Sunday, January 10, 2010

இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்

நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினார். வகுப்பில் இருந்த பல தேசங்களை பிரதிநித்துவப் படுத்தியவர்கள் தத்தமது நாடுகளில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர். "எமது நாட்டில் வழக்கமாக பெண்கள் வெளியே வேலைக்குப் போவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமே செய்வார்கள். அது எமது கலாச்சாரம்." என்றனர். அதனை மறுதலித்த நான், "படித்த பெண்கள் வேலைக்குப் போவதும், ஏழைக் குடும்பப் பெண்கள் கூலி வேலைக்குப் போவதும், எமது நாடுகளில் வழக்கம்." என்றேன். வகுப்பில் இருந்த தமிழ் பெண்கள், இதனை ஏற்க மறுத்து வாதிட்டனர். யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம், வகுப்பில் இருந்தவர்கள் முகங்களில் காணப்பட்டது. "தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பை" அன்னியருக்கு பறைசாற்ற விடாமல் குறுக்கீடு செய்த கோபம், தமிழ்ப் பெண்களின் குரலில் தெரித்தது. அன்று என்னோடு வாதம் செய்த அதே பெண்கள், பின்னர் வேலைக்கு சென்று வந்ததையும் கண்டேன். கணவனுடன் சேர்ந்து மேலதிகமாக சில நூறு யூரோக்களை சேகரிக்கும் கடமையுணர்வு, கலாச்சாரத்திற்கு களங்கமாக அவர்களுக்கு தெரியவில்லை.

கனடாவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் யாழ்-வேளாள மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரில் பேணிய பழமைவாத கலாச்சாரத்தை உலகம் முழுக்க காவித் திரிந்தவர்கள். அதனால் தான் ஆண்டாண்டு காலம் உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தமதூர் வயல்களில் கூலியாட்களாக ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் பெண்களைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. அவர்களது நடுத்தர வர்க்கப் பின்னணி, உழைக்கும் வர்க்க பெண்களை உதாசீனம் செய்ய வைக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தெற்காசியாவிலேயே இது தனித்துவமானது. "ஆசியாக் கண்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதலாவது நாடு." "உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு." இலங்கைக்கு கிடைத்த இது போன்ற பெருமைகளால் கூட, பெண்களின் நிலை அரசியல் அரங்கில் மாறி விடவில்லை. தங்கள் சக்தி என்னவென்று அறியாத சாதாரண உழைக்கும் வர்க்க பெண்கள். தேசத்தின் பொருளாதாரத்தில் தமது பங்கு என்னவென புரிந்து கொள்ளுமளவு படித்தவர்களுமல்ல. இருப்பினும் இலவச கல்வியினால் நன்மையடைந்த பெண் பிரஜைகளை அந்நிய நிறுவனங்கள் கண்டு கொண்டன. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, "கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையம்" இலங்கைப் பெண்களின் உழைப்பை, மலிவு விலை ஆடைகளாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.

கிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பழமைவாத கட்டுக்களை உடைப்பதற்கு சுதந்திர வர்த்தக வலையம் உதவியது. விவசாயத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகவே கிடைத்ததால், பலர் நகரத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கொழும்பு மாநகரத்திற்கு அருகில், விமான நிலைய ஓரமாக கட்டப்பட்ட தொழிற்சாலைகள், பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்தின. ஏன் பெண் தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு சேர்க்கிறார்கள்? "பெண்கள் மிக நேர்த்தியாக வேலை செய்வார்கள்." என்கின்றனர் முதலாளிகள். ஆனால் குறைந்த கூலி வழங்குவதற்காகவும், மிரட்டி வேலை வாங்குவதற்கும் பெண் தொழிலாளிகளே வசதியானவர்கள். மேலதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை.

கிராமங்களில் விவசாயக் கூலியாக வேலை செய்வதை விட, சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் அதிகம் தான். இருப்பினும் அது கொழும்பு மாநகரில் கொடுக்கப்படும் சராசரி சம்பளத்தை விடக் குறைவு. தினசரி 12 மணி நேரம் கடின வேலை செய்தாலும், மாதச் சம்பளம் நூறு டாலர்களும் இல்லை. வேலை நேரங்களில் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடைவேளை விடாமல் சுரண்டும் தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளவோ, வேலை நிறுத்தம் செய்யவோ அனுமதிப்பதில்லை. இருப்பினும் கடுமையான அடக்குமுறை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள் தானாகவே வெடிக்கின்றன.

எத்தனை கஷ்டம் இருந்தாலும், சுதந்திர வர்த்தக வலையப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் நின்று பிடிக்கின்றனர். ஒரே கம்பனியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஒருவருக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பதே அதற்குக் காரணம். வாழ்க்கை நரகமாக மாறிவிட்டாலும், பலருக்கு ஊர் திரும்ப விருப்பமில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தமது ஊரில் சொல்வதில். அப்படி சொன்னால், எந்தவொரு பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சம் காரணம். சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு பெண் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியாது. (சிங்கள சமூகம் கூட விதிவிலக்கல்ல) இதனால் கிராமங்களில் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெண்களுக்கு, சுதந்திர வர்த்தக வலய வேலைவாய்ப்பு, வேண்டிய சுதந்திரம் வழங்குகின்றது. ஒரு தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது போக, மிகுதியை உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்கும் செலவிட முடிகின்றது.

ஒரு காலத்தில், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த பெருந்தோட்டப் பயிர்செய்கை பிற்காலத்தில் நலிவடைந்தது. முதலில் ரப்பர், பின்னர் தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுற்றது. இதற்கிடையே 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த யு.ஏன்.பி. தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை மும்முரமாக அமுல்படுத்தியது. உலகவங்கி, ஐ.எம்.எப். என்பன அவர்களுக்கு பின்னால் நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றியவை தான் சுதந்திர வர்த்தக வலையங்கள். மத்திய கிழக்குக்கு பணிப்பெண் ஏற்றுமதியும், மேற்படி பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறு தான். இது பற்றி பின்னர் பார்ப்போம்.

இன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி இலங்கையின் முக்கிய வருமானங்களில் ஒன்று. பணக்கார நாடுகில் மலிவுவிலையில் விற்கப்படும் உடுப்புகள், சுதந்திர வர்த்தக வலைய பெண்களின் உழைப்பால் உருவானவை. பருத்தி போன்ற மூலப் பொருட்கள் பிற நாடுகளில் இருந்து தருவிக்கப் பட்டாலும், அவற்றை முழு ஆடைகளாக தைத்து அனுப்புவது இலங்கைப் பெண்கள் தான். இதற்குத் தான் ஐரோப்பிய நாடுகள் GPS Plus சலுகைத் திட்டத்தை கொண்டுவந்தன. 2005 ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப் பட்ட சலுகைத் திட்டம், ஆசியாவில் இலங்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அனேகமாக சுனாமிக்கு பின்னரான ஐரோப்பிய உதவியின் ஓர் அங்கமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. தற்போது மனித உரிமைக் குற்றச்சாட்டில் GPS சலுகை மீளப் பெறப்படப் போவதாக கூறப்படுகின்றது. இதனால் லட்சக்கணக்கான பெண் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

GPS சலுகையை நம்பி சுதந்திர வர்த்தக வலையங்கள் திறக்கப்படவில்லை. சலுகையினால் சேமிக்கப்படும் பணம், அபிவிருத்தியில் உள்ள சில தடைகளை அகற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய நாடுகளில் எதையாவது இறக்குமதி செய்ய விரும்புவோர் அதிக வரி செலுத்த வேண்டும். அத்தகைய வரியில் வழங்கப்பட்ட சலுகை சுதந்திர வர்த்தக வலைய முதலாளிகளுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது. அல்லது ஐரோப்பிய சுப்பர் மார்க்கட்களில் மலிவு விலை உடைகளாக விற்கப்பட்டன. தற்போது வரிச் சலுகையை இரத்து செய்வதற்கு, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை பின்வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் GPS வரிச்சலுகையை இரத்து செய்யப் போவதாக தடாலடியாக அறிவித்த அதே கணம், கிழக்கிலங்கையில் ஒரு பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதியில் கட்டப்பட்ட அந்தப் பாடசாலையை, அவர்களின் பிரதிநிதி ஜனாதிபதி மகிந்தவுடன் சேர்ந்து திறந்து வைத்தார். அதைவிட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்க உள்ளது.

சுதந்திர வர்த்தக வலைய வேலை பறி போனால், வெளிநாடு சென்று உழைப்பது பற்றி அந்தப் பெண்கள் சிந்திக்கிறார்கள். வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் பனிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் பலர் முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள். உண்மையில், தேயிலை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி வருமானத்திற்கு சமமாக, சுதந்திர வர்த்தக வலயங்களிலும், வெளிநாடுகளிலும் பணி புரியும் பெண்கள் ஈட்டித் தருகின்றனர். பிலிப்பைன்சுடன் போட்டி போட்டுக் கொண்டு, இலங்கை வீட்டுப் பணிப் பெண்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றது. அவர்கள் மாதாமாதம் அனுப்பிவைக்கும் அந்நிய செலாவணி, இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கின்றது.

வெளிநாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் குடும்பங்கள் இலங்கையில் ஏராளம். தமது பிள்ளைகளை பராமரித்து, சிறந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். குடும்பத்தின் செலவை பொறுப்பு எடுப்பதோடு மட்டும் நில்லாது, நிலம் வாங்கி, சொந்தமாக கல் வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இலங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்களே அனேகமாக வெளிநாடு செல்கின்றனர். எனது சக்திக்குட்பட்ட ஆய்வின் படி, கொழும்பு போன்ற முன்னேறிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவு பணிப்பெண்களே செல்கின்றனர். அதற்கு மாறாக, குருநாகல், அம்பாந்தோட்டை போன்ற அபிவிருத்தி குறைந்த மாவட்ட மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

கணிசமான தமிழ், முஸ்லிம் பெண்களும் பணிப்பெண்களாக செல்கின்றனர். இவர்களும் பெரும்பாலும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் தொழில் புரியும் பணிப்பெண்களில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை காண்பதரிது. அதற்கு மாறாக, வவுனியா, மட்டக்களப்பில் இருந்து பெருந்தொகை தமிழ், முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். யாழ் குடாநாட்டோடு ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வறிய மக்கள் அதிகம். சுதந்திர வர்த்தக வலையத்திலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெண்கள் பலர் வேலை செய்வது இங்கே குறிப்பிடத் தக்கது.

மலையகத்தை சேர்ந்த தமிழ் பெண்களும், வெளிநாடு சென்று பணிப் பெண்களாகவோ, அல்லது உள்நாட்டில் சுதந்திர வர்த்தக வலையத்திலோ வேலை செய்கின்றனர். ஆனால் அந்த துறைகளில் மலையகத் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலங்கையில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர் வர்க்கம் மத்திய மலை நாட்டில் உள்ளது. முதன்மையான ஏற்றுமதியான தேயிலை, இன்றைக்கும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றது. "தேயிலைத் தமிழர்கள்" என்று அழைக்கப்படும், பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்வு மலையகத்தின் உள்ளேயே முடங்கி விடுகின்றது. பிரிட்டிஷ் காலத்தில் கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள், இன்றைக்கும் தேயிலைக் கம்பனிகளின் தயவிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெருந்தோட்ட தமிழர்களின் குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப பாடசாலைகள் என்று எல்லாமே சம்பந்தப்பட்ட கம்பனியின் பொறுப்பில் உள்ளன.

தேயிலத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் எல்லோருமே பெண்கள் தான். ஆண்கள் தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பதால் குறைந்த கூலி கொடுத்து, (ஒரு நாளைக்கு 5 டாலர்) சுரண்ட முடிகிறது. அனேகமாக ஒரு மலைநாட்டுத் தமிழ்ப் பெண், தனது 15 வது வயதிலேயே தேயிலைக் கொழுந்து பறிக்க கிளம்பி விடுவாள். பெருந்தோட்டத் தமிழர்கள் ஆரம்பப் பாடசாலைக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடருவதை, முதலாளிகளும் விரும்புவதில்லை. தொழிலாளரின் குடியிருப்புகள் "லயன்கள்" என அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வீடுகளாக உள்ளன. பிரிட்டிஷ் காலனிய சின்னங்களான லயன்கள் இன்றும் 19 ம் நூற்றாண்டிலேயே உள்ளன. நவீன அடிமைகளின் தடுப்பு முகாம்களான லயன்களில் இருந்து வெளியூர் செல்லுமளவிற்கு அவர்களிடம் வசதியும் இல்லை, தொடர்புகளும் கிடையாது. மலையகப் பெண்கள் தோட்டங்களை விட்டு வெளியேறினாலும், பெரு நகரங்களில் கூலி வேலை மட்டுமே செய்ய முடியும். கொழும்பு நகரில் பணக்கார வீடுகளில், வேலைக்காரிகளாக பல மலையகச் சிறுமிகள் சுரண்டப்படுகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் இருந்த போதிலும், அதைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. நிறுவனமயப் படுத்த முடியாத அளவுக்கு, அவர்களின் உள்மன அச்சமும், ஆதரவற்ற சூழ்நிலையும் தடுக்கின்றன. அடித்தட்டு மக்கள் திரளுக்குள், அவர்கள் பெண்கள் என மேலும் ஒடுக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசு ஆதரவளிப்பதில்லை. அந்நிய தேசத்தில், அடிமையாக வதை பட்டாலும், அதிக பட்சம் தூதுவராலயத்தில் அடைக்கலம் கோரத் தான் முடியும். இலங்கைப் பெண்கள் கடின உழைப்பாளிகள் என்ற நற்பெயரை விட பெரிதாக எந்த வெகுமதியும் கிடைப்பதில்லை.

ஒரு பணிப் பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப் பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள். மணமான பெண்களாயின், சில நேரம் பிள்ளைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவியின் பணத்தில் குடித்து, கும்மாளமடிக்கும் கணவன்மாரால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பொதுவாகவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் மத்தியில், பாலியல் சுதந்திரம் அதிகமாக காணப்படுகின்றது. ஊதாரியான கணவனை விவாகரத்து வாங்கி விட்டு, காதலனுடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அதற்காக இந்தக் கலாச்சார மாற்றத்தை நமது சமூகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தமில்லை. இலங்கையின் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகின்றார்கள். உழைப்பு எனும் மெழுகுதிரியாக உருகி நாட்டின் பொருளாதாரத்தை ஒளிர வைக்கிறார்கள்.


********************************************************

பெண் தொழிலாளர் பிரச்சினை பற்றிய முன்னைய பதிவுகள்:

4 comments:

தர்ஷன் said...

அருமையான பதிவு
மலையகப் பெண்களின் இழிநிலை தொடர்பில் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே

educations said...

hai kalai! your site and informaion says about your hardwork and efficiency. congrats. please visit my blog: http://educations-educations.blogspot.com/

ராஜ நடராஜன் said...

நல்ல அலசல் ஆய்வு கட்டுரை.

Unknown said...

சொந்த நாட்டில் சோத்துக்கே வழியில்லை எனும்போது, இந்த முதலாளித்துவ நாடுகளில் அடிமை வேலை செய்ய புறப்படுகிறோம்... சொந்த நாட்டின் இயலாமையா இல்லை அறியாமையா... எங்கிருந்தோ வந்து நம்மைக் காலனிப் படுத்தி அழகு பார்க்கும் இந்த வல்லரசுகளின் சாமர்த்தியமா... யாரைச் சாடுவது?