Saturday, December 29, 2012

விமானப் பயணிகளின் உயிருடன் விளையாடும் "ரையன் எயர்"


மலிவு விலையில், மிகக் குறைந்த கட்டணத்தில் பறக்கும் விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மிகக் குறைந்த கட்டணம் அறவிடுவதற்கு, மக்கள் பல வகை காரணங்களை நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், "அந்த விமான நிறுவனங்கள், பிரயாணம் செய்யும் பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவதாலும், மலிவு விலையில் பறக்க முடிகின்றது" என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும், விபத்து நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பற்றாக்குறையான எரிபொருளுடன் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் மிகப் பிரபலமான மலிவு விலை விமான சேவையான, அயர்லாந்தில் தலைமையகத்தை கொண்டுள்ள, "ரையன் எயர்" (Ryan Air) நிறுவனத்தை சேர்ந்த நான்கு பைலட்கள், அந்த திடுக்கிடும் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர். சர்வாதிகாரப் போக்கில் நடத்தப்படும் ரையன் எயர் நிர்வாகம், தேவைக்கும் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கின்றது, என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காரணம்: இலாபவெறி! பயணிகளின் பாதுகாப்பை விட, இலாபம் முக்கியமானது. அது தான் முதலாளித்துவம்! மிகக் குறைந்த விலையில் டிக்கட் விற்கும் விமான சேவை, மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிப்பது எப்படி?

நெதர்லாந்து தொலைக்காட்சியில் KRO என்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட தகவல், பார்வையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. "Mayday Mayday"  என்ற தலைப்பின் கீழ் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நான்கு ரையன் எயர் விமானிகள், தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பேசினார்கள். கடந்த 27 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ரையன் எயர் விமான சேவை, இதுவரையில் விபத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. ஆனால், ரையன் எயர் விமானங்கள், விபத்தை உருவாக்கக் கூடிய காரணிகளுடன் தினசரி பறந்து கொண்டிருக்கின்றன. இனிமேல் நடக்கப் போகும் விபத்தை தடுப்பதற்காக, தாம் இப்போதே எச்சரிக்கை மணி அடிப்பதாக அந்த விமானமோட்டிகள் தெரிவித்தனர். உண்மையைக் கூறுவதற்காக, தமது வேலை போய் விடும், அல்லது தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில், அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளாமல் பேசினார்கள். இதற்கு முன்னர் குறைபாடுகளை எடுத்துரைத்த ஊழியர்கள், வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்யப் பட்டதாக தெரிவித்தனர். எதையும் வெளிப்படையாக பேச முடியாத அளவுக்கு, ரையன் எயர் நிர்வாகம், சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கின்றது. பயமுறுத்தல்கள், தண்டனைகள் மூலம் ஊழியர்களை அடக்கி வைக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செயற்பாடுகள் யாவும், மாபியாக் குழுக்களின் செயற்பாடுகளுடன் ஒத்துப் போவது இதிலிருந்து தெளிவாகும். "கார்ப்பரேட் மாபியாக்கள்" சட்டத்தாலும், மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்பது மட்டுமே வித்தியாசம்.  

ரையன் எயர் விமானங்கள் பறக்கத் தொடங்குவதற்கு முன்னர், அந்தப் பிரயாணத்திற்கு தேவையான அளவை விட, குறைந்தளவு எரிபொருளை நிரப்ப வேண்டுமென, நிர்வாகம் உத்தரவிடுகின்றது. அதற்கு காரணம், மேலதிக எரிபொருளை எடுத்துச் சென்றால், அந்த விமானத்தின் பாரம் அதிகமாகும். பாரம் அதிகமானால், அந்த விமானம் பெருமளவு எரிபொருளை பாவிக்க வேண்டியிருக்கும். ஆகவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், செலவை குறைத்துக் கொள்கின்றது. ஏற்கனவே , பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டிய பொதிகளின் நிறை, குறிப்பிட்ட அளவை மிஞ்சினால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது, ரையன் எயரில் பயணம் செய்த அனைவருக்கும் தெரியும். இதனை ஒரு காரணத்தால் மட்டுமே நியாயப் படுத்த முடியும். இலாபம், இலாபம், இலாபம் மட்டுமே! மனிதர்களின் உயிரை விட இலாபம் பெரிது! இலாபம் சம்பாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான விமான ஒழுங்கு சட்டங்களையும் மீறும் வகையில் நடந்து கொள்கின்றது. விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை இருந்தால், விபத்து நேர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையினால், ஒவ்வொரு விமானமும்  ஒரு வழிப் பிரயாணத்திற்கு  தேவையான அளவை விட, சற்று அதிகமாகவே எடுத்துச் செல்லும். விமானம் தரையிறங்கவிருக்கும் விமான நிலையத்தில் நிறுத்துமிடத்திற்கு அனுமதி கிடைக்க தாமதமானால், காலநிலை மோசமாக இருந்தால், இன்ன பிற காரணங்களுக்காக மேலதிக எரிபொருள் எடுத்துச் செல்வது அவசியமாகின்றது. ஆனால், ஒரு பயணத்திற்கு தேவையான அளவை விட குறைந்த எரிபொருளுடன் ரையன் எயர் விமானங்கள் சமாளித்துக் கொள்கின்றன. அது எப்படிச் சாத்தியமாகின்றது?  

ஸ்பெயின், வலன்சியா விமான நிலையத்தில், ஒரு ரையன் எயர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அபாய சமிக்ஞை கொடுக்கும் "மே டே, மே டே" என்று அலறிய படி, மாட்ரிட் செல்ல வேண்டிய விமானம் அவசரமாக இறக்கப் பட்டது. காரணம்? எரிபொருள் பற்றாக்குறை. சில மணிநேரத்தில், இன்னும் இரண்டு ரையன் எயர் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறங்கின. காரணம்? எரிபொருள் பற்றாக்குறை. ஒரே நாளில், மூன்று ரையன் எயர் விமானங்கள், "எரிபொருள் பற்றாக்குறை"  என்ற ஒரே காரணத்திற்காக தரையிறங்குவது தற்செயலாக இருக்க முடியாது. ஆனால், அதைப் பற்றி நிர்வாகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

தினசரி, ஒவ்வொரு ரையன் எயர் விமானமும் எரிபொருள் பற்றாக்குறையுடன் பறந்து கொண்டிருக்கின்றன. இதனை யாராவது தடுத்து நிறுத்தா விட்டால், அது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆகவே, விமானப் பயணிகளின் நன்மை கருதி, இந்தத் தகவல்களை ஊடகத்திற்கு அறிவிப்பதாக, சம்பந்தப் பட்ட பைலட்கள் தெரிவித்தனர். அவர்களின் பேட்டியையும், ரையன் எயர் நிறுவனத்தின் அடாவடித்தனம், இலாபவெறி பற்றிய விபரங்களுக்கு, இங்கேயுள்ள இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். Mayday Mayday    
Get Adobe Flash Player
Als het niet mogelijk is Flash te installeren kunt u de video bekijken via deze link.


No comments: