Thursday, July 19, 2012

மியான்மர் : உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு

மியான்மர் தேச, வங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும், சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள், மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது.

மியான்மரின், பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்ட, மிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும், பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும், இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.


இந்தியா மட்டுமல்ல, பர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால், நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில், வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடி, அல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும், அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது. 

"தேசிய அரசுகளின் உருவாக்கம், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர், ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள், மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. 

இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும், தேசியவாத கதையாடலுக்கு அப்பால், உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், பர்மிய மன்னனுடன் நடந்த போரில், சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால், மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. 

ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாக, மொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்து, அங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவே, மேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம். 

மேலும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில், தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன், ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவே, பிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாக, வங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். 

ஒரு தேசிய இனம், தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விட, அந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால், காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள், ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.

உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு, பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேலோ, அல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.

ஐ.நா., பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால், ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால், ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. 

மேற்கத்திய நாடுகளினால் மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட, ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால், அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும், சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.

பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டு, ரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு, ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூட, பறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய, ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். 

இவர்களே இப்படிப் பேசினால், தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுது, ஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில், ஜனநாயகம் என்றால், மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.

ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காக, அனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. 

வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள், பர்மிய மொழி போன்ற, ஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும், பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின், அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான Altsean அனுப்பி வைத்த செய்தி, நிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)

ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடிய, ராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில், வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும், இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.

"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில், வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். 

உலகில் ஒவ்வொரு தேசிய இனமும், தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும், சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர், ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.

வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம், இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள், இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும், பாலங்கள் போடவும், வேறு பல கட்டுமானப் பணிகளிலும், வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. 

ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும், பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.

கடந்த பத்தாண்டுகளாகவே, ரோஹிங்கியா வங்காளிகள், மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள், அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள், சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை. 

1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர், பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை, பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். 

பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட, ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி, பங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை, தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோ, அதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.

வதந்திகள், திரிபுபடுத்தல், இவற்றை தவிர்த்து விட்டு, உண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில், பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து, படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால், எது சரி? அதை எப்படி உறுதிப்படுத்துவது? ரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றி, பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்ல, வளைகுடா அரபு நாடுகள், பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள், இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்து, சர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறை, தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. 

இனவாதம், மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில், ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும், மியான்மார், பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றி, வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.


மேலதிக தகவல்களுக்கு:
1.Burma: Why Such Silence Over Muslim Genocide?
2.Ethnic Cleansing in Myanmar
3.Ethnic violence mars transition to democracy for Rohingya in Burma
4.'De Burmese Rohingya's worden langzaam weggezuiverd'
5.Arakan Journal
6.மியான்மர்: கலவரமும் நிலவரமும்
7.பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

------------------------------------------------------------------------------------
மியான்மர் பற்றிய முந்திய பதிவுகள்:

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

Friday, July 06, 2012

இந்தியாவில் சிதம்பரம் தலைமையில் தொடரும் படுகொலைகள்


கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.  இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார்  ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.


நடந்தது என்ன?  
பழங்குடியினரது  வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் - ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.

சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில்  பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.


கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள், ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே  கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்தது.


எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள். 

கொலைகாரன் விஜயகுமார்
இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும்  பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.

இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும்  நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர். அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.
பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.


இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.

கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால்  வெளியில் சொல்கிறேன்” என்றார்.
சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.

போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?
மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.
சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார்.
கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.

ஏன் இந்தக் கொலைகள்?
சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650  கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10  லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.
இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்
இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.

கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!
அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.

கொலை செய்யப்படதில் பெரும் பகுதி சிறுவர்கள்:

http://www.ndtv.com/video/player/news/6-minors-killed-in-Chhattisgarh-encounter-congress-report/238237
கொல்லப்பட்டவர்களின் பிணாங்களைக் கூட கொடுக்க மறுக்கும் சிதம்பரத்தின் நிர்வாகம்:


(--------ராமசாமி----------------)