Saturday, December 29, 2012

விமானப் பயணிகளின் உயிருடன் விளையாடும் "ரையன் எயர்"


மலிவு விலையில், மிகக் குறைந்த கட்டணத்தில் பறக்கும் விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மிகக் குறைந்த கட்டணம் அறவிடுவதற்கு, மக்கள் பல வகை காரணங்களை நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், "அந்த விமான நிறுவனங்கள், பிரயாணம் செய்யும் பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவதாலும், மலிவு விலையில் பறக்க முடிகின்றது" என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும், விபத்து நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பற்றாக்குறையான எரிபொருளுடன் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் மிகப் பிரபலமான மலிவு விலை விமான சேவையான, அயர்லாந்தில் தலைமையகத்தை கொண்டுள்ள, "ரையன் எயர்" (Ryan Air) நிறுவனத்தை சேர்ந்த நான்கு பைலட்கள், அந்த திடுக்கிடும் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர். சர்வாதிகாரப் போக்கில் நடத்தப்படும் ரையன் எயர் நிர்வாகம், தேவைக்கும் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கின்றது, என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காரணம்: இலாபவெறி! பயணிகளின் பாதுகாப்பை விட, இலாபம் முக்கியமானது. அது தான் முதலாளித்துவம்! மிகக் குறைந்த விலையில் டிக்கட் விற்கும் விமான சேவை, மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிப்பது எப்படி?

நெதர்லாந்து தொலைக்காட்சியில் KRO என்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட தகவல், பார்வையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. "Mayday Mayday"  என்ற தலைப்பின் கீழ் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நான்கு ரையன் எயர் விமானிகள், தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பேசினார்கள். கடந்த 27 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ரையன் எயர் விமான சேவை, இதுவரையில் விபத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. ஆனால், ரையன் எயர் விமானங்கள், விபத்தை உருவாக்கக் கூடிய காரணிகளுடன் தினசரி பறந்து கொண்டிருக்கின்றன. இனிமேல் நடக்கப் போகும் விபத்தை தடுப்பதற்காக, தாம் இப்போதே எச்சரிக்கை மணி அடிப்பதாக அந்த விமானமோட்டிகள் தெரிவித்தனர். உண்மையைக் கூறுவதற்காக, தமது வேலை போய் விடும், அல்லது தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில், அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளாமல் பேசினார்கள். இதற்கு முன்னர் குறைபாடுகளை எடுத்துரைத்த ஊழியர்கள், வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்யப் பட்டதாக தெரிவித்தனர். எதையும் வெளிப்படையாக பேச முடியாத அளவுக்கு, ரையன் எயர் நிர்வாகம், சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கின்றது. பயமுறுத்தல்கள், தண்டனைகள் மூலம் ஊழியர்களை அடக்கி வைக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செயற்பாடுகள் யாவும், மாபியாக் குழுக்களின் செயற்பாடுகளுடன் ஒத்துப் போவது இதிலிருந்து தெளிவாகும். "கார்ப்பரேட் மாபியாக்கள்" சட்டத்தாலும், மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்பது மட்டுமே வித்தியாசம்.  

ரையன் எயர் விமானங்கள் பறக்கத் தொடங்குவதற்கு முன்னர், அந்தப் பிரயாணத்திற்கு தேவையான அளவை விட, குறைந்தளவு எரிபொருளை நிரப்ப வேண்டுமென, நிர்வாகம் உத்தரவிடுகின்றது. அதற்கு காரணம், மேலதிக எரிபொருளை எடுத்துச் சென்றால், அந்த விமானத்தின் பாரம் அதிகமாகும். பாரம் அதிகமானால், அந்த விமானம் பெருமளவு எரிபொருளை பாவிக்க வேண்டியிருக்கும். ஆகவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், செலவை குறைத்துக் கொள்கின்றது. ஏற்கனவே , பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டிய பொதிகளின் நிறை, குறிப்பிட்ட அளவை மிஞ்சினால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது, ரையன் எயரில் பயணம் செய்த அனைவருக்கும் தெரியும். இதனை ஒரு காரணத்தால் மட்டுமே நியாயப் படுத்த முடியும். இலாபம், இலாபம், இலாபம் மட்டுமே! மனிதர்களின் உயிரை விட இலாபம் பெரிது! இலாபம் சம்பாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான விமான ஒழுங்கு சட்டங்களையும் மீறும் வகையில் நடந்து கொள்கின்றது. விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை இருந்தால், விபத்து நேர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையினால், ஒவ்வொரு விமானமும்  ஒரு வழிப் பிரயாணத்திற்கு  தேவையான அளவை விட, சற்று அதிகமாகவே எடுத்துச் செல்லும். விமானம் தரையிறங்கவிருக்கும் விமான நிலையத்தில் நிறுத்துமிடத்திற்கு அனுமதி கிடைக்க தாமதமானால், காலநிலை மோசமாக இருந்தால், இன்ன பிற காரணங்களுக்காக மேலதிக எரிபொருள் எடுத்துச் செல்வது அவசியமாகின்றது. ஆனால், ஒரு பயணத்திற்கு தேவையான அளவை விட குறைந்த எரிபொருளுடன் ரையன் எயர் விமானங்கள் சமாளித்துக் கொள்கின்றன. அது எப்படிச் சாத்தியமாகின்றது?  

ஸ்பெயின், வலன்சியா விமான நிலையத்தில், ஒரு ரையன் எயர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அபாய சமிக்ஞை கொடுக்கும் "மே டே, மே டே" என்று அலறிய படி, மாட்ரிட் செல்ல வேண்டிய விமானம் அவசரமாக இறக்கப் பட்டது. காரணம்? எரிபொருள் பற்றாக்குறை. சில மணிநேரத்தில், இன்னும் இரண்டு ரையன் எயர் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறங்கின. காரணம்? எரிபொருள் பற்றாக்குறை. ஒரே நாளில், மூன்று ரையன் எயர் விமானங்கள், "எரிபொருள் பற்றாக்குறை"  என்ற ஒரே காரணத்திற்காக தரையிறங்குவது தற்செயலாக இருக்க முடியாது. ஆனால், அதைப் பற்றி நிர்வாகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

தினசரி, ஒவ்வொரு ரையன் எயர் விமானமும் எரிபொருள் பற்றாக்குறையுடன் பறந்து கொண்டிருக்கின்றன. இதனை யாராவது தடுத்து நிறுத்தா விட்டால், அது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆகவே, விமானப் பயணிகளின் நன்மை கருதி, இந்தத் தகவல்களை ஊடகத்திற்கு அறிவிப்பதாக, சம்பந்தப் பட்ட பைலட்கள் தெரிவித்தனர். அவர்களின் பேட்டியையும், ரையன் எயர் நிறுவனத்தின் அடாவடித்தனம், இலாபவெறி பற்றிய விபரங்களுக்கு, இங்கேயுள்ள இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். Mayday Mayday    
Get Adobe Flash Player
Als het niet mogelijk is Flash te installeren kunt u de video bekijken via deze link.


Friday, December 28, 2012

21.12.12, சமதர்ம உலகின் தொடக்கம்! மெக்சிகோவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

"மாயன்களின் உலக அழிவு தினமான" 21 டிசம்பர் 2012 அன்று, மெக்சிகோ, சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 டிசம்பர், மாயன்களின் கலண்டரில், பக்தூன் எனப்படும், 5.125 வருடங்களைக் கொண்ட ஒரு யுகத்தின் முடிவாகும். அன்றைய தினம் புது யுகம் ஒன்று ஆரம்பமாகின்றது. தற்பொழுது மலர்ந்துள்ள புது யுகத்தில், உலகம் முழுவதும் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதை குறிக்கும் முகமாக அந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒழுங்கு படுத்தப் பட்டது. "21.12.12 அன்று, உலகம் அழிந்து விடும்" என்று பிதற்றிக் கொண்டிருந்த பைத்தியங்களைப் பற்றி எல்லாம் முதன்மையான செய்திகளாக தெரிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், மெக்சிகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்தன.

சியாப்பாஸ் மாநிலத்தில் வாழும் பூர்வகுடி செவ்விந்தியர்கள், "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) என்ற மார்க்சிய-லெனினிச அமைப்பின் அழைப்பை ஏற்று பெருமளவில் கலந்து கொண்டனர். சுமார் நாற்பதாயிரம் பேர், இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். எல்லோரும் தமது முகத்தை மூடும், கருப்புநிற குல்லாய் அணிந்திருந்தனர். அந்தக் குல்லாயில் பொறிக்கப்பட்ட இலக்கமானது, அவர்கள் எந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்தது. சியாப்பாஸ் மாநிலத்தில் பல பகுதிகள், இன்றைக்கும் EZLN கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.

21.12.12  மெக்சிகோவில் நடந்துள்ள ஆர்ப்பாட்டமானது,  பூர்வீக மக்களின் உரிமைப் போராட்டத்தை மட்டும் எதிரொலிக்கவில்லை. மார்க்சிய- லெனினிசம் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரேயொரு சித்தாந்தம் என்பதையும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகள் வீழ்ந்து கொண்டிருந்த தொன்னூறுகளில், மெக்சிகோவில் ஒரு மார்க்சிய-லெனினிச இயக்கம் தோன்றியது என்று சொன்னால் பலருக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த இயக்கம், கடந்த இரு தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நம்புவதற்கு இன்னும் கஷ்டமாக இருக்கும். சில நேரம், கற்பனையை விட உண்மை அதிசயமாக இருக்கும். 

மேலதிக விபரங்களுக்கு, இந்த இணையத் தளத்தை பார்க்கவும்:
EL GRITO SILENCIOSO DE 40 MIL ZAPATISTAS 

மெக்சிகோவில் பூர்வீக செவ்விந்திய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சியாப்பாஸ் மாநிலத்தில்,  "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) கெரில்லா இயக்கம், ஒரு சில நாட்களுக்குள், பல நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1 ஜனவரி 1994 ம் ஆண்டு, சுமார் 3000 போராளிகள், அந்த தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தனர். Ocosingo, Las Margaritas, Huixtán, Oxchuc, Rancho Nuevo, Altamirano, Chanal ஆகிய நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அரச அலுவலகங்களும், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் நிர்மூலமாக்கப் பட்டன. சிறைகள் உடைக்கப் பட்டு, கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். அரசு அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால் கிராமப் புறங்களில் கணிசமான பல பகுதிகள் EZLN கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிற்காலத்தில், அரச படைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய போதிலும், காடுகளும், மலைகளும் சேர்ந்த பகுதிகளில், இன்றைக்கும் EZLN நடமாட்டம் காணப் படுகின்றது.

மெக்சிகோவில் தலைமறைவாக இயங்கும், "Zapatista Army of National Liberation" புரட்சிகர அமைப்பின் தளபதி மார்கோஸ், ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை:
 

நீங்கள் அதைக் கேட்டீர்களா? 
அது அவர்களுடைய உலகம் நொறுங்கி விழுவதன் சத்தம் 
எமது புது உலகம் எழுகின்றது 
பகல் என்றிருந்த நாள், இரவாக இருந்தது 
இரவு பகலாக மாறும், அதுவே நாளாகும். 
ஜனநாயகம்! 
சுதந்திரம்! 
நீதி! 

Communiqué of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the Zapatista Army of National Liberation. Mexico. 

 21 December 2012 

To whom it may concern 

 DID YOU HEAR? 
 It is the sound of their world collapsing. 
 It is that of ours rising anew. 
The day that was the day, used to be night. 
And night will be the day, that will be the day. 
Democracy! Freedom! Justice! 

From the Mountains of the Mexican Southeast. 

On behalf of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the EZLN Subcomandante Insurgente Marcos 
Mexico, 
December 2012

Friday, December 07, 2012

300 ஸ்பார்ட்டா வீரர்களின் நாட்டில் ஒரு நாள்

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்  (பகுதி - 3)

"300"  என்ற ஹாலிவூட் திரைப்படம் வந்த பின்னர், ஸ்பார்ட்டாவின் பெயர், உலகம் முழுவதும் அறிமுகமானது. கிறீசின் பெலோப்பனோஸ் குடாநாடு, பண்டைய காலத்தில் ஸ்பார்ட்டா என்ற தனி நாடாக இருந்தது. ஒரு பக்கத்தில் ஏதன்ஸ், மறு பக்கத்தில் ஸ்பார்ட்டா, இரண்டு வல்லமை பொருந்திய சுதந்திர நாடுகளுக்கும் இடையில், வர்த்தகப் போட்டிகளும், இராணுவத் தகராறுகளும் இருந்தன. அப்பொழுது கிழக்கே (இன்றைய துருக்கி) இருந்த பாரசீக சாம்ராஜ்யம் அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தது. கிரேக்கத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் அடிக்கடி படையெடுத்தது. இதனால் ஏதென்ஸ் அடிக்கடி பாதிக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒத்துழைக்கா விட்டாலும், பிற்காலத்தில் ஏதன்ஸ் தேசத்தின் போரில், ஸ்பார்ட்டாவும் சேர்ந்து கொண்டது. அதுவே கிரேக்கம் என்ற ஒரு புதிய தேசம் உருவாக அடிப்படையாக அமைந்தது. இதற்குப் பின்னர், நகரங்களை மையப் படுத்திய தனியரசுகள் மறைந்து, கிரேக்கப் பேரரசு உருவானது. 

இன்று ஸ்பார்டா நகரம் பெருமளவு அழிந்து விட்டது. அதனால் அங்கு பார்ப்பதற்கு எதுவும் இல்லை. சில கட்டிட இடிபாடுகளைத் தவிர. ஸ்பார்ட்டாவுக்கு அருகில், கிறிஸ்தவ கால புராதன நகரம் ஒன்றுள்ளது. மிஸ்த்ரா என்ற இடத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நகரம் அழியாமல் உள்ளது. பிசாந்தின் என்ற, கிரேக்க மொழி பேசும் ரோம சாம்ராஜ்யத்தின் எச்சம் அது. பிசாந்தின் சாம்ராஜ்யத்தில், கிரேக்கம் அரச கரும மொழியாகவும், கிறிஸ்தவம் அரச மதமாகவும் இருந்தன. அந்த அரசாங்கத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பிற்காலத்தில் பிசாந்தின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று, அந்த இடத்தில் துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் உருவானது. ஏதென்ஸ் வரையில் துருக்கியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில், பெலோப்பெனோஸ் குடா நாடு மட்டுமே சுதந்திரமாக இருந்துள்ளது. அந்தப் பிரதேசம், முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட நிர்வாகத் தலைநகரம் தான் மிஸ்த்ரா. அதே காலகட்டத்தில் தான், பிற்காலத்திய கிரேக்க தேசியவாதமும் தோன்றியது. பல அழகிய புராதன கட்டிடங்களை, மிஸ்த்ராவில் இன்றைக்கும் பார்த்து மகிழலாம். 

பெலோப்போனோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் ஏதென்ஸ் திரும்பி வந்தேன். ஏதென்சில் நான் தங்கியிருந்த "யூத் ஹாஸ்டல்", பெயரளவில் மட்டுமே "இளையோரின் விடுதி" யாக இருந்தது. வயதுக் கட்டுப்பாடின்றி, எல்லோரையும் தங்க அனுமதித்தார்கள். செலவும் அதிகமில்லை. ஒரு நாள் கட்டணம் 12 யூரோக்கள் மட்டுமே. ஒரு அறையில், நான்கு பேர் தங்கி இருந்தார்கள். என்னுடன் ஒரு பிரிட்டிஷ் முதியவரும், அயர்லாந்து இளைஞனும் தங்கியிருந்தனர். பிரிட்டிஷ் முதியவர், சுமார் ஐம்பது  வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வசித்துள்ளார்! திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தில் பணியாற்றியுள்ளார். (இலங்கை குடியரசான பின்னர், அந்த தளம் மூடப்பட்டது.)  அவர் தனது இலங்கை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பிரிட்டிஷ் கடற்படைத் தளம் அகற்றப் பட்ட பின்னர், இலங்கையுடனான பிரிட்டனின் காலனிய கால தொடர்பு துண்டிக்கப் பட்டது. அது வரையில், இலங்கையில் வசித்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு கிடைத்த சலுகைகளை விவரித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. அந்த முன்னாள் கடற்படை வீரருடன் தற்போதைய இலங்கை நிலவரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். "திருகோணமலை கடற்படைத் தளம் மூடப்பட்டதற்கும், சில வருடங்களின் பின்னர், இனப்பிரச்சினை கூர்மை அடைந்ததற்கும் தொடர்பிருந்தது" என்பதை, அவருடன் உரையாடிய பொழுது புரிந்தது. 

என்னுடன் தங்கியிருந்த அயர்லாந்து இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஐரிஷ்காரர்கள் எந்தளவு தூரம் பிரிட்டனை வெறுக்கின்றனர் என்பது புரிந்தது. "ஆங்கிலேயர்கள்  இலங்கையையும், பிற உலக நாடுகளையும் காலனிப் படுத்துவதற்கு முன்பே, அருகில் இருந்த அயர்லாந்தை காலனியாக்கி வெள்ளோட்டம் பார்த்துள்ளனர். அந்த ஐரிஷ் இளைஞர், "சுதந்திரமடைந்த" அயர்லாந்தின் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். தான் மட்டுமல்ல, தனது தந்தை, தாத்தா காலத்திலிருந்தே ஆங்கில மொழியை, அதாவது ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை, தமது தாய்மொழியாக பேசி வருவதாக கூறினார். அதாவது, சொந்த மொழியான ஐரிஷ் மொழியை மூன்று தலைமுறையாக மறந்து விட்டார்கள். தனக்கு ஐரிஷ் ஒரு அந்நிய மொழியாக தெரிவதாகவும், தான் சிந்திப்பது கூட ஆங்கில மொழியில் தான் என்றும் தெரிவித்தார். ஐரிஷ் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டாலும், பலருக்கு அதில் ஆர்வமில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் மட்டுமே ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.அதாவது பதவியேற்கும் பொழுது, ஐரிஷ் மொழியில் சத்தியப் பிரமாணம் செய்தால் போதுமானதாம். நான் ஈழத் தமிழரின் மொழிப் பிரச்சினை பற்றி அந்த நண்பருக்கு எடுத்துக் கூறினேன். "இன்னும் பத்து வருடங்களில், ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் சிங்களம் மட்டுமே பேசுவார்கள்," என்று பலர் ஆரூடம் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிச்சுவட்டை பின்பற்றும் ஸ்ரீலங்கா அரசு வேறெப்படி நடந்து கொள்ளும்? தாயை சந்தையில் பார்த்தால், மகளை வீட்டில் பார்க்க வேண்டுமா?

கிறீஸை சுற்றி பல தீவுகள் உள்ளன. எல்லாத் தீவுகளுக்கும் ஏதென்சில் இருந்து அதி விரைவுப் படகுச் சேவை உள்ளது. மேற்கே உள்ள தீவுகளுக்கு, பாட்ரா துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை நடக்கிறது.
ஏதென்ஸ் நகரத்திற்கு அருகில் உள்ள தீவுக்கு பெயர் ஏகினா. அதற்கு பிராயஸ் துறைமுகத்தில் இருந்து படகு செல்கின்றது. பிராயஸ் ஏதென்ஸ் நகரின் துறைமுகம் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச கப்பல்களும் அங்கே வருகின்றன. ஏகினா தீவில் வாழும் மக்கள், பெரும்பாலும் மீனவர்கள். உல்லாசப் பிரயாணத் துறையினால், மேலதிக வருமானம் கிடைக்கிறது. தலைநகரத்திற்கு அருகில், கடற்கரையில் ஏகாந்தமாக பொழுது போக்க விரும்புவோருக்கு ஏகினா சிறந்த இடம். அங்குள்ள மெல்லிய நீல நிறக் கடற்கரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பண்டைய கிரேக்க நாகரீகத்தின் தடயங்கள் ஏகினா தீவிலும் காணக் கிடைக்கின்றன. அவை இடிபாடுகளுடன் காட்சி தரும் ஆலயங்கள் தான். ஆதி கால கிறிஸ்தவ போதகர்களும், ஏகினாவில் தமது தடயங்களை பதித்து விட்டுச் சென்றுள்ளனர்.  

ஆதி கால கிறிஸ்தவ சபைகள் ஏகினா தீவு, ஏதென்ஸ், பெலோப்போனோஸ் குடா நாடு, மற்றும் துருக்கியிலும் நிறுவப் பட்டன. துருக்கி பிற்காலத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யமாக மாறியது. துருக்கி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களாக மாறினார்கள். இஸ்லாமிய துருக்கியர்கள் கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றி, தமது சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இணைத்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மதத் துறவிகள் பலர் தலைமறைவாக இயங்கினார்கள். ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் தடை செய்யப் படவில்லை. ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அரசியல் நடத்திய துறவிகள் மட்டுமே தலைமறைவாக வாழ்ந்தனர். அவர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம் ஒன்று, மத்திய கிரேக்கத்தில் கிடைத்தது. இயற்கை அரண்களால் சூளப்பட்ட, எதிரிகளால் இலகுவில் கண்டறிய முடியாத இரகசிய இடம். அது ஒரு மலைப் பிரதேசம். ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயரமான மலைப்பாறைகளை கொண்டது. அவற்றின் உச்சியில் மடாலயங்களை கட்டி, அங்கேயே தங்கி இருந்தார்கள். சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் மட்டுமே அப்படியான இடங்களை கற்பனையில் தரிசிக்கலாம். அந்த மர்ம மடாலயங்களின் கதை அடுத்து வரும்.

(தொடரும்)


கிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்: 

1.கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்
2.ஒலிம்பிக்ஸின் தாயகம்