Thursday, August 16, 2012

திருமணங்கள் இயக்கத்தினால் நிச்சயிக்கப் படுகின்றன

பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" -
 பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 8)



க்மெர் ரூஜ் ஆட்சி இவ்வளவு சீக்கிரமாக கவிழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் அதன் பலத்தில் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். வியட்நாமிய இராணுவம் கம்போடியாவின்  பல பகுதிகளை பிடித்த பின்னரும், "தொடர்ந்து சண்டை நடப்பதாகவும், எதிரிப் படைகள் கடும் இழப்புடன் பின்வாங்கிக் கொண்டிருப்பதாகவும்..." க்மெர் ரூஜ் வானொலி அறிவித்தது. பிராந்தியத் தளபதிகளும், போராளிகளும் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காது அலட்சியமாக இருந்தனர். வியட்நாமிய படைகள் அண்மித்த பின்னர், அவசர அவசரமாக பின்வாங்கி ஓடினார்கள். துவேல் ஸ்லேங்கில் உள்ள, S -21 சிறை முகாமும் வழமை போல, கைதிகளை விசாரித்துக் கொண்டும், சித்திரவதை செய்து கொண்டும் இருந்தது.

"அனைத்துக் கைதிகளையும் சுட்டுக் கொன்று விடும் படி," திடீரென மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதனால், நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான கைதிகள் (சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது) ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப் பட்டனர். அத்துடன் முகாமை நிர்வகித்தவர்கள் தப்பியோடி விட்டார்கள். சித்திரவதைக் கருவிகளை மறைப்பதற்கோ, அழிப்பதற்கோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவை தான் இன்றைக்கு, அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. ஒரு காலத்தில், க்மெர் ரூஜினால் "இனத் துரோகி" முத்திரை குத்தப் பட்டவர்கள், தமது உறவினர்களையும், நண்பர்களையும் S -21 முகாமிற்கு அழைத்துச் சென்று காட்டுகின்றார்கள். ஏனெனில் மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களும், க்மெர் ரூஜிற்குள் துரோகச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்  சாட்டப்  பட்டவர்களும் மட்டுமே, S -21 சிறையில் வைத்து சித்திரவதை செய்து கொல்லப் பட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இன்று உலகம் யாருக்கு சாதகமாகப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை, நான் இங்கே கூறத் தேவையில்லை.

அடுத்த பத்தாண்டுகளுக்கு, மீண்டும் கெரில்லா யுத்தம் செய்யவிருக்கும் க்மெர் ரூஜ் இயக்கத்தை காடுகளுக்குள் சந்திப்பதற்கு முன்னர், அவர்களது  தோல்விக்கான காரணங்கள் குறித்து  சிறிது அலசுவோம்.  எல்லோரும் க்மெர் ரூஜ் இயக்கத்தில் போராளிகளாக  சேர்த்துக் கொள்ளப் படவில்லை. கிராமப்புற விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே தெரிந்தெடுத்து சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பெரும்பாலானவர்கள் பருவ வயது  இளைஞர்கள், சிறுவர்கள். 12 வயது சிறுவர்கள் கூட போராளிகளாக இருந்தனர். இயக்கத்தில் புதிதாக சேரும் ஒருவர், முதன் முதலாக செய்ய வேண்டிய கடமை ஒன்றுள்ளது. சுய விமர்சனம் என்ற பெயரில், அவர் தனது வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும், ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் முன்னால் சொல்ல வேண்டும். அது எந்தளவு அந்தரங்கமாக இருந்தாலும், காதல் அனுபவத்தைக் கூட மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது போன்ற சுய விமர்சனம் செய்யும் போக்கு, ஈழ விடுதலை இயக்கங்கள் மத்தியிலும் காணப்பட்டன. குறிப்பாக, புளொட்(PLOTE) இயக்கத்தில் அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

புளொட் இயக்கத்தினுள் நடந்த உட்கட்சிப் படுகொலைகள் மிகவும் பிரசித்தமானது. புலிகளின் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில், அல்லது அதிகாரத்தில் இருந்தவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட குற்றத்திற்காக, தமது உறுப்பினர்களையே சித்திரவதை செய்து கொன்ற கதைகள், "புதியதோர் உலகம்" என்ற நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளன. மத்திய குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, உட்கட்சிக் கொலைகளுக்கு தப்பவில்லை. அதே மாதிரி தான், க்மெர் ரூஜ் இயக்கத்தின் உள்ளும் நடந்தது. பொல் பொட்டின் வலதுகரம் என்று கருதப்பட்ட டா மொக் (Ta Mok), எல்லோரையும் சி.ஐ.ஏ. உளவாளி என்று சந்தேகப்பட்டார். இதனால் பல அப்பாவிகளும், இயக்கத்திற்கும், புரட்சிக்கும் விசுவாசமாக நடந்த  போராளிகளும் கொல்லப் பட்டனர். அவர்களைக் கொல்லும் பொறுப்பு, இன்னொரு உறுப்பினருக்கு கொடுக்கப்படும். தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழர்களை கொல்ல மனமின்றி தயங்கினால், அவரையும் சேர்த்து சுட்டுக் கொன்று விடுவார்கள். சொந்த இயக்க உறுப்பினர்களின் உயிர்களை தாமே பறிப்பதை பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்தப் போக்கானது, பல அடி மட்டப் போராளிகள் மனதில், தலைமையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் ஒரு கிளர்ச்சிக்கு துணியவில்லை. ஆனால், மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். (வியட்நாமிய) எதிரி படையெடுத்து வந்த நேரம், யுத்தத்திற்கு  தயாராக இருக்கவில்லை. 

இனி, மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்று பார்ப்போம். கூட்டுறவுப் பண்ணைகளை கட்டாயமாக்கிய பொழுது, பலர் அதில் விருப்பமின்றி வேலை செய்தார்கள். ரஷ்யாவில், சீனாவில் நடந்ததைப் போல, அது கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களின் சொந்த முடிவாக இருக்கவில்லை. ஒரு நிர்வாகக் கட்டமைப்பு மேலிருந்து திணிக்கப் பட்டதாகவே மக்களால் புரிந்து கொள்ளப் பட்டது. சமத்துவ சமுதாயம் என்ற பெயரில், கலப்புத் திருமணங்கள் கட்டாயமாக்கப் பட்டன. அதாவது, ஒருவரின் வாழ்க்கைத் துணையை, இயக்கமே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். கம்போடிய சமூகத்தில் சாதிகள் கிடையாது. ஆனால், வர்க்க வேறுபாடுகள் உண்டு. பௌத்தம் (பெரும்பாலும் கமர் மக்கள்), இஸ்லாம் (காம் மொழி பேசும் மக்கள்), கிறிஸ்தவம்(வியட்நாமிய மொழி பேசும் மக்கள்) போன்ற மதப் பிரிவுகளும் உண்டு. இந்தப் பிரிவினர் எல்லாம், மண உறவின் நிமித்தம் கலந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர்.  

நமது நாட்டில், ஒரு "தமிழ் க்மெர் ரூஜ்", இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், ஏற்றத்தாழ்வான சாதிகளாக பிரிந்துள்ள மக்கள், சாதி கலந்து திருமணம் செய்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். நமது சமூகத்தை சேர்ந்த உயர்சாதியினர் அதனை வரவேற்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒருக்காலும் இல்லை. பொல் பொட், க்மெர் ரூஜ் போன்ற சொற்கள், அவர்கள் காதில் அபசுரமாக ஒலிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிராமணர்களும், பறையர்களும் மணம் முடித்து சேர்ந்து வாழ வேண்டிய நிலை வந்தால்? இந்துக்களும், முஸ்லிம்களும் கலப்புத் திருமணம் செய்ய வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டால்? பலருக்கு அதை கற்பனை செய்தாலே உடம்பெல்லாம் நடுங்கும். இந்த விடயமெல்லாம் உங்களுக்கு இப்போது தான் தெரிய வரலாம். ஆனால், பொல் பொட், க்மெர் ரூஜ் செய்த கொடுமைகளை பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் பலருக்கு, இதெல்லாம் ஏற்கனவே தெரியும். அவர்களின் கவலை எல்லாம், நேற்று கம்போடியர்களுக்கு ஏற்பட்ட நிலைமை, நாளைக்கு தங்களுக்கு வந்து விடக் கூடாது என்பது தான்.

க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில், தாம் விரும்பிய உணவை வாய்க்கு ருசியாக சாப்பிடுவதற்கு கூட தடை இருந்தது. வசதி இருப்பவர்கள் மட்டுமே, விதம் விதமாக சமைத்து உண்பார்கள். ஆனால், ஏழைகள் வெறும் கஞ்சியைக் குடித்து விட்டு திருப்திப் பட வேண்டிய நிலைமை, நமது நாட்டில் சர்வ சாதாரணம். க்மெர் ரூஜ் இயக்கம், அந்த தலையெழுத்தை மாற்றி அமைத்தது.  நாட்டில் உற்பத்தி அதிகமாகி, காய்கறி, பழங்கள், இறைச்சி தாராளமாக கிடைத்தால், அவை எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்கப் பட்டது. உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், அனைத்து மக்களும் கஞ்சியைக் குடித்தாவது வாழ வேண்டும். சில நேரம், மூன்று வேளையும் கஞ்சி குடிக்க வேண்டிய அவல வாழ்வுக்கும் கம்போடிய மக்கள் முகம் கொடுத்தனர்.  ஆனால், அது எப்போதும் அப்படித் தான் என்று கூற முடியாது. சில நேரம் வருடக் கணக்காக அப்படி இருக்கலாம். ஆனால், அடுத்த வருடமே அனைவருக்கும் கொஞ்சம் காய்கறி, பழம், இறைச்சி கிடைக்கலாம். சில நேரம், இடத்துக்கிடம் வேறுபடலாம். நேர்மையான பொறுப்பாளரின் இடத்தில் தாராளமாக உணவு கிடைக்கும். நேர்மையற்ற பொறுப்பாளர்கள், மக்களுக்கு கொடுக்காமல் பதுக்கினார்கள். எது எப்படி இருப்பினும், கம்போடியா முழுவதும், உணவு பொதுவாக சமைத்துப் பரிமாறப் பட்டது. அதாவது, யாரும் வீட்டில் சமைக்கக் கூடாது. ஒரு கம்யூனிற்கு பொதுவான சமையலறை, கம்யூன் உறுப்பினர்களுக்கு தேவையான நாளாந்த உணவை சமைத்து வழங்கும். மக்கள் எல்லோரும், ஒரு பொது இடத்தில் கூடி இருந்து சாப்பிட வேண்டும். சிலர் அதனை விரும்பாவிட்டாலும், அதற்குப் பெரிய எதிர்ப்பு தோன்றி இருக்கவில்லை. 

பல இடங்களில், பொதுவான கம்யூன் சமையல் முறையானது,  பெண் விடுதலையாக கருதப் பட்டது. தமிழ் சமூகத்தைப் போன்று, க்மெர் சமூகத்திலும் பெண்களே வீடுகளில் சமைப்பது வழக்கம். பொதுச் சமையல் திட்டம் வந்தவுடன், பல பெண்களுக்கு சமையல் கட்டில் இருந்து விடுதலை கிடைத்தது. நமது நாட்டில் இத்தகைய திட்டத்தை கொண்டு வந்தால், அதனை யார் எதிர்ப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். மேன் நிலை சாதிகளை சேர்ந்த தமிழர்கள், கீழ் நிலை சாதிகளை சேர்ந்தவர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிட விரும்புவார்களா? புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், போரினால் ஏற்பட்ட நெருக்கடியினால் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களில் இது போன்ற நிலைமை இருந்துள்ளது. உயர்சாதியினர் வேண்டா வெறுப்பாக, தாழ்த்தப் பட்ட சாதியினருடன் சமமாக இருந்து உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உயர்சாதியினரின் அபிலாஷைகளை மதிக்காததாலும், அவர்களுக்கு  மனதின் ஒரு மூலையில் புலிகள் மேல் வெறுப்பிருந்தது உண்மை. 

பெரும்பாலான சாதி அபிமானிகள் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தார்கள். ஆனால், அவர்கள் மீதும் புலிகள் விதித்த கட்டுப்பாடுகள், அவர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் அத்தகைய எண்ணப்போக்கு காணப்பட்டது. கம்போடியாவிலும் அவ்வாறான நிலைமை காணப்பட்டது. குறிப்பாக, ப்னோம் பென் போன்ற நகர்ப்புறங்களை சேர்ந்த மத்தியதர வர்க்க மக்களுக்கு, க்மெர் ரூஜ் விதித்த கட்டுப்பாடுகள் எதுவும் பிடிக்கவில்லை. இத்தனைக்கும், 1975 க்கு முன்னர், அவர்கள் க்மெர் ரூஜ்ஜின் போராட்டத்தை ஆதரித்தவர்கள். எண்பதுகளில், வியட்நாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக க்மெர் ரூஜ் கெரில்லாப் போராட்டம் நடத்திய போதும் ஆதரித்தார்கள். அதாவது, வியட்நாமியர்களை எதிர்த்துப் போராடும் க்மெர் ரூஜ் படை, அவர்களது க்மெர் தேசியவாத நலன்களை பூர்த்தி செய்வது விரும்பத் தக்கது. ஆனால், அவர்களால் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டிற்குள் வாழ முடியாது. இன்று பல புலம்பெயர்ந்த தமிழர்களும், இதே மாதிரியான மன நிலையைக் கொண்டிருப்பதை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

க்மெர் ரூஜ் ஆட்சியின் கீழ், அவர்களது விருப்பங்களை ஒறுத்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட, மத்திய தர வர்க்க மக்களும், க்மெர் ரூஜ் எதிர்ப்பாளர்களும், வியட்நாமிய படையெடுப்பை "விடுதலையாக" கருதியதில் தவறில்லை. பொல் பொட்டின் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள் தான். உதாரணத்திற்கு, பொல் பொட்டின் அண்ணனின் மனைவி ஒரு ஊரறிந்த பரத நாட்டிய ஆசிரியை. (கம்போடியர்களின் கலாச்சார நடனம், நம்மூர் பரத நாட்டியத்தை பெரிதும் ஒத்துள்ளது.) க்மெர் ரூஜ் ஆட்சி கவிழ்ந்த சில மாதங்களுக்குப் பின்னர், ப்னோம் பென் நகரில் தனது மாணவிகளின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினார். க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில், அதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டிருக்கும்!  "நிலப்பிரபுத்துவ கலாச்சாரம்" என்ற பெயரில், க்மெர் கலாச்சார நடனங்கள் தடைசெய்யப் பட்டிருந்தன. 

புராதன கம்போடியாவில், (பரத) நாட்டியமானது, இந்தியாவில் இருந்ததைப் போன்று, தேவதாசிகளின் கலையாக வளர்க்கப் பட்டு வந்துள்ளது.  இது போன்ற கலாச்சாரப் புரட்சி, நமது நாடுகளிலும் நடக்கலாம். பல தமிழ் தேசிய, இடதுசாரி அமைப்புகள், பரத நாட்டியம் போன்ற நிலப்பிரபுத்துவ கால கலைகளை எதிர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. வருங்காலத்தில் அவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால்...? புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், தென்னிந்திய சினிமாப்படங்கள் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும், சினிமாப் பாடல்களுக்கு நடனமாடுவதும் தடை செய்யப் பட்டிருந்தன. இன்றைக்கு அதெல்லாம் தாராளமாக அனுமதிக்கப் படுவதை சுட்டிக் காட்டியே, "தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக", சிறிலங்கா அரசு பீற்றிக் கொள்கின்றது. இன்றைய கம்போடியாவிலும் அது தான் நிலைமை. "க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில், மக்கள் தமது கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு கூட சுதந்திரம் இருக்கவில்லை. க்மெர் ரூஜ் அழிக்கப் பட்ட பின்னர் தான், மக்கள் சுதந்திரத்தை அனுபவித்தார்கள்." என்று மேலைத்தேய மனித உரிமைவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். 

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், புலிகளை ஆதரிப்பவர்கள்  யாரும் இப்போது இல்லை என்று கூற முடியாது. புலிகள் அமைப்போடு சம்பந்தப் பட்ட போராளிகள், அவர்களது குடும்பத்தினர், மற்றும் பல ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்வர். இறுதி யுத்தத்தில், அவர்கள் ஆயிரக்கணக்கில் வன்னியில் இருந்து வெளியேறி, தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். மற்றவர்கள் ஈழப் பிரதேசங்களில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த போதிலும், இழந்த சொர்க்கத்தைப் பற்றிய நினைவுகளை இரை மீட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று, வியட்நாம் படையெடுப்பின் பின்னர், க்மெர் ரூஜ் பின்வாங்கி ஓடிய பொழுது, அவர்களுடன் பெருமளவு மக்களும் சேர்ந்து ஓடினார்கள். க்மெர் ரூஜ் போராளிகளின் குடும்பங்கள், ஆதரவாளர்கள், ஆயிரக் கணக்கில் வெளியேறி தாய்லாந்திற்குள் தஞ்சம் புகுந்தனர்.  

தமிழகத்தில் ஈழத் தமிழ் அகதிகள் அனுபவிப்பதை விட பல மடங்கு துன்பங்கள், தாய்லாந்தில் கம்போடிய அகதிகளுக்கு காத்திருந்தன. அடைக்கலம் புகுந்த இடத்தில், அவர்களை கவனிக்க யாரும் இருக்கவில்லை. அகதி முகாம்களில் உணவு, சுகாதார வசதி எதுவும் கிடையாது. முகாம்கள், ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் பட்டி போன்று காணப்பட்டதாக, நேரில் சென்று வந்தவர்கள் கூறுகின்றனர். பெண்களை பாலியல் பலாத்காரப் படுத்துவது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது.  வியட்நாமிய படைகளுக்கு ஒளித்து, காடுகளுக்குள் மறைந்திருந்தவர்கள், குழுக் குழுவாக வந்து சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் காடுகளுக்குள் இலை, குழை, வேர்களை மட்டுமே உண்டு உயிர் பிழைத்தவர்கள். இந்த சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன? க்மெர் ரூஜ் இயக்கத்தை, குறிப்பிட்டளவு கம்போடிய மக்கள் ஆதரித்திருந்தனர் என்பதைத் தானே? அவர்கள் தாய்லாந்துக்கு அகதியாக சென்று இந்தளவு கஷ்டப் பட வேண்டும் என்று என்ன தலை எழுத்து? பேசாமல் தம்மை விடுதலை செய்த வியட்நாமிய படைகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு, கம்போடியாவிலேயே வாழ்ந்திருக்கலாமே? 

பெருமளவு கம்போடியர்கள் அவ்வாறு நினைத்து கம்போடியாவிலேயே தங்கி விட்டனர். "விடுதலையின் பின்னரான" அவர்களது மகிழ்ச்சி அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை. க்மெர் ரூஜ் கொடுங்கோன்மையில் இருந்து மக்களை விடுதலை செய்த வியட்நாமியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் போன்று நடந்து கொண்டனர். வீடுகள் உடைக்கப் பட்டு, பொது மக்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப் பட்டு, வண்டி வண்டியாக வியட்நாமுக்கு அனுப்பப் பட்டன. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். பல இடங்களில் படுகொலைகள் நடந்தன. ஆயிரக் கணக்கான சடலங்கள் மனிதப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டன. அந்தக் குற்றங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று வரை உலகம் மௌனம் சாதிக்கின்றது. வியட்நாமியரின் இனப்படுகொலையில் பலியான மக்களின் எண்ணிக்கை, க்மெர் ரூஜ் கணக்கில் சேர்த்து விடப் பட்டது. 

ஒரு காலத்தில் வியட்நாமிய படைகளை வரவேற்றவர்கள் கூட, பெருமளவில் கம்போடியாவை விட்டு வெளியேறினார்கள். அகதியாக தாய்லாந்தில் தஞ்சம் கோரினார்கள். நிலைமை தனக்கு சாதகமாக திரும்புவதை உணர்ந்த பொல் பொட், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவித்தார். வியட்நாமிய ஆக்கிரமிப்பில் இருந்து கம்போடியாவை விடுவிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கமாக, க்மெர் ரூஜ் தன்னை பிரகடனப் படுத்தியது. அதற்கு உதவ புதிய நண்பர்கள் காத்திருந்தார்கள். அமெரிக்காவும், மேற்கத்திய சார்பு நாடான தாய்லாந்தும், க்மெர் ரூஜுக்கு வேண்டிய அளவு நிதி, ஆயுதங்கள் கிடைக்க உதவினார்கள். நாடு கடந்த க்மெர் ரூஜ் அரசினை, கம்போடியாவின் உத்தியோகபூர்வ அரசாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கு, ஐ.நா. சபையில் கம்போடியாவிற்கான ஆசனத்தில், ஒரு க்மெர் ரூஜ் பிரதிநிதி வீற்றிருக்க அனுமதிக்கப் பட்டது.  

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"
6. மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!
7. ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு

உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8

No comments: