Tuesday, January 26, 2010

ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்

("ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?" - கட்டுரையின் இரண்டாம் பகுதி)

பேரழிவைக் கொண்டு வந்த கொரிய யுத்தத்தை தொடர்ந்து உலகம், அமெரிக்க சார்பு, சோவியத் சார்பு என இரு துருவங்களாக பிரிந்தது. இரு மேன்நிலை வல்லரசுகளும் தமது சார்பான நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தனர். இதனால் பல நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை. இருப்பினும் ஐ.நா. பெயரில் போர் முனைப்புகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உலகம் தப்பியது. சோவியத் யூனியனில் கோர்பசேவ் ஜனாதிபதியாகிய பின்னரே, இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்தது.

1990 ம் ஆண்டு, எண்ணெய் வளம் மிக்க, ஆனால் மேன்நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு கட்டுப்படாத சதாமின் ஈராக், குவைத் மீது படையெடுத்தது. குவைத் எண்ணெய்க் கிணறுகள் யாவும் பிரிட்டிஷ் கம்பனிகள் வசம் இருந்தன. ஈராக்கின் ஆக்கிரமிப்பால் அவற்றை இழந்த பிரித்தானியா ஐ.நா.சபையில் முறையிட்டது. இதே நேரம் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு போட்டியாக ஈராக் வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஐ.நா.சபையில் பெரும்பான்மை ஆதரவுடன், பன்னாட்டுப் படை குவைத்தை மீட்க சென்றது. குவைத் மீட்பதற்காக நடந்த வளைகுடாப் போரில், "பேட்ரியட்" போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும், பேட்ரியட் ஆயுதம் தயாரித்த கம்பெனி கொள்ளை லாபமீட்டியது.

ஈராக்கும், குவைத்தும் ஒரே நாடாகவிருந்ததும், பிற்காலத்தில் ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டதும் உலகம் வசதியாக மறந்து விட்ட வரலாறு. வளைகுடாப் போரின் பின்னர், முன்பு பிரிட்டன் வசம் இருந்த குவைத் எண்ணைக் கிணறுகள் யாவும் அமெரிக்க வசமாகின. அயல் நாட்டை ஆக்கிரமித்த குற்றத்தை ஈராக் மட்டும் செய்யவில்லை. இஸ்ரேல் சிரியா,லெபனானின் பகுதிகளை ஆக்கிரமித்தது. ஸ்பானிய காலனியான மேற்கு சஹாராவை ஆக்கிரமித்த மொரோக்கோ, அதனை தனது நாட்டுடன் இணைத்தது. இவற்றின் மீதான ஐ.நா. தீர்மானங்களுக்கு யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை.

ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியத்திற்கு பலியான இன்னொரு நாடு சோமாலியா. 1993 ல் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு, பல ஆயுதக் குழுக்கள் அதிகாரத்திற்கு போட்டியிட வழிவகுத்தது. நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டவென, அமெரிக்கா தலைமையில் ஐ.நா. படை அனுப்பப்பட்டது. எதிர்பாராவிதமாக (அல்லது தவிர்க்கவியலாது) ஐ.நா. சமாதானப் படைக்கும், முதன்மை ஆயுதக் குழு ஒன்றுக்குமிடையில் சண்டை மூண்டது. நடுநிலை வகிக்க சென்ற ஐ.நா.படை தானே எதிரியாக களத்தில் இறங்கியது. யுத்தம் என்று வந்து விட்டால், மனித உரிமைகளை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வேலியே பயிரை மேய்வது போல, ஐ.நா. இராணுவம் மனித உரிமைகளை மீறியது.


அப்பாவி சோமாலிய மக்கள், வெள்ளையின இராணுவவீரர்களினால் இழிவுபடுத்தப் பட்டனர். ஒரு சம்பவத்தில் பெல்ஜிய நிற வெறிப் படையினர், ஒரு சோமாலிய சிறுவனை கைது செய்தனர். அவனை சித்திரவதை செய்து, எரியும் நெருப்பின் மீது இறைச்சி போல வாட்டி வருத்தினார்கள். அந்த சம்வத்தை இன்னொரு படைவீரர் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி விட்டார். ஐ.நா. படையினரின் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆதாரமான புகைப்படங்கள், ஐரோப்பிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. நீதிமன்றத்தில் முறையிட சிறந்த ஆதாரம் கிடைத்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கருதினார்கள். சம்பந்தப்பட்ட படைவீரர்கள் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். படைவீரர்கள் மீதான் குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப் பட்ட போதிலும், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து விட்டது!

அண்மைக்காலங்களில் நடந்த போர்களில் பொஸ்னியா யுத்தம் முக்கியமானது. அதிலும் "அமைதிப் பூங்காவான" ஐரோப்பாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியர்கள் உன்னத நாகரீகம் கொண்ட மானிடர்கள் என்ற மாயை அகன்றது. கேள்வி கேட்க யாருமின்றி இனப்படுகொலைகள் தொடர்ந்ததால், ஐ.நா. அமைதிப்படை அனுப்பப்பட்டது.
போஸ்னியாவின் பல பாகங்களிலும் ஐ.நா. பாதுகாப்பு வலையங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று "சிரபெனிசா". அங்கே "டச்பட்" என்ற பெயரில் நெதர்லாந்து இராணுவம் பாதுகாப்பு வழங்கியது. சிரபெனிசாவில் வாழ்ந்த பொஸ்னிய முஸ்லிம்கள், தமக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைத்து விட்டதாக நம்பினார்கள். சில நாட்களில் ஐ.நா. படையின் சுயரூபம் அம்பலமானது. சிரபெனிசா நகரை சுற்றி வளைத்த செர்பிய படைகள், மிக இலகுவாக பாதுகாப்பு வலையத்தை கைப்பற்றினார்கள். அகதிகளின் பாதுகாப்பிற்கென நிறுத்தி வைக்கப்பட்ட நெதர்லாந்து இராணுவம் தலை தெறிக்க ஓடியது. தமக்கு முன்னால் ஓடிய, (முஸ்லிம்) அகதிகள் மீது டாங்கிகளை ஏற்றி நசுக்கிக் கொண்டே சென்றார்கள். அந்தக் காட்சிகள் டச்பட் சிப்பாய் ஒருவனால் படமாக்கப்பட்டன. ஆனால் மேலதிகாரி ஒருவரின் தலையீட்டால் அழிக்கப்பட்டன.

இதன் பின்னர், டச்பட் உயர் அதிகாரிகள், செர்பிய இராணுவ தளபதிகளுடன் கூடிக்குலாவிய படங்கள் அம்பலமாகின. சிரபெனிசாவில் நடந்த அட்டூழியம் பற்றிய விபரங்கள் நெதர்லாந்து அரசுக்கு தெரிந்திருந்தும் மறைத்தது வருகின்றது. தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவது போல, ஆயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம் அகதிகளுக்கு நெதர்லாந்தில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இன்னொரு பக்கத்தில், நடைபெற்ற சம்பவங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செர்பிய பேரினவாதத்திற்கு உதவியது. போஸ்னியாவில் முஸ்லிம்களின் விகிதாசாரம் வெகுவாகக் குறைந்தது. இதனால் ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு "இஸ்லாமியக் குடியரசு" தோன்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

ஐ.நா.சபையின் இயலாமைக்கு காரணம் என்ன? ஐ.நா. சபையானது தனது செலவினங்களுக்கும், நிதி திரட்டலுக்கும், பணக்கார நாடுகளின் தயவில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. நிதி வழங்கும் மேற்குலக நாடுகள், நிதியை தமது சொந்த நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். ஐ.நா. மன்றத்தின் பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் மேற்குலக பிரதிநிதிகளாக இருப்பர். அவர்கள் தத்தமது நாடுகளின் வெளிவிவகார கொள்கை எதுவோ, அதையே ஐ.நா.வின் கொள்கையாக்குகின்றனர்.

ஐ.நா. வின் ஈழப் பிரச்சினை சார்ந்த கொள்கை வகுப்பும், மேற்குலக நலன் சார்ந்திருப்பது அதிசயமல்ல. மூன்றாமுலக தேசிய அரசுகள் அனைத்தும் முன்னை நாள் காலனிய எஜமானர்களால் உருவானவை. உள்நாட்டு மக்களின் விருப்பங்களை கேட்காமலே, காலனியாதிக்க நாடுகள் தாம் விரும்பியபடி எல்லைகளை வரையறுத்தன. புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகள் தோன்றும் போது, அங்கே கிளர்ச்சிகளும் தோன்றும். உள்நாட்டு யுத்தம், கிளர்ச்சி, சதிப்புரட்சி, இவ்வாறு ஆட்சியை மாற்ற எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா? முதலில் ஐ.நா. சபை ஈழம் என்ற தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றதா? பிரிட்டிஷார் வரையறுத்த இலங்கை என்ற தேசத்தின் எல்லையை மாற்றுவதற்கு ஐ.நா.சபை முன்வராது. கிழக்கு தீமோர் கூட முன்னாள் போர்த்துகேய காலனி என்பதாலேயே ஐ.நா. தலையிட்டது. மேற்குலகிற்கு சதாம் மீது அளவிட முடியாத ஆத்திரம் இருந்த போதிலும், ஈராக் எல்லையை மறுவரைபுக்கு உட்படுத்த முன்வரவில்லை. வட-ஈராக்கில் வாழும் குர்தியருக்கு நிபந்தனையற்ற ஆதரவு காட்டிய போதிலும், குர்திஸ்தான் என்ற தனியரசுக்கு தயாராக இல்லை.

இலங்கை சுதந்திரமடைந்து, ஐந்து வருடங்களுக்கு பின்னரே, அதற்கு ஐ.நா. அவையில் உறுப்புரிமை கிடைத்தது. அதற்கு காரணம், "இலங்கை ஒரு மேற்குலக சார்பு நாடு" என்ற காரணத்தால் சோவியத் யூனியன் எதிர்த்து வந்தது. இலங்கையில் தற்போதும் பிரிட்டன் எழுதி வைத்துப் போன சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பொருளாதாரத்தை பொறுத்தவரை மேற்குலகில் இருந்து வரும் கடன்களை இலங்கை அரசு மறுக்கவில்லை. தேசியமயமாக்கல் காலத்திலும் அந்நிய நாட்டு கடன்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அதை வைத்துக் கொண்டே திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு பேரம் பேசினார்கள். இலங்கை அரசு மேற்குலகம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் வரையில், அங்கே ஐ.நா. தலையீடு ஏற்படப் போவதில்லை. ஐ.நா. தலையிட்டு அமைதிப்படை அனுப்பிய நாடுகளைப் பட்டியலிட்டால், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் மேற்குலக பொருளாதார நலன்கள் தெளிவாகும்.

(முற்றும்)

கட்டுரையின் முதலாவது பகுதியை வாசிக்க:
ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?


3 comments:

Hai said...

இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் இன்னும் மீதமிருக்கும் சட்டங்களின் எண்ணிக்கை மிக அதிகம் அவை அவர்களே ஆட்சியில் இருந்திருந்தாலும் கூட மாற்றியிருக்கக் கூடும்.இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமே முந்தைய பிரித்தானிய அரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதவும் இடமிருக்கிறது.

அது மட்டுமல்லாது இலங்கையின் சிறுபான்மையினர் முழுவதும் வெறும் தமிழ் மக்களாய் இல்லாமல் கூடவே முழுமையான முசுலீம் அடையாளம் கொண்டிருந்திருந்தார்களேயானால் அவர்களது போராட்டத்தின் வீச்சு முசுலீம் உலகம் முழுதும் பரவக்கூடும் அவர்களுக்கு முசுலீம் உலகத்தின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அவர்களது போராட்டத்தின் வீரியமும் அதன் தாக்கங்களும் அதிகரிக்கும் என்று அஞ்சிக்கூட அதன் காரணமாய் இலங்கையைப் பிரிப்பது குறித்து இன்னும் கொஞ்சம் அதிகம் மேற்கு நாடுகள் சிந்திக்க வாய்ப்பிருந்திக்கக்கூடும். புலிகளின் போராட்டம் என்பது அதிகபட்சம் பாதிக்கக்கொடியது இந்தியா வரை என்பதும் அதன் காரணமாய் ஏற்படும் விளைவுகள் மேற்குலக நாடுகளுக்கு ஒன்றும் பேராபத்தாய் இல்லை என்பதுவும் அவர்கள் இதைப் பற்றி தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளத் தேவையில்லாததாகிவிட்டிருந்தது . மேலும் ஒருவேளை இலங்கை முழுவதுமாய் இந்தியாவின் ஆதரவுத்தலமாகியிருக்கும் பட்சத்தில் சீனாவின் அடியாளாய் மாற புலிகள் தேவைப் பட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் இந்த ஆடுபுலி ஆட்டம் தொடர்ந்திருக்கும்.ஒருவேளை புலிகள் வேறு நபர்களுக்கு கைப்பாவைகளாய் ஆகாது போனதும் அவர்களின் தோல்விக்கு ஒரு காரணமாய் இருந்திருக்கக்கூடும்.

ஜோதிஜி said...

தொடர்ந்து உங்கள் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் வாசகன், வாழ்த்துகள்.

True Islamian said...

What a nice presentation of Muslim cause in the cover of Social view.?

You have a full right to express your anger, view and problems.. For that why should you be under cover?

Come on man.. Be a true Muslim.. what we sow so we reap everywhere in the world.

Sofar we have not been wiped out from this earth is the grace of fellow humans .. otherwise the atrocities which we did / do for fellow humans will lead to wipe out of Islamists from the face of the earth.