Thursday, July 28, 2011

வலதுசாரி- தேசியவெறிக்கு எதிரான போர்

22 ஜூலை, நோர்வேயின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக பிரகடனப் படுத்தப் படலாம். உலகச் செய்திகளில் அரிதாக இடம்பிடிக்கும் "அமைதிப்பூங்காவில்" குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் என்பது பதின்ம வயது நோர்வீஜிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். படுகொலைக்கு காரணமான அண்டெர்ஸ் பிறேவிக் (Anders Breivik) என்ற வெள்ளையின நோர்வீஜிய வாலிபன் கைது செய்யப்பட்டான்.

அன்று நடந்த பயங்கரவாத செயலை விட, கொலைகாரனின் கொள்கையை விளக்கும் அறிக்கை உலகம் முழுவதும் சலசலப்பை தோற்றுவித்தது. மேற்குலகில் வளர்ந்து வரும் வலதுசாரித் தீவிரவாதிகளை கவனத்தில் எடுக்காததால் வந்த வினைப்பயன் இது. நோர்வீஜிய பயங்கரவாதியின் அறிக்கையில் இருந்து பின்வரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதிகள் தமது போரை ஆரம்பித்துள்ளனர். வெள்ளையரல்லாத குடிவரவாளர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கொள்கை கொண்டோர், இவர்கள் எல்லோரும் எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளனர்.

வெள்ளையின இனவெறி கொண்ட அண்டெர்ஸ் பிறேவிக் நினைத்திருந்தால், நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களை குறி வைத்து தாக்கி இருக்கலாம். ஆனால், அவன் தனது சொந்த இன மக்களைத் தான் கொன்று குவித்துள்ளான். இது குடிவரவாளர்களுக்கு வழங்கப் பட்ட எச்சரிக்கை. "உங்களை இந்த நாட்டிற்குள் தங்க அனுமதித்தவர்கள் எமது இனத்தை சேர்ந்தவர் ஆயினும் கொலை செய்யத் தயங்க மாட்டோம். ஆகவே உங்களது நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்." நினைக்கவே குலைநடுங்கும் எச்சரிக்கை, எதிர்கால ஐரோப்பாவில் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால்.

உலகம் முழுவதும் சமாதானத்திற்கு நோபல் பரிசு கொடுத்த நாடு இன்று தலை குனிந்து நிற்கின்றது. எம்மவர் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக உலகம் முழுவதும் நோர்வேக்கு நல்ல பெயர் உண்டு. "அமைதியை விரும்பும் மக்களைக் கொண்ட நாட்டின்" பிரஜைகள் மாறி வருகின்றனர். அவர்கள் ஓரிரவில் மாறவில்லை. மக்கட்தொகையால் சிறிய நாடான நோர்வேயில் (மொத்த சனத்தொகை ஐந்து மில்லியனும் இல்லை), வெளிநாட்டு குடிவரவாளர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகின்றது.

வெளிநாட்டவர் மீது துவேஷத்தை கக்கும் வலதுசாரிக் கட்சியான Frp (Fremskrittspartiet) யின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். 90 உயிர்களைப் பலி கொண்ட கொலைகாரன் அண்டெர்ஸ் கூட அந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். இன்று அந்தக் கட்சி படுகொலைகளை கண்டித்து, தனக்கு சம்பந்தம் இல்லாதது போலக் காட்டிக் கொள்கின்றது. இருப்பினும், உலகம் முழுவதும் பிரபலமான பயங்கரவாதியான அண்டெர்ஸ் பிறேவிக்கை ஆதர்ச நாயகனாகப் பார்க்கும் அடிமட்ட உறுப்பினர்கள் இல்லாமலில்லை.

நெதர்லாந்தின் "இஸ்லாமிய விரோத" அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ் (Gert Wilders), அண்டெர்ஸ் இனால் போற்றப்பட்டுள்ளார். ஆனால் வில்டர்ஸ் "ஒரு மனநோயாளியின் செயல்" என்று இணையத்தில் மட்டும் (டிவிட்டரில்) பதில் சொல்கிறார். நோர்வீஜிய கொலைகாரன் மட்டுமா ஒரேயொரு வில்டர்ஸ் இரசிகன்? ஒஸ்லோ படுகொலைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், நெதர்லாந்தில் ஒரு ஆயுததாரி பொதுமக்களை சுட்டுக் கொன்றான். அவன் கூட வில்டர்சின் இஸ்லாமிய விரோத கருத்துகளால் கவரப்பட்ட "மனநோயாளி" தான். (கொலையாளியின் அரசியல் கருத்துகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஏனென்றால் "இடதுசாரி" முத்திரை குத்தி விடுவார்கள் என்ற அச்சம்!)

சமாதானத் தலைநகரமான ஒஸ்லோவில் என்பது பேரைக் கொன்று குவித்த அன்டெர்ஸ் பிறேவிக் ஒரு மனநோயாளியாக இருக்க சாத்தியமில்லை. இதனை பல மனநல மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1500 பக்கம் கொண்ட அறிக்கையை தயாரித்த புத்திஜீவி எவ்வாறு மனநலம் குன்றியவராக இருக்க முடியும்? அன்டெர்ஸ் பிறேவிக் கொள்கை ரீதியாகவும், தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்வதிலும் பற்றுறுதியுடன் நடந்துள்ளான். அவனை மனநோயாளியாக சித்தரிப்பதன் மூலம், எதிர்கால அபாயத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், பின்லாடனை மனநோயாளியாக சித்தரித்திருந்தால், பொது மக்களும் "அல்கைதா பயங்கரவாதம்" குறித்து விழிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், "அல்கைதா வகையறாக்கள் நம்மினத்தவர்கள் அல்ல. எங்கோ மத்திய ஆசியாவில் வாழும் காட்டுமிராண்டி சமூகத்தை சேர்ந்தவர்கள். நம்மவர்கள் நாகரீகத்தில் சிறந்தவர்கள். அதனால் தான் எம்மை வெறுக்கிறார்கள்...." இவ்வாறு தான் மேற்குலக அரசுகள் தமது மக்களுக்கு பிரச்சாரம் செய்து வந்தன. நாகரீகமடைந்த வெள்ளையினத்தவர்கள் மத்தியிலும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் இருக்கின்றது என்ற உண்மையை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

மேற்குலகம் எவ்வாறு உலகிலேயே நாகரீகமடைந்த சமூகமாக கருதப்படுகின்றது? நிச்சயமாக அவர்களது ஜனநாயகமோ, மனித உரிமைகளோ, அல்லது மனிதாபிமான கொள்கையோ காரணமல்ல. இனப்படுகொலை, பயங்கரவாதம், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, இவை போன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்து தான் "நாகரீகமடைந்தார்கள்". நோர்வே உட்பட ஸ்கண்டிநேவிய நாடுகளும் 20 நூற்றாண்டில் தான் நிரந்தர அமைதியைக் கண்டன. அது வரையும் போரினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்த தேசங்கள் அவை. நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பொதுவான கலாச்சாரம் உண்டு. பொதுவான மொழி உண்டு. (மூன்று மொழிகளும் சிறிதளவே வேறுபடுகின்றன.) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான், மத்திய கால நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை நிலைநாட்டப்பட்டது. அந்தக் காலத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் முற்போக்கானதாக கருதப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தின் வருகையும், மன்னர்கள் புதிய மதத்தை தழுவியதும், ஸ்கண்டிநேவிய மக்களை நாகரீகமடைய வைத்தது. அதற்கு முன்னர், "வைகிங் கொள்ளையர்களாக" பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து நாசம் விளைவிப்பது, "காட்டுமிராண்டி சமூகத்தினரின்" தொழிலாக இருந்தது. ஸ்கண்டிநேவிய மக்களின் கிறிஸ்தவ மதத்தின் மீதான பற்றுறுதிக்கு காரணம், அவர்களின் கடந்த கால வரலாற்றில் தேட வேண்டும். இன்றும் கூட இந்நாடுகளின் தேசியக் கொடிகளில் சிலுவை பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. முழு ஐரோப்பியக் கண்டத்திலும் பரவிய கிறிஸ்தவ மதம், மிகத் தாமதமாகத் தான் ஸ்கண்டிநேவிய நாடுகளை வந்தடைந்தது. எப்போதும் சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் தான், அதிகளவு மதப்பற்று உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

நோர்வேயில் பயங்கரவாத கொலைகளை செய்த அன்டெர்ஸ் பிறேவிக் கூட ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதி தான். அதனை அவனது அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளான். மத்திய காலத்தில் வத்திகானின் கத்தோலிக்க திருச்சபை தலைமையில் நடந்த சிலுவைப்போர் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றான். அதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு இரகசிய குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழுவின் நோர்வேக் கிளையின் செயலாகவே நடந்து முடிந்த பயங்கரவாத வன்முறை பார்க்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது அவர்களின் குறிக்கோளாக உள்ளது.

"முஸ்லிம்கள்" என்பது வெள்ளையரல்லாத வெளிநாட்டு குடிவரவாளர்களையும் குறிக்கும். ஆசிய, ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தோர் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்களாக இருந்தாலும் அவர்கள் பார்வையில் முஸ்லிம்கள் தான். 

இறுதியில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெள்ளயினத்தவர்களை மட்டுமே கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவது தான் அவர்களது இலட்சியம். அவர்களது இலட்சியத்திற்கு தடையாகவிருப்பது, "கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்", மற்றும் பல இடதுசாரி சிந்தனை கொண்டோர். அதனால் தான், நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக கட்சியான தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிற்கு சென்றோர் படுகொலை செய்யப்படனர்.

இன்று எழுந்துள்ள வலதுசாரித் தீவிரவாதம், நவ-நாஜிகளிடம் இருந்து வேறுபடுகின்றது. மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள நவ- நாஜிகள் ஹிட்லர் காலத்து இனவெறிக் கொள்கைகளை இன்றும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஹிட்லரின் "யூத வெறுப்பு", "பாசிசக் கட்டுப்பாடுகள்", "தலைமை மீதான விசுவாசம்" போன்ற கொள்கைகளை மாற்றமேதுமின்றி பின்பற்றும் "பழமைவாத பாசிஸ்டுகள்". ஆனால் நமது காலத்தில் தோன்றியுள்ள நவீன பாஸிசம் ஜனநாயக முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றது. அவர்கள் தமது இனவெறிக் கருத்துகளை, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நியாயப் படுத்துகின்றனர். "வெளிநாட்டுக் கிரிமினல்கள்", "மசூதி கட்டும் முஸ்லிம்கள்", இவ்வாறு ஜனரஞ்சகமான விடயங்களை வைத்து அரசியலை கொண்டு செல்கின்றனர்.

அதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அவர்களுக்கு பெருமளவு உதவியுள்ளது. அமெரிக்காவை போன்றே, நவீன பாசிஸ்டுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், "இஸ்ரேல் ஐரோப்பா சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது." அதாவது "முஸ்லிம் படையெடுப்பை தடுக்கும் எல்லைப்புறக் காவல் அரண் போன்று" இஸ்ரேல் செயற்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் உள்ள "இஸ்ரேலிய ஆதரவாளர்களும்" தெரிந்தோ தெரியாமலோ, வெள்ளையின பேரினவாதிகளினால் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

தேசியவாதத்தின் தோற்றத்தை எடுத்துப் பார்த்தால், அது என்றென்றும் பேரினவாதமாகவே செயற்பட்டு வந்துள்ளமை புலனாகும். ஐரோப்பாவில் தேசியவாத வெறியூட்டப்பட்ட மக்களின் ஆதரவு, ஹிட்லரின் பேரழிவு விளைவித்த இரண்டாம் உலகப்போர் வரை இட்டுச் சென்றது. அதற்குப் பிந்திய காலங்களில், லிபரல்களும், "கலாச்சார மார்க்சியர்களும்" ஐரோப்பாவை சீரழித்து விட்டதாக நவீன பாசிஸ்டுகள் கவலைப் படுகின்றார்கள். அதனால் அவர்கள், வெள்ளயினத்தை சேர்ந்த "கலாச்சார மார்க்சியர்கள்" மீதும் போர்ப் பிரகடனம் செய்துள்ளனர்.

"வலதுசாரி- தேசியவாத சக்திகள்" ஐரோப்பிய சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ள. ஐரோப்பிய அரசுகள் இவர்களை இனங்கண்டு அடக்க வேண்டும். ஐரோப்பிய சமுதாயம் வர்க்க அடிப்படையில் இரண்டாகப் பிரிவதை எவராலும் தடுக்க முடியாது. பிற்போக்கான தேசியவாதக் கொள்கைகளால் வசீகரிக்கபப்டும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இது சோதனைக் காலம். வெள்ளையின- தேசியவாதிகள் அவர்களை அழித்தொழிக்க கிளம்புவார்கள். அந்த நேரத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களும் இடதுசாரி சக்திகளுடன் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.


நோர்வே தொடர்பான முன்னைய பதிவுகள்:
2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!
நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

5 comments:

Mohamed Faaique said...

தெளிவான ஆராய்விற்கும் பகிர்விற்கும் நன்றி.

naren said...

மற்ற மனிதர்களை வெறுக்கத்தூண்டும் எல்லா விதமான “வெறி”க்களின், முடிவுதான் நோர்வே நாட்டுச் சம்பவங்கள். ஆனால் வரவேற்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்நாட்டின் பெரும்பாண்மையான மக்கள் இந்த மாதிரி வெறிக்களை விரும்பவும்மில்லை--எதிர்க்கிறார்கள்

சீனிவாசன் said...

// பின்லாடனை மனநோயாளியாக சித்தரித்திருந்தால், பொது மக்களும் "அல்கைதா பயங்கரவாதம்" குறித்து விழிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள்.// - சிறப்பான கட்டுரை,தெளிவான பார்வை.

Kannan said...

உங்களுடைய கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், என் போன்ற குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அது எந்த விதத்திலும் பயன் அளிக்கவில்லை. எங்களை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள்? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று "குறிப்பாக" எதுவும் நீர் சொல்லவில்லை. எது செய்ய கூடாது என்பதும் எம் போன்ற சாமானியர்களுக்கு புரியவில்லை. சொல்ல முடியுமா?

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

விரிவான பதிவு. சிறப்பான கட்டுரை.