Thursday, February 21, 2013

ஈக்குவடோரின் சோஷலிச சாதனைகள் : மறைக்கும் ஊடகங்கள்


லத்தீன் அமெரிக்காவில் உள்ள எக்குவடோர் (ஆங்கில உச்சரிப்பு: ஈக்குவடோர்)  நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் (17.02.13), ஜனாதிபதி Rafael Correa இரண்டாம் தடவையாக மக்களால் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது பற்றி எந்த செய்தி ஊடகத்திலாவது அறிவித்தார்களா? இல்லை.   அந்த நேரத்தில், தனது காதலியை சுட்டுக் கொன்ற தென்னாபிரிக்க ஒலிம்பிக் வீரரின் செய்தியை பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருந்தன. மக்களுக்கு தேவையான செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், தேவையில்லாத செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதும் எமது ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது.

ஜனாதிபதி ராபேல் கொரெயா, இரண்டாவது தடவையாகவும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, அவர் கடந்த ஐந்து வருடங்களாக எகுவடோர் பொருளாதாரத்தில் சோஷலிசத்தை கொண்டு வந்ததற்கு கிடைத்த பலன் ஆகும். (Ecuador's Correa vows to make socialist revolution 'irreversible', http://news.yahoo.com/ecuadors-correa-vows-socialist-revolution-irreversible-224647973.html)  ஜனாதிபதி ராபேல் கொரெயா வின் மொழியில் சொன்னால், "நல்வாழ்வுக்கான சோஷலிசம்", அதன் பலன்களை அறுவடை செய்துள்ளது. ராபேல் கொரெயாவின் சோஷலிசம், எக்குவடோர் நாட்டில் என்னென்ன சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது?

 1. நமது நாடுகளில் ஆட்சி நடத்தும், IMF, உலகவங்கிகளின் அடிமைகள் இந்தக் குறிப்பை கவனமெடுத்து வாசிக்கவும். கொரெயா பதவியேற்ற மறுநாளே, வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த மறுத்தார். IMF உடனான பேரம் பேசலின் பின்னர், மொத்த கடன்களில் 70% குறைக்கப் பட்டது. ராபேல் கொரெயா ஒரு பொருளியல் நிபுணர் மட்டுமல்ல, முந்திய அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக இருந்தவர்.

 2. அவர் ஆட்சிக்கு வந்த மறுநாளே, அந்நியர்களுக்கு நாட்டை விற்பதை நிறுத்தினார். வெளிநாட்டு பெற்றோலியக் கம்பனிகள், அரசுக்கு கட்ட வேண்டிய ராயல்ட்டி தொகை, 20% இலிருந்து 85% மாக உயர்த்தப் பட்டது.
(Ecuador: Left-Center Political Regimes versus Radical Social Movements, http://www.globalresearch.ca/ecuador-left-center-political-regimes-versus-radical-social-movements/5322667)

 3. வங்கி உடைமையாளர்களின் அளவுக்கதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. வரி அமைப்பு சீர்திருத்தப் பட்டு, பணக்காரர்கள் அதிக வரி செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

4. வெகுஜன ஊடகங்களை, சக்திவாய்ந்த வணிகர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்காக, புதிய ஊடக சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த சட்டத்தின் படி, பெரிய நிதி நிறுவனங்கள், செல்வந்தர்கள், ஒரு  ஊடக நிறுவனத்தின் பங்குதாரராக, அல்லது உரிமையாளராக இருக்க முடியாது.

5. ராபேல் கொரெயா தனது பொருளாதார திட்டத்தை, "நல்வாழ்வுக்கான சோஷலிசம்" என்று அறிவித்துள்ளார்.  சமூகப் பாதுகாப்பு நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நான்கு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. மூலதனத்தின் இரும்புப் பிடியில் இருந்து மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார்.

6. குழந்தை தொழிலாளிகளாக இருந்த ஐந்து இலட்சம் சிறுவர்களை மீட்டுள்ளார். அனைத்து தொழில்களுக்கும் நியாயமான அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப் பட்டது. ஓய்வூதிய தொகை உயர்த்தப் பட்டது. 

7. எக்குவடோர் நாட்டின் மொத்த சனத்தொகை 14.5 மில்லியன். அதிலே இரண்டு மில்லியன் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்.   ஏழையான ஒவ்வொரு பிரஜைக்கும், வாழ்க்கைச் செலவுக்காக  25 டாலர் மாதாந்த கொடுப்பனவு கிடைக்கின்றது. இந்த தேர்தலுக்குப் பின்னர் அந்த தொகை இரட்டிப்பாக்கப் படும். ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசு கடனுதவி கிடைக்கிறது. குடிசைகளில் இருந்தவர்கள், அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் குடியமர்த்தப் படுகின்றனர்.  நமது நாட்டு ஏழைகள் இந்த செய்தியை கேட்டு பெருமூச்சு மட்டுமே விட முடியும்.

8. அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப் படுகின்றது. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இலவச சீருடை கிடைக்கிறது. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. கியூபாவில் இருந்து தருவிக்கப்பட்ட வைத்தியர்கள், பொது மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கின்றனர்.

9. பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 15% மாக குறைந்துள்ளது. 2015 ம் ஆண்டுக்குள் சிறுவர்களின் போஷாக்கின்மையை அரைவாசியாக குறைக்கப் போவதாகவும், குழந்தைகள் விடயத்தில் அதனை அறவே இல்லாதொழிக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் 60% மாக இருந்த வறுமை, இன்று 29% மாக குறைந்துள்ளது. எக்குவடோர் நாட்டின் கடந்த நூறாண்டு கால வரலாற்றில், எந்தவொரு ஆட்சியாளரும் இந்தளவு முன்னேற்றத்தை கண்டதில்லை.
(The State of Food Insecurity in the World, http://www.fao.org/docrep/016/i3027e/i3027e.pdf)

10. சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும் ராபேல் கொரெயாவுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக் கிடைத்துள்ளது. "இயற்கையின் உரிமைகளை" அரசமைப்பு சட்டத்தில் சேர்த்துக் கொண்ட ஒரேயொரு நாடு எக்குவடோர் ஆகும். இயற்கை வனப் பகுதிகள் பாதுகாக்கப் படும் இடங்களில், எண்ணைக்  கிணறு தோண்டுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
(Ecuador election: Rafael Correa set to win despite fossil fuel fears, http://www.guardian.co.uk/world/2013/feb/14/ecuador-election-president-rafael-correa?INTCMP=SRCH)

11.அமெரிக்காவில் உள்ள இராணுவக் கல்லூரிக்கு எக்குவடோர் மாணவர்களை அனுப்புவதை நிறுத்தினார். கடந்த காலங்களில், School of the Americas (தற்போது அதன் பெயர் "Western Hemisphere Institute for Security Cooperation"என்று மாற்றப் பட்டுள்ளது.)  என்ற கல்லூரியில் பயின்ற லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் பலர், தாயகம் திரும்பியதும்  சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தியமை இங்கே குறிப்பிடத் தக்கது. மேலும், இராணுவ அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்கு அமெரிக்கா அனுப்பாமல், லத்தீன் அமெரிக்க நாடொன்றில் இராணுவ கல்லூரி ஒன்றை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்துள்ளார். அந்தப் பிரேரணைக்கு வெனிசுவேலா அதிபர் சாவேசும் ஆதரவளிக்கிறார்.
(Correa firma decreto que prohíbe envío de soldados ecuatorianos a la Escuela de las Américas, http://www.elcomercio.com/seguridad/Correa-soldados-ecuatorianos-Escuela-Americas_0_728327210.html)

 12. சர்வதேச அரங்கிலும் ராபேல் கொரெயா துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே க்கு, லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் வழங்கினார். காஸா மீதான் இஸ்ரேலின் போரை கண்டித்தார். லத்தீன் அமெரிக்காவின் புதிய சோஷலிச நாடுகளுக்கு இடையிலான, மாற்றுப் பொருளாதார அமைப்பான  ALBA வின் உருவாக்கத்திற்காக பாடுபட்டார்.

வெனிசுவேலா போன்று, எக்குவடோரும் எண்ணை வளம் கொண்ட நாடாகும்.  எண்ணை ஏற்றுமதி, மொத்த ஏற்றுமதி பொருளாதாரத்தில் 63% மாகும். அது  30% - 40% அரச கஜானாவை நிரப்புகின்றது. (Ecuador facts and figures, http://www.opec.org/opec_web/en/about_us/148.htm) எண்ணை விற்பனையில் கிடைக்கும் வருமானம், சோஷலிச கட்டுமான செலவினத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது. எதிர்காலத்தில், சர்வதேச சந்தையில் எண்ணை விலை வீழ்ச்சியடைந்தால், அல்லது கையிருப்பில் உள்ள எண்ணை வற்றிப் போனால், அது சோஷலிச பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

மேலும், ராபேல் கொரெயாவின் சோஷலிச திட்டங்கள் யாவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் "நலன்புரி அரசை" நினைவு படுத்துகின்றன. ஆழமாக பார்த்தால், முதலாளித்துவத்தின் நிழலின் கீழ் தான் இத்தகைய பொருளாதார திட்டங்கள் நடக்கின்றன. நிரந்தர சோஷலிசத்தை நோக்கி செல்ல வேண்டுமானால், மூலதனத்தின் தொடர்பை அறுப்பது அவசியமானது. அதற்கு மிகவும் கடினமான புரட்சிகர திட்டங்களை அமுல்படுத்த வேண்டியிருக்கலாம்.

No comments: