெரிதும் நம்பியிருந்த பெலாரஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் விமானம் தரையிறங்கக் கூட அனுமதிக்கவில்லை. இறுதியில் கென்யா செல்வதென்றும், அங்கு ANC பிரதிநிதி ஒருவர் சந்தித்து கூட்டிச் சென்று, தென் ஆப்பிரிக்காவில் தஞ்சம் பெற்றுக் கொடுப்பார் என்றும் தகவல் கிடைத்தது. ஆனால், கென்யா இஸ்ரேலின் மொசாட் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடாகும். மொசாட் உதவியுடன், துருக்கி புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள், கென்யாவில் வைத்து ஒச்சாலானை மடக்கிப் பிடித்து, துருக்கிக்கு கொண்டு சென்றார்கள். அன்றிலிருந்து, ஒச்சலான் இஸ்தான்புல் நகருக்கு அருகாமையில், கடலில் ஒரு தீவில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகளில், புலிகளின் அமைப்பாளர்களும், PKK அமைப்பாளர்களும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் PKK ஆதரவு MED TV (தற்பொழுது ROJ TV) யில், புலிகளுக்கு ஆதரவான செய்திகள் தினந்தோறும் இடம்பெறும்.  புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக சொன்னாலும், காலப்போக்கில் அது ஒரு வலதுசாரி தேசியாத அமைப்பாகவே தன்னை காட்டிக் கொண்டது. இன்று முழுக்க முழுக்க வலதுசாரி தேசியவாத அமைப்பாக மாறிவிட்ட PKK, ஆரம்பத்தில் குர்திஸ்தான் சோஷலிசப் புரட்சி பற்றி பேசி வந்தது. மார்க்சிய லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து வந்தது. அதனால் அன்றிருந்த சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொண்டது. சோவியத் யூனியன் சாம்-7 ஏவுகணைகளை வழங்கி இருந்தது. அவற்றில் சில PKK ஊடாக, புலிகளின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.

சிரியா சோவியத் யூனியனின் உதவி பெறும் நட்பு நாடாக இருந்த படியால், சிரியாவினுள் குர்திஷ் சிறுபான்மையினரின் பிரதேசத்தில்,  PKK இராணுவ பயிற்சி முகாம் அமைப்பதற்கு உதவியது. ஒச்சலானின் தலையகமும் அங்கே அமைந்திருந்தது. ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக, இந்தியா புலிகளை அணைத்துக் கொண்டதும், பின்னர் கைகழுவி விட்டு இலங்கை அரசுடன் நட்பு பாராட்டியதும் தெரிந்த விடயம். அதே போன்று, துருக்கிக்கும் அயல்நாடான கிரேக்கத்திற்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக,  PKK க்கு கிரேக்க அரசு பெரும் வரவேற்புக் கொடுத்து புகலிடம் அளித்து வந்தது. ஆனால், பிற்காலத்தில் துருக்கி அரசுடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக, PKK க்கு வழங்கிய ஆதரவை நிறுத்திக் கொண்டது. 

ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், PKK மூன்றாக பிரிந்துள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா தலைமையில் பிரிந்த குழுவினர், பின்னர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக மாறியது போல, PKK யில் இருந்து பிரிந்த குழு ஒன்று, துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. ஆயுதப் போராட்டத்தை தொடர விரும்பிய, ஒச்சலானுக்கு ஆதரவான PKK குழு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துக் கொண்டது. அங்கிருந்து துருக்கியினுள் வந்து துருக்கி இராணுவத்தை தாக்கி வந்தது. அந்த இடம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபடியால், எஞ்சியிருக்கும் PKK  போராளிகளை அழிப்பதற்காக,  அடிக்கடி துருக்கி இராணுவம் படையெடுத்து செல்வது வழக்கம். இன்னும் ஒரு PKK இயக்கம், சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களும் அங்கிருந்த படி, துருக்கி மீது இராணுவ தாக்குதல்களை தொடுத்து வருகின்றனார். 

தற்பொழுது, துருக்கி அரசுக்கும், PKK க்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈராக் காண்டில் மலைப்பகுதியில் உள்ள PKK உடன் தான் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சிரியாவில் உள்ள PKK அதனை எதிர்த்து வருகின்றது. ஏனெனில், தற்பொழுது சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போர் காரணமாக, அந்நாட்டில் குர்திஷ் மக்கள் வாழும் பகுதிகள் சுதந்திரமான தன்னாட்சிப் பிரதேசமாக மாறிவிட்டன. அங்கு தளம் அமைத்துள்ள PKK க்கு, ஒரு சிரிய பிரஜையான குர்தியர் தலைமை தாங்குகின்றார். சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உதவி வருகின்றது. அதற்கு பதிலடியாக, சிரிய அரசு PKK க்கு உதவி வருகின்றது. நாளைக்கு சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்தாலும், PKK கட்டுப்பாட்டில் உள்ள குர்திஷ் பிராந்தியம், தனக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது என்று துருக்கி உணர்ந்துள்ளது.

ஈராக்கில் உள்ள PKK யுடனான பேச்சுவார்த்தைக்கு, சிறையிலிருக்கும் தலைவர் ஒச்சலான் மத்தியஸ்தம் வகிக்கின்றார். சிறையில் இருந்த படியே, ஈராக்கில் இருக்கும் PKK தலைவர்களுடன் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி வசதி ஏற்படுத்தி தருமாறு ஒச்சலான் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, துருக்கி சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 8000 PKK சார்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். துருக்கி பிரதமர் எர்டோகன், PKK போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில், போராளிகளும், தலைவர்களும், ஒச்சலானுடன் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைக்க சம்மதித்துள்ளார். 

பாரிசில் நடந்த கொலைகள், சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்ப விரும்பும் சக்திகளால் நடத்தப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக, சாகினே தான் கொலையாளிகளின் குறியாக இருக்க வேண்டும். மற்ற இருவரும் "தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தமைக்காக" கொல்லப் பட்டிருக்கலாம். ஏனெனில் சாகினே PKK இயக்கத்தை உருவாக்கிய ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர் ஆவர். துருக்கியில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஜெர்மனியில் அரசியல் வாழ்வை தொடங்கினார். ஜெர்மனியில் PKK பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டு, அதன் முக்கியஸ்தர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சாகினேயும் அவர்களில் ஒருவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி, பிரான்ஸ் நாட்டில் அரசியல் பிரிவின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 

புலிகள் இயக்கத்திற்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு பணம் திரட்டி அனுப்பி வந்தமை அனைவரும் அறிந்ததே. அதே போன்று, புலம்பெயர்ந்த குர்திஷ் மக்கள் அனுப்பும் பணம், PKK யின் பிரதானமான நிதி ஆதாரமாகும்.  புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள், களத்தில் இருந்த புலிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெரிந்த விடயம். அதே போன்று புலம்பெயர்ந்த PKK ஆதரவு அமைப்புகள், களத்தில் இருக்கும் PKK க்கு மிகவும் முக்கியமானவை. ஆகவே, பாரிஸ் கொலைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப் பட்டுள்ளன. துருக்கி அரசில் உள்ள கடும்போக்காளர்கள், குறிப்பாக துருக்கி இனவாதிகள் அந்தக் கொலைகளை செய்திருக்கலாம். சாம்பல் ஓநாய்கள் என்ற அமைப்பு, துருக்கியில் சிறுபான்மையினர் கிடையாது என்று கூறி வருகின்றது. குர்திஷ் இனவழிப்பு போரை ஆதரிப்பதுடன், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்துவதையும் விரும்பவில்லை. பிரான்சின் வலதுசாரி பத்திரிகையான Le Figaro, சாம்பல் ஓநாய்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று ஊகிக்கின்றது. பாரிசில் குர்திஷ் ஆர்வலர்களை கொலை செய்த சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சமாதானத்திற்கு மட்டும் எதிரிகள் அல்ல, குர்திஷ் மக்களுக்கும் எதிரிகள் ஆவர். 

********************

குர்திஷ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.குர்திஸ்தான், துருக்கியின் துயரம்
2.குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை
3.துருக்கியில் தொடரும் "ஈழப் போர்"
4.துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்
5.துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை

Thursday, January 10, 2013

இலங்கையில் இடதுசாரி அரசியல் பற்றிய தமிழ் வலதுசாரிகளின் புனைவுகள்

புனைவு 1:
இடதுசாரிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாததால் தான், தமிழரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கட்சி தோற்றம் பெற்றது.

உண்மை நிலவரம் என்ன?
சிங்கள தேசியவாத சுதந்திரக் கட்சியின் தோற்றமும், தமிழ் தேசியவாத தமிழரசுக் கட்சியின் தோற்றமும், ஆச்சரியப்படத் தக்கவாறு நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளன. பிரிட்டிஷ் காலனியான இலங்கையின் ஆட்சி நிர்வாகம், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மேட்டுக்குடியினரையும், மறுபக்கம் தமிழ்க் காங்கிரஸ் தமிழ் மேட்டுக்குடியினரையும் பிரதிநிதித்துவப் படுத்தி வந்தன. இதனால் பெரும்பான்மை சிங்கள-தமிழ் உழைக்கும் மக்கள், தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். பாராளுமன்ற தேர்தல்களில், கம்யூனிஸ்ட் அல்லது சோஷலிச கட்சிகள் மூன்றாமிடத்தை பிடித்து வந்தன. 

இலங்கையில் மேல்தட்டு வர்க்க அரசியல் தொடர்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளை, சில தலைவர்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் பிரிந்து சென்று, சிங்கள தேசியவாத அரசியலை முன்னெடுத்தார். சிங்கள உயர்சாதியினரான கொவிகமவினர் மட்டுமே அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த நிலை மாறி, அனைத்து சாதிகளையும் சிங்கள தேசியவாதம் ஒன்று சேர்த்தது. கண்டிய சிங்களவர்களுக்கும், கரையோர சிங்களவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்தது. யாழ் குடாநாட்டில், உயர்சாதி வெள்ளாளர்களின் கட்சியாக கருதப்பட்ட தமிழ் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை உதாசீனப் படுத்தி வந்தது. தமது அபிலாஷைகளை பிரதிபலிக்காத காரணத்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் யாரும் தமிழ்க் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அவர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. 

SJV செல்வநாயகம் தலைமையில், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள், தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார்கள். தமிழ் இன உணர்வு, தமிழ் மொழி உரிமை போன்றவற்றிற்கு பாடுபடுவதாக பிரச்சாரம் செய்து வந்தனர். இதன் விளைவாக, அனைத்து சாதிகளையும் தமிழர் என்ற பெயரில் ஒன்றிணைக்க முடிந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்றவற்றுக்கு இடையிலான பிரதேச வேறுபாடுகளும் மறைந்தன. சுதந்திரக் கட்சியும், தமிழரசுக் கட்சியும் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டன. இலங்கையில் அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில், எந்தவொரு இடதுசாரிக் கட்சியும் பெருமளவு வாக்குகளைப் பெற முடியவில்லை. இலங்கையில், கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ, என்று பயந்த காலம் மலையேறி விட்டது. இன்றைய சிங்கள-தமிழ் இளைய தலைமுறையினர், "கம்யூனிசம் என்றால் கிலோ என்ன விலை?" என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறி விட்டது. இலங்கையில் ஏற்படவிருந்த "சிவப்பு அபாயத்தை" அடியோடு ஒழித்துக் கட்டியதற்காக, சுதந்திரக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும், முதலாளித்துவ வர்க்கம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

******************

புனைவு 2:
யதார்த்தத்தில் இருந்து விலகிய கண்ணோட்டத்தினால், பரந்துபட்ட தமிழ் மக்களிடமிருந்து "இடதுசாரிகள் " எனப்பட்டோர் அந்நியமாகி ஏறக்குறைய அழிந்துவிட்டனர்.

உண்மை நிலவரம் என்ன?
கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்த கொடிய யுத்தம், சர்வாதிகார அடக்குமுறை, நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள், மனிதப் பேரவலங்கள், இவை எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு, எப்படி இவ்வாறு பேச முடிகின்றது?

*****************

புனைவு 3:
இலங்கையில் கம்யூனிசம், கம்யூனிஸ்டுகளாலேயே அழிக்கப்பட்டது. அதற்கு, அன்று கம்யூனிஸ்டுகள் என்று மக்கள் மத்தியில் தமது பெயரை நிலைநாட்டியோரின் புரள்வுகளே காரணம். பெரும்பாலான மக்கள் இவர்களையே கம்யூனிஸ்டுகள் என்று நம்பினார்கள். எனவே மக்கள் இவர்களின் குத்துக்கரணங்களை, கம்யூனிஸ்டுகளின் குத்துகரணம் என்றே விளங்கி கொண்டனர். சிறிமா ஜேவிபியினரை வேட்டையாடி கொண்டிருந்தபோது இந்த போலி கம்யூனிஸ்டுகள் சிறிமாவின் அடிவருடிகிடந்தன.


உண்மை நிலவரம் என்ன?
மார்க்ஸ், லெனின் படங்களை வைத்திருப்பதாலேயே, அல்லது பொதுவுடைமை என்று பெயர் வைத்திருப்பதால், ஒரு கட்சி இடதுசாரிக் கட்சியாக மாறி விடுவதில்லை. அதே போல தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்வதாலேயே, ஒரு கட்சி தமிழ் தேசியக் கட்சியாகி விடாது. சுய விமர்சனங்களுக்கூடாக அந்த இலக்கை அடைவதற்கு, கட்சிக்குள்ளே போராட வேண்டும். போலிகளை மட்டுமே எதற்காக அடிக்கடி உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? டக்லஸ், கருணா, பிள்ளையான், போன்ற எத்தனையோ முன்னாள் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகள், இன்று சிங்கள அரசின் அடிமைகளாக இருப்பதை எடுத்துக் காட்டி, தமிழ் தேசியவாதிகளே இப்படித் தான் என்று பேச முடியுமா? அவ்வாறு சிந்திப்பதே அபத்தமாக தெரிகின்றதல்லவா? நடப்பில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், ஆயுதபாணி இயக்கங்களும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டதால் தான், இன்று மக்கள் யாரையுமே நம்புவதில்லை.

முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, போன்ற போலி தமிழ்தேசியவாத கட்சிகளின் குத்துக் கரணங்கள் எல்லாம் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை தான். புலிகளை கூட எல்லா தமிழரும் ஆதரிக்கவில்லை. போர் நடந்த காலங்களிலும், போர் முடிந்த பின்னரும் புலிகளின் குறைகளை எடுத்துக் காட்டி பேசும் தமிழ் மக்கள் நிறையப்பேரை  யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் காணலாம். தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் நிறைய தவறுகள் விட்டுள்ளமை உண்மை தான். ஆனால், அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினையை மழுங்கடிக்கும், அல்லது புறக்கணிக்கும்  செயலை தான் நான் எதிர்க்கிறேன்.  அரசியல் தலைவர்களின்/கட்சிகளின் பிழையான அரசியலை விமர்சிக்கும் பூரண சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதனை யாரும்  மறுக்கவில்லை. ஆனால் அதை மட்டுமே காட்டி, மக்களின் பிரச்சினையை மூடி மறைக்கும் செயல் அயோக்கியத்தனமானது.  ஸ்ரீலங்கா அரசு செய்யும் அதே அயோக்கியத்தனத்தை, இவர்கள்  கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் செய்கிறார்கள். நான் தமிழ் மக்களுக்கு தேவையான கம்யூனிசத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், முதலாளித்துவ ஆதரவாளர்கள்  "அந்த இடதுசாரி தலைவர், அல்லது அந்த கட்சி, அப்படியான தவறு செய்தார்கள்" என்று, கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி ஒரே பல்லவியை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  "புலிகள் என்ன பிழை விட்டார்கள்? இடதுசாரி கட்சிகள் என்ன பிழை விட்டார்கள்?" என்பதைப் பற்றி எல்லாம், இன்றுள்ள  தமிழ் மக்களுக்கு கவலை இல்லை. தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள்  வேறு. அவர்களது கவலைகள் வேறு.  இந்த வித்தியாசத்தை நாங்கள்  முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

*******************

புனைவு 4:
"டட்லிகே படே மசால வடே!" ( டட்லியின் வயிற்றில் மசால வடை ) என்று "இடதுசாரிகள்" "முற்போக்கு!" முழக்கமிட்டது 1966 இல் ; இனவாத மதவாத அரசியல் அமைப்பைக் கொல்வின் ஆர். டி.சில்வா என்ற "இடதுசாரி" உருவாக்கியது 1972 இல் ஆகும். "டட்லி வயிற்றில் மசாலா வடை என்று 1956லும், இனவாத அரசியலமைப்பை 1970லும் வரைந்தபோதே இலங்கையில் செயற்படு கம்யூனிசம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான, ஈழ விடுதலைப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் புறக்கணித்தார்கள்.


உண்மை நிலவரம் என்ன?
பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையில் சிங்களவர்-தமிழர் முரண்பாடு தீவிரமடைந்த காலத்தில், புத்திஜீவிகளும், இடதுசாரிகளும் இன அடிப்படையில் பிரிந்து சென்றார்கள். ஒரு பக்கம், சிங்கள இடதுசாரிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள். மறுபக்கம் தமிழ் இடதுசாரிகள் தமிழ் குறுந் தேசியவாத இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அறுபதுகளில், "டட்லியின் வயிற்றில் மசாலா வடை" என்று சிங்கள இனவாதம் பேசிய LSSP என்ற ட்ராஸ்கியவாத கட்சியில் இருந்து, முக்கிய தமிழ் அரசியல்வாதியான  ஆனந்தசங்கரி பிரிந்து சென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் இப்போது மறுபடியும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன? "டட்லி மசாலா வடை கதையை திரும்பத் திரும்ப இரைமீட்கும் தமிழ் முதலாளித்துவ ஆதரவாளர்கள்,  "இலங்கையில் கம்யூனிசம் என்பது ஒரு சிங்கள இனவாத பூச்சாண்டி" என்று, அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல. அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். 

எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் எடுபடுகின்றது. ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், மார்க்சியமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாகி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள். அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர். 

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம். ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர். அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது "சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று, ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

(பிற்குறிப்பு: இந்தக் குறிப்புகள், முகநூலில் நடந்த விவாதங்களின் போது எழுதப் பட்டவை ஆகும்)