Tuesday, June 30, 2009

மேலைத்தேய நாசகார நாகரீகம்

-"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்."
-"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்."
-"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."


மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். "நாகரீக உலகம்", "காட்டுமிராண்டிகளின் உலகம்" இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், "ஒரு வல்லரசின் பழிவாங்கல்" என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் "நாகரிக உலகம்" போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு "நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை" அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. "புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்." என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் "கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை" பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன. சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, "பண்பாடு" "வாழும் நெறி" பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் "கலாச்சார மோதல்" பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட "பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக" சித்தரிக்கப்படுகின்றனர். அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் "காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும் தேவையை" சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்.... இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி "நடுநிலை வரலாற்றுப் பாடம்" எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.

அடிக்கடி "கிரேக்கதைப் பாருங்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? "ஜனநாயகம்", "தனி மனித சுதந்திரம்" இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே "Democracy" என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர-தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது. அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் "ஜனநாயக சித்தாந்தம்", பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.

2001 ம் ஆண்டு, நியூ யார்க் தாக்குதலின் பின்னர், அன்றைய ஜனாதிபதி புஷ் ஆற்றிய உரை, பல உலக நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய மக்கள் மட்டும் தமது "ஜனநாயகப் பாரம்பரியம்" தாக்கப் பட்டதாகவும், தமது பழம் பெருமையை மீட்க வேண்டும் என்றும் சபதமெடுத்தனர். புஷ்ஷின் உரை, பண்டைய கிரேக்கத்தின் அறைகூவலை மீண்டுமொரு முறை எதிரொலித்தது. 2500 வருடங்களுக்கு முன்னர், கிரேக்கம் மீது ஈரானில் இருந்த பாரசீகப் பேரரசு படையெடுக்க எத்தனித்தது. கிழக்கே இருந்த பாரசீக நாட்டை சேர்ந்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தான், கிரேக்கம் தனது மக்களை அணி திரட்டியது. "அவர்கள் ஏன் எம்மை தாக்குகிறார்கள்? எமது சிறந்த நாகரீகமான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்." போருக்காக ஏதென்ஸ் அரசு கூறிய காரணங்கள் அவை. ஆமாம், பண்டைய கிரேக்கர்களும், நம் காலத்து அமெரிக்கர்களைப் போல, தமது ஜனநாயகம், சுதந்திரம் குறித்து பெருமை கொண்டிருந்தனர்.

பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த "பல கட்சி அரசியல் முறை" அல்ல. கட்சி என்றால் என்னவென்று அறிந்திராத காலம் அது. ஏதென்ஸ் பிரசைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் அந்த "சர்வசன வாக்குரிமை" ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது. பண்டைய கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடுதுஸ் (கி.மு. 484-420) எகிப்தில் தான் கண்டவற்றை பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்து: "எகிப்தியப் பெண்களுக்கு சந்தைக்கு சென்று வரவும், கடைகளை நடத்தவும் சுதந்திரம் இருந்தது. அதற்கு மாறாக கிரேக்கப் பெண்கள், கணவனில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்." பண்டைய கிரேக்கத்தில் அடிமைகள், எஜமானின் சொத்தாக பார்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில், பணம் சேர்க்க முடிந்த அடிமைகள் சுதந்திரம் வாங்கிக் கொண்டனர். அப்போது கூட உள்ளூர் பிரசைகள் செய்ய விரும்பாத (உதாரணம்: துறைமுகத்தில் மூட்டை சுமத்தல்) வேலைகளை மட்டுமே செய்தனர். இவர்களுக்கும், வேலைக்காக புலம்பெயர்ந்து வந்து குடியேறிய மக்களுக்கும், ஏதென்ஸ் நாட்டு பிரசாவுரிமை கொடுக்கப்படவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் என்பன அர்த்தமற்ற வார்த்தைகள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஹாலிவுட் எடுத்த "300" என்ற தலைப்பிலான படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரு சரித்திரக் கதையை மையமாக வைத்து வரையப்பட்ட சித்திரக்கதையை தழுவி அந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தது. "300" திரைப்படம் ஈரானியர்களை வில்லன்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் வந்தன. அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்றது ஈரான். அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கிறது? பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நாட்டிற்கு தெற்கே இருந்த ஸ்பார்ட்டா என்ற தேசத்தின் வீரதீரக் கதை தான் "300". பாரசீக ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, 300 ஸ்பார்ட்டா வீரர்கள் தீரத்துடன் போரிட்டு மடிவது தான் கதை. பாரசீக நாட்டு வீரர்கள், கறுப்பர்கள் போல, அல்லது அரேபியர் போல தோன்றுகின்றனர். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித் தனமானவை. சுருங்கக் கூறின், மேற்கத்திய நாகரீகத்திற்கும், கிழக்கத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போர். இன்றைய இளம் தலைமுறைக்கு இன மேலாதிக்க அரசியல் பிரச்சாரம் செய்ய, ஹாலிவுட் கண்டு பிடித்த சரித்திரக் கதை அது.

ஸ்பார்ட்டா மக்கள் எந்த அளவு நாகரீகமடைந்திருந்தனர்? ஏதென்ஸ் இற்கும், ஸ்பார்ட்டாவிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. முரண்பாடுகள் முற்றி இவ்விரு அரசுகளுக்கும் இடையில் சில நேரம் யுத்தம் மூண்டது. "கிரேக்கர்களின் உள்நாட்டு யுத்தம்" என்று அப்போது அது அழைக்கப்பட்டது. ஏதென்ஸ் நகரமயமாக்கப்பட்ட சமூகமாக இருந்தது. அதற்கு மாறாக ஸ்பார்ட்டா கிராமங்களின் தேசம். ஆனால் அதி தீவிர இராணுவமயப்பட்ட பாஸிச சமூகத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தமது ஆண் குழந்தைக்கு பத்து வயதானவுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். அன்றில் இருந்து இராணுவ முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களுக்கு, கடுமையான இராணுவ பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தமது பதின்ம வயதில் சித்தி அடையும் போது, தயக்கத்தைப் போக்குவதற்காக, கண்ணில் படும் அடிமையை கொலை செய்யுமாறு பணிக்கப்படுவர்.

ஸ்பார்ட்டாவில் அடிமைகளின் உரிமை பற்றி யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இராணுவ பயிற்சிக்காக கொல்லப்பட்டும் பலியாடுகள் அவர்கள். இந்த அடிமைகள் முந்தின போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள். அதாவது போர்க் கைதிகள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அடிமைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக, இராணுவ பயிற்சியின் போது வேட்டையாடப் பட்டனர். ஒரு முறை ஸ்பார்ட்டாவில் ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி, அடிமைகளை விடுதலை செய்தது. அடிமைகள் ஒன்று திரண்டு, ஸ்பார்ட்டா அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். ஐந்து வருடங்களாக அந்தக் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் ஏதென்ஸின் மத்தியஸ்தத்தின் பின்னர், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பே, அமைதி திரும்பியது. அந்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஸ்பார்ட்டா அதிகாரிகள், அடிமைகளை ஓரளவு மனிதத்தன்மையுடன் நடத்தலாயினர்.

இன்றைய மேற்குலக அரசுகளும், அன்றைய கிரேக்க அரசுகளும் பிரச்சாரம் செய்தது போல, கிழக்கில் இருந்த பாரசீக நாட்டில், காட்டுமிராண்டிக் கலாச்சாரம் நிலவவில்லை. பாரசீகப் பொருளாதாரம் அடிமைகளை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் மிக மிகக் குறைவான அடிமைகளே இருந்தனர். மேலும் சீருஸ் சக்கரவர்த்தி போட்ட சட்டம், அடிமை முறையை தடை செய்திருந்தது. கி.மு. 6 ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சீருஸ் சக்கரவர்த்தியின் சட்டம், "உலகின் முதலாவது மனித உரிமைகள் சாசனம்" என்று புகழப் படுகின்றது. ஐ.நா.மன்றம் அதனை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. "பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை, அடிமை முறை ஒழிப்பு, விரும்பிய தொழிலை செய்யும் உரிமை...." போன்ற தனி மனித சுதந்திரங்கள் அந்த சாசனத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன. ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் இன்னொரு பேரரசின் தலைநகராக இருந்த பாபிலோன் சீருஸ் சக்கரவர்த்தியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது கூட, பாபிலோன் மக்களுக்கு தாம் ஆக்கிரகிக்கப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழாதபடி ஆளப்பட்டனர். சக்கரவர்த்தியின் உத்தரவின் பிரகாரம், பாபிலோனியர்கள் தமது சொந்த மதத்தை வழிபட சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு பாபிலோனியனும் அடிமையாக்கப் படவில்லை.

மேற்குலகம் போதனை செய்வதைப் போல, அவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்தவர்களுமல்ல, மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல. வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கற்பதால் தான் இந்த குளறுபடி ஏற்படுகிறது. இன்று ஊடகங்களில் சித்தரிக்கப்படும் "காட்டுமிராண்டிக் குணாம்சங்கள்" எல்லாம் ஐரோப்பிய வரலாறு கண்டு வந்தவை தான். உதாரணத்திற்கு, தற்கொலைத் தாக்குதல்கள். இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பியனை (அல்லது அமெரிக்கனை) கேட்டால், "பைத்திக்காரத் தனம்" என்று ஒரு வார்த்தையில் பதிலளிப்பார்கள். 1831 ம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் பிரிவினைக்காக யுத்தம் செய்த காலத்தில், நடந்த சம்பவமொன்று தற்கொலைப் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும். யன் வான் ஸ்பைக் என்ற ஒல்லாந்து வணிகன், எதிரிப்படைகளிடம் தனது கப்பல் அகப்படும் தருணத்தில், தனது கப்பலை வெடிக்க வைத்து தானும் மாண்டான். அதிகம் பேசுவானேன், முன்னர் குறிப்பிட்ட 300 ஸ்பார்ட்டா வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்ற தற்கொலைக் கொலையாளிகள் தான்.

இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல. இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக "கிரேக்க ஏகாதிபத்தியம்" குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. "அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை" பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன. வட கிரேக்க, மசிடோனியா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர், பாரசீக நாட்டை அடக்குவதாக கூறித் தான் அனைத்து கிரேக்கர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டான். போரில் பாரசீக பேரரசை தோற்கடித்த பின்னர், இளம் வயதில் அலெக்சாண்டர் மாண்டது உண்மை தான். ஆனால் அத்துடன் சரித்திரம் முற்றுப் பெறவில்லை. அலெக்சாண்டரின் பின்னர் அந்தப் பேரரசை நிர்வகித்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள். இன்றைய ஈரான் முதல் எகிப்து வரை கிரேக்க நகரங்கள் தோன்றியிருந்தன. அங்கெல்லாம் கிரேக்கர்கள் சென்று குடியேறினர். உள்ளூர் மக்கள் தொழிலுக்காக கிரேக்க மொழி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிரேக்க காலனிகளின் மக்கள், உள்ளூர் மக்களுடன் ஒன்று கலக்காது, உயர்ந்த அந்தஸ்தைப் பேணி வந்தனர்.

கிரேக்க காலனிய காலகட்டத்தில் இருந்து, அதாவது 2500 வருடங்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள், மேலைத்தேய நாகரீகத்தை வியப்புடன் நோக்கினர். வேறுவிதமாக கூறினால், மேற்கத்திய மேலாண்மைக்கு அடிபணிந்தனர். தமது சொந்த கலாச்சாரம் பிற்போக்கானது என்றும், மேலைத்தேய கலாச்சாரம் முற்போக்கானது என்று நம்பினார். நமது நாட்டில், தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடும், ஆங்கிலப் பெயர் சூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதும், நடுத்தர வர்க்கத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அப்படியானவர்கள் எல்லா ஆசிய நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அதாவது மேலைத்தேய நாகரீகம், தானே உலகில் உயர்ந்தது, மற்றதெல்லாம் காட்டுமிராண்டிகளின் நாகரீகம், என்பதை நிலை நாட்ட பாடுபடுகின்றது. அந்தக் கருத்துக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மக்களும் இருந்தனர்/இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சிந்தனை மாறி வருகின்றது.


குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். (அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.) ரஷ்யாவிலும், சீனாவிலும், ஒரு காலத்தில் தமது பிரசைகள், மேற்குலக செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்த அச்சம் மறைந்து வருகின்றது. ரஷ்ய, சீன அரசுகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா ஜோர்ஜியா மீது போர் தொடுத்த காலத்தில், சீனா திபெத் கிளர்ச்சியை அடக்கிய நேரமும், மேற்குலக கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பான்மை மக்கள் தமது அரசின் பக்கமே நின்றனர். அந்த நேரம் மேற்குலக கண்டனங்கள் அவர்களுக்கு எரிச்சலையே ஊட்டின. அதற்குக் காரணம், மேற்குலகின் "இரட்டை அளவுகோல் கொள்கை." "மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்," என்ற பழமொழிக்கேற்ப மேற்குலக நாடுகளின் நடத்தைகள் அமைந்துள்ளன. உலக மக்கள் அனைவரும் இந்த இரட்டை வேஷம் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் "மேற்குலகின் உயர்ந்த நாகரீகம்" தற்போது, சந்தையில் விலைப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது.

Thursday, June 25, 2009

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்


"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்

கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையும், இந்திய தேசிய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றன. தாலிபான்களின் மீது போர் தொடுத்து பாகிஸ்தான் மீட்டெடுத்த ஸ்வாட் பள்ளத்தாக்கை ஒப்பிட்டு, "இந்தியாவின் ஸ்வாட் உருவாகின்றது" என தலையங்கம் தீட்டியது ஒரு பத்திரிகை. மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை இராணுவ நடவடிக்கை முடிந்த கையோடு, அரசு மாவோயிஸ்ட்களை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது.

மாவோயிஸ்ட்கள் மீதான தடை வெறும் அரசியல் தந்திரோபாயம் என்று சில அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். "இதுவரை அரசு மாவோயிஸ்ட்களை அடக்க என்ன செய்தது?" என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்பதற்காக பயங்கரவாத தடை வந்துள்ளதாக அவர்கள் ஆற்றுப்படுத்துகின்றனர். இந்திய அரசு முன்பு என்றுமில்லாதவாறு மாவோயிஸ்ட் இயக்கம் மாபெரும் அச்சுறுத்தல் என்று அறிவிப்பதும், பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி தடை செய்வதும், எந்த வித உள் நோக்கமுமற்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளல்ல. சுருக்கமாக சொன்னால், இது இந்தியாவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". 2001 ம் ஆண்டில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் நியூ யார்க்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", தெற்காசியாவை வந்து சேர்ந்துள்ளது. வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கை அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான போர். அதேயளவு மூர்க்கத்துடன் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் அரசு நடத்திய போர். இவையெல்லாம் பயங்கரவாத எதிர்ப்பு பதாகையின் கீழ், அமெரிக்க ஆசியுடன் நடந்த பதிலிப் போர்கள் தாம்.

"இந்தியாவின் 28 மாநிலங்களில், கிட்டத்தட்ட அரைவாசி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் உணரப்படுகின்றது. மொத்த உறுப்பினர்கள் தொகை 20000 - 30000 அளவில் இருக்கலாம். காலாவதியான ஆயுதங்களை வைத்திருக்கும் பொலிஸ் படையால், நவீன ஆயுதங்களைப் பாவிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிட்களை சமாளிக்க முடியவில்லை." முதலாளித்துவ ஊடகங்களே அத்தகைய தகவல்களை தெரிவித்து வருகின்றன. இவர்களின் கவலையெல்லாம், பொலிஸ் படைகள் நக்சலைட்களை எதிர்த்து போராடும் திறனைக் கொண்டிருக்கவில்லை. காலந் தாமதிக்காமல் இராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.

மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே ஆந்திரா, சட்டிஸ்கர், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் பிரதேசங்களை அமைத்துள்ளனர். இவை மாவோயிஸ்ட் கட்சியினரின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ள பிரதேசங்கள். இதைவிட கெரில்லாப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட சில இடங்களில், தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட்களின் உத்தரவுகள் செல்லுபடியாகின்றன. உதாரணத்திற்கு கெரில்லாப் பிரதேச முதலாளிகள் அதிகளவு சம்பளம் வழங்க வேண்டுமெனவும், கட்சிக்கு வரி செலுத்த வேண்டுமெனவும் பல உத்தரவுகள் நடைமுறைபடுத்தப் படுகின்றன. பெரும்பாலும் நாட்டுப்புற சிறிய நகரங்களையும், ஆதிவாசிகளின் காட்டுப்பகுதிகளையும் மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசம் என அறிவித்துள்ளனர். இந்தியாவின் கீழ்த்திசை மாநிலங்களில் உள்ள அத்தனை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மொத்தப் பரப்பளவு, இலங்கை அளவு இருக்கும்.

மேற்கூறப்பட்ட தரவுகள் எல்லாம் இந்திய அரசுக்கு, அல்லது ஊடகங்களுக்கு தெரியாதவை அல்ல. 1967 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் புரட்சி அடக்கப்பட்டு விட்டது என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். எழுபதுகளில் இந்திய அரசுக்கு சவாலாக விளங்கிய நக்சலைட்களின் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று தான் எல்லோரும் நம்பினார்கள். முன்னாள் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, "மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்" கட்சிகளாக பாராளுமன்ற அரசியல் வழியில் ஜனநாயகமயப்பட்டதும் அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இருப்பினும் சிறு குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆந்திராவில் இயங்கிய மக்கள் யுத்தப் பிரிவும், பீகாரில் இயங்கிய MCC பிரிவும், சில சமயம் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சகோதர சண்டையும் இந்திய அரசை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க வைத்தது. நேபாளத்தில் மாவோயிஸ்ட் வெற்றி, இந்திய நக்சலைட்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. மக்கள் யுத்தப் பிரிவு, MCC, மற்றும் சில உதிரிக் குழுக்கள் இணைந்து மாவோயிஸ்ட் கட்சியாக மறுவார்ப்புச் செய்து கொண்டனர்.

நக்சலைட் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவப் பிரிவுகளை அனுப்பாததற்கு காரணம் இருக்கிறது. இந்திய தேசிய ஊடகங்கள் காஷ்மீர் அல்லது இஸ்லாமிய வன்முறை நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக பிற மாநிலங்களையும், முஸ்லிம் சிறுபான்மைக்கு எதிராக இந்து பெரும்பான்மையினரையும் திசை திருப்பி விடுவதில் ஊடகங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. சுருங்கக் கூறின், இனவாதம், மதவாதம் போன்றன இந்தியர்களைப் பிரித்து வைக்க உதவின. மாவோயிஸ்ட் கிளர்ச்சி பற்றிய செய்திகள் இந்தியர்களை ஏழை-பணக்காரன் என்ற வர்க்க அடிப்படையில் பிரித்து விடும். அமெரிக்காவை எட்டிப்பிடிக்க துடிக்கும் மத்திய தர வர்க்கம் ஒரு பக்கம் வளர்ந்து வருகையில், மறு பக்கம் பெரும்பான்மை இந்தியர்கள் வசதியற்ற ஏழைகள் என்ற உண்மையையும் மறைக்க முடியாது. ஏழைப் பாதுகாவலர்களான நக்சலைட் இயக்கம், ஒரு நிகழ்கால தோற்றப்பாடு என்பதை இந்தியர்கள் அறியக்கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக இருந்துள்ளன. இது ஊடகங்களின் வர்க்கப்பாசத்தை இனங்காட்டுகின்றது.

அப்போது இந்திய அரசுக்கு தலைக்கு மேல் வேறு பிரச்சினைகள் இருந்தன. பரம வைரியான பாகிஸ்தான் காஷ்மீரில் எல்லைதாண்டி வந்து விடும் என்ற அச்சம் அலைக்கழித்தது. "உலகிலேயே அதிகளவு இராணுவக் குவிப்பை கொண்ட எல்லை" என வர்ணிக்கப்படும் காஷ்மீர் பிரதேசம், இந்திய அரசின் பாதுகாப்பு திட்டமிடலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது. தற்போதும் இடையிடையே நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது, இந்திய வெளி விவகார கொள்கையின் தவிர்க்க முடியாத அம்சம் தான். இருப்பினும் திரை மறைவில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஒரு காலத்தில் தான் ஆதரவளித்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளை, தற்போது அடக்கி வைக்கின்றது. காஷ்மீர் கிளர்ச்சியை அடக்கும் கடமையை பாகிஸ்தான் பொறுப்பெடுத்து விட்டதால், இந்திய இராணுவம் இனிமேல் "மாவோயிஸ்ட் எதிர்ப்பு போரில்" ஈடுபடுத்தப்படும்.

கீழ்த்திசை மாநிலங்களில் மாவோயிஸ்ட்களை எதிர்த்துப் போரிட இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சீனாவுடனான பூகோள அரசியல் முரண்பாடு. இரண்டாவது, பொருளாதார முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. இது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். மாவோயிஸ்ட் போராட்டம், சீனாவுக்கு அருகில் அமைந்திருக்கும், இரும்புத் தாது வளம் மிக்க மேற்கு வங்காளம் வரை வந்த பிறகு தான் இந்திய அரசு விழித்துக் கொண்டது. ஒரு புதிய உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்கள் வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக பேசிய கௌர் சக்கரவர்த்தி என்பவர், கைது செய்யப்பட்ட நிகழ்வானது, வரப்போகும் கருத்துச் சுதந்திர அடக்குமுறைக்கு முன்னறிவித்தல் ஆகும். எப்போதும் போர் வருவதற்கு முன்னர், கருத்துச் சுதந்திர அடக்குமுறை வந்து விடும். இலங்கையிலும் அது தான் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, எல்லா அரசாங்கங்களும் மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தால், போரை நடத்த முடியாது என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

மாவோயிஸ்ட்களுக்கு சீனா உதவுவதாக இந்திய அரசு குற்றஞ் சாட்டி வருகின்றது. சீனா இதை மறுத்து வருகின்றது. சீனாவில் புரட்சிக்கு எதிரான (முதலாளித்துவ) கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கின்றது. இருப்பினும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், சிந்தாந்த நட்புறவு சாத்தியமில்லை என்பது இந்திய அரசுக்கும் தெரியும். அவர்களது கவலை முழுக்க பூகோள அரசியல் சார்ந்தது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்த மாவோயிஸ்ட் அரசு, இந்தியாவை புறக்கணித்து சீனாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியது. அதனால் தான் அங்கே மாவோயிஸ்ட் அரசு கவிழ்க்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. இலங்கையில் இந்தியா வழங்கி வந்த ஆயுத உதவியை நிறுத்தியதும், சீனா வந்து புகுந்து கொண்டது. இலங்கை அரசுக்கு வேண்டிய அளவு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து போரை முடிக்க உதவியது. பிரதிபலனாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றுக் கொண்டது. மாறிவரும் சர்வதேச அரங்கில் சீனா பலம் பெற்று வருவது, இந்தியாவுக்கும், அதற்குப் பின்னால் நிற்கும் அமெரிக்காவுக்கும் உவப்பானதாக இல்லை.

சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான உரிமை கோரலை சீனா இன்னும் கைவிடவில்லை. இந்த நிலையில் வட-கிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. தனது எல்லையில் நிறுத்தப்படும் இந்திய படைகள் பல மடங்காக பெருப்பதை, சீனா கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை. சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி, ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தியாவிற்கு வழங்கவிருந்த கடனை முடக்கியது. பின்னர் அமெரிக்காவின் தலையீட்டினால் தான் கடன் அனுமதிக்கப்பட்டது. மேலெழுந்தவாரியாக இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு நிலவி வந்த போதிலும், அமெரிக்க-இந்திய அணு சக்தி உடன்படிக்கையின் போது சீனா தனது அதிருப்தியை வெளிக்காட்டியது.

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், பெறுமதியான கனிம வளங்கள் அதிகமாக காணப்படும் ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாவோயிச போராளிகள் பலம் பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரிசாவில் அலுமினிய தொழிற்துறை மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. மாவோயிஸ்ட்கள் அலுமினிய உற்பத்தியை முடக்குவதுடன், டைனமைட்களையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். தேசிய அலுமினிய நிறுவனமான NALCO, ஏப்ரலில் தனது சுரங்கங்கள் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டதில் இருந்து, 20 வீத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுரங்கங்கள் மட்டுமல்ல, அலுமினிய, இரும்பு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில் விநியோகப் பாதைகளும் மாவோயிஸ்ட் போராளிகளினால் தாக்கப்படுகின்றன. ரயில்பாதையை குண்டு வைத்து தகர்ப்பது கூட விநியோகத்தை தற்காலிகமாக முடக்க போதுமானதாக உள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப் படுவதுடன், பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தோற்றுவிக்கும் என தொழிலதிபர்கள் கவலைப்படுகின்றனர். மேற்கு வங்காளத்தில் லால்கர் பிரதேசம் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும், தொழிலதிபர்களின் இரத்தக் கொதிப்பு இரட்டிப்பாகியது. இந்தியாவில் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான JSW Steel, லால்கருக்கு அருகில் 10 பில்லியன் டாலர் செலவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்தது. முதலீட்டாளர்கள் மனதில் "மாவோயிஸ்ட் பிரச்சினை" திகிலை ஏற்படுத்தியுள்ளமையை, JSW Steel அதிபர் குப்தா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி எடுத்துக் காட்டுகின்றது. பொதுவாக தொழிலதிபர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக வேஷம் போடுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு போருக்குப் பின்னும் பொருளாதார நலன்கள் மறைந்து கிடக்கின்றன.


***********************************************************************
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
தமிழ்நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை

Tuesday, June 23, 2009

சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 9

"படுகொலை, படுகொலை" என அலறின பிரிட்டிஷ் பத்திரிகைகள். முன்பக்கத்தில் ஒரு இரத்தம் வழியும் வெள்ளைக்காரனின் முகம், கீழே சிம்பாப்வேயில் "கறுப்பு இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயி" என தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சிம்பாப்வே பிரச்சினை பற்றிய பிரிட்டிஷ் பத்திரிகைகளின் செய்தியறிக்கைகள் ஒரளவு காலனிய ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தியது. அப்போது சுதந்திரப் போராளிகளால் வெள்ளையின அதிகாரிகள் கொல்லப்பட்டபோது அதனைப் பயங்கரவாதமென்றும், இனவாதப் படுகொலைகள் என்றும் பத்திரிகைகள் சித்தரித்தன. அதேநேரம், வெள்ளை அதிகாரிகளால் கறுப்பினப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை திட்டமிட்ட முறையில் மூடிமறைத்தன, "அரசு சாராத சுதந்திர" ஊடகங்கள். இவையெல்லாம், காலனித்துவக் கால கட்டம் இன்னமும் தொடர்கிறதா என ஐயமுறவைக்கின்றன.

ஐரோப்பியர் காலனியக் காலங்களில் சில நாடுகளை நிரந்தரமாகக் குடியேறவென தேர்ந்தெடுத்தனர். அவற்றில் "தென்னாபிரிக்கா", "சிம்பாப்வே", ஆகியன முக்கியமானவை. 19 ம் நூற்றாண்டில், தென்னாபிரிக்காவில் ஏற்கெனவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திவிட்ட பிரிட்டிஷ் காலனித்துவப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறின. துப்பாக்கியேந்திய பலமான பிரிட்டிஷ் படைகளுடன் மோதமுடியாத, அம்பு-வில் போன்ற புராதன போர்க் கருவிகளை பயன்படுத்திய கறுப்பர்களின் படைகள் தோல்வியுற்றுச் சரணடைந்தன. தோற்றவர்களின் நிலங்களை வென்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். தாய்நாடான பிரிட்டனிலிருந்து "விவசாயிகள்" வந்து குடியேறினர்.இவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலங்களை இணைத்து "ரொடீஷியா" என்ற நாடு உருவாக்கப்பட்டது.

தென்னாபிரிக்காவிலிருந்து படையெடுப்பு நடாத்தி வென்ற ஆங்கிலேயத் தளபதி "சிசில் ரோட்ஸ்" ன் தலைமையில் இங்கு வெள்ளையாட்சி நடாத்தப்பட்டது. இவனது பெயர் காரணமாகவே இந்நாட்டிற்கு "ரொடீசியா" என்ற பெயரும் சூட்டப்பட்து. சோவியத் ஒன்றியம் லெனின் கிராட் என்று பெயர் வைத்தால், அதனை அரசியல் பிரச்சாரம் என்று கண்டித்த மேற்குலக புத்திஜீவிகளுக்கு, ரொடீசியா கண்ணில் படவில்லை. தற்கால அரசியலின் அடிப்படையில் சொன்னால்: ரோட்ஸ் ஒரு சர்வாதிகாரி, நிறவெறியன், இனப்படுகொலை செய்தவன், நாகரிக உலகம் ஏற்காத இனவாத ஆட்சி நடத்தியவன். இந்த இனவாதச் சர்வாதிகார ஆட்சி 1980 வரை நீடித்தது. உலகெங்கும் நடந்த, காலனியாதிக்க எதிர்ப்பு சுதந்திரப் போராட்டங்களால் உந்தப்பட்ட ரோடீசியாவின் படித்த கறுப்பின இளைஞர்கள், ZANU-PF ஏன்ற பெயரில் நிறுவனமயமாகினார்கள். ரொபேட் முகாபே தலைமையில் நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெற்றது. கொரில்லாப் போர்த்தந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் ரொடீசிய அரசுகள் நிபந்னையடிப்படையிலான சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டன. அதாவது, பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும். நீதித்துறையில் பிரிட்டிஷ் அரசு வகுத்திருந்த சட்டங்களே தோடர்ந்தும் பேணப்படவேண்டும் (இந்தச் சட்டங்களும் வெள்ளையின முதலாளிகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை உறுதிப்படுத்தன.) என்பதும் நிபந்தனையாகவிருந்தது. இவ்வடிப்படையிலேயே அபிவிருத்தி உதவிகளும் வழங்க பிரிட்டிஷ் நிர்வாகம் உடன்பட்டது. நிபந்தனைகளையேற்று, ரொடீசிய அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்த ZANU-PF, "லங்கஸ்டர்" ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டது. இதையடுத்து ரொடீசியா, "சிம்பாப்வே" என ஆப்பிரிக்கமயப்படுத்தப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்த்திற்கேற்ப, அதாவது பிரிட்டிஷார் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் மாக்ஸீயத்தைத் தனது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்த ZANU-PF அதை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டில் அரசுத் துறைகள் மட்டுமே கறுப்பினத்தவர் வசம் வந்தன. பொருளாதாரத்தில் வெள்ளையினத்தவரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. தம்மை "விவசாயிகள்" எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் விவசாய முதலாளிகளாவர். நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான புகையிலை, தேயிலை போன்றவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தமது கைகளில் வைத்திருந்தனர். இவ்வகையில் இவர்கள் அனைவருமே செல்வந்தர்களாகவும் இருந்தனர். இதற்கு மாறாக, காலனித்துவ காலத்தில் நிலங்களைப் பறிகொடுத்த கறுப்பின மக்கள் இன்று வரை ஏழைகளாக வெள்ளை முதலாளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்து வாழும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப வெள்ளையின முதலாளிகள் தாம் "நிற வேற்றுமை பார்க்காதவர்கள்", "கறுப்பினத் தொழிலாளர்களைச் சமத்துவமாக நடாத்துபவர்கள்" என்றெல்லாம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் சிம்பாப்வே என்ற புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்ல , உள்ளூர் மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். சில வெள்ளையினப் பிள்ளைகளுக்கு ஆபிரிக்கப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

எது எப்படியிருத்தபோதும், எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சொத்துரிமை என்பதை மறந்துவிடலாகாது. இவர்கள் அப்போது இனவாதிகளாக நிறவேற்றுமை காட்டியதும் சொத்துரிமையைப் பாதுகாக்கத்தான். இன்று சிம்பாப்வே தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்வதும் அதே நோக்கத்தோடுதான். அவர்களின் விவசாய உற்பத்தியில் ஏகபோகம், காலனிய ஸ்தாபனத்தை நிறுத்தும் பணி என்பனவற்றுக்காகத்தான், மேற்கத்திய தொடர்பூடகங்கள் வெள்ளையின விவசாயிகள் ஆதரவுப் பிரச்சாரம் செய்கின்றன. "நாம் இந்த விவசாயிகளைக் கைவிட முடியாது. எனெனில் நாம்தான அவர்களை அங்கு அனுப்பினோம்" என இதனை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாகவே சொன்னார். பிரிட்டனில் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிம்பாப்வேயிலிருந்து வரும் "வெள்ளை அகதி" களுக்கு வந்த உடனேயே வீடும், வேலைவாய்ப்பும், தேவையேற்படின் நிலமும் வழங்கப்படுகின்றன. "மனிதாபிமானமிக்க, இனவெறியற்ற, ஜனநாயக" பிரிட்டிஷ் அரசின் இரட்டை வேடமிது.

சிம்பாப்வேயில் மொத்தச் சனத்தொகையில் ஒரு வீதமான வெள்ளையினத்தவருக்கு, 80 வீதமான நிலங்கள் சொந்தமாகவிருக்கின்றன. அதே வேளை பெரும்பான்மை மக்கள் சொந்த நிலமின்றி இருப்பது எந்த வகையில் நியாயமென, எந்தவொரு "ஜனநாயகவாதி"யும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலம் அனுபவித்த பெரும் நிலப்பிரபுக்களான வெள்ளையர்கள், உள்ளூர் கறுப்பின மக்களிடமிருந்து தமது மூதாதையர் பறித்த நிலங்களை நேர்மையாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்காதது ஏன்? என்றும் எந்தவொரு மனித உரிமைவாதியும் கேட்கவில்லை. ஆனால் சில புரட்சியாளர்கள், வெள்ளையினத்தவருக்குச் சொந்தமான நிலங்களைத் திடீரென முற்றுகையிட்டுப் பலவந்தமாகப் பறித்து, அவற்றை நிலமற்ற கறுப்பின விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது மட்டும், "ஜனநாயகம், மனித உரிமைகள்" என்று மேற்கில் சிலர் சாமியாடத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் மனித உரிமைகள் என்ற பெயரில் மேற்கத்தைய அரசியல் ஆதிக்கம் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்காவில் சிலர் விமர்சிக்கின்றனர்.

முகாபேயின் அரசாங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிவதும், தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகள் கொடுப்பதும் உண்மைதான். சரிந்துவரும் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகத்தான் முகாபே நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தனியாக நின்று ஏகாதிபத்தியத்துடன் மோதும் துணிச்சலைப்பாராட்ட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகவங்கியோ, அல்லது வேறெந்தச் சர்வதேச நிதிநிறுவனமோ சிம்பாப்வேக்கு நிதியுதவி வழங்குவதில்லை. தென்னாபிரிக்காவையும், லிபியாவையும் விட்டால் வேறு குறிப்பிடத்தக்க வர்த்தகக் கூட்டாளிகள் கிடையாது. இப்படியான கடினமான நேரத்திலும் சிம்பாப்வே இன்றுவரை ஏகாதிபத்திய உத்தரவுகளுக்கு அடிபணியவில்லை. ஒரு வருடம் வெளிநாட்டு கடனுதவி கிடைக்காவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்று, நமது அரசாங்கங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நீங்காத அச்சமென்னவெனில், சிம்பாப்வேயின் "புரட்சிகர நிலச்சீர்திருத்த அலை" பிற ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாம் என்பதே. தென்னாபிரிக்கக் குடியரசிலும், நமீபியாவிலும் பெரும்பான்மை விவசாய நிலங்கள், தேசியப் பொருளாதாரம் என்பன, இன்னமும் வெள்ளையினத்தவரின் கைகளில் இருக்கின்றன. தென்னாபிரிக்க நிலமற்ற கறுப்பின விவசாயிகள் சிம்பாப்வேயில் நடந்தது போல அங்கேயும் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் இனறும் கூட சட்டபூர்வமற்ற, ஆனால் அரசு தலையிடாத தனியான சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பாஸிஸ அமைப்புகள் செல்வாக்குச் செலுத்துவதுடன், ஆயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். வெளியில் சொல்லப்படாது பாதுகாக்கப்படும் இரகசியங்களில் ஒன்று; இந்த வெள்ளையினத் தீவிர வாதக்குழுக்கள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதுதான்.

இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் நிலவியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையினக் குடியேறிகளால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ரொடீசியக் குடியரசுகளில் வெள்ளையர்கள் சிறுபான்மையாகவிருந்தனர். அத்துடன் நாடுமுழுவதும் பரவலாக பெருமளவு நிலங்களைக் கைப்பற்றி காலனிகளை அமைத்தும் இருந்தனர். இந்த வெள்ளைக் காலனிகளைச் சேர்ந்தோர் மட்டும் அனைத்து உரிமைகளையும் பெற்று முதற்தரப் பிரஜைகளாகவிருந்தனர். இதே நேரம், பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் இரண்டாந்தரப் பிரஜைகளாக பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். கல்வி, மருத்தவ வசதி, என்பனகூட வெள்ளையினத்தவருக்கே வழங்கப்பட்டன. முன்னாள் ரொடீசியா பின்னர் சிம்பாப்வேயாக மாறி முகாபேயின் ZANU-PF ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கருப்பினத்தவரை முன்னேற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் கட்டப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பன சமுக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள். பிரிட்டன் முன்மொழிந்த "லங்கஸ்டர்" சுதந்திர ஒப்பந்தம், சமுக அபிவிருத்திக்கு பணம் ஒதுக்குவதைக் குறைக்க விரும்பியதை இவ்விடத்தில் கூறவேண்டும்.

சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உலகவங்கி, சர்வதேச நாணய சபை போன்றவற்றின் பொருளாதாரத்திட்டங்கள் ஏற்கெனவே நாட்டைப் பாழ்படுத்தியிருந்தன. தொன்னூறுகளில் இந்த நிறுவனங்களின் தவறான முகாமைத்துவம் குறித்து முகாபே விமர்சித்த போது பிரச்சினை கிளம்பியது. தொடரும் நில அபகரிப்புக் காரணமாக, பெருமளவு வெள்ளையின முதலாளிகள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளுக்குப் போய் தங்கிவிட்டனர். சர்வதேச வர்த்தகம் வெள்ளையினத்தவர் ஆதிக்கத்தில் இருந்ததால், பொருளாதார வீழ்ச்சியேற்பட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர், சர்வதேச சமூகம் தொடர்பை முறித்துக்கொண்டது. ஆனால் இவை எல்லாம் மேற்கத்தைய தொடர்பூடகங்களால் மூடிமறைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் முகாபேயின் தவறான அரசியல்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. "பயங்கரவாத்திற்கெதிரான போர்" சிம்பாப்வே மீதும் தொடுக்கப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்பார்க்கிறது. சிம்பாப்வேயில் எதுவித பொருளாதார-இராணுவ நலன்களும் இல்லாதபடியால் அமெரிக்கா இதைத் தட்டிக் கழித்தபடியுள்ளது. இருப்பினும் நிலைமை இப்படியே நீடிக்க பிரிட்டன் விடவில்லை. இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களின் மூலம் உள் நாட்டு கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன. நவ காலனித்துவம் என்றால் என்ன என்பதற்கு சிம்பாப்வே ஒரு சிறந்த உதாரணம். வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர் தான், ஆனால் அவர்களது மூலதனம் நம்மை இப்போதும் ஆண்டுகொண்டிருக்கிறது.

(தொடரும்)

Saturday, June 20, 2009

ஆப்கான் ஆக்கிரமிப்பின் அவலம் - நேரடி ரிப்போர்ட்

தொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தாலிபானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளின் தாக்குதல்களால் அனேகமாக பொது மக்களே பலியாகின்றனர். இதனால் தன் முனைப்புக் கொண்ட ஆப்கான் மக்களின் எழுச்சியானது அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆப்கான் மக்களின் துயரத்தை கண் முன் கொண்டுவரும் வீடியோ இது. இந்த நேரடி அறிக்கையை சில துணிச்சலான ஆர்வலர்கள் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.





Thursday, June 18, 2009

இலங்கையில் காணாமற் போதல்: தடுப்பது எப்படி?


சுனிலா அபயசேகர அவர்கள் இலங்கையின் ஒரு மதிப்புமிக்க பிரபலமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவர் இரண்டு பக்கத்திலும், அதாவது தமிழர்களிடையேயும் சிங்களவர்களிடையேயும் மிகுந்த மதிப்புப் பெற்றவர். இவருடைய மனித உரிமைகள் செயற்பாட்டிற்காக ஐ.நா. சபையினாலும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கேள்வி: 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில், பலராலும் தடுப்பு முகாம்கள் என்று அழைக்கப்படுகின்ற முகாம்களில், அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் இதுபற்றி என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்குள்ள நிலைமைகள் எப்படி இருக்கின்றன?

பதில்: முக்கியமான விடயம் என்னவென்றால், இங்குள்ள 3 இலட்சம் மக்களும் ஏற்கனவே மாதக்கணக்காக கஷ்டங்களை அனுபவித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆற்றப்படாத காயங்களுடன் சிகிச்சையின்றி மாதக் கணக்காக இருந்திருக்கிறார்கள். அவை இன்னும் மோசமான நிலைமைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. அதனால் அவர்களை உடனடியாகக் கவனிக்கவேண்டியது முக்கியம். மனிதாபிமானரீதியில் உதவும் அமைப்புகள் அங்கு தடையின்றிச் செல்லமுடியாதிருப்பதனால் அவர்களுக்கான கவனிப்பு இல்லாதிருக்கின்றது. வவுனியா உயர்நீதிமன்றத்தின் ஏப்ரல் 27ம் திகதியின் அறிக்கையின்படி ஒரு நாளில் 14 முதியவர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்களை அரசாங்கம் விசேடமாகக் கவனிக்வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

கேள்வி: சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்வதை ஏன் அரசாங்கம் தடுக்க நினைக்கின்றது?

பதில்: இந்த 3 இலட்சம் பேருக்குள் விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் ஊடுருவி இருக்கவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கின்றது. இது ஒருவேளை உண்மையான நிலையாக இருந்தாலும்கூட, அதை நாங்கள் எற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்கிறார்கள் தாங்கள் இந்த விடுதலைப்புலிகள் பற்றிய விபரங்களைத் திரட்டிய பின்னர்தான் அங்கு மற்றவர்கள் செல்வதை அனுமதிக்கமுடியும் என்று. நாங்கள் இதை வன்மையாக எதிர்க்கின்றோம். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், நீங்கள் இந்தத் தகவல்களைத் திரட்டுகின்ற அதேநேரம் அங்கு சர்வதேச நிறுவனங்கள் செல்வதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று. இந்த நேரத்தில் சுயாதீன கண்காணிப்பாளர்கள் அங்கு இருக்கவேண்டும். இவைகள் தடுப்பு முகாம்கள்தான். ஏனென்றால், இந்த முகாம்கள் இராணுவத்தால் காவல் காக்கப்பட்டு வருகின்றன. முகாம்களில் உள்ளவர்கள் நினைத்தபடி நடமாடமுடியாது. அவர்கள் முகாம்களிற்கு வெளியே செல்ல முடியாது. அதற்குப் பல வகையான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் உள்ளவர்களை மற்றவர்கள் சென்று பார்க்க முடியாது. இன்னும் என்ன நடக்கின்றதென்றால், துணைப்படையினர், (ஏற்கனவே புலிகளில் இருந்து வெளியேறியவர்கள்), முகமூடியணிந்த தலையாட்டிகளுடன் சென்று அங்குள்ளவர்களை அடையாளம் காட்டிய பின்னர் அவர்கள் பிடித்துக்கொண்டு செல்லப்படுகிறார்கள். கடந்த வாரம் 11வயதுக்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 200 சிறுவர்கள் மனிக் பாமில் இருந்து நீலங்குளம் முகாமிற்கு கோண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் இதற்கொரு பட்டியலைத் தயாரிக்கவேண்டும். பெற்றோர்கள் நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள். நாங்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல். இந்த 3 இலட்சம் பேரினதும் பட்டியல். ஒருவர் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டால் அது பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லை. எனவே ஒருவருக்கு என்ன நடக்கின்றதென்பதை எப்படி அறிவது? எனவே மக்கள் தொலைந்து போவதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நாங்கள் இதுபற்றி மிகவும் கவலைப்படுகிறோம்.

கேள்வி: இந்த மக்களுக்கு உதவுவதற்கு எந்த சர்வதேச நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன?

பதில்: ஐநாவின் அகதிகளுக்கான உயர்மன்றம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம். இவர்கள் இப்படியான இக்கட்டான நிலைமைகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள். ஆனால் இப்போதைக்கு அவர்களுக்கு உள்ளே செல்வதற்கு தடைகள் உள்ளன.

கேள்வி: காணாமல் போதல் பற்றி நீங்கள் எவ்வாறான கதைகளைக் கேள்விப்படுகிறீர்கள்?

பதில்: ஒரு முகாமில் இருந்து ஒருவர் வெளியே கொண்டு செல்லப்படுதல் என்பது காணாமற்போதல் என்பதற்குள் அடங்ககின்றது. ஏனென்றால் ஒருவர் எங்கு செல்கின்றார் என்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. விடுதலைப்புலிகள் என்று சொல்லப்பட்ட சரணடைந்தவர்களும் பிடிபட்டவர்களும் கிட்டத்தட்ட 10000 என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது. அவர்கள் யார் என்பது தெரியாது. அத்துடன் கடைசிக் காலத்தில் பிடிபட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர், அதாவது விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்களின் குடும்ப அங்கத்தினர் - உதாரணத்திற்கு> சூசையின் மனைவி, பிள்ளைகள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எங்கே என்று எங்களுக்குத் தெரியாது. சில குறிப்பிட்டவர்களைப் பற்றி அறிவதற்கு முயற்சி எடுக்கிறோம். ஆனால் முடியவில்லை.

கேள்வி: தடுப்புமுகாம்களில் நடக்கும் சித்திரவதைகள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. அதுபற்றி?

பதில்: இலங்கையின் உளவுத்துறையின் சித்திரவதை எவ்வளவு பிரசித்தமானது என்பது உங்களுக்குத் தெரியும். ஐநா சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் 2007ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இது பற்றிக் கண்டித்திருக்கிறார். அவசரகாலச் சட்டத்தின்மீது அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்மீது அல்லது சாதாரணமாக கைதானவர்கள் என்று எவரும் இந்த மோசமான சித்திரவதைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

சரி, சித்திரவதையைவிட்டாலும்கூட, அளவுக்கதிகமான மக்கள் ஓரிடத்தில் இருப்பதனால் ஏற்படுகின்ற உபாதைகள். சுகாதார வசதி, மருத்துவ வசதி இல்லாத நிலைமைகள். அதற்கும் மேலாக நடைபெறுகின்ற வதைகள்.

இப்படியான சித்திரவதைக்குட்பட்டவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை எங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தஞ்சம் கோரி வந்தவர்கள். எனவே நான் நினைக்கிறேன் இதுபோன்ற சாட்சியங்கள் எங்களிடம் ஏராளமாக இருக்கின்றன.

கேள்வி: தற்போதைய சூழலில் இலங்கை அரசாங்கத்தின்மீது எவ்வகையான அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியும்? யாரால் பிரயோகிக்கமுடியும்?

பதில்: இன்றைய சூழலில் சர்வதேச சமூகம் ஒரு விடயத்தைத் தான் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் முதலில் முகாம்களிற்குள் தடையின்றிச் செல்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும். மத்தியப்படுத்தப்பட்ட ஒரு தரவு மையம் உருவாக்கப்படவேண்டும். தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யபட்டவர்கள் இப்படி... இவையெல்லாம் உண்மையில் மிகவும் அடிப்படையானவை. நாங்கள் எப்போதுமே விடுதலைப்புலிகள் ஒன்றுமே செய்யவில்லை அல்லது அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்லவில்லை. நாங்கள் சொல்கிறோம் இவைகள் எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து அதைப் பகிரங்கமாக வெளியிடுங்கள் என்று. இறுதிக்கால இராணுவ நடவடிக்கைகளின்போது எத்தனைபேர் இறந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. 20000பேர் வரை என்று தகவல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இதை மறுக்கிறது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் சார்பாகவாவது இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்க வேண்டும். இவர்களுடைய உறவினர் அங்கு வைத்தியசாலையிலா, தடுப்பு முகாம்களிலா, சிறையிலா அல்லது இறந்துவிட்டார்களா என்பதை அவர்கள் அறியவேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: யார் அந்த சர்வதேச சமூகம்? யார் அந்த சர்வதேச அமைப்பு? எது அந்த நாடு? இலங்கை அரசாங்கம செவிமடுக்கக்கூடிய...

பதில்: அவை சீனா, யப்பான், தென்னாபிரிக்கா, பிரேசில். இந்த நான்கு நாடுகளும் முகாம்களுக்குள் தடையின்றிச் செல்வதற்கான வழிக்கும் முகாம்களில் இருப்பவர்களைப் பற்றிய தகவல் மையம் உருவாக்குவதற்கும். அடிப்படை மனிதாபிமான ரீதியில், உண்மையிலேயே குரல் கொடுக்குமானால், நல்லது.

கேள்வி: ஏன் இந்த நாடுகள்?

பதில்: ஏனெனில் இந்த நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகள். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வந்த எல்லா வழிகளையும் இலங்கை அரசாங்கம் மறுத்தது. இது காலனித்துவத்தின் அல்லது ஏகாதிபத்தியத்தின் சதி என்று முத்திரை குத்தியது. ஆனால் இந்த நாடுகள் எங்களுடன் கூட வரும் நாடுகள். சீனா இலங்கையில் மிகப் பெருந்தொகையான முதலீட்டைச் செய்துள்ளது. யப்பானும் கூட. பிரேசில் போன்ற நாடுகளின் பங்கு அணிசேராக் கூட்டுக்குள் கணிசமானது. தென்னாபிரிக்காவை எப்போதும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் இதனைச் செய்யலாம். இதனால் அவர்கள் எதிலும் குறைந்துவிடப்போவதில்லை.
(நன்றி: புகலி)
................................................................................

Wednesday, June 17, 2009

இலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமம் - BBC வரலாற்று ஆவணப்படம்

இலங்கையில் சிங்கள-தமிழ் இனப் போரின் காரணிகளை வரலாற்றுப் பின்புலத்துடன் ஆராயும் BBC ஆவணப்படம்.

Evolution of the Ethnic War
Part 1:


Part 2:


Part 3:

"முஸ்லிம்களை வெளியேற்றுவோம்!" - ஐரோப்பிய தொலைக்காட்சியில் பேரினவாத வெறி

"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்." - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்காணல்

கடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாக வென்று, ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை அறிவித்த ஊடகங்கள், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அலை பரவுவது போலவும், பெருமளவு மக்கள் இனவெறிக் கட்சிகளுக்கு வாக்களித்தது போலவும் பிரமையை தோற்றுவித்துள்ளன. வேற்றினத்தவருக்கு எதிராக இனவாதம் பேசும் கட்சிகள் கணிசமான வாக்குப் பலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவானது உண்மை தான். ஆனால் இவை ஒப்பீட்டளவில் மிகக் குறைவான ஆசனங்களையே பெற்றுள்ளன.

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத வில்டர்சின் கட்சி நான்கு ஆசனங்களையும், பிரித்தானியாவில் குடிவரவாளர்/அகதிகளுக்கு எதிரான BNP இரு ஆசனங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்க வெற்றி தான். புதிய அங்கத்துவ நாடுகளான ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலும் வேற்றினத்தவரை சகித்துக் கொள்ளாத கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை தன்னிலும் பெற்றுள்ளன. இதே நேரம் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரிகள் தோல்வியுற்றுள்ளன.

தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஊடகங்கள், தீவிர இடதுசாரிக் கட்சிகளின் வெற்றியை இருட்டடிப்பு செய்ததன் மர்மம் என்ன? அயர்லாந்தில் (திரொஸ்கிச) உழைப்பாளர் கட்சி இரு ஆசனங்களையும், செக் குடியரசில் (மார்க்சிச லெனினிச) கம்யூனிஸ்ட் கட்சி நான்கு ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிற ஐரோப்பிய மக்கள் அறியக் கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக நடந்து கொள்கின்றன.

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத பேச்சுகளால் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக, தீய வழியில் பிரபலமடைந்துள்ள வில்டர்சின் வெற்றியை அடுத்து, பரவலான ஊடக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றிரவே, ஐரோப்பிய ஊடகங்களில் "வில்டர்ஸ் புராணம்" களை கட்டியது. டென் மார்க் தொலைக்காட்சி ஒன்று வில்டர்சை அழைத்து செவ்வி கண்டது. வில்டர்ஸ் இந்த நேர்காணலில், ஐரோப்பாவில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருபது மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2025 ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி விடும். அப்போது ஐரோப்பாவில் மூன்றில் ஒருவர் முஸ்லீமாக இருப்பர்." என்று பூச்சாண்டி காட்டுகின்றார். "முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்க மறுப்பதாகவும், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும், ஜிஹாத் ஆதரவாக இருப்பதாகவும்..." இவ்வாறு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.

இதுவரை காலமும் நவ-நாசிச, பாசிச கட்சிகளே, மேற்குறிப்பிட்ட பொய்யான தரவுகளை பரப்புரை செய்து வந்தன. தற்போதெல்லாம் வில்டர்ஸ் போன்ற பாசிஸ்ட்கள் "வெகுஜன அரசியல்வாதிகள்" என்ற போர்வையில் இனவெறி நஞ்சை கக்குகின்றனர். வில்டர்ஸ் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் பல நவீன பாசிச அகராதியில் இடம்பெறத்தக்கவை. முஸ்லிம்கள் ஐரோப்பாவை "காலனிப்படுத்துவதாக", காலனியத்திற்கு புதிய விளக்கம் கொடுப்பார். தன்னை எதிர்க்கும் வெளிநாட்டவரை "இனவெறியர்கள்" என்றழைப்பார். வீதியில் ரவுடித்தனம் செய்யும் வேலையற்ற பொறுக்கிகளுக்கு "தெருப் பயங்கரவாதிகள்" என நாமம் சூட்டியுள்ளார்.

குறிப்பாக மொரோக்கோ குடிவரவாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்மை தான். இருப்பினும் அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொகையினர் தான். பெரும்பான்மை மொரோக்கோ சமூகத்தினர் தாமுண்டு, தமது வேலையுண்டு என்று அமைதியாக வாழ்பவர்கள். ஒரு சில கிரிமினல் இளைஞர்களை உதாரணமாகக் காட்டி, முஸ்லிம்கள் அனைவரையும் கிரிமினல்களாக காட்டும் வில்டர்சின் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். தற்போது "முஸ்லிம்களை மட்டும் தானே வெளியேற்றுவார்கள்." என்று பிற சிறுபான்மை சமூகத்தினர் அலட்சியமாக இருந்தால், அவர்களுக்கும் அந்த நிலை வர அதிக காலம் எடுக்காது. கிரிமினல் செயல்களில் ஈடுபடுவோர், புலம்பெயர்ந்த நாட்டில் குறுந்தேசியவாதம் பேசுவோர் பிற சமூகங்களிலும் உள்ளனர். அவர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வாழும் அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. ஐரோப்பிய பேரினவாதிகள் அதனை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர். தீவிரவாத முஸ்லிம்களால் மொத்த ஐரோப்பிய சமூகத்திற்கும் ஆபத்து என்று பயமுறுத்துவதன் மூலம், பெரும்பான்மை ஆதரவை திரட்டிக் கொள்கின்றனர். அரபு-முஸ்லிம்களல்லாத பிற சமூகங்களான துருக்கியர், குர்தியர், பஞ்சாபியர், தமிழர் மத்தியில் குறுந்தேசியவாத அரசியல் செல்வாக்கு அதிகம். தற்போது இவர்களின் தேசிய இன அரசியல், ஐரோப்பிய பேரினவாதத்திற்கு எதிரானதல்ல போன்று தோன்றலாம். ஆனால் ஐரோப்பா முழுவதும், ஒரே கலாச்சார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடும் பேரினவாதத்தின் பாதையில் இவையெல்லாம் தடைக்கற்களாக தெரிகின்றன.

வில்டர்ஸ் பற்றிய மேலதிக தகவல்களை எனது முன்னைய பதிவுகளில் வாசிக்கலாம்.
- இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
- சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்


டென் மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்டேர்சின் நேர்காணல் வீடியோ (in English):


Geert Wilders in Denmark: Deporting millions of Muslims may be necessary

Sunday, June 14, 2009

ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"


"ஈரானிய அதிபர் தேர்தலில் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன."

மேற்குலகுடன் மோதல் போக்கை பின்பற்றும் கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் அஹ்மதின்ஜாத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என மேற்கத்திய ஊடகங்கள் பல ஆரூடம் கூறி வந்தன. அவருக்கு எதிராக போட்டியிட்ட முசாவி ஒரு சீர்திருத்தவாதியாக (அதாவது லிபரல் போக்கு) ஊடகங்களால் காண்பிக்கப்பட்டார். முசாவிக்கு பின்னால் திரண்டிருந்த இளைஞர் பட்டாளத்தை படம் பிடித்துக் காட்டி, முசாவிக்கு நாடு முழுவதும் ஆதரவு இருப்பதாக கூறிக்கொண்டன. பொதுவாக தமது அரசியல் கொள்கை சார்ந்த ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அபிலாஷை காரணமாக இந்த முறையும் சற்று அதிகமாகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

பொதுவாகவே மத்திய கிழக்கு நாடுகளைக் குறித்த புரிந்துணர்வு, மேற்குலகில் குறைவு. அதிலும் ஈரானின் உள்நாட்டு விவகாரம் பற்றி எப்போதும் தவறாகவே கற்றுக் கொள்கின்றனர். ஈரானில் இருந்து அமெரிக்காவிற்கு உயர்கல்வி கற்க சென்ற மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பின்வருமாறு தெரிவித்தார். ஈரானில் பெண்கள் பல்கலைக்கழக கல்வி கற்றிருக்கிறார்கள் என்ற விஷயத்தை அப்போது தான் சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டார்களாம். ஈரான் இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடு என்பதால், அங்கே பெண் கல்விக்கு தடை உள்ளதாக "அனைத்தையும் அறிந்த" அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஈரான் அரசியல் பற்றிய புரிதலும் அவ்வாறே பத்தாம்பசலித்தனமாக உள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாத சர்வாதிகாரம் நிலவுவதாக பொதுவான கருத்து நிலவுகின்றது. அப்படியானால் எதற்காக தேர்தல் முடிவுகளை ஆர்வமாக அவதானிக்கிறார்கள்? இதில் இருக்கும் முரண்பாட்டை பலர் உணர்வதில்லை. சாதாரண மக்களுக்கு அரசியல் தெளிவின்மை இருக்கலாம். மேற்கத்திய ஆட்சியாளர்களுக்கும், ஊடகவியலாளருக்கும் அரசியல் விஞ்ஞானம் தெரியாது என்று சொல்ல முடியாது. அவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு உண்மையை மக்களுக்கு மறைக்கிறார்கள். அந்த உண்மை "அரசியல் நிர்ணயச் சட்டம்". ஆம், ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் இருக்கின்றது. சர்வாதிகாரம் இருக்கின்றது. ஆனால்... அவையெல்லாம் மிக நுட்பமாக கையாளப்படுகின்றது. இதை பொது இடங்களில் வெளிப்படும் சில அசம்பாவிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு எடை போட முடியாது.

இன்றைய ஈரானின் அரசியல் கட்டமைப்பு 1979 ம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியுடன் ஆரம்பமாகியது. புரட்சியை பாதுகாக்க அமைக்கப்பட்ட காவல்படை தேசத்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்து. ஆயத்துல்லா என அழைக்கப்படும் மதத்தலைவரான கொமெய்னி தேசத்தின் தலைவரானார். அமைச்சர்களும் அரசாங்கத்தை நடத்தியவர்களும் மதத் தலைவர்கள் தாம். இதை வைத்துக் கொண்டு, ஈரானில் மதம் அரியணை ஏறியிருந்தது என்று சொல்லப்படுவது உண்மை தான். ஆனால் குறிப்பிட்ட காலம் மட்டுமே மதத் தலைவர்கள் நேரடி நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த சில வருடங்களுக்குள், "புரட்சியை காக்கும் படை" எதிர்ப்பாளர்களை அழித்தொழித்து விட்டது. புதியதோர் அரசியல் நிர்ணயச் சட்டம் எழுதப்பட்டு விட்டது. கடைசியாக சொன்ன வரிகளை தொடர்ந்து நினைவில் வைத்திருங்கள்.

ஆகவே, இப்போது அரசியல் களத்தில் குதிக்கும், தேர்தலில் எதிரும் புதிருமாக நிற்கும் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் புரட்சிக்குப் பின்னர் புதிதாக தோன்றியவர்கள். அதற்கான வழிகளை மதத் தலைவர்களே ஏற்படுத்திக் கொடுத்தனர். அதாவது தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அதற்கென திறமையுள்ள மத்தியதர வர்க்கம் ஒன்றிடம் கையளித்து விட்டு, மதத்தலைவர்கள் ஒதுங்கி விட்டனர். ஈரானின் அரசியல், பொருளாதார தலைநகரம் எப்போதும் போல தெஹ்ரான் தான். இருப்பினும் தெற்கில் அமைந்திருக்கும் "கோம்" என்ற நகரம் மதத்தலைவர்களின் நிர்வாகத் தலைமையகமாக செயற்படுகின்றது. மதத்தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடவில்லை.மாறாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டமும் மதத் தலைவர்களின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது.

ஜனநாயகத் தேர்தல் கூட, மதத் தலைவர்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் எழுதி வைத்தவை தாம். மேற்குலக நாடுகள், தமது அழுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்பது போல பெருமை பேசுகின்றன. உண்மை அதுவல்ல. இஸ்லாமியப் புரட்சியின் பரணாம வளர்ச்சி இந்த ஜனாயகத் தேர்தல். ஒன்றுமே புரியவில்லையே, தலையைச் சொரிபவர்களுக்காக ஒரு ஒப்பீடு. இங்கிலாந்து நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவ மத அடிப்படைவாத புரட்சி ஏற்பட்டது. அதற்குப் பின்னர் பாராளுமன்றமும், முடியாட்சியும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் அரசியல் நிர்ணயச் சட்டம் தோன்றியது. இன்று பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்ஜியம், நோர்வே போன்ற நாடுகளில் அது போன்ற அரசியல் அலகு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் சோஷலிசக் கட்சி போன்ற "சீர்திருத்தவாதக் கட்சிகள்" தேர்தலில் போட்டியிடவும் ஆட்சியமைக்கவும் முடியும். எந்தவொரு கட்சியும் அரசியல் சட்டத்தை மாற்ற, மன்னர் குடும்பத்தின் அதிகாரத்தை நீக்குவதற்கு விரும்பினால், அது பெரும் வில்லங்கத்தில் போய் முடியும்.

முடிக்குரிய ஜனநாயகம் போலத்தான், ஈரானின் மதவாத ஜனநாயகமும். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அஹ்மதின்ஜாத்தின் கட்சியினர், மேற்கத்திய நாடுகளில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடத் தக்கது. சீர்திருத்தவாதியான முசாவி (முன்பு கத்தாமி) ஆகியோரின் கட்சியினர், லிபரல்கள் (அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி) அல்லது சமூக ஜனநாயகவாதிகள் (ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோருடன் ஒப்பிடத் தக்கவர்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், எந்தக் கட்சி தேர்தலில் வென்றாலும் "கோம்"மில் உள்ள மதத்தலைவர்களின் அதிகாரத்தை அசைக்க முடியாது. வேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாம். அஹ்மதின்ஜாத் பகுதி, மதத் தலைவர்களுக்கு "பிரியமான பிள்ளைகளாகவும்", சீர்திருத்தவாதிகள் "தறுதலைப் பிள்ளைகள்" போலவும் நோக்கப்படுகின்றனர். அது மட்டும் தான் வித்தியாசம்.

மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல ஈரானில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தேசத்தை தலைகீழாக புரட்டிப் போடும் வல்லமை கிடையாது. அஹமதிநஜாத் மதத்தலைவர்களுக்கு நெருக்கமானவராக காட்டப்பட்டாலும், இராணுவத்தை போருக்கு தயார் படுத்தும் அதிகாரம் கூட அவருக்கு இல்லை. ஈரானில் சர்வ வல்லமை பொருந்திய சிறப்புப் படையணியான "புரட்சிக் காவல்படை" கூட அஹமதிநஜாத் சொல் கேட்டு நடப்பதில்லை. ஈரானில் அனைத்துப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக, உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா கொமெய்னி அதிகாரம் செலுத்துகிறார்.

பொதுத் தேர்தலில் அஹமதிநஜாத் குழுவிற்கும், முசாவி குழுவிற்கும் இடையில் நிலவும் போட்டியும், முரண்பாடுகளும் ஈரானில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரப் போவதில்லை. இதனை தமிழ் நாடு மாநிலத்தில், இரு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் நடக்கும் பூசல்களுடன் ஒப்பிடலாம். நிச்சயமாக, ஈரானிலும் இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சிப்பதுடன் நில்லாது, அவதூறுகளையும் அள்ளி வீசுகின்றன. தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க பாணியில் இரு வேட்பாளருக்கும் இடையில் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் இடம்பெற்றது. இதில் எதிர்த் தரப்பு வேட்பாளர் மீது தனிநபர் தாக்குதல் நடந்ததையும் காண முடிந்தது. முசாவியின் ஆதரவாளர்கள் நாசிச பாணியில் பச்சை வர்ண(கட்சியின் நிறம்) அணிவகுப்புகளை நடத்துவதாக அஹமதிநஜாத் பிரச்சாரம் செய்தார். அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு எல்லாம் அஹமதிந்ஜாத் நிர்வாகம் பொறுப்பெடுக்க வேண்டும் என்று முசாவி குற்றம் சுமத்தினார். எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை பகிரங்கமாக குறை சொல்லுமளவிற்கு அங்கே ஜனநாயகம் நிலவுகின்றமை குறிப்பிடத் தக்கது.

ஈரானில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முசாவியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் மாநகரங்களில் வாழும் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள். அதற்கு மாறாக அஹமதிநஜாத் ஆதரவாளர்கள் நாட்டுப்புறங்களில் வாழும் வசதியற்ற ஏழை மக்கள். இந்தத் தேர்தலில் 85 வீதமனோர் வாக்களித்துள்ளனர். (ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட 43வீதமானோர் மட்டுமே வாக்களித்தனர்.) மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஏழை வாக்களார்கள் அஹமதினஜாத்திற்கு வாக்களித்திருப்பார்கள், என்பதைப் புரிந்து கொள்ள ராக்கெட் விஞ்ஞானம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

சீர்திருத்தவாதி முசாவி வெற்றி பெற வேண்டுமாயின் முழு நடுத்தர வர்க்கமும், ஒரு பகுதி உழைப்பாளர் வர்க்கமும் வாக்குப் போட்டிருக்க வேண்டும். ஆனால் முசாவியின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க நடுத்தர வர்க்க நலன்களை குறிவைத்தே செய்யப்பட்டன. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்கள், நாளாந்தம் உயரும் விலைவாசியால் வாழ்வதற்கு அல்லல் பட வேண்டியுள்ளது. அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும் என்பது அவர்களது பிரச்சினை. அதற்கு மாறாக தின்று கொழுத்து, ஆடம்பரக் கார்களும், அமெரிக்க கலாச்சாரமாக வாழ்க்கையை அனுபவிக்கும் நடுத்தர வர்க்க ஈரானியர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அஹமதிநஜாத் பதவியில் இருக்கும் காலத்தில் நடந்த உலக காற்பந்தாட்டப் போட்டிகளில் ஈரான் அணி வெற்றிக் கிண்ணத்தை பெறவில்லையாம். அதற்கு முன்னர் இருந்த சீர்திருத்தவாதி கத்தாமியின் ஆட்சிக்காலத்தில் ஈரான் உதைபந்தாட்ட அணி பல போட்டிகளில் ஜெயித்ததாம். (தி கார்டியன் வீக்லி 12-6-09) நடுத்தர வரக்கத்திற்கு இவையெல்லாம் முக்கியமான பிரச்சினைகள். உதைபந்தாட்ட விளையாட்டு வெறி பொதுத் தேர்தலில் எதிரொலிக்கின்றது.

1979 ம் ஆண்டு, ஷா மன்னருக்கு எதிரான இஸ்லாமியப் புரட்சி உழைக்கும் மக்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது. நாட்டுப்புற உழைக்கும் மக்கள் ஒன்றில் கொமெய்னி தலைமையிலான இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள், அல்லது "துடே கட்சி" என அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள். இவ்விரண்டு சக்திகளும் ஒன்று சேர்ந்து, கொடுங்கோல் ஷா மன்னர் ஆட்சியை கவிழ்த்த புரட்சியை தலைமை தாங்கி நடத்தின. புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தை கையில் எடுத்த மதவாதிகள், கம்யூனிஸ்ட்களை வேட்டையாடி அழித்தார்கள். தலைவர்கள் தூக்கிலிடப் பட்டனர். உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

தேசிய முதலாளிகளின் வளர்ச்சிக்கு, மதத் தலைவர்கள் ஒரு நாளும் குறுக்கே நிற்கவில்லை. ஈரானில் பொருளாதாரம் முழுவதும் புரட்சிக்குப் பின்னர் தோன்றிய தேசிய முதலாளிகளின் கைகளில் உள்ளது. கூடவே முதலாளித்துவத்திற்கு சேவை செய்து கைநிறைய பணம் சம்பாதிக்கும் மத்திய தர வர்க்கம் ஒன்றும் உருவானது. மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர மோகத்தையும், கலாச்சார சீரழிவையும் ஆட்சியிலிருந்த மதத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. பங்களாவில் நான்கு சுவர்களுக்குள் இளவயதினரின் நடன விருந்துகள் நடக்கின்றன. சுற்றுலா மையங்களில் 'பிக்னிக்' போகும் இளஞ்ஜோடிகள் உல்லாசமாக பொழுது போக்குகின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத ஈரானில் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று சொன்னால் வெளியுலகில் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதையெல்லாம் அனுபவிப்பது, மொத்த சனத்தொகையில் 20 % மும் இல்லாத பணக்கார நடுத்தர வர்க்கம்.

நடுத்தர வர்க்கத்தில் இயல்பாகவே காணப்படும் மேலைத்தேய மோகம், அமெரிக்க அரசியல் சார்ந்ததாக இருப்பதில் வியப்பில்லை. மேற்குலக ஊடகங்கள் அதை அடிப்படையாக வைத்து பிரமைகளை தோற்றுவிக்கின்றன. ஈரானிய மக்கள் முழுவதும் அமெரிக்கா தங்களை வந்து விடுதலை செய்ய வேண்டும் என்று காத்திருப்பதைப் போல கதைகளை கட்டி விடுகின்றன. இந்தப் பின்னணியிலேயே ஈரான் தேர்தல் குறித்த மேற்கத்திய பரப்புரைகளையும் எடை போட வேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் வந்த செய்தித் தலைப்புக்கள் இவை: "... தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்தேகம்" (டைம்ஸ்) "வாக்குகள் களவாடப்பட்டு விட்டன என எதிர்க்கட்சி வேட்பாளர் முசாவி தெரிவிக்கிறார்."(நியூ யார்க் டைம்ஸ்) "அமெரிக்க அரசியல் அவதானிகள் நம்ப முடியவில்லை என தெரிவித்தனர்." (பாக்ஸ் நியூஸ்)

ம்ம்ம்... பாராளுமன்ற தேர்தல் மூலம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்று மேற்குலக அறிவுஜீவிகள் செய்து வந்த பிரச்சாரத்தை தற்போது தாமே நம்பத் தொடங்கி விட்டனர்.

Saturday, June 13, 2009

தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி


"Boys", இது ஒரு சினிமாப் படத்தின் கதையல்ல. ஈழ விடுதலை காண புறப்பட்ட ஆயுதமேந்திய அமைப்புகள், அவற்றின் ஆதரவுத் தளமான சாதாரண இளைஞர்களின் கதை இது. அப்போதெல்லாம் போராளிகளாக மாறிய இளைஞர்களை, மக்கள் "பெடியங்கள்" (boys) என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போது இது ஏதோ எமது மண்ணிற்கே உரித்தான சொல் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். இராணுவ வீரர்களையும் boys என்று அழைக்கும் கலாச்சாரம் உலகம் முழுவதும் இருப்பதை காலம் தாமதித்து தான் புரிந்து கொண்டேன். எது எப்படியிருப்பினும், போராளிகள் தமது பிள்ளைகள் என்ற உணர்வோடு "பெடியங்கள்" என்று அழைப்பது எப்படியோ எமது பேச்சு வழக்கிலும் புகுந்து கொண்டது.

1983 கொழும்பில் இடம்பெற்ற தமிழர் விரோத கலவரமானது, வட இலங்கையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய காலத்தில் இந்த கதை நகர்கிறது. அதுவரை நடந்த கலவரங்களில் பெரியது என்பதால் யாழ் குடாநாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில், பாதுகாப்புப் படையினர் சந்தேகப்பட்ட இளைஞர்களை எல்லாம் கைது செய்து தென்னிலங்கைச் சிறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே யாழ் நகரிற்கு அருகில் 13 இராணுவவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. பெருந் தொகையில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் அதுவே முதல் முறை. கலவரத்தின் பின் விளைவாக இலங்கை அரசியலில் மூக்கை நுழைக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, போராளிக் குழுக்களுக்கு இராணுவ பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கிக் கொண்டிருந்தது. பல்வேறு போராளிக் குழுக்களும், இந்திய நிதியுதவியை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருந்தனர்.

ஆரம்ப காலங்களில், பலர் இயக்கங்களின் கொள்கை வேறுபாடுகளை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அனைத்தையும் ஈழ விடுதலைக்கு அர்ப்பணித்த சகோதர இயக்கங்களாக கருதினார்கள். பாடசாலையில் எம்மோடு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் ஏதாவதொரு இயக்கத்தினால் கவரப் பட்டு போய் சேர்ந்து கொண்டிருந்தார்கள். ஒழுங்காக வகுப்பிற்கு வருபவர்கள் திடீரென காணாமல் போவார்கள்.

அவ்வாறு "காணாமல் போனவர்கள்" எல்லோரும் இந்தியாவிற்கு பயிற்சிக்கு போய் விட்டார்கள் என்பது பொதுவான அபிப்பிராயம். அன்று நாடு முழுவதும் தமிழரின் உணர்வுபூர்வமான விடுதலை வேட்கை இருந்த போதிலும், விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாணவர்கள் சிறு தொகையினர் தான். பெரும்பான்மையான பதின்ம வயது இளைஞர்கள் தமது படிப்பை பல தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தனர்.

யாழ்ப்பாணவாசிகள் மத்தியில் மத்தியதர வர்க்க மனோபாவம் சற்று அதிகமாகவே மேலோங்கி காணப்படும். பெற்றோர்கள் பொது இடங்களில் தமிழீழப் போராட்டத்தில் இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு பற்றி புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் தனது வீட்டில் இருக்கும் பதின்ம வயது மகன் இயக்கத்திற்கு போய் விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
"தனது மகன் தறுதலையாக திரிந்தாலும் பரவாயில்லை. விடுதலைக்குப் போகக் கூடாது" என்பதில் பெற்றோர்கள் குறியாக இருந்தார்கள். எல்லோரும் போராடப் போய் விட்டால் மற்ற தொழில்களை யார் பார்ப்பது, என்று ஒரு "தேசாபிமானக் காரணம்" ஒன்றை சொல்வதற்கு தயாராகவே வைத்திருப்பார்கள். இருந்தாலும் போராடப் போகாமல் வீட்டிலே தங்கி விட்ட எமக்கு சொல்வதற்கு வேறொரு காரணம் இருந்தது. "எல்லாப் பையன்களும் இயக்கத்திற்குப் போய் விட்டால், ஊரில் இருக்கும் திருமணமாகாத பெண்களை யார் சைட் அடிப்பது?"

ஆகவே பெரியோர்களே! தேச நலன் கருதி ஊரில் எஞ்சிய விடலைப் பையன்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்தோம். "தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி “ என்று எமக்கு நாமே பெயர் சூட்டிக் கொண்டோம். நாம் எதை சாதித்தோம் என்று சாதாரணமாகக் கேட்டு விடக் கூடாது. எமது நண்பர்கள் யாராவது இயக்கத்தில் சேர்ந்து, இந்தியா பயிற்சிக்கு செல்ல திட்டமிட்டால் அதற்கு எமது உதவியை நாடுவார்கள். நாமும் வானரப் படையாக செயல்பட்டு, நண்பரின் உடைகள், உடமைகளை பெற்றோருக்கு சந்தேகம் ஏற்படாதபடி கொண்டு சென்று கொடுப்போம். (எந்தப் பையனாவது பயணப் பொதியை தயாராக வைத்திருந்தால் வீட்டில் சந்தேகப் பட மாட்டார்களா?) சில நேரம் சம்பந்தப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்து கூட்டிச் செல்லும் வரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்போம். நண்பர் எந்த இயக்கத்தில் சேருகிறேன் என்ற தகவலை மட்டும் வழங்கினால் போதுமானது. ஏனென்றால் "காணாமல் போகும்" நண்பரின் பெற்றோர் எம்மைத் தான் முதலில் தொடர்பு கொள்வார்கள்.

இப்படித்தான் ஒரு முறை எமது நண்பர் ஒருவர், எம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே காணாமல் போய் விட்டார். நண்பரின் தந்தை ஒரு பேராசிரியர். தனக்குத் தெரிந்த இயக்கங்களின் தலைவர்களை எல்லாம் தொடர்பு கொண்டு விசாரித்துப் பார்த்து விட்டார். எங்குமே தனது அருமைப் புதல்வன் போன சுவடு தெரியாததால், எம்மிடம் வந்து முறையிட்டார். பேராசிரியர் என்பதால், தனது மகன் ஒரு வேளை சி.ஐ.ஏ. அல்லது கே.ஜி.பி.யில் சேர்ந்து விட்டானோ? என்று சர்வதேச மட்டத்தில் சிந்தித்தார். என்ன இருந்தாலும் அன்று அவர் RAW மட்டத்திலும் விசாரித்திருக்கலாம். அன்று இருந்த ஈழ விடுதலை அமைப்புகளின் விபரங்கள் யாவும் RAW வசம் இருந்த விஷயம் அனைவரும் அறிந்ததல்லவா?

இந்தியாவிற்கு இராணுவப் பயிற்சிக்கு சென்றவர்கள் குறைந்தது ஆறு மாதம் கழித்தாவது திரும்பி வருவார்கள். ஊர் திரும்புபவர்கள் முதலில் தமது தாய், தந்தையரை பார்த்து விட்டு, எம்மோடும் பழைய நட்பை புதுப்பிப்பார்கள். இருப்பினும் எமது நட்பில் முன்னொருபோதும் இல்லாத வித்தியாசம் காணப்படும். இயக்க நண்பருக்கு புதிய தோழர்கள் தோன்றியிருப்பார்கள். எம்மை சந்திக்க வரும் போதும், அந்த புதிய தோழர்களை கூட்டிக் கொண்டு தான் வருவார்கள். அவர்களின் நடத்தையில் ஒரு வகை ஹீரோத் தனத்தை தரிசிப்போம். நாமும் அவர்களிடம் இருந்து சில "இயக்க ஸ்டைல்களை" கற்றுக் கொண்டோம்.

சிவில் நிர்வாகம் அரசாங்கத்தின் கையை விட்டகன்று, ஆயுத பாணி இயக்கங்களின் பொறுப்பில் வந்து கொண்டிருந்த காலம் அது. கட்டான உடல்வாகு கொண்ட வாலிபர்கள் என்றால், இயக்கப் பெடியங்களாக இருக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். எங்கு சென்றாலும் இயக்கப் பெடியங்களுக்கு முதல் மரியாதை வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. சில நேரம் சாதாரண (தறுதலை) இளைஞர்களும் அந்த முதல் மரியாதைக்கு உரித்தானார்கள். எமது நண்பர் ஒருவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த போது அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டியிருந்தது. சிறிய காயம் என்பதால் அரசாங்க வைத்தியசாலையில் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளில் நாம் சென்று இறங்கிய போது கிடைத்த மரியாதையே தனி. தாதிகள் வரிசையில் நின்ற அத்தனை பேரையும் விட்டு விட்டு நண்பரை விசேஷமாக கவனித்தார்கள்.

தொள தொளப்பான பெரிய சைஸ் சேர்ட் அணிந்து கொள்வதும், அன்று பெரும்பாலான விடலைப் பையன்களால் பின்பற்றப் பட்ட "இயக்க ஸ்டைல்". (இடுப்பில் சொருகியிருக்கும் கைத்துப்பாக்கியை மறைக்க வேண்டுமாம்.) சிலர் வீட்டில் இருக்கும் அப்பாவின் சேர்ட்டை தூக்கிப் போட்டுக் கொண்டு வருவார்கள். இயக்க ஸ்டைல் சேர்ட்கள் யாழ் குடா நாட்டில் புதிய பாஷனாகியது. துணி வியாபாரிகளும் இது தான் தருணம் என்று பெரிய சைஸ் சேர்ட் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்தார்கள். "தமது இயக்க உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக பெரிய சைஸ் சேர்ட் அணியச் சொல்ல, அது தற்போது அனைவரும் அணியும் பாஷனாகி விட்டது", என்று ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத இயக்கப் பொறுப்பாளர் அங்கலாய்த்தார்.

விடலைகளின் கூட்டம் கூடுமிடம், அனேகமாக ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் (நீர் வரண்ட ஆற்றின் மேல் கட்டப்பட்ட) மதகாக இருக்கும். மதகின் மேல் குந்தியிருந்து கொண்டு ஊரில் நடக்கும் வம்பு, வழக்கை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்போம். அங்கே வந்து கலந்து கொள்ளும் இயக்கத் தோழர்கள் சிலர், அரசியல் ஆய்வுகளையும் புகுத்துவார்கள். சில சமயம் அந்த வழியால் எமது நண்பரொருவரின் தந்தையார் வந்தால், நண்பர் மதகிற்கு கீழ் ஒளிந்து கொள்வார். இயக்கத் தோழர் இத்தகைய போலி மரியாதைகளை கண்டித்து ஒரு அரசியல் வகுப்பெடுப்பார். மேலைத்தேய நாடுகளில் காணப்படும் தனிநபர் உரிமைகளை அப்படியான தருணங்களில் தான் கற்றுக் கொள்வோம்.

இராணுவ, பொலிஸ் முகாம்கள் ஐந்து அல்லது பத்து கி.மீ. தூர இடைவெளியில் அமைந்திருந்தாலும், வீதிகளில் இராணுவ வாகனங்கள் அடிக்கடி ரோந்து சுற்றுவது வழக்கம். வீதியோரமாக இளைஞர்கள் சிறு குழுவாக திரண்டு இருந்தால் படையினருக்கு சந்தேகம் ஏற்படும். ஒரு முறை குழுவாக வீதியில் கூடியிருந்த எம்மை, தூரத்தில் வந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று பார்த்து விட்டது. நாம் அந்த இடத்தில் "கண்ணி வெடி வைக்க சதி செய்வதாக" நினைத்தார்கள் போலும். எம்மை நோக்கி ஜீப் வண்டி ஓடி வருவதற்குள், குறுக்கு வீதிக்குள் இருக்கும் உறவினர் வீட்டிற்குள் நுழைந்து, சமர்த்துப் பிள்ளைகளாக அவரவர் வேலையை பார்த்துக் கொள்வதாக நடித்தோம்.

இந்திய இராணும் இருந்த காலத்தில் வீடு வீடாக சோதனையிட வருவார்கள். அப்போதெல்லாம் "ஸ்டுடென்ட்" என்று சொன்னால் விட்டு விடுவார்கள். ஒரு முறை சோதனை இட வந்த இந்திய சிப்பாய், எமது நண்பர் ஒருவரின் சட்டைப்பையில் சிகரட் பெட்டியை கண்டு விட்டான். ஸ்டுடென்ட் ஆக இருப்பவன் சிகரட் பிடிப்பானா? என்று அந்த சிப்பாய்க்கு ஒரே குழப்பம். சந்தேக நபராக இழுத்துச் சென்று விட்டார்கள்.

பஞ்சமா பாதகங்களில் சிகரட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவையும் அடங்கும் என்பது யாழ் வைதீக சமூகம் விதித்த கட்டுப்பாடுகள். அத்தகைய சமூகத்தில் உதித்த விடுதலை இயக்கங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ சபைகளில் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள், ஒரேயிரவில் கெட்ட பழக்கங்களை ஒழித்து, நன்மக்களாக பைபிளும் கையுமாக காட்சி தருவார்கள். அதுபோல இயக்கங்களில் சேர்ந்த நண்பர்களும் புதிய மனிதர்களாக மாறியிருப்பார்கள். பிஸ்டலும் கையுமாக வரும் இயக்க நண்பர்கள், விடுதலைக்கு அர்ப்பணித்த வாழ்க்கை பற்றி சில பிரமைகளையும் உருவாக்கி விட்டுச் செல்வார்கள்.

பெரும்பாலும் வலதுசாரி அரசியல் சார்ந்த இயக்கங்களில் தனிநபர் ஒழுக்க விதிகள் கறாராக பின்பற்றப்படும். அதற்கு மாறாக இடதுசாரி அரசியல் சார்ந்த இயக்கங்களில் நெகிழ்ச்சியான தன்மை காணப்படும். "ஈழப் புரட்சி அமைப்பு" என்றொரு இயக்கம் இருந்தது. அதன் உறுப்பினர்கள் தினசரி இயக்க செலவிலேயே சிகரட் புகைக்கும் பாக்கியம் பெற்றவர்கள். அதனால் அவர்களே தமது இயக்கத்திற்கு "ஈழப் புகைத்தல் அமைப்பு" என்று மாற்றுப் பெயர் ஒன்றையும் சூட்டியிருந்தனர்.

ஊரில் இருக்கும் பணக்கார மத்தியதர வர்க்க குடும்பங்கள் எல்லாம், தமது வீடுகளை விட்டு விட்டு பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் குடியேறி விட்டிருந்தனர். வீட்டுச் சொந்தக்காரர்கள், "ஆளரவமற்ற தமது வீட்டில் பேய் குடி புகுந்து விடும்" என்று நினைப்பார்கள் போலும். தமது வீட்டை பராமரிக்கும் படி உறவினரிடம் பொறுப்புக் கொடுத்து விட்டுத் தான் செல்வார்கள். ஊரில் எந்தெந்த வீடுகள் காலியாக இருக்கின்றன என்ற விபரமெல்லாம் எமது விடலைப் பசங்க கைவசம் இருக்கும். எமது துப்புக் கிடைத்தவுடன், ஏதாவதொரு இயக்கத்தின் உறுப்பினர்கள் அந்த வீட்டை உடைத்து, தமது முகாமாக அல்லது அலுவலகமாக மாற்றி விடுவார்கள். பிறகென்ன, வீட்டை பராமரிக்க பினாமியாக நியமிக்கப்பட்டவர், மதில் மேல் நீளும் இயந்திரத் துப்பாக்கியை பார்த்து மிரண்டு ஓடி விடுவார்.

பல இயக்கங்கள் இராணுவ மேலாதிக்கத்தை மக்களிடம் வெளிப்படுத்தும் முனைப்புக் கொண்டிருந்தன. எங்காவது மக்கள் குடியிருப்பின் மத்தியில் இயக்க முகாம் இருந்தால், அதைச் சுற்றி கெடுபிடிகள் காணப்படும். அதே நேரம், ஆளரவம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாத சில இயக்க முகாம்களும் இருந்தன. ஒருமுறை ஒரு கிராமத்தில் நடந்த திருமண விழாவிற்கு, பெண் வீட்டுக்காரர்கள் தறுதலையாக சுற்றும் விடலைப் பையன்களையும் அழைத்திருந்தனர்.

பெண் வீட்டுக்காரருக்கு ஏதோ தாங்கள் மெய்ப்பாதுகாவலர்களை வைத்துக் கொள்ளும் நினைப்பு. தொலை தூர ஊரில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து சேர இரவாகி விட்டது. சீர்வரிசைகளுடன் வீதியில் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள். நமது தறுதலைப் பையன்கள் வீதியோர மாமரத்தில் ஏறி மறைந்திருந்தார்கள். "சத்தம் போடாமல் போகத் தெரியாதா?" என்று ஒரு அதட்டு அதட்டினார்கள். அவ்வளவு தான். "அருகில் எங்கோ இயக்க பெடியன்களின் முகாம் இருக்கிறது" என்ற நினைப்பில், அந்தக் குழு அமைதியாக நடையைக் கட்டியது.

விட்டேற்றியாக ஊர் சுற்றும் தமிழீழ விடலைகள், குறைந்த பட்சம் ஏதாவதொரு நல்ல காரியமாவது சமூகத்திற்கு செய்யவில்லையா? இயக்க அரசியலின் செல்வாக்கு காரணமாக, பல புதிய கருத்துகள் எமக்கு அறிமுகமாகின. புரட்சிகரக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதால், எமக்கு முந்திய தலைமுறையை விட முற்போக்கானவர்களாக இருந்தோம். வெட்டியாக ஊர் சுற்றினாலும் அவ்வப்போது சமூகத்திற்கு நலன் பயக்கும் செயல்களையும் செய்யத் தவறவில்லை.

ஈழப்போர் தீவிரமடைந்து வரும் நேரம், இலங்கை அரசு யாழ் குடாநாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்தது. எமது வீடுகளில் உணவுப் பொருட்கள் முடிந்து கொண்டிருந்தன. கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எமது ஊரில் அரசாங்க கட்டுப்பாட்டில் இயங்கிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் வாரக்கணக்காக பூட்டிக் கிடந்தது. ஒரு நாள் ஊரில் இருந்த இளைஞர் பட்டாளம், மக்களை அழைத்துச் சென்று கூட்டுறவுச் சங்கத்தை உடைத்தது. கடையில் இருந்த உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தது.

ஈழத்தில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்த, குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வான சமூகத்தை சீர்திருத்த வலதுசாரி ஆயுதபாணி இயக்கங்கள் முன்வரவில்லை. "தமிழீழ தேசியம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான சர்வரோக நிவாரணி" என்று கூறி வந்தார்கள். ஒரு வலதுசாரி விடுதலை இயக்கம் தனது உத்தியோகபூர்வ பத்திரிகையில் பின்வருமாறு எழுதியது: "இலங்கையில் சிங்கள வர்க்கத்தின் மேலாதிக்க வெறி, தமிழ் வர்க்கத்தை ஒடுக்குகின்றது. இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வர்க்கப்போராட்டம் என அழைக்கப்படும்." நல்ல வேளை, வர்க்கப்போராட்டத்திற்கு தமிழ் தேசியவாதிகள் கொடுத்த விசித்திர விளக்கத்தை கேட்பதற்கு கார்ல் மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை.

சாதிய சமூகமான யாழ் குடாநாட்டில், இயக்கங்களின் வருகைக்குப் பின்னர் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான். இருப்பினும் எந்தவொரு இயக்கமும் சமூகப் புரட்சியை தலைமை தாங்கி நடத்த முன்வரவில்லை. சாதிச் சண்டைகள் தமிழ் தேசியப் போராட்டத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்று சில இடதுசாரி இயக்கங்களும் நம்பின. இருப்பினும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தலித் மக்கள் சம உரிமையை தாமாகவே பெற்றுக் கொண்டார்கள். இதற்காக அவ்வப்போது சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தையும் நம்மூர் ஊர் சுற்றும் பையன்கள் நடத்திக் காட்டினார்கள்.

ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் கிணற்றில் தலித் மக்கள் சென்று தண்ணீர் அள்ள ஊக்குவித்தது, போன்ற சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர், இப்படியான சம்பவங்கள் நடந்தால் வன்முறையை ஏவிவிடும் ஆதிக்க சாதியினர் பேசாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். கணிசமான அளவு தலித் இளைஞர்களும் இயக்கங்களில் சேர்ந்திருந்ததால் அவர்கள் எதிர்வினையாற்ற அச்சமுற்றிருக்கலாம். அல்லது போராளிகளை திரட்டுவதற்கு, அடித்தட்டு வர்க்கமான தலித் சமூகம் தேவை என்ற காரியவாதம் காரணமாக இருக்கலாம்.

பொதுவாக சரித்திரம் சாமானியர்களைப் பற்றி எழுதப்படுவதில்லை. ஆனால் சாதாரண மக்கள் சரித்திரத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். "உதவாக்கரைகளாக ஊர்சுற்றும் தறுதலைகள்" என பட்டம் சூட்டப்பட்ட சாதாரண பையன்களும் ஈழ விடுதலைப் போரில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். இது எங்களின் "Boys" கதை.

*********************************************************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்

****************************************************************************

Thursday, June 11, 2009

ஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்

ஈரான் அரசியல் கைதிகளுக்கு சன நெரிசல் மிக்க சாலைகளில் பகிரங்கமாக
தூக்குத் தண்டனை வழங்குவது ஒரு வழமையான நிகழ்ச்சி. இது குறித்த வீடியோ ஆவணங்கள் அரிதாகவே வெளியுலகை எட்டியுள்ளன. பல மனித உரிமை நிறுவனங்களின் கண்டனங்களையும் மீறி, அண்மையில் ஐந்து குர்திஷ் விடுதலைப் போராளிகள் தூக்கிலடப்பட்டனர். ஈரானில் சிறுபான்மை இனமான குர்தியரின் விடுதலைக்காக போராடும் PJAK (Party for Free Life in Kurdistan) என்ற இயக்க உறுப்பினர்களே இவ்வாறு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டனர்.
Execution Sentence for a Kurdish Political Activist in Iran
ஈரானில் பாசிஸ மதவாத கொடுங்கோலாட்சியின் சாட்சியமாக இந்த வீடியோ உள்ளது. ( இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)


Wednesday, June 10, 2009

ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்


1983 ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னரான காலகட்டம். யாழ் மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் தொடங்குவது போல, விடுதலை இயக்கம் தொடங்குவது "fashion" ஆகிப் போன காலகட்டம் அது. "கடிதத் தலைப்பு வர்த்தக ஸ்தாபனம்" போல, "துண்டுப் பிரசுர இயக்கங்கள்" பல தோன்றியிருந்தன. பஸ் தரிப்பு நிலையங்களில், சந்தைகளில், பாடசாலைகளில், அல்லது தெருக்களில் திடீரென தோன்றும் ஓரிரு இளைஞர்கள் சில நிமிஷங்களுக்குள் துண்டுப் பிரசுரங்களை கொடுத்து விட்டு மறைந்து விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு இயக்கத்திற்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்த அதே இளைஞர்கள், இன்னொரு நாள் வேறொரு இயக்கத்தின் பிரசுரங்களைக் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு பிரசுரத்திலும் "சிறி லங்காப் பேரினவாத அரசுக்கு எதிராக போராடி, தாம் சரியெனக் கருதும் பாதையில் ஈழம் கிடைக்கும்" என்று மக்களுக்கு கொள்கை விளக்கம் அளித்திருப்பார்கள். சாதாரண மக்களுக்கு இத்தனை இயக்கங்கள் எங்கேயிருந்து முளைக்கின்றன என்று குழப்பம். ஒரு காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இயங்கி வருவதாக, யாழ் மத்திய பஸ் நிலையத்தில் போஸ்டர்கள் காணப்பட்டன. எல்லா இயக்கங்களும் "ஈழம்", "தமிழீழம்", "விடுதலை", "புரட்சி", "இயக்கம்", "முன்னணி" போன்ற வார்த்தைகளில் இருந்து பெயர் தெரிவு செய்திருந்தனர்.

இத்தனை இயக்கங்களுக்கும் தேவையான பணம் எங்கேயிருந்து வந்தது? ஆட்பலம், ஆயுதபலம் கொண்ட பெரிய இயக்கங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து நிதித் தேவையை பூர்த்தி செய்தன. இதைப் பார்த்த சிறிய இயக்கங்கள் தபால் நிலையங்களை கொள்ளையடிக்க தொடங்கின. இதனால் வங்கிகள், தபால் நிலையங்களில் பணப் புழக்கத்தை அரசு குறைத்துக் கொண்டது. பெயர் குறிப்பிடாத சிறிய இயக்கம் ஒன்று யாழ் நகர வங்கிக் கிளை ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிட்டது. வாசலில் இருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே நுழைந்தனர். எப்படியோ வங்கியினுள் பணம் வைத்திருக்கும் இரும்புப் பெட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அங்கேயிருந்து உடைத்துக் கொண்டிருப்பது நேர விரயம் என்று கருதியதாலோ என்னவோ, இரும்புப் பெட்டியை டிராக்டரில் ஏற்றி புறநகர்ப் பக்கமாக கொண்டு சென்று உடைத்தனர். கடும் பிரயத்தனப் பட்டு பெட்டியை உடைத்துப் பார்த்த போது ஏமாற்றம் காத்திருந்தது. பெட்டிக்குள் இருந்த சில்லறைகளையும் சேர்த்து கணக்குப் பார்த்தாலும் நூறு ரூபாய்க்கு மேல் தேறவில்லை!

இலங்கையின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க பிரபல வங்கிக் கொள்ளையர் ஒருவர் இருந்தார். சிறையில் இருந்து தப்பியதால் "பனாகொட மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டவர். இவர் தலைமையிலான குழுவொன்று பல வங்கிகளைக் கொள்ளையடித்து கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்து விட்டிருந்தது. கொள்ளையடித்த பணத்தில், "தமிழீழ இராணுவம்" என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அந்த இயக்கத்தில் சேர்ந்த போராளிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. சிறிது காலம் யாழ் நகரில் லொத்தர் சீட்டுக் குலுக்கி பணம் சேர்த்தார்கள். கடைசியில் "விடுதலை வியாபாரத்தை" மூட்டை கட்டி வைத்து விட்டு, முக்கிய உறுப்பினர்கள் யாவரும் வெளிநாடு சென்று விட்டனர்.

கடவுளின் அருள் பெற்ற ஞானி என்றால், அற்புதம் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று சாதாரண மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஈழத்திற்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் என்றால், குறைந்தது பொலிஸ் நிலையம் மீது என்றாலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த காலமது. ஏற்கனவே பல முறை தாக்குதலுக்கு உள்ளான சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கி தனது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு சிறிய இயக்கம் ஒன்று திட்டமிட்டது.

நள்ளிரவுக்கு சற்று முன்னர், அமைதியைக் கிழித்துக் கொண்டு "டமார்" என்ற வெடிச் சத்தம் கேட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வசித்த மக்களுக்கு ஒரேயொரு "டமார்" தான் கேட்டது. அதைத் தொடர்ந்து "பட, பட" வென துப்பாக்கியால் சுடும் சத்தம் ஒரு மணி நேரமாக கேட்டுக் கொண்டிருந்தது. துப்பாக்கிச் சூடுகள் கூட ஒரே திசையில் இருந்து வந்ததை உணரக் கூடியதாக இருந்தது. விடிந்த பிறகு பொலிஸ் நிலைய பக்கமாக சென்றவர்கள், அங்கே தாக்குதல் நடந்ததற்கான தடயம் எதையும் காணவில்லை. வழக்கமாக எங்காவது தாக்குதல் நடந்தால், பாதையில் போகும் மக்கள் மீது ஆத்திரத்தைக் தீர்த்துக் கொள்ளும் அரச படைகள், அன்று அமைதியாக நின்றமை வேறு ஆச்சரியமளித்தது.

சில மணி நேரங்களில், முதல் நாளிரவு நடந்த தாக்குதலின் தார்ப்பரியம் தெளிவானது. முதலில் கேட்ட டமார் சத்தத்திற்கு காரணம் வெடி குண்டு அல்ல. ஒரு கிரனேட் கூட அன்று வீசப்படவில்லை. காலி அலுமினிய டின்னிற்குள் பட்டாசு கொளுத்தி போட்டிருக்கிறார்கள், தாக்குதல் நடத்திய வீரர்கள். அதைத் தொடர்ந்து, நாய் வீட்டைச் சுற்றி குரைப்பதைப் போல, திகிலடைந்த போலீஸ்காரர்கள் காவல் நிலையத்தை சுற்றி சுற்றி வந்து சுட்டிருக்கிறார்கள். சுட்டுக் கொண்டே ஓடிய போலீஸ்காரர் ஒருவர் முள்ளுக் கம்பி மேல் விழுந்து காயமுற்றதைத் தவிர வேறு எந்த பாதிப்பும் அன்று ஏற்படவில்லை. ஆனால், அடுத்த நாள் தாக்குதலுக்கு உரிமை கோரி போஸ்டர் ஒட்டிய இயக்கம், "பொலிஸ் நிலையத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்து விட்டதாகவும், 10 பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதாகவும்" அறிவித்தது.

முன்னொருபோதும் கேள்விப்படாத இயக்கம் ஒன்றின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் மக்கள் அதை புறக்கணித்தார்கள். ஆட்பலம், ஆயுதபலம் கொண்ட பெரிய இயக்கங்கள் செய்யும் தாக்குதல்கள் கூட சில நேரம் தோல்வியடைவதுண்டு. இராணுவ முகாமை தாக்கச் சென்ற இயக்கமொன்றின் போராளிகள், கடுமையான எதிர்த் தாக்குதல் காரணமாக பின்வாங்கி விட்டனர். இருந்தாலும் போஸ்டர் பிரச்சாரம் மட்டும் குறைவில்லாமல் 40 அரச படையினர் கொல்லப்பட்டதாக கணக்குக் காட்டியது. சம்பந்தப்பட்ட இயக்கம் தாக்குதலுக்கு போவதற்கு முன்பே அந்தப் போஸ்டரை அடித்து விட்டதாக, மக்கள் பேசிக் கொண்டனர்.

போஸ்டர்கள், துண்டுப்பிரசுரங்கள் அச்சடிப்பதற்கு "றோணியோ இயந்திரங்கள்" பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் பாடசாலைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் வினாத்தாள்களையும், பாடக்குறிப்புகளையும் றோணியோ மெஷின் மூலமே அச்சிட்டு வந்தது. பாடசாலைகளின் விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களும் இயக்க வன்முறைக்கு தப்பவில்லை. பரிசோதனைச் சாலைகளில் களவாடப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களை கொண்டு எவராவது வெற்றிகரமாக குண்டு தயாரித்தார்களா என்ற விபரம் எதுவும் கிடைக்கவில்லை. பாடசாலைக் கொள்ளைகள் தொடர்ந்ததால் குடா நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட விளைவு மட்டும் பலரால் உணரப்பட்டது. சிறிய இயக்கங்களின் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவும் அவற்றின் பலத்திற்கேற்ப மட்டுப்படுத்தபட்டிருந்தன. "அரசாங்க சொத்துகளை நாசமாக்குவது" என்ற பெயரில், பேரூந்து வண்டிகளை வழிமறித்து, பயணிகளை இறக்கி விட்டு தீயிட்டார்கள். அரசாங்கமும் புதிய பஸ்களை அனுப்பாமல் புறக்கணித்து வந்ததால், பாதிக்கப்பட்டதென்னவோ பொது மக்கள் தான்.

காலப்போக்கில் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள் யாவும் அரங்கில் இருந்து மறையத் தொடங்கின. பலவற்றிக்கு எப்படி இயங்குவது என்பது பற்றிய எந்த வித திட்டமிடலும் இருக்கவில்லை. ஓரளவிற்கு தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டிருந்தவையும், பல்வேறு எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருந்தது. சிறிய மீன்களை பெரிய மீன்கள் பிடித்துச் சாப்பிடுவதைப் போல, பெரிய இயக்கங்கள் பல நெருக்குவாரங்கள் மூலம் சிறிய இயக்கங்களை அழித்து விட்டன. சில நேரம் தலைமை தாங்குபவர் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் இயக்கம் தானாகவே கலைந்தது.