Monday, April 12, 2010

வேலை பறிபோகிறதா? முதலாளியை கடத்துங்கள்!

தொழிலகத்தை மூட நினைக்கும் முதலாளியைக் கடத்தி பணயக் கைதியாக வைத்திருப்பது, அண்மைக் காலமாக பிரான்ஸ் நாட்டின் புதிய நாகரீகமாகி விட்டது. "உலக பொருளாதார நெருக்கடி காரணமாக திவாலாகிறது," என்று காரணம் கூறி பல தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு நடுத்தெருவுக்கு வருகின்றனர். அவ்வாறு மூடப்படும் நிறுவனங்கள், தொழிலாளருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு போதுமான நஷ்டஈட்டுத் தொகை தர வேண்டும். ஆனால் நிர்வாகம் அதைக் கூட தராமல் ஓடி விட நினைக்கின்றது. வேலை பறிபோனதால் சீற்றமடைந்த தொழிலாளர்கள், தமக்கான நஷ்டஈட்டை போராடித் தான் பெற வேண்டியுள்ளது.

பிரான்சில் திவாலான சில நிறுவனங்களின் தொழிலாளர்கள், முதலாளிகளை கடத்தி தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றனர். பிரான்சின் முன்னணி நிறுவனங்களான Molex, Sony, 3M, Hewlett-Packard தொழிலகங்களில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பல நாட்களாக பணயக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அடுத்து வரும் வேலையில்லாத வருடத்திற்கு கொடுப்பனவு வழங்குவதாக உறுதி அளித்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். ஜெர்மனியை சேர்ந்த வளர்ந்து வரும் இடதுசாரிக் கட்சித் தலைவர் Oskar Lafontaine, ஜேர்மனிய தொழிலாளர்கள் பிரெஞ்சுத் தொழிலாளரின் உதாரணத்தை பின்பற்றுமாறு கூறியிருந்தார். (WDR வானொலியில் நேர்காணல்) "தொழிலாளர் பிரச்சினைக்கு அரசு தீர்வொன்றைக் காணா விட்டால், அது தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்." என்று அவர் மேலும் எச்சரித்தார். 'Kidnap the boss,' says German left-wing politician

கடந்த ஏப்ரல் 9 ம் திகதி, ஏதென்ஸ் நகரில் உள்ள கூரியர் நிறுவனமான INTERATTICA வின் தொழிலாளர்கள் தமது பிரெஞ்சு தோழர்களின் உதாரணத்தை பின்பற்றி, தமது உரிமைகளை பெற்றுக் கொண்டனர். அன்று தொழிலாளர்களை கூட்டிய நிர்வாகம், நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், வேலை செய்து கொண்டிருந்த 205 தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விட்டதாக அறிவித்தது. உடனடியாக தொழிலாளர்கள் கம்பனி கட்டிடங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். தொழிலகத்தின் வெளியேறும் வழிகள் யாவும் அடைக்கப்பட்டன. தலைமை நிர்வாக அதிகாரிகள் யாவரும் கைதிகளாக அலுவலகத்தினுள் அடைத்து வைக்கப்பட்டனர்.

சிறிய போலிஸ் படை ஒன்று வருவிக்கப் பட்ட போதிலும், அவர்கள் பின்னர் பின்வாங்கி விட்டனர். இரவு ஏழு மணியளவில், தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்க நிர்வாகம் சம்மதித்தது. ஒரு திவாலான கம்பெனி, குறைந்த நேரத்திற்குள் மில்லியன் யூரோ நஷ்டஈட்டுக்கான நிதியை பெற்றுக் கொள்ள முடிந்தது ஆச்சரியமே. நம்புங்கள், அந்த அதிசயம் நடந்தது. அடுத்த மாதம் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பட்ட அளவு தொகைப் பணம் நஷ்டஈடாக கிடைக்கும், என்று நிர்வாகம் எழுத்து மூலம் அறிவித்தது. அனைவருக்கும் ஈட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரையில், தொழிலாளர்கள் தொழிலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in