Sunday, February 20, 2011

மீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்கை

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். அத்தகைய சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியப் பெரும் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து குறிப்பாக வடபுலத்து மீன் வளங்களை வாரி அள்ளிச் செல்வதை எவ்வகையிலும் அனுமதிக்கவும் முடியாது. மேற்படி சம்பவங்களால் இரு நாடுகளினதும் சாதாரண உழைப்பாளர்களான மீனவர்களே கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தொடரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் உரிய பேச்சு வார்த்தையை எவ்வித உள்நோக்கங்கள் இன்றியும் முன்னெடுத்து தீர்வு காண முன்வரல் வேண்டும் என எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.

இவ்வாறு இலங்கை இந்திய மீனவர்களிடையே உச்சமடைந்துள்ள பிரச்சினை பற்றி புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கொல்லப்படுதல், தாக்குதல், கைது என்பனவற்றுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறார்கள். அதேவேளை வடபுலத்து மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை நீண்ட காலமாகச் செய்ய முடியாத தடை, கெடுபிடி நிலைகளில் இருந்து வந்திருக்கிறார்கள். அவ்வப்போது உயிர் இழப்புகள், காணாமல் போதல், கைதுகளுக்கும் ஆளாகி வந்துள்ளனர். இவை அனைத்திற்கும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தம் முக்கிய காரணமாகும். ஆனால் இப்போது யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட இரு நாட்டு மீனவர்களும் முன்னரைப் போன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே இருந்து வருகிறார்கள்.

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அண்மைய மாதங்களில் இலங்கைக் கடல் பரப்பில் இடம்பெற்றன. தாக்குதல் கைதுகளும் இடம் பெற்றுள்ளன. அதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி வந்து றோலர் எனப்படும் பெரு வள்ளங்களைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களைப் பிடித்துச் செல்கிறனர். இதனால் வடபுலத்து மீனவர்கள் பெரும் பாதிப்புக்களைப் பெற்று வருவதுடன், இவ் ரோலர் பெருவள்ள மீன் பிடிப்பால் மீன் வளங்கள் சேதமாக்கப்பட்டு அழிவுகளுக்கும் உள்ளாகி வருவதாக வடபகுதி மீனவர்கள் அடிக்கடி குற்றம் சுமத்தியும் வருகின்றனர். இத்தகைய பெரு வள்ள மீன் பிடியில் தமிழ் நாட்டின் பெரு முதலாளிகளே முன் நிற்கிறார்கள். ஆனால் கடும் பாதிப்படைந்து வருவது தொழிலாளர்களான சாதாரண மீனவர்களேயாகும். எனவே கடல் எல்லையைத் தாண்டி வந்து வடபுலத்து கடற்பரப்பில் மீன் பிடிக்கப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பது வற்புறுத்தலுக்குரியதாகும்.

ஆதலால் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களின் துன்பத்தை தத்தமது அரசியல் தேவைக்கு ஒவ்வொரு தமிழக வாக்கு வங்கிக் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன. இன்னும் சிலர் தமிழ் இன உணர்வின் பெயரால் தமிழ்க் குறுந்தேசிய வெறியைக் கிளப்பி வருகின்றனர். அதேவேளை இந்திய மத்திய அரசு தனது பிராந்திய நலனுக்கும், இலங்கை அரசு தனது பேரினவாத நிலைப்பாட்டிற்கும் மீனவர் பிரச்சினையப் பயன்படுத்த முன் நிற்கின்றன. இதன் மூலம் இரு நாடுகளினதும் உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களே பல பக்கப் பாதிப்படைந்து வருகிறார்கள் என்பதே காணப்படும் உண்மையாகும். அத்தகைய பாதிப்பை தடுத்து நிறுத்தக் கூடியவாறு இலங்கை- இந்திய அரசாங்கங்கள் உடனடியான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். இந்திய- தமிழ் நாட்டினதும் இலங்கை- வடபுலத்தினதும் மீனவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.

சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்.

(புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி)

No comments: