Thursday, April 28, 2011

மக்கள் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படும்

[ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்]
(பகுதி : மூன்று)


ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட அரசு, அவர்களுடன் ஒத்துழைத்தது. நிபுணர் குழு தயாரித்தளித்த அறிக்கையை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்தது. பகுதி பகுதியாக ஊடகங்களுக்கு கசிய விட்டது. ஒரு வாரத்திற்குப் பின்னர் முழுமையான அறிக்கையை வெளியிட்டது. எல்லாமே ஒரு நாடகமாகத் தெரிகின்றது. போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை எதிர்பார்க்கின்றது. அதற்கப்பால், எந்தத் திட்டமும் அதனிடம் இல்லை. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறிய இலங்கை அரசு, அதனை விசாரிக்க முன்வரப் போவதில்லை.

தமிழ் ஊடகங்களில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாட்டின் போர்க்குற்ற அறிக்கையும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திய அறிக்கையை குப்பைக் கூடையில் போடுமாறு, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு கூறியிருக்கிறார். இஸ்ரேலிய விசுவாசிகளான தமிழ் தேசியவாதிகள் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காததையிட்டு ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால், பாலஸ்தீனர்களும், தமிழர்களும் ஒரே தலைவிதியை பங்கு போடும் சகோதர இனங்கள் என்ற உண்மையை அடிக்கடி மறப்பது தான் துரதிர்ஷ்டமானது. இஸ்ரேலும், இலங்கையும், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை, காலனிய எஜமானின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகின்றன. இலங்கையில் எத்தனை பிரச்சினை வந்தாலும், பிரிட்டிஷ் காரன் கற்றுக் கொடுத்த பாராளுமன்ற ஜனநாயகம் ஒழுங்காக செயற்படுகின்றது. அந்நிய கடனுதவியையும் முகம் கோணாமல் வாங்கிக் கொள்கிறது. தகப்பன் சொல் கேட்கும் சமர்த்துப் பிள்ளையாக நடந்து கொள்கிறது. அப்படியான நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை செய்வதும், பொருளாதாரத் தடை விதிப்பதும் அவர்களுக்கு தேவையற்ற ஒன்று. அதனால் தான் போர்க்குற்ற நிபுணர் குழு அறிக்கையையும், பான் கி மூன் தனது நண்பனான ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்து கருத்துக் கேட்டார்.

யூகோஸ்லேவியா, ஈராக் போன்ற நாடுகளில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தான், ஆயுத விநியோகத் தடை, பொருளாதாரத் தடை எல்லாம் கொண்டு வந்தார்கள். சர்வதேச சமூகம் நினைத்திருந்தால், இலங்கையின் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, தடைகளை போட்டிருப்பார்கள். ஆனால் நடந்ததோ வேறு. சீனா, ரஷ்யா மட்டுமல்ல, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல்,செக், இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஆயுத விநியோகம் செய்தன. ஆயுத விநியோகம் செய்த நாடுகளுக்கு போர்க்குற்றத்தில் பங்கில்லையா? இலங்கையில் செயற்பட்ட ஐ.நா. பிரதிநிதிகள், மனித பேரழிவை குறைவாக மதிப்பிட்டிருந்தனர். உயிரிழப்புகளை குறைத்துக் கூறி கொண்டிருந்தனர். நிபுணர் குழு அறிக்கையே ஐ.நா. வின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளது. ஐ.நா. உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட "வெள்ளைக் கொடி" விவகாரம், எல்லாம் பகிரங்கப் படுத்தப் படுமானால், குற்றவாளிக் கூண்டில் ஐ.நா.வும் நிறுத்தப் படும். ஒருவேளை, ராஜபக்ஷ சகோதரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினால், ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் வண்டவாளங்களை ஊரறியச் செய்ய மாட்டார்களா? ஏற்கனவே மிலோசொவிச், சதாம் ஹுசைன் வழக்கில் முக்காடு போட்டுக் கொண்டு ஒளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

போர் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து வந்துள்ள போர்க்குற்ற நிபுணர் குழு அறிக்கை, IMF பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் நேரம் பார்த்து வந்துள்ளது. இதனால் இந்த அறிக்கையின் நோக்கம் குறித்த சந்தேகம் கிளம்புவது இயல்பானது. "ஜனாதிபதி ராஜபக்ஸ IMF உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்," என்ற மிரட்டலாகவே பார்க்க வேண்டியுள்ளது. 2007 ம் ஆண்டு, இலங்கையில் இருந்த IMF அலுவலகத்தை மூடி விடுமாறு, ராஜபக்ஷ அரசு உத்தரவு போட்டது. IMF அதிகாரிகள், பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகளை அழைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரினார்கள். ஆனால் அழுத்தம் பலிக்காமல் வெளியேறி விட்டார்கள். IMF இட்ட நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருந்தன. IMF கடன்களுக்கான வட்டியும் மிக அதிகம். அவர்கள் சொல்வது போல பட்ஜெட் போட வேண்டும். அரசு நிதித்துறையின் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டும். அவர்கள் சொல்வது போலத் தான் அரசாங்கம் நடத்த வேண்டும். IMF போட்ட நிபந்தனைகளின் தொல்லை தாங்காமல் தான், இலங்கை அரசு மேற்குலக நாடுகளை விட்டு விலகத் தொடங்கியது. சீனா, ஈரான் ஆகிய நாடுகளிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இதைத் தான், "இலங்கை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது." என்று சிலர் எமக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சீனாப் பூச்சாண்டி எல்லாம், எம்மைப் போன்ற அரசியல் அறிவற்ற தற்குறிகளை ஏமாற்ற மட்டுமே பயன்படும். சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். போர்க்குற்ற மிரட்டல் நன்றாகவே வேலை செய்கின்றது. கடந்த வருடம், இலங்கை அரசு மீண்டும் IMF இடம் கடன் வாங்க ஒப்புக் கொண்டது. அவர்கள் வந்தவுடனேயே நாட்டாமை செய்யக் கிளம்பி விட்டார்கள். கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முதலாவது கட்டளை. இன்றைக்கும் இலங்கையில் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் கல்வி இலவசம் என்ற விபரம், வெளியில் அதிகமானோருக்கு தெரியாது. அதிலும், ஆங்கில வழிப் பாடசாலைகள் அரிது என்பதும், மாணவர்கள் தாய்மொழியிலேயே (சிங்களம் அல்லது தமிழ்) கல்வி கற்கின்றனர் என்பதும், IMF க்கு பிடிக்காத விஷயம். சிறிது காலம் பொறுங்கள், ஐயா. IMF காலால் இட்ட பணியை ராஜபக்ஷ தலையால் செய்து முடிப்பார். பணக்காரத் தமிழரின் பிள்ளைகள் மட்டுமே ஆங்கில வழிக் கல்வி கற்கும் காலம் வரும். ஏழைத்தமிழர்கள் ஈழம் கேட்க வலுவான காரணம் ஒன்று கிடைத்து விடும். இப்போதும் தமிழ்ப் பகுதிகளில் காலூன்றி வரும் அரச, தனியார் நிறுவனங்களில் ஆங்கிலம்/சிங்களம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேச மக்கள் தொழில் வாய்ப்பின்றி வருந்துகையில், தெற்கில் இருந்து வந்து வேலை செய்கின்றனர். மேலைத்தேய பொருளாதார நிபுணர்கள் கட்டமைத்த உலகமயமாக்கல் திட்டத்தில் இதெல்லாம் சகஜம், ஐயா.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் உருவான ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை செய்த முதலாவது போர்க்குற்ற விசாரணை ஜெர்மனியில் இடம்பெற்றது. போரில் வெற்றி பெற்ற நேசநாடுகள், தோல்வியடைந்த ஜெர்மனியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்தன. போரில் ஈடுபட்ட நேசநாடுகளின் போர்க்குற்றங்கள் அன்று கவனத்தில் எடுக்கப் படவில்லை. பனிப்போர் காலத்தில், உலக நாடுகள் ஒன்றில் அமெரிக்க முகாமில், அல்லது சோவியத் முகாமில் சேர்ந்திருந்தன. அதனால், நீதி விசாரணையை விட, அவரவர் முகாமை காப்பாற்றிக் கொள்வதே முக்கியமாக கருதப் பட்டது. இன்றைக்கும் பனிப்போர் கால சிந்தனை, பலர் மனதை விட்டு அகலவில்லை. சிலவேளை, தமது சொந்த குறைபாடுகளை மறைப்பதற்காக, அவ்வாறான மாயை உருவாக்கப் படுகின்றது. இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்க்கும் என்பதால், பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் பெறச் சாத்தியமில்லை. இதனை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் தெரிவிக்கிறார். அந்த நாடுகள், இலங்கையைக் காப்பாற்றுவதை விட, மேற்குலக நாடுகளின் வியூகங்களை தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. ஏனெனில், ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக கையை உயர்த்தும் நாடுகள் எல்லாம், தமது நாடுகளிலும் அது போன்ற பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. "உள்நாட்டுக் குழப்பம் இல்லாத, அமைதியான" மேற்குலக நாடுகள் மட்டுமே நல்லவர்கள் போல காட்டிக் கொள்ள இது வழி வகுக்கின்றது.

உலக நாடுகள் அனைத்தும் பங்கெடுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் திட்டம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள், அந்த யோசனையை எதிர்த்து வருகின்றன. பொதுவாக வெற்றி பெற்றவர்களும், வல்லரசுகளும் தண்டனையில் இருந்து தப்பிக் கொள்கின்றனர். இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அதன் அர்த்தம், போர்க்குற்றம் புரிந்தவர்களை தப்பிக்க விட வேண்டும் என்பதா? நிச்சயமாக இல்லை. குற்றம் புரிந்தவர் யாராகவிருப்பினும் தண்டனையில் இருந்து தப்பக் கூடாது. ஆனால், இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய சூழலில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியாது. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச தரப்பு, தனது இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், தவறான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் கூறுகின்றது. மறு பக்கத்தில் தமிழ் தேசியவாதிகள், மிகத் தீவிரமாக சிறிலங்கா அரசை அம்பலப் படுத்திக் கொண்டே, புலிகளின் குற்றங்களை மூடி மறைக்கின்றனர். சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் ஐ.நா. நிபுணர்களின் அறிக்கையை குறை கூறுகின்றனர். இரண்டு தரப்புமே, தாங்கள் கூறுவது போலத் தான் அந்த அறிக்கை எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். தமது தரப்பு நியாயத்தை நிலைநாட்ட பல்வேறு விளக்கங்களை முன்வைக்கின்றனர். "எமது இனத்தை சேர்ந்தவர்கள் எந்தத் தவறையும் செய்யாத நல்லவர்கள். ஆனால் எதிரி இனத்தை சேர்ந்தவர்கள் கொடுமைக்காரர்கள்." என்ற புராதன கால தத்துவமே இன்றைக்கும் கோலோச்சுகின்றது. இலங்கையில் மட்டுமல்ல, யூகோஸ்லேவியா, ருவாண்டா என்று இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாடுகளில் எல்லாம் இது தான் நிலைமை.

உண்மையிலேயே ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் நிறுவப்படுமானால் அது பிரச்சினையை தீர்க்கும் என்று கருதவில்லை. "ஐ.நா. தமிழ் தேசியவாதிகளின் விளக்கத்தை சரி என்று ஏற்றுக் கொள்கின்றது," என்று வைத்துக் கொள்வோம். போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா படையினரையும், பாதுகாப்பு அமைச்சரையும், ஜனாதிபதியையும் விசாரித்து தண்டனை வழங்குகின்றது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினைகளை தோற்றுவிக்கும்? தண்டனை வழங்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு "தேசத்தின் வீர புருஷர்கள்" அந்தஸ்து கிடைத்து விடும். அவர்களின் பெயரை வைத்தே சிங்கள இனவெறி அரசியல் தீவிரமடையும். யார் அதிக இனவாதம் பேசுகின்றனரோ, அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும்.

நிச்சயமாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், "சிங்கள எழுச்சி" கண்டு கலக்கமடையவே செய்வர். சிங்கள மக்கள் மத்தியில், தமது "தேசிய நாயகர்களை" காட்டிக் கொடுத்த, "தமிழ்த் தேசத் துரோகிகள்" மீது வன்மம் அதிகரிக்கும். அது மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. அமெரிக்க தூதரகம் இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் பேசிய பொழுது, அவர்கள் தெரிவித்த கருத்துகளே இவை. (விக்கிலீக்ஸ் கசிய விட்ட கேபிளில் குறிப்பிடப்பட்டது.) "அப்படி எல்லாம் நடக்கும் என்று நம்பவில்லை," என்று புறக்கணிப்பவர்கள், செர்பியா சென்று பார்ப்பது விட்டு வருவது நன்று. அங்கே செர்பிய இனவெறியை பரப்பும் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. போர்க்குற்ற நீதிமன்றம் தண்டனை வழங்கிய மிலோசொவிச், கராசிச் ஆகியோரின் உருவப்படங்களை தங்கிய பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லை. எவ்வளவு தான் மேற்குலக நாடுகளின் ஆதரவு இருந்த போதிலும், பிற கட்சிகளால் மக்களின் மனதை மாற்ற முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிந்தி வந்துள்ள போர்க்குற்ற அறிக்கையானது, இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பழைய ரணங்களை கிளறி விட்டுள்ளது. இழந்த வாழ்க்கையை மீளக் கட்டமைத்துக் கொண்டு, எதிர்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் தம்மை இறந்த காலத்தில் தள்ளுவதாக உணருகின்றனர். தமிழகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் "தமிழ் உணர்வாளர்கள்" இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, அவர்களது பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் தான் கண்டித்துள்ளது. (வழமை போல தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டன.) "சிங்களவர்கள் எல்லோரும் இனவெறியர்கள். சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியுமா?" என்று பழைய பல்லவியைத் தான், அவர்கள் இப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைக்கு வெளியே, சிங்களவனையே கண்ணால் காணாத இடத்தில் இருந்து கொண்டு, அதைக் கூறுவது எளிது. இன முரண்பாடுகள் வளர்வதை தடுத்து நிறுத்துவது, அவசரமாக செய்யப்பட வேண்டிய கடமை. "நீ தான் இனவெறியன்... நீ தான் கெட்டவன்... நீ தான் கொலைகாரன்..." சிறு பிள்ளைகள் போல சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தால், போர்க்குற்றங்களை யார் விசாரிப்பது? குற்றவாளிகள் மன்னிக்கப் பட வேண்டுமா? ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த வழிமுறையை பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமானது. போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், பொது மக்கள் முன்னிலையில் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டார்கள். இதனால் மேலாதிக்கம் செய்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட, தமது ஆட்கள் செய்த குற்றங்களுக்காக வெட்கித் தலை குனிந்தனர். மற்ற சமூகத்தை அரவணைத்துக் கொண்டனர். ஆனால், அங்கெல்லாம் அத்தகைய தீர்வை எட்ட வேண்டிய தேவை ஏகாதிபத்தியத்திற்கு இருந்தது. தென் ஆப்பிரிக்காவில், வெள்ளையினம் மேலாதிக்க சமூகமாக இருந்து பெரும்பாலான போர்க்குற்றங்களை புரிந்தது. குவாத்தமாலாவில் மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள், ஏழை உழைக்கும் வர்க்கத்தை அடக்குவதற்காக போர்க்குற்றம் புரிந்தனர். அந்த சமூகங்களை சேர்ந்தோர் போர்க்குற்றத்தில் தண்டிக்கப் பட்டால், அது ஏகாதிபத்தியத்தின் அத்திவாரத்தை ஆட்டம் காணச் செய்து விடும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில், பல்லின மக்களின் ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கித் தவித்த யூகோஸ்லேவியா உதாரணத்தை பின்பற்றலாம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் செர்பிய பாசிஸ்டுகளும் (Chetnics), குரோவாசிய பாசிஸ்டுகளும் (Ustashe) பிற இனங்களை அடக்கி கொடுங்கோன்மை புரிந்தனர். அப்போது நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் எல்லாவற்றிற்கும் அவர்கள் காரணமாக இருந்தனர். யூகோஸ்லேவியாவின் அனைத்து தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், இனப்படுகொலையாளர்களும், போர்க்குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். போர்க்குற்றவாளிகள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப் பட்டது. யூகோஸ்லேவியா சோஷலிச நாடாக திகழ்ந்த நாற்பதாண்டு காலத்தில் இனப்பிரச்சினை எந்த வடிவத்திலும் தலை தூக்கவில்லை. இலங்கையை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் யூகோஸ்லேவியாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது. இனக்குரோதத்தை வளர்க்கும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் மக்களுக்கு மீட்சியைத் தரப்போவதில்லை. உழைக்கும் மக்களின் புரட்சியும், மக்கள் நீதிமன்றங்களுமே போர்க்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்க முடியும்.

(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
2.
சிறிலங்கா அரசவைக் கோமாளி, "சிங்கள வைகோ"!
1.
ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

3 comments:

Anand said...

Very good article.

சிவக்குமார் said...

இத்தொடர் மிகச் சிறப்பாக இருந்தது. உண்மை நிலையை மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.

//பாலஸ்தீனர்களும், தமிழர்களும் ஒரே தலைவிதியை பங்கு போடும் சகோதர இனங்கள் என்ற உண்மையை அடிக்கடி மறப்பது தான் துரதிர்ஷ்டமானது.//
சகோதர இனங்கள் என்ற உண்மையை அவர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லையே. பிறகுதானே மறப்பதற்கு. அது அவர்களுக்கு வசதியானது என்பதே சரி.
//சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் ஐ.நா. நிபுணர்களின் அறிக்கையை குறை கூறுகின்றனர். இரண்டு தரப்புமே, தாங்கள் கூறுவது போலத் தான் அந்த அறிக்கை எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.//
இது 200% உண்மை. இது மேற்குலகம், ஐநா, மற்றும் சீனா, ரஷ்யா, இந்தியா இடையேயான சித்து விளையாட்டைப் போன்றே தோன்றுகிறது. காலம்கடந்து வெளியான அறிக்கையில் கிட்டதட்ட புலிகளின் போர்க்குற்றத்தையும், அரசின் போர்க்குற்றத்தையும் கிடத்தட்ட ஒரே அளவாகக் காட்டுவது போலுள்ளது. சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட பல கொடுங்குற்றங்களை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

saarvaakan said...

//சிங்கள, தமிழ் மக்கள் யூகோஸ்லேவியாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது. இனக்குரோதத்தை வளர்க்கும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் மக்களுக்கு மீட்சியைத் தரப்போவதில்லை. உழைக்கும் மக்களின் புரட்சியும், மக்கள் நீதிமன்றங்களுமே போர்க்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்க முடியும்.//

நல்ல கட்டுரை,நல்ல தீர்வுதான் ஆனால் இத்தீர்வு இராஜபக்சே& கோ அரசாளும் வரை நட்க்கப் போவதில்லை.

காலமே பதில் சொல்லும்!!!!