Thursday, February 26, 2009

கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்


அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர்.

இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொரு நகரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துப்போன பொலிஸ் அதிகாரிகள், அது தமக்கு வைத்த பொறி என்றுணர்வதற்குள் குண்டுவெடித்துக் கொல்லப்பட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக கொலம்பியப் படைகளுக்கு அலோசனை வழங்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் இருவர் சென்ற விமானம் இயந்திரக் கோளாறினால் அடர்ந்த காட்டிற்குள் விழுந்து விபத்தில் உயிர் தப்பிய அமெரிக்கர்களை கெரில்லாக்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தனது பிரஜைகளை மீட்பதற்காக கொலம்பியாமீது படையெடுக்கப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வந்தது.

கொலம்பியா ஒழுங்காக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நகரங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நாட்டுப்புறங்களில் ஒன்றில் இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் ஆட்சி நடக்கும் பிரதேசமாகவிருக்கும் அல்லது கெரில்லா இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவற்றைவிட மூன்றாவது சக்தியாக போதைவஸ்துக் கடத்தும் மாபியாக் குழுக்கள் தமக்கென தனிப்படைகளுடன் சிறிது காலம் சில தசாப்தங்களாக அட்டகாசம் புரிந்து வந்தன. அரசபடைகளுடனான மோதலில் இறுதியில் பலம் குறைந்து போன மாபியாக் குழுக்கள் இராணுவத்துடன் உடன்பட்டு துணைப்படையை உருவாக்கினார்கள். இதனால் தற்போது இரண்டு சக்திகள் மட்டுமே களத்தில் உள்ளன

இரண்டாவது சக்தியான மார்க்ஸீய கொரில்லாக் குழுக்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாகத் தோல்வியடையாமல் சளைக்காமல் போரிட்டு வரும் கெரில்லாக்களை கொலம்பியாவில் காணலாம். அவர்களின் வெற்றிக்கு பல காரணங்களிருந்தபோதும் நாட்டில் நிலவும் ஆழமான சமூக ஏற்றத்தாழ்வான ஏழை-பணக்கார வர்க்க வித்தியாசம் மிக முக்கியமான காரணி.

1946 ல் நாட்டில் எழுந்த குழப்ப நிலையே இன்றைய கெரில்லாக்குழுக்களின் ஆரம்பம். விவசாயிகள் நில உரிமைக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். ஆட்சியிலிருந்த கென்சர்வேட்டிவ் கட்சி நிலவுடைமையாளரின் பக்கம் நின்று போராட்டத்தை நசுக்கியது. தொழிற்சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியில் இருந்த இடதுசாரிகள் ஆயுதம் ஏந்தினர்.

லிபரல் கட்சி ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அதரவளித்தது. இருப்பினும் சந்தர்ப்பவாதப் போக்குடைய அந்தக்கட்சி ஆயுதப் போராட்டத்தை அரசுடன் பேரம் பேசப் பயன்படுத்தியது. இதன் விளைவாக 1970 ல் இருகட்சிகளிடையே உடன்பாடு ஏட்பட்டு தேசிய முன்னணி அமைத்தனர். இடதுசாரிகள் இதனைத் தமக்கிழைத்த துரோகமாகப் பார்த்தனர். தேசிய முன்னணி அரசு தெரிவு செய்யப்பட்ட தேர்தல் தினத்தின் பெயரில் எம்-19 என்ற இயக்கம் உருவாகியது. இந்த இயக்க உறுப்பினர்களில் பலர் நகர்ப்புறப் படித்த இளைஞர்கள். இதைத்தவிர நாட்டுப்புறத்தில் உதிரிகளாக இருந்த கொரில்லாக் குழுக்களை இணைத்து இன்னொரு பலம் வாய்ந்த இயக்கம் உருவானது. "கொலம்பிய புரட்சிகர இராணுவம்" (FARC) மிகவும் கட்டுக்கோப்பான மிகப்பெரிய கெரில்லா இயக்கம். இதற்கும் சட்டபூர்வ கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. லிபரல் கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறிய இடதுசாரி லிபரல்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அந்தக்காலத்தில் சோவியத் சார்புடையதாக இருந்ததால், சீனச்சார்பு மாவோயிஸக் கம்யூனிஸ்ட்டுகள் தமக்கென "மக்கள் விடுதலைப் படை" (EPL) என்ற கெரில்லா இயக்கத்தை அமைத்தனர். கொலம்பியாவின் ஆயுதப் போராட்டத்திற்கு கியூபப்புரட்சியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கியூபப்புரட்சியரல் கவரப்பட்ட சில கொலம்பியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய விடுதலை இராணுவம்' (ELN) என்ற கெரில்லா இயக்கத்தை ஸ்தாபித்தனர். இந்த இயக்கத்திற்கு கியூபா பல வழிகளிலும் உதவி வந்தது. ELN ன் தனிச்சிறப்பு, அது மாக்ஸீயத்துடன் 'விடுதலை இறையியலையும்' தனது சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார் ஆயுதம் ஏந்தி கெரில்லா இயக்கக் கொமாண்டர்களாக மாறிய அதிசயம் கொலம்பியாவில் நடந்தது. சமுக அநீதிகளுக்கெதிராக ஏழைமக்கள் ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறிய பாதிரியார் கமிலோ தொரஸ் அதனைச் செயலிலும் காட்டி ELN இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுற்ற பல மதகுருக்கள் அவரின் வழியைப் பின்பற்றினர். புரட்சி, சமூக நீதி பற்றிப்பேசுபவர்கள் நாஸ்திகர்களாக இருக்கத்தேவையில்லை என்பதை முதன்முதலாக கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தக் கெரில்லாக்குழுக்களின் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றின் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் தெரிகின்றன. தற்போது ஓய்ந்திருக்கும் எம்-19 பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை டொமினிக்கா நாட்டுத் தூதுவராலயத்தைக் கைப்பற்றிப் பல நாட்டுத் தூதுவர்களை இரண்டுமாதகாலமாக பயணக்கைதிகளாக வைத்திருந்தனர்.இன்னொருமுறை பால் லொறியைக் கடத்திச் சென்று சேரிவாழ் ஏழைமக்களுக்கு இலவசப் பால் விநியோகம் செய்தனர். ELN பொருளாதார இலக்குகளைக் குறிவைக்கிறது. எண்ணைவிநியோகப் பாதையில் குண்டுவைத்து நாசம் செய்தல், மின்மாற்றிகளை நகர்த்தல் போன்றவற்றின் விளைவாகப் பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் இயக்கத்திற்கு நிதியுதவி செய்து தன்னைக் காத்துக்கொண்டது. இதுதவிர முக்கிய புள்ளிகளைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்து பணம் கறப்பதையும் ELN தனது நிதி சேகரிப்பு நடவடிக்கையாகக் கருதுகிறது. பணக்காரரிடமிருந்து பணம் கறப்பதற்கு அது(கடத்தல்) சிறந்த வழி என்று நியாயப்படுத்தப்படுகின்றது.

FARC சிறு கெரில்லாக்குழுவாக ஆரம்பித்த இயக்கம். இன்று பெரிய இராணுவமாக வளர்ந்துள்ளது. இதனால் சிறு இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழித்து, குறிப்பிடட்ட பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1995 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய இராணுவ முகாம்களும் அடுத்தடுத்து வீழ்ந்தன. அரசபடைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் சுவிட்சர்லாந்து அளவிலான பிரதேசத்தை FARC இடம் விட்டுக்கொடுத்துவிட்டு, அரசாங்கம் பேச்சுவார்தை நடாத்தியது. கொலம்பியாவின் மத்திய, தென்பகுதிகளில் பல FARC ன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக அறியப்பட்டுள்ளன. அங்கே பகலில் இராணுவத்தினர் ஆட்சியும் இரவில் FARC ன் ஆட்சியும் நடக்கிறது. கொலம்பியாவின் வடக்குப்பகுதியில் ELN ஆதிக்கம் செலுத்துகிறது. ELN க்கும் FARC க்கும் இடையில் நட்புரீதியான புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதுவரை இரண்டுக்குமிடையில் எந்த வகையான பகைமுரண்பாடுகளும் வெடிக்கவில்லை.

FARC ன் 30 வீதமான போராளிகள் பெண்கள். போர்முனைகளில் ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுகின்றனர். இராணுவப்பயிற்சியும் சமமாகவே வழங்கப்படுகின்றது. பல பெண்கள் கொமாண்டர் தரத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆண்-பெண் போராளிகளுக்கிடையிலான திருமண பந்தம் தொடர்பான விதிகள் சிக்கலானவை. இயக்கத்திற்குள் காதலிப்பதற்கும், ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர் தனது காதலை பகிரங்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து அவர்களின் விருப்பப்படி சேர்ந்துவாழ விடப்படுவர். ஆனால் அது நிலையானதல்ல. கடமை அழைக்கும்போது தமது உறவை முறித்துக்கொண்டு களத்திற்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக குழந்தை பெற்று வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனது துணைவி மீது வன்முறை பிரயோகிக்கும், அல்லது வல்லுறவு செய்யும் ஆண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

கொலம்பியாவின் அரசியல் அமைப்பை "இரு கட்சி ஜனநாயக முறை" என்று அழைக்கின்றனர். இதுவரை ஒன்றில் கென்சர்வேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சி என்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. நாட்டின் உள்நாட்டுப்போர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்ப்படுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் சமாதானம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிதுகால யுத்த நிறுத்தம் ஏற்பட்டுப் பேச்சுவார்த்தை நடக்கும். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை குழம்பி பழையபடி யுத்தம் நடக்கும். கடந்த முப்பது வருடங்களாக சண்டையும் சமாதானமும் இதே பாணியில் தொடர்கிறது. அரச படைகளின் ஜெனரல்கள் பொதுவாகவே கெரில்லா இயக்கங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்தக் கடும் போக்காளரின் பின்னால்தான் அமெரிக்க அரசும் நிற்கிறது. கடந்த ஆண்டு "Plan Colombia" என்ற பெயரில் அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியுடன் பெருமளவு பணம் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தச் செலவிடப்பட்டது. அதிநவீன black Hawk ஹெலிகப்டர்கள், இரவில் பார்க்கும் உளவுவிமானங்கள் என்பன இந்த உதவியில் அடக்கம். மேலும், அமெரிக்கா கொலம்பியப் போரை "பயங்கரவாத்திற்கெதிரான போர்" என்றே சொல்லி வருகின்றது.

பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் (FARC தலைவர் மருலண்டாவும், அன்றைய ஜனாதிபதி பஸ்த்ரானாவும் காட்டுக்குள் சந்தித்துக் கதைத்தனர்) குழம்பிய பின்னர் கெரில்லாக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கினர். போகும்போது எந்தவொரு அரசாங்க நிர்வாகத்தையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்டுச்சென்றனர். படைப்பிரிவுகளின் கொமாண்டர்கள் வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் தமக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டனர். புதிய யுக்தியாக கொலம்பியாவில் மட்டுமல்லாது எல்லை கடந்து பிறேசிலிலும் வெனிசுலாவிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். உள்நாட்டில் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். வழக்கமான இராணுவ முகாம் தாக்குதல்களைவிட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குண்டு வைத்து தகர்க்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறுகிய காலத்திற்குள் குறைந்தது 50 பாலங்களாவது தகர்க்கப்பட்டள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் போர்வீரர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கெரில்லாக்கள் பெருமளவு வெடிமருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. இதைவிட அதிர்ச்சியைக் கொடுத்த விடயம், FARC கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பல வெளிநாட்டவர்களும் காணப்படுவதாக வரும் செய்திகள். மூன்று ஐரிஸ்காரர்கள் இராணுவத்தால் பிடிபட்டபின்புதான், ஐரிஸ் குடியரசு இராணுவ (IRA) உறுப்பினர்கள் கொலம்பியக் கெரில்லாக்களுக்குக் குண்டு வைப்பதில் பயிற்சியளிப்பது தெரியவந்துள்ளது.

அரசபடைகளுடன் தொடர்புடைய துணைப்படையான AUC க்கு அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வருகி;ன்றனர். சில வெளிநாட்டுக் கூலிப்படைகளும் தமது சேவையை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாத துணைப்படைக்கு நிலப்பிரபுக்களும், பெருமுதலாளிகளும் தாராளமான நிதி வழங்கி வருகின்றனர். பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு துணைப்படையே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கெரில்லாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் துணைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

"ஒன்று, இரண்டு, மூன்று... வியட்னாம்களை உருவாக்குவோம்" என்றார் ஆர்ஜென்தீனப் புரட்சியாளர் சே குவேரா. இரண்டாவது வியட்நாம் கொலம்பியாவில் நிதர்சனமாகி வருகின்றது. நிலைமை இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில்கெரில்லாக்கள் நாடு முழுவதையும் பிடித்துவிடுவார்கள் என்று உண்மை நிலையைச் சொல்லியது அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை. என்ன விலை கொடுத்தாகிலும் அதைத் தடுக்க அமெரிக்க அரசு பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. பல ஆண்டுகளாகவே "போதைப் பொருளுக்கெதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்க உதவி கொலம்பிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் போர்வையின் கீழ் நடக்கும் கதையோ வேறு. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படைப்பிரிவு கெரில்லாக்கள் நடமாட்டத்தையும் கண்காணித்தது. அவர்களின் அக்கறை முழுக்க வேறு எங்கோ இருந்ததாக கொலம்பிய அரச அதிகாரிகளே குறைப்பட்டனர். ஹெரோயின் உற்பத்திக்கான கொக்கோச் செடிகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானங்கள் விசிறிய மருந்து, பிற உணவுப்பயிர்களையும் அழித்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுவரைகாலமும் பின்னால் நின்று உதவிய அமெரிக்க அரசு தற்போது நேரடியாகத் தலையிடப்போவதாகப் பயமுறுத்தி வருகின்றது. வரப்போகும் அமெரிக்க இராணுவத்தை எதிர்பார்த்துக் கொண்டு கொலம்பியப் போராளிகள் காத்திருக்கின்றனர்.


FARC தொடர்பான வீடியோ ஆவணப்படங்கள்:


தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC
ஒரு பெண் போராளியின் கதை

Wednesday, February 25, 2009

பாகிஸ்தான்: உலகமயமாக்கப்பட்ட ஜிகாதிகள்

Global Jihad - 10 Feb 09 - Part 1


Global Jihad - Part 2

தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC

கொலம்பியா நாட்டின் FARC போராளிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் ஏழைகளின் விடுதலைப் போராளிகள். Al Jazeera ஊடகவியலாளர் Phil Rees, FARC இயக்கத்தினுள் இருந்து வழங்கும் உள்ளக அறிக்கை. சி.ஐ.ஏ. ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் கையேடு ஒன்றை பிரசுரித்ததை நினைவு கூறுகின்றார். ஒருவரின் பயங்கரவாதி இன்னொருவரின் விடுதலைப் போராளி எனற தத்துவத்தை நினைவு கூறுகின்றார்.


America's Backyard. 17 Feb 09 - Pt 1


Part 2:

Tuesday, February 24, 2009

FBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)

Sibel துருக்கி மொழிபெயர்ப்பாளராக FBI யில் பணியாற்றியவர். மேலதிகாரிகளுடன் முரண்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர். அமெரிக்க உளவுத்துறையில் மேல்மட்டத்தில் நிலவும் ஊழலை பகிரங்கப்படுத்தும் துணிச்சலான பணியில் ஈடுபட்டுள்ளார்.

Most Americans have never heard of Sibel Edmonds, and if the U.S. government has its way, they never will. The former FBI translator turned whistleblower tells a chilling story of corruption at Washington’s highest levels—sale of nuclear secrets, shielding of terrorist suspects, illegal arms transfers, narcotics trafficking, money laundering, espionage….

Kill The Messenger
By Sibel Edmonds - Video Documentary:

ஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்



நேற்று ஜெர்மனி, இன்று இஸ்ரேல்


Video: UK Jewish MP - Israel acting like Nazis in Gaza
On 16 January 2009 the UK Jewish Member of Parliament, Sir Gerald Kaufman, spoke in the House of Lords on "Israel acting like Nazis in Gaza".

Monday, February 23, 2009

இலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)

இலங்கையில் சமாதானத்திற்கான தேவையை வலியுறுத்தி தமிழ்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரு பாடல். (Thanks to: Ya TV)

இலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்

இலங்கையில் நடக்கும் போரை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றது இலங்கை அரசு. புலிகள் தமக்கு விடுதலைப் போராளிகள் என்கின்றனர் தமிழர்கள். "ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைபோராளி" என்ற தத்துவத்தில் இருந்து, இலங்கைப் பிரச்சினையை அலசுகிறார் மேற்கத்திய ஊடகவியலாளர் Phil Rees (Al Jazeera).


Dining with terrorists - Divided Island - 21 Feb 09 - Part 1


Dining with terrorists - Divided Island - 21 Feb 09 - Part 2

Saturday, February 21, 2009

மீண்டும் லெனினிடம்?



மோல்டாவா (அல்லது மோல்டோவியா) முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் ஒன்று. சோவியத் யூனியன் வீழ்ந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆனபின் புதிதாகக் குடியரசான அந்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஏறக்குறைய எழுபது வீதமான பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எமக்குத் தெரிந்தவரையில் முதலாளித்துவப் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது அந்த நாட்டில்தான்.

 வழக்கம் போலவே பல செய்திகளை மறைக்கும் சர்வதேசச் செய்தி ஊடகங்கள் இந்தச் செய்தியையும் இருட்டடிப்புச் செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. உலகில் பல செய்திகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு வரிசையில் இது இன்னொரு உதாரணம்.

மோல்டோவியா ரோமானிய மொழி பேசும் மக்கள் வாழும் முன்னாள் சோவியத் குடியரசு. 1990 ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மை ரோமானியர்கள் தமக்கு அயலில் இருக்கும் ரோமானியாவுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டனர். 500 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் மன்னராட்சி நிலவிய காலத்தில் மோல்டோவியா 'பெஸ்ஸராபியா' என அழைக்கப்பட்டது. ஒரு சிற்றரசின் கீழ் தனியாக ஆழப்பட்டு வந்தது. ஐரோப்பாவினுள் பல பிரதேசங்களைக் கைப்பற்றிய ரஷ்யா துருக்கிய ஒட்டோமான்களுடன் யுத்தத்தில் இறங்கியது. அவ்வாறுதான் மோல்டோவியா ரஷ்ய செல்வாக்குக்குட்பட்ட நாடாக உருவாகியது. முதலாம் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் சார் ரஷ்யாவுடன் தன்னைத் துண்டித்துக்கொண்டது.

உலகில் பல மாற்றங்களை உருவாக்கிய இரண்டாம் உலகப்போர் மோல்டோவியாவிலும் தாக்கங்களை உருவாக்கியது. நாஷிப் படைகளுக்கெதிராக வெற்றிவாகை சூடிய செம்படை மோல்டோவியாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. மோல்டோவியாவைத் தனி சோவியத் சோஷலிசக் குடியரசாக அங்கீகரித்த ஸ்டாலின், அங்கு பெரும்பான்மையாக இருந்த ரோமானியர்களின் தேசியவாதத்தை அடக்கும்பொருட்டு உக்ரைனின் பகுதியொன்று அந்தக்குடியரசுடன் இணைக்கப்பட்டது. இந்த உக்கிரேனியப் பகுதி திரான்ஸ்நியேஸ்டர் (Transnistria அல்லது Trans Dniester) என அழைக்கப்பட்டு ரஷ்யர்களையும் உக்கிரேனியர்களையும் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்தது. பெரும்பான்மையினர் பேசிய ரோமானிய மொழி 'மோல்டோவிய மொழி' என அழைக்கப்பட்டது.

நமது காலத்திற்கு மீண்டும் வருவோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் தனிநாடாகப் பிரகடனம் செய்த குடியரசுகளில் மோல்டோவியாவும் ஒன்று. அங்கே பெரும்பான்மையாக வாழ்ந்த ரோமானிய மொழி பேசும் மக்கள் (ஸ்டாலினால் மோல்டோவியர் என அடையாளப் படுத்தப்பட்டனர்) ரோமானியாவுடன் சேர விருப்பம் தெரிவித்தனர். இது சிறுபான்மையினரான ரஷ்யருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் 'திரான்ஸ்நியேஸ்டர்' என்ற குடியரசைப் பிரகடனம் செய்தனர்.

தொடர்ந்தது உள்நாட்டுப்போர். (கிட்டத்தட்ட அதே காலத்தில் போஸ்னியப் போர் நடந்ததால் மோல்டோவிய யுத்தம் அசட்டை செய்யப்பட்டது.) முன்னாள் கே.ஜி.பி அதிகாரி சிமிர்னோவ் தலைமையில் நடத்தப்பட்ட பிரிவினைக்கான யுத்தம் அங்கே நிலைகொண்டிருந்த ரஷ்ய இராணுவப்பிரிவின் உதவியுடன் மோல்டோவியாவிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டது. இதுவரை இந்தத் தனிநாடு உலகில் எந்தவொரு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

இனி மோல்டோவியா என்பது திரான்ஸ்நியேஸ்திரியா தவிர்ந்த பிரதேசம் என்பதை வாசகர்கள் நினைவில் இருத்தல் வேண்டும். 'நிஸ்திரு' (ரோமானிய மொழியில்) அல்லது 'நியேஸ்தர்' (ரஷ்ய மொழியில்) என்ற ஆறு மோல்டாவியாவை வடக்குத்தெற்காக ஊடறுத்துப் பாய்கிறது. இந்த ஆறு தற்போது மோல்டோவியா - திரான்ஸ்நியேஸ்திரியாவை பிரிக்கும் இயற்கை எல்லையாகிவிட்டது. இரண்டுக்குமிடையில் எல்லைக் காவற்படை நிறுத்தப்பட்டு சுங்கப்பரிசோதனையும் நடக்கிறது.

மோல்டோவியாவின் தலைநகரம் 'கிஸினவ்', திரான்ஸ்நியேஸ்திரியாவின் தலைநகரம் 'திராஸ்பொல்'. 1992 ல் ரஷ்யாவின் மத்தியஸ்த்துடன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தப் பிரிவினை இன்றுவரை தொடர்கிறது. இந்தத் தனிநாட்டிற்கான போரின் வெற்றிக்கு மோல்டோவியாவின் பலவீனமான நிலையும்(இன்றும் அது ஐரோப்பாவின் மிக வறிய நாடு) ரஸ்யாவின் மறைமுகமான உதவியும் முக்கிய காரணங்கள்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் லெனினின் சிலைகள் போன்ற பழைய சோவியத் சின்னங்கள் நிலைத்து நிற்கும் சில அரிய இடங்களில் திரான்ஸ்நியேஸ்திரியாவும் ஒன்று. அங்கே ஒரு கே.ஜி.பி. அதிகாரி ஆட்சி செய்வதால் கம்யூனிசம் தொடர்கிறதா என யாரும் பதறத் தேவையில்லை.

ஜனாதிபதி சிமிர்னோவ் கம்யூனிஸட்டுமல்ல, நாட்டை நிர்வகிப்பது பொதுவுடைமைக் கொள்கையுமல்ல. (இந்த உண்மைக்கு மாறான செய்திகளே வெளியில் பரப்பப்படுகின்றன). பழைய கூட்டுறவுப் பண்ணைகள் தொடர்ந்து நடப்பதும், வெளிநாட்டு முதலீடுகள் மிகக்குறைவு என்பதும் , தெருக்களில் விளம்பரப் பலகைகளைக் காண்பதரிது என்பதும் உண்மைதான்.

இருப்பினும் பெரும்பான்மையான நாட்டின்பொருளாதாரத்தை ஒரேயொரு உள்ளூர் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. 'ஷெரிப்' என்ற அந்த வர்த்தக நிறுவனம் சுப்பர் மார்க்கட்டுகள், பெற்றோல் விற்பனைச் சாலைகள், தொலைக்காட்சி, இறக்குமதி என்பவற்றில் ஏகபோக உரிமை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கும் ஜனாதிபதியின் குடும்பத்திதிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது பரகசியம். திரான்ஸ்நியேஸ்திரியா தமது நாணயமாக ரூபிளை புழக்கத்தில் விட்டுள்ளது. (மோல்டோவியாவில் லெய் புழக்கத்தில் உள்ளது.)

சிமிர்னோவின் திரான்ஸ்நியேஸ்திரியா ஒரு மாபியாக் குழுவால் நிர்வகிக்கப்படும் நாடு போன்றுள்ளதாக சிலர் விமர்சிக்கின்றனர். இருப்பினும், யூகோஸ்லாவியாவில் நடந்ததைப் போல, போர் முடிந்தவுடன் அங்கு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. ரோமானிய மோல்டோவியர்கள் அங்கு தொடர்ந்து வாழலாம், ஆனால் லத்தீன் எழுத்துவடிவத்தைப் பயன்படுத்த முடியாது. ரஷ்ய மொழி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழி.

இந்தப் புதிய சுதந்திர நாட்டில் ரஷ்யர்களைத்தவிர, உக்கிரேனியர்களும் கிறிஸ்தவத் துருக்கியர்களும் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை சிமிர்னோவ் அரசாங்கத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கக் கட்சி ஆகியவற்றிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் சமாதானத்திற்கும், ஒற்றுமைக்குமான இயக்கம் (மேற்கைரோப்பாவின் ஆதிக்கத்திலுள்ளது) மோல்டாவியப் பிரச்சினையிலும் தலையிட்டுள்ளது. திரான்ஸ்நியேஸ்திரியாவை இணைத்து மோல்டோவியாவைச் சமஸ்டி அரசாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக இரண்டு பக்கமும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மோல்டோவியாவின் கம்யூனிச ஜனாதிபதி கூட திரான்ஸ்நியேஸ்திரியாவை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கிடையில் சுமூகமான நல்லுறவு நிலவுகிறது. 2001 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற மோல்டோவிய (ரோமானிய மொழிபேசும்) கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் காலத்தில் இருந்ததைப் போல ரஷ்ய மொழியையும் உத்தியோக பூர்வ மொழியாக்க விரும்புகிறது. இதற்கெதிராக ஆட்சியிழந்த தேசியவாதக் கட்சியினர் வீதியல் இறங்கி ஆரப்பாட்டம் செய்த காட்சிகளை சி.என்.என் மறக்காமல் காட்டியது. இதற்கு முன்பு வறுமையில் வாடிய ஓய்வூதியக்காரரும், சம்பள உயர்வு கேட்ட தொழிலாளர்களும், உணவு கேட்ட சாதாரண மக்களும் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சி.என்.என் உட்பட எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் தமது நாடு ஒரேயிரவில் மேற்குலகிற்கு நிகரான பணக்கார நாடாகிவிடும் என்று மோல்டோவிய மக்களும் கனவு கண்டனர். ஆனால், சோவியத் யூனியனில் இருந்த போது கிடைத்த பொருளாதார உதவிகளும், சலுகைகளும் திடீரென நின்று போக அநாதரவான நிலையில் ஐரோப்பாக் கண்டத்திலேயே மிக வறுமையான நாடானதுதான் கண்ட மிச்சம்.

ரோமானிய தேசியவாத உணர்வினால் உந்தப்பட்ட பல மக்கள் தமது 'தாய்நாடான' ரோமானியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். ஆனால், அது பாலும் தேனும் ஆறாய் ஓடும் நாடல்ல என்ற உண்மையை அனுபவத்தில் கண்டபின்னர் திரும்பி வந்தார்கள். நாளாக ஆக மோசமடைந்த பொருளாதாரப் பிரச்சினைகள் அரசியலிலும் பிரதிபலித்தது. பாராளுமன்ற ஆசனங்களை நிரப்பிய ஆளும் கட்சிகள் எந்த அற்புதத்தையும் நிகழ்த்திக்காட்டாததால் ஏமாந்த மக்கள் தமது எதிர்ப்பு வாக்குகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தனர்.

வெளியுலகம் கண்டுகொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றி மேற்குலகை அதிர்ச்சியடைய வைக்கவில்லை.அதற்குக் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட்கட்சியும் புரட்சிகரப் பாதையைக் கைவிட்டு சமரசப் பாதைக்கு வந்திருப்பதுதான். பல முக்கிய நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்படலாமென எதிர் பார்க்கப்படுகிறது. அதே நேரம் தனியார் முதலீட்டையும் நிராகரிக்கவில்லை.

கம்யூனிச ஜனாதிபதி வோரோரின் தனது ஆட்சியை இன்றைய சீனாவின் அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நட்புறவையும் நாடியுள்ளார். அதே நேரம் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. மறுபக்கத்தில் ஐ.எம்.எப், உலகவங்கி ஆகியவற்றின் கடனுதவிகளைப் பெறுவதற்கான பேச்சுகள் நடக்கின்றன. இது மீண்டும் சிவப்பு மஞ்சளாக நிறம் மாறிய கதைதான். மோல்டோவியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் லெனினை மட்டும்தான் மீட்டெடுத்துள்ளனர். அவரது கொள்கைகளையல்ல.

Friday, February 20, 2009

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது

துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆடம்பர வீடுகளை தாங்கவிருந்த செயற்கைதீவுகள் பல கடலுக்குள் கிடக்கும் கட்டுமானக் குப்பைகளாகிப் போயின. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றைத் தான், இதுவரை துபாய்வாசிகள் கண்டுவந்தனர். இப்போது மாயை அகன்று வருகின்றது.

பாலைவன முகாம்களுக்குள் வாழும் தொழிலாளர்கள், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள்; இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்தேர்ச்சி பெற்ற அதிக சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை வளமானதாகவே இருந்தது. இவர்களில் பலர் துபாயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆடம்பர வீடுகளை வங்கியில் கடன் எடுத்தாவது வாங்கிட முண்டியடித்தனர். துபாயில் வீடு வாங்குபவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்று அரசு ஆசை காட்டியது. இந்தக் காரணத்திற்காகவே வீடு வாங்கியவர்கள் நிறையப்பேர். அயல்நாடான ஈரானைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகப் பட்டது. சர்வதேச பொருளாதார தடைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஈரானை விட, துபாயில் இருந்து கொண்டு வணிகம் செய்வது பாதுகாப்பானது எனக் கருதினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வீட்டு மனைக்கான கேள்வி அதிகரிக்கவே, கட்டுமானக் கம்பெனிகளும் "பேரீச்சை மர வடிவில்", "உலக வரைபட வடிவில்" என்று செயற்கைத் தீவுகளை நிர்மாணித்து, அதிலே ஆடம்பர வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டங்களை அறிவித்தனர். இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னரே, வீடுகளை விற்கும் திட்டம் ஆரம்பமாகி விட்டது. முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், ஆனால் குடியேறுவதற்கு வருடக் கணக்கேனும் காத்திருக்க வேண்டி வரலாம். "துபாய் முதலாளித்துவத்திற்கு ஆயுசு நூறு" என்று நம்பிய பலர், (Real Estate) புத்தகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கற்பனை வீடுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கையில் பணமில்லாதவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கிக் கட்டினர். "வீட்டின் விலை எப்போதும் கூடிக் கொண்டு தான் இருக்கும், ஒருபோதும் குறையாது" என்று பங்குச்சந்தை சித்தர் சொன்ன அருள்வாக்கு பொதுக்கருத்தாக இருந்த காலமது. அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டை சில நாட்களின் பின்னர் விற்று லாபம் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். வாங்கி ஒரு மணித்தியாலங் கழித்துக் கூட, சந்தையில் வீட்டின் விலை அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நிதிநெருக்கடி கட்டுமான கம்பெனிகளையும் விட்டுவைக்கவில்லை. பல நூறு அடுக்குமாடிக் கட்டடங்கள், செயற்கைத்தீவுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இவையெல்லாம் தொடர்ந்து கட்டப்படுமா? எப்போது முடியும்? என்ற கேள்விகளுக்கு எவரிடமும் பதில் இல்லை. வீடுகள் கட்டப்படவில்லை என்பதற்காக, கடன் கொடுத்த வங்கிகள் சும்மா விடவில்லை. லட்சக்கணக்கான டாலர் கடனை மாதாந்த தவணையில் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று நச்சரிக்கின்றன. இதனால் இப்போது பலர் இல்லாத ஒரு வீட்டிற்காக பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுக்கடனை அடைத்து வரலாம். திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்?

துபாய் அரசாங்கம் தினசரி 1500 தொழில் விசாக்களை இரத்து செய்வதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை மறுக்கவில்லை, அதேநேரம் ஆமோதிக்கவுமில்லை. அந்த தொகை பத்திரிகை தெரிவித்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதைவிட கம்பெனிகள் இதுவரை எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளன என்ற சரியான விபரம் இல்லை. எப்படியும் ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. இவர்களில் பலர் பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர். இனிமேல் அது சாத்தியமா? துபாய் சட்டப்படி, வேலை இழந்தவர்களின் தொழில் விசா இரத்து செய்யப்படும். அதற்குப்பின் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கலாம். அதற்குள் இன்னொரு வேலை தேடிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் இதுவரை அதிக சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த, எஞ்சினியர்களின் சம்பளத்தைக் கூட அரைவாசியாக குறைக்கும் அளவிற்கு வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலை இழந்ததால், வீட்டுக்கடனை கட்டமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபகரமானது. துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியே சிறைத்தண்டனை கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்து கடனை கட்டி முடிக்க வேண்டி வரும். இதனால் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகும் போது கிரெடிட் கார்ட்டில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, தமது விலை உயர்ந்த கார்களை (எவருக்கும் விற்கமுடியாததால்) அங்கேயே போட்டு விட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வண்டிகள் கைவிடப்பட்டுள்ளன. வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது. மொத்தத்தில் துபாய் மாநகரின் சில பகுதிகள் யாருமே வசிக்காத இடங்களாக உருமாறுகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அரசாங்கம் புதிய ஊடக சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன் படி துபாயில் பொருளாதார பிரச்சினை இருப்பதாக, எந்த ஒரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்க முடியாது. அது குறித்த செய்திகளை பிரசுரிப்பவர்கள் அதிக பட்சம் ஒரு மில்லியன் டிர்ஹம் ($ 272000) குற்றப்பணம் கட்டவேண்டும். இதனால் ஊடகங்களும், செய்தியாளர்களும் "தேசப் பொருளாதாரம் என்றும் போல சிறப்பாக இருப்பதாக" பாசாங்கு செய்கின்றனர். இந்த சட்டம் காரணமாக பல வதந்திகள் பரவுகின்றன. இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கின்றது.

துபாய், "ஐக்கிய அரபு அமீரகம்" என்ற சமஷ்டிக் கூட்டமைப்பிற்குள் உள்ள மாநிலம். அதன் அயலில் உள்ள அபுதாபி மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும் பணக்கார எமிரேட். அதன் அளவுக்கதிகமான எண்ணை வளம் காரணமாக பெருமளவு தொகை பணத்தை கையிருப்பில் வைத்துள்ளது. எனினும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய்க்கு உதவ மறுத்து வருகின்றது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கு புரியாத புதிராக உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக துபாய் திவாலாவதை அபுதாபி எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப்போல சுதந்திர கலாச்சாரம் கொண்ட துபாயில், கடும்போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கொண்டு வரும் நோக்கம் இருக்கலாம். அதே நேரம் அமீரகம் முழுவதையும் ஒரே நாடாக, அபுதாபியின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கே வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.

துபாய் தொடர்பான முன்னைய பதிவொன்று: துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

Thursday, February 19, 2009

அமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்

Video: 'The War on Democracy'

மத்திய, தென் அமெரிக்க நாடுகளில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கங்களை அகற்றுவதற்கு, அமெரிக்கா தொடுத்த போர்களைப் பற்றிய முழுநீள ஆவணப்படம்.


'The War on Democracy' is John Pilger's first major film for the cinema - in a career that has produced more than 55 television documentaries. Set in Latin America and the US, it explores the historic and current relationship of Washington with countries such as Venezuela, Bolivia and Chile.

"The film tells a universal story," says Pilger, "analysing and revealing, through vivid testimony, the story of great power behind its venerable myths. It allows us to understand the true nature of the so-called war on terror".

Wednesday, February 18, 2009

இஸ்லாமியத் தாயகக் கனவுகள்

[அல் கைதா தொடர் - 4]

"முஸ்லீம்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கென்றொரு நாடில்லை. யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஏதாவதொரு பிரச்சனையென்றால் ஒன்று சேர்ந்து நிற்பார்கள். எமது இன மக்களிடையே ஒற்றுமையில்லை. முஸ்லீம்கள் தமக்கிடையே சண்டையிடாமல் ஒன்றுபடவேண்டும். முஸ்லீம்கள் தாம் வாழும் நாடுகளில் அடக்கப்படுகின்றனர். பாலஸ்தீனத்தில் எம்மின மக்களை யூதர்கள் அழித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் , பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எமதின மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப்பது ஒரு முஸ்லீமின் கடமை."

எகிப்தில் தோன்றி பின்னர் பிற அரபு நாடுகளிலும் பரவிய "முஸ்லீம் சகோதரத்துவம் " என்ற கட்சியின் அடிக்கடி கூறப்படும் கொள்கை விளக்க உரை அது. அந்தக்கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் மேற்படி கருத்துகளைப் பிரச்சாரம் செய்கின்றனர். "முஸ்லீம் நாடுகள்" என்று பொதுவாகக் கூறப்படுவதை இவர்கள் ஏற்றுக்கொளவதில்லை. முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி இதை "முஸ்லீம் சமுகம்" , "இஸ்லாமிய சமுகம்" என இரண்டாக வரையறுக்கிறது. முதலாவதில் பெயரளவில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஆனால் அரசாங்கம் மதசார்பற்றது. இரண்டாவது பிரிவில் அரசாங்கம் இஸ்லாமியச் சட்டப்படி ஆட்சி செய்யும், பிரஜைகள் மதத்தை நெறிதவறாது கடைப்பிடிக்க கடமைப்பட்வர்கள்.

எகிப்து: முதன்முதல் ஐரோப்பிய (பிரெஞ்சு) காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட அரபு நாடு. அதனால் அங்கு ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய மாதிரி நிர்வாக அலகுகளால் உருவான படித்த மத்திய தர வர்க்கம் மேற்கத்தைய அரசியல் சிந்தனைகளையும் வரித்துக் கொண்டது. அவர்களிடையே பல்வேறு தேசிய வாத அமைப்புகள் தோன்றின. முஸ்லீம் சகோதரத்துவமும் அப்போதுதான் (1928 ம் ஆண்டு) தோன்றியது. பிற அரசியல் சக்திகளிலிருந்து முஸ்லீம் சகோதரத்துவம் வேறுபட்ட கருத்துகளை முன்மொழிந்தது. அவர்கள் காண விரும்பியது சாதாரண எகிப்திய தேசிய அரசையல்ல. மேற்கே மொறோக்கோவிலிருந்து கிழக்கே ஈராக் வரை விரிந்த "அகன்ற இஸ்லாமியத் தேசிய அரசு" அமைப்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த எதிர்காலக் கனவை அவர்கள் "ஆண்ட பரம்பரைக் கதைகளால்" நியாயப்படுத்தினர். ஐரோப்பியரின் காலனியத் தலையீடு ஏற்படும் வரை மத்திய கிழக்கு முழுவதும் ஒரே இஸ்லாமியப் பேரரசாக முஸ்லீம்களின் தாயகமாக இருந்ததை நினைவு படுத்தினர். தமது இழந்த பெருமையை மீளப்பெற இதனை ஒரு தேசிய இனப்பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

எகிப்தைத் தனது பிடியில் வைத்திருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு மத அடிப்படைவாத முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை அங்கு ஆட்சியைக் கைப்பற்றத் தயாராகவிருந்த தேசியவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஆதரவுச் சக்தியாகப் பார்த்தது. . எதிர்பாராத விதமாக பிரிட்டிஷார் போன கையோடு அரபுத் தேசியவாத இராணுவ ஜெனரல்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். மேற்கத்தைய நாடுகளில் இராணுவச் சதிப்புரட்சி என்றழைக்கப்படும் இந்த நிகழ்வு எகிப்தில் புரட்சி என்றழைக்கப்படுகிறது. புதிதாகப் பதவியேற்ற நாஸரின் தலைமையில் அங்கே பல புரட்சிகர மாற்றங்கள் இடம்பெற்றன. சுயஸ்கால்வாய் தேசிய மயமாக்கப்பட்டமை அவற்றில் ஒன்று.

இரண்டாவது உலகப்போர் முடிந்திருந்த காலகட்டம் அது. காலனிய ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவது என்ற பேரில் ஆமெரிக்கா நாஸரின் ஆட்சியை ஆதரித்தது.அமெரிக்க நிர்ப்பந்தத்தால் தான் பிரிட்டன் எகிப்திலிருந்து பின்வாங்கியது. இருப்பினும் சுயஸ் கால்வாய் பிரச்சினை உலக வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது. சுயஸ்கால்வாயை அதிலே முதலிட்ட பிரிட்டிஷ்-பிரஞ்சுக் கம்பனிகள்தான் நிர்வகித்து வந்தன. எகிப்து அதனைத் தேசியமயமாக்கிய உடனேயே பிரிட்டனும் பிரான்சும் போர்ப்பிரகடனம் செய்தன. இஸ்ரேல் நேரடி யுத்தத்தில் இறங்கி கால்வாய் பகுதியை ஆக்கிரமித்தது. இந்தப்போரில் இஸ்ரேலிய விமானங்கள் அமெரிக்கக் கப்பலொன்றையும் குண்டு வீசி அழித்திருந்தன. தவறுதலாக நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அன்றைய யுத்தம் இஸ்ரேல் தன்னை மத்திய கிழக்கின் பலம் மிக்க சக்தியாகக் காட்டவும், அமெரிக்காவின் ஆதரவை என்றென்றும் தன் பக்கம் வைத்துக்கொள்ளவும் இது உதவியது.

1967 ல் நடந்த 6 நாள் யுத்தத்தில் எகிப்து இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீளக்கைப்பற்ற எண்ணியது. ஆனால், போரின் முடிவு எகிப்திற்கு பலத்த அடி கொடுத்தது. நிச்சயமாக இது பல எகிப்தியர்களுக்குச் சகிக்கமுடியாத தோல்விதான். முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி இத்தருணம் பார்த்து களமிறங்கியது. 1950 ல் அந்தக் கட்சி நாஸரினால் தடை செய்யப்பட்டிருந்தது. போரில் தொண்டர்களாகச் சேர்வதற்குக் கூட அதன் உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும் போரின் தோல்வி முஸ்லீம் சகோதரத்துவ மீள் வருகையை தவிர்க்கவியலாததாக்கியது.

"எமது நாடு ஒரு மதசார்பற்ற அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. மக்களிடையே மதப்பற்றுக் குறைந்து விட்டது." இதுவே போரில் முஸ்லீம் சகோதரர்கள் கூறிய காரணம்.சில வருடங்களுக்குப் பின்பு எகிப்து சிரியாவுடன் சேர்ந்துகொண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தது. இம்முறை இஸ்ரேலினால் வெல்லமுடியவில்லை. எகிப்திய சிரிய வீரர்கள் திறமையாகச் சண்டையிட்டு இஸ்ரேலியப் படைகளைத் தடுத்து நிறுத்தினர். சில ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்பட்டன. இந்தப்போரில் குறிப்பிடத்தக்க அம்சம் முஸ்லீம் சகோதரர்களின் பங்களிப்புத்தான். போர்க்களத்தில் முதன்முறையாக "அல்லாஹ் அக்பர்" கோஷம் கேட்டது. போரின் முடிவு முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிக்கு அனுகூலமாக அமைந்தது. அவர்களின் புகழ் எகிப்து முழுவதும் பரவியது.

1973 ல் நடந்த இந்தப்போர் முடிந்து சில வருடங்களில் நாஸர் மரணமடைய , சதாத் ஆட்சிக்கு வந்தார். நாஸர் தனது காலத்தில் சோஷலிசப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியதுடன், சோவியத் யூனியனுடனும் நெருங்கிய உறவு வைத்திருந்தார். சதாத் ஆட்சிக்கு வந்ததும் எகிப்தின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றங் கண்டன. அமெரிக்காவுடன் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டது. முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு வழி திறந்துவிடப்பட்டது. மிக முக்கியமாக நாஸரால் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லீம் சகோதரத்துவ உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டனர். சதாத் தனது எதிரிகளாகப் பார்த்த சோஷலிட்டுகளுக்கும், கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிராக அவர்களைத் தூண்டி விட்டார். இது கடைசியில் பாம்புக்கு பால் வார்த்த கதையாக முடிந்தது. 1977 ல் சதாத் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதை தேசத் துரோகமாய்ப் பார்த்த முஸ்லீம் சகோதரர்கள், சதாத்தை பாராளுமன்றத்தினுள் வைத்துத் தீர்த்துக் கட்டினர்.

தற்போது ஆட்சி புரியும் முபாரக்கின் காலத்தில் சர்வதேச இஸ்லாமிய வாதிகளின் அமெரிக்க எதிர்ப்பு ஜிகாத், எகிப்தில் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது. அமெரிக்கா மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்தையும் பொருளாதார, இராணுவ உதவிகள் கொடுப்பதன் மூலம் நன்றாகக் கவனித்துக் கொள்கிறது. இவ்வளவிற்கும், முபாரக் ஒரு ஜனநாயகவாதியல்ல. அவரது ஆயுட்கால ஜனாதிபதிப் பதவியும், ஆட்சியை ஏகபோக உரிமையாக்கிக்கொண்ட சொந்தக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியும் சதாம் ஹோசைனின் ஈராக்கை நினைவுபடுத்தும். மேலும் அரசியல் கைதிகளால் எகிப்தியச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. இது எவ்வகையிலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. பெரும்பாலான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி உறுப்பினர்கள் சிறைகளில் விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எகிப்து சிறைக்கைதிகளை நடத்தும் முறைபற்றி பல மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி ஆரம்ப காலங்களில் பலரால் அறியப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹசன் அலி-பன்னாவினால் தலைமை தாங்கப்பட்டது. அவரின் மரணத்திற்குப்பிறகு கட்சி இரண்டாக, மூன்றாக உடைந்துவிட்டது. அவற்றில் சில குழுக்கள் தீவிரவாதப்போக்கைக் கொண்டிருந்தன. ஒரு குழு லுக்சொர் என்ற இடத்தில் ஜேர்மனிய உல்லாசப் பிரயாணிகளை சுட்டுக்கொன்றதன் மூலம் உலக அளவில் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. (எகிப்து வருடாவருடம் உல்லாசப் பயணிகள் வருகையினால் பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டி வருகின்றது.). இன்னொரு குழு ஆப்கானிஸ்தான் சென்று பின் லாடனின் அல-கைதாவுடன் இணைந்து கொண்டது. இனி முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் அரசியற் கொள்கைகள், எதிர்காலம் என்பன பற்றிச் சிறிது ஆராய்வோம்.

இதற்கு "லிவா அல்-இஸ்லாம்", "அல் டாவா" போன்ற கட்சியின் வாராந்தப் பத்திரிகைகளிலிருந்து பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் அவர்களது பிரச்சார அல்லது கொள்கை விளக்கங்கள் சார்ந்த கட்டுரைகள் தவிர சில விளம்பரங்களும் காணப்படுகின்றன. இந்த விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் "இஸ்லாமிய" வங்கிகள், மருத்துவ மனைகள், புத்தகசாலைகள் என்பனவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றில் கட்சியின் முதலீட்டில் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுவன. இஸ்லாமிய வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி அறவிடுவதில்லை. மருத்துவ மனைகள் ஏழைகளுக்கு இலவசச் சிகிச்சை வழங்குகின்றன. கட்சிக்கு வரும் வெளிநாட்டு உதவிகள் இந்த நிறுவனங்களை இயங்க வைக்கின்றன. சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்தப் புலம்பெயர்ந்த எகிப்தியரில் பலர் முஸ்லீம் சகோதரத்துவ ஆதரவாளர்கள். அவர்களிடம் இருந்து பெருமளவு நிதி வசூலிக்கப்படுகின்றது. இதைவிட அண்மைக்காலம் வரை சவூதி அரேபிய அரசு உதவி வந்தது.

முஸ்லீம் சகோதரர்களின் முக்கிய எதிரிகள் யார் ? முதலாவது எதிரிகள் யூதர்கள். இவர்கள் யூதரைத் தனி இனமாகப் பார்க்கின்றனர். மத்திய கிழக்கில் நிறுவப்பட்டுள்ள யூத இயக்கம் (இஸ்ரேல்) முஸ்லீம் இனத்தை மெல்ல மெல்ல அழித்து வருகின்றது. யூதர்கள் சர்வதேச ரீதியாக இஸ்லாமிற்கு எதிராகச் சதி செய்கிறார்கள் போன்ற வாதங்கள் அடிக்கடி இவர்களின் பத்திரிகைகளில் வருவது வழமை. அமெரிக்காவும் யூதர்களின் பிரச்சாரத்தை ஏற்றுத்தான் முஸ்லீம்களைப் பகைக்கிறது என்ற கருத்து பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்படுகிறது. 11 செப் 2001 நியூ யோர்க் தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற கதை அரபு நாடுகளில் பிரபலமாக அடிபட்டது.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்ற நோக்கில் பார்க்கப்படுகின்றன. சிலுவைப்போரை முஸ்லீம்கள் இன்னமும் மறக்கவில்லை. மேற்குலக நாடுகள் முஸ்லீம்களை அழிக்கும் நோக்கில் மீண்டும் ஒரு போருக்குத் தயாராகின்றன என்ற கருத்து உலகில் தற்போது நடக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக் பிரச்சனைகளுக்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. அமெரிக்கா குறித்து வேறுபட்ட பார்வையும் உள்ளது. அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசு. அது குறிப்பாக உலகில் இரண்டாவது பெரிய மதத்தைச் சேர்ந்த முஸ்லீம்களை அடிமைகளாகப் பார்க்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், உலகில் முஸ்லீம்கள் மட்டும்தான் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கின்றனர்.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அது மூன்றாவது எதிரியாகக் கருதப்பட்டது. கம்யூனிசம் நாஸ்திகத்தைப் பரப்புகிறது. நாஸ்திக அரசியல் இஸ்லாமியத்தை அழித்துவிடும் என்பதே அவர்களது முக்கிய கவலையாகவிருந்தது. மேலும் யூதர்கள்தான் சோவித் யூனியன் தலைமையில் சர்வதேசக் கம்யூனிசத்தைப் பரப்பி வருகின்றனர் என்பது அவர்களது கருத்து. எகிப்தியர்கள் மத்தியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளையும் மதசார்பற்றவர்களையும் முஸ்லீம் சகோதரர்கள் இன(மத) துரோகிகளாகப் பிரகடனம் செய்துள்ளனர். அவர்களது நீண்டகால அரசியற் திட்டத்தின்படி முன்னர் குறிப்பிட்ட முக்கிய எதிரிகளை வென்ற பின்னர் இந்தத் துரோகிகளுடனான கதை தீர்க்கப்படும். சோவியத் யூனியனின் வீழு;ச்சியைத் தமது கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாக இவர்கள் கருதுகின்றனர். அதாவது கடவுள்-மத நம்பிக்கையற்ற அரசு வீழ்ந்தமை பற்றி இவர்களுக்கு ஆச்சரியப்பட ஏதுமில்லை. முஸ்லீம் சகோதரர்கள் (ஜெர்மன்) நாஸிகளிடம் பாசம் காட்டுகின்றனர். இருகூட்டங்களுக்கும் யூதர்கள் பொது எதிரி என்பது மட்டுமல்ல, பல அரசியல் நடைமுறைகளும் ஒத்து வருகின்றன. யூதர்களை அழித்த ஹிட்லரை முஸ்லீம் சகோதரர்கள் தமது நாயகனாகப் பார்க்கின்றனர்.

எதிர்கால உலகம் எவ்வளவு தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் என்பதிலேயே முஸ்லீம் சகோதரர்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஒரு பக்கம் கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் முஸ்லீம் எதிர்ப்புச் சிலுவைப் போரை நடத்திக் கொண்டிருந்தால் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தமது ஜிகாத்தை நடத்துவதும் தொடரத்தான் போகிறது. "நாங்கள்", "அவர்கள்" எனப்படும் சொற்களுக்குள்ளான அர்த்தங்கள் முஸ்லீம்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுகின்றன. பாலஸ்தீனத்தில் , ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் நடக்கும் போர்களில் மக்கள் சாகும்போது அது "முஸ்லீம்களின் " அழிவாகப் பார்க்கப்படுகின்றது. இதனால்தான் முஸ்லீம்கள் தமது இனத்தின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் நடாத்தி முஸ்லீம் தேசிய அரசு ஸ்தாபிக்க வேண்டுமென்ற அரசியல் இலக்கைக் கொண்ட இயக்கங்கள் வளர்கின்றன. முஸ்லீம் சகோதரர்கள் காணும் "அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம்" என்பது ஒரு கனவுதான். ஆனால் ஆங்காங்கே உதிரிகளாகச் செயற்படும் (தலிபான் போன்ற ) இஸ்லாமிய வாத அரசியல் அமைப்புகள் தத்தமது நாடுகளில் உருவாக்கும் தனியரசுகள் நீண்டகாலத்தில் இஸ்லாமியருக்கான தாயகத்தை நிதர்சனமாக்கும் என்று நம்புகின்றன.

-- முற்றும் --


Tuesday, February 17, 2009

குண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன்

உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா? [பகுதி - 4]

2004 ம் ஆண்டு மார்ச் 11, மாட்ரிட் ரயில்வண்டியில் குண்டு வெடித்து 190 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அன்றைய ஸ்பெயின் பிரதமர் அஸ்னார், எடுத்த எடுப்பில் பாஸ்க் பிரிவினை கோரும் ETA மீது பழி சுமத்தினார். ETA மறுத்திருந்தது. ஆனால் அன்றைக்கு யாரும் மறுப்பை பெரிதாக எடுக்கவில்லை. குண்டுகள் வெடித்து மூன்று நாட்களுக்குள் பொதுத் தேர்தல் வர ஏற்பாடாகி இருந்தது. தேசிய அனுதாப அலை காரணமாக, அஸ்னார் தனது வெற்றி உறுதி என்று எண்ணி இருக்கலாம்.

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளேயே, ஸ்பானிய ஊடகங்கள் தீவிரமாக துப்புத் துலக்கியத்தில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. குண்டு வைக்க சதி செய்த பயங்கரவாதிகள் என்று சொல்லி, சில அரபு இளைஞர்களை ஸ்பானிய பொலிஸ் அடுத்தடுத்து கைது செய்து கொண்டிருந்த காலம் அது. ஆனால் ஊடகங்களுக்கு கிடைத்த தகவல்கள் படி, சந்தேகநபர்களில் சிலர் காவல்துறை நியமித்த உளவாளிகள், அல்லது ஆட்காட்டிகள். உதாரணத்திற்கு தீவிரவாதிகளுக்கு டைனமைட் வெடிபொருளை விற்ற சுரங்க தொழிலாளி, காவல்துறையினால் பணியில் அமர்த்தப்பட்டவர். வாங்கிய வெடிபொருட்களை எங்கே, எப்படி கடத்திச் செல்கின்றனர் என்ற விபரங்கள் கூட காவல்துறைக்கு தெரிந்தே இருந்தன. யாரும் தலையிடவில்லை. மேலும் ரயிலில் குண்டை பொருத்த திட்டமிருந்ததாக துல்லியமான தகவல் கூட கிடைத்தது. அப்போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அது சரி, இவ்வளவு தகவல்கள் கிடைத்தும், காவல்துறை எதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஒரு வேளை, தாக்குதலின் வீரியத்தை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். அதைவிட முக்கியமாக அந்த குண்டுகள் ETA க்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என காவல்துறை நம்பி இருக்கலாம். கடந்த காலங்களில் அது போன்ற சம்பவங்களில், பல ETA தலைமை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆமாம், சாதாரண மக்களின் சிந்தனையோட்டத்திற்கு மாறாக தான், புலனாய்வுத்துறை சிந்திக்கின்றது. தீவிரவாத இயக்கங்களை வெளிப்படையாக இயங்கவிட்டு, அதன் கீழ்மட்டத்தில் செயல்படுபவர்களைக் கண்காணித்து, பெரிய புள்ளிகளை கைது செய்ய நாள் பார்த்துக் காத்திருப்பர். இதற்காக புலனாய்வுத்துறை தனது ஆட்களையே அனுப்பி வைக்கும்.

கொஞ்சக் காலம் அமைதிப்பூங்காவான நெதர்லாந்தில், "தீவிரவாதக் குட்டிகளின் கிளப்" ஒன்று இயங்கி வருவதாக, பொலிசும், ஊடகங்களும் மயிர்க்கூச்செறியும் பரபரப்புக் கதைகளை கூறி வந்தார்கள். ஒரு மிருகத்தை கண்டுபிடித்தால், அதற்கொரு பெயரிடு என்றொரு பழமொழி இருப்பது போல, அந்த கிளப்பிற்கு "Hofstad groep" என பெயரிட்டார்கள். ஒரு இணையத்தளத்தில் புனைபெயரில் வந்து தீவிர அரசியல் கருத்துகளை கூறிய இளைஞன் ஒருவன் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அந்த இணையத்தில் தன்னோடு விவாதம் செய்தது பொலிஸ் கையாள் என்ற விடயம், சிறை சென்ற பின்னர் தான் அந்த இளைஞனுக்கு தெரிய வந்தது. அதே போல கிரேனேட் வைத்திருந்த குற்றத்திற்காக இன்னொரு இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனது கைகளுக்கு அந்த கிரேனேட் எப்படி வந்தது? தீவிரவாதி போல நடித்த இன்னொரு பொலிஸ் உளவாளி ஒருவரிடம் இருந்து கிடைத்தது. நான் இங்கே குறிப்பிடும் விபரங்கள் எல்லாம், கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல்கள் துருவிய போது வெளி வந்த உண்மைகள். சில ஊடகங்களும் இதே சந்தேகங்களை கிளப்பி இருந்தன.

மேற்குறிப்பிட்ட ஊடுருவல்கள், மேற்குலக வழிகாட்டுதலுடன் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடும் மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் தீவிரமாக நடக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அல்ஜீரியா. அங்கே 1991 ல் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமியவாதக் கட்சியை, ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளியது அல்ஜீரிய அரசு. தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்பட்டு, இராணுவ சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டது. இஸ்லாமியக்கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அதே நேரம் கிராமங்களில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதான சம்பவங்கள் அதிகரித்தன. அரசு இதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைங்கரியம் என்று இலகுவாக உலகை நம்ப வைத்தது.

அல்ஜீரிய அரசிற்கு, அதன் மாஜி காலனியாதிக்க நாடான பிரான்ஸ் ஆதரவு வழங்கியது இரகசியமல்ல. எனினும் பாரிஸ் நகரில் சுரங்கரயில்வண்டியில் இடம்பெற்ற சில குண்டுவெடிப்புகள், பிரான்சை நேரடியாக அல்ஜீரிய உள்நாட்டுப்போரில் ஈடுபட வைத்தது. பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்ஸ் வழங்கிய பூரண ஆதரவை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அல்ஜீரிய அரசு, இஸ்லாமிய எதிர்ப்பியக்கத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கி வெற்றிவாகை சூடியது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், அல்ஜீரிய அரசு எவ்வாறு சர்வதேசத்தை தனது பக்கம் திருப்பியது என்பதே. சர்வதேச சமூகத்தை பொறுத்த வரை, அல்ஜீரியாவில் "உள்நாட்டு அல்கைதா" தலையெடுக்கப் பார்க்கிறது. மனிதகுலத்திற்கு விரோதமான பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். அவ்வளவு தான்.

2004 ம் ஆண்டு, அல்ஜீரிய அரச புலனாய்வுத்துறையின் பழைய பணியாளர்கள் சிலர், தமது மனச்சாட்சிக்கு பயந்து, அரசின் பொய்முகமூடியை கிழிக்க முன்வந்தனர். போர்க்காலத்தில் நடந்த உண்மைகளைப் பற்றி வாக்குமூலம் அளித்தனர். நாம் நினைப்பதற்கு மாறாகவே உண்மை இருப்பது உலக யதார்த்தம். உள்நாட்டுப்போரில் பிரான்சை ஈடுபடவைக்கும் சதித்திட்டம் புலனாய்வுப்பிரிவும், பிரெஞ்சு அரசும் சேர்ந்தே தீட்டின. தலைநகர் அல்ஜியர்சில், பிரெஞ்சு தூதுவராலய ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பத்தை குறிப்பிடலாம். அவர்களை கடத்தியது புலனாய்வுப்பிரிவு ஆட்கள் என்பது மட்டுமல்ல, இந்த நடவடிக்கை முன்கூட்டியே பிரெஞ்சு உள்துறை அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. (சில நேரம் அவரும் சேர்ந்தே திட்டமிட்டிருக்கலாம்). இது மட்டுமல்ல, இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்தியதாக நம்பப்பட்ட பல தாக்குதல் சம்பவங்களை, அந்த இயக்கத்தினுள் ஊடுருவி இருந்த புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த சதிக்கு சிகரம் வைத்தாற்போல் பாரிஸ் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. குண்டுவெடிப்பை திட்டமிட்ட ஒரு இராணுவ புலனாய்வுத்துறை ஜெனரல் உட்பட மற்றும் பலர் இனம் காணப்பட்டனர். அது மட்டுமல்ல, பிரெஞ்சு அரசாங்கம் இதுவரை எதற்காக குண்டுவெடிப்பு பற்றி பூரண விசாரணை செய்யவில்லை? என்பதும் சந்தேகத்திற்குரியது.

இந்த உண்மைகளும் பிரான்ஸில் ஏற்கனவே வெளிவந்து, ஊடகங்களின் கவனத்தை பெற்றவை தான். அந்த நேரம் பிரான்சிலேயே தங்கியிருந்த, பாரிஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை அடையாளம் காட்ட, முன்னாள் புலனாய்வுப்பிரிவு ஊழியர்கள் முன்வந்தனர். இருப்பினும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், பத்திரமாக அல்ஜீரியா திரும்புவதற்கு பிரெஞ்சு அரசாங்கம் அனுமதி அளித்தது. இந்தப் புதிருக்கு ஒரேயொரு விடை தான் இருக்க முடியும். அல்ஜீரிய அரசு பிரான்சின் நண்பன். இஸ்லாமிய தீவிரவாதிகள் இருவருக்குமே எதிரிகள். "நீதி, நியாயம்" என்பனவெல்லாம் அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்பட்ட அலங்காரச் சொற்கள். நிஜ உலகில் எமது நலன்களுடன் யார் ஒத்துப் போகின்றனர், என்பதே கணிக்கப்படுகின்றது. அளவில் அதிகமாக எண்ணை, எரிவாயு சேமிப்புகளை கொண்ட அல்ஜீரியா என்ற கற்பக விருட்சம் பிரான்சிற்கு தேவைப்படும் வரையில், அந்த அரசிற்கான ஆதரவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

-- முற்றும் --

(இந்த தொடர் இத்துடன் முடிவுறுகின்றது.)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
Part 3: புகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்
Part 2: நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி
Part 1: உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?

Monday, February 16, 2009

புகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்

உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா? [பகுதி - 3]

நெதர்லாந்தில், ஒரு காட்டுப்பகுதியில், கைவிடப்பட்ட "நேட்டோ" இராணுவமுகாம் ஒன்று, இப்போது அகதிமுகாமாக இயங்கிக் கொண்டிருந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, உலகம் மாறிக் கொண்டிருந்த காலம் அது. அந்த அகதி முகாமில் வசித்த அகதிகளில், என்பது வீதமானவர்கள் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, பொஸ்னியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளை பேசும் மக்கள், ஆனால் எல்லோரையும் இஸ்லாம் என்ற மதம் இணைத்திருந்தது.

அல் கைதா பற்றியோ, அல்லது இஸ்லாமிய அரசியல் பற்றியோ, அன்று வெளியுலகில் அதிகமானோர் அறிந்திருக்கவில்லை. அதனால் அந்த அகதிகளில் பலர், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றி கொடுத்த விளக்கங்கள் பல எனக்கு புதுமையாக இருந்தன. அவர்களில் எல்லோரும் இஸ்லாமியவாதிகள் அல்ல. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களில் (முன்னாள்) மார்க்சிஸ்டுகள் இருந்தனர். பொஸ்னியாவில் இருந்து வந்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி நான்கு வசனங்களுக்கு மேல் எதுவும் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. அதேநேரம் ஈரானில் இருந்து வந்த பலர், மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டவர்களாக, மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைந்தனர். எது எப்படி இருப்பினும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, நெதர்லாந்து அரசாங்கம் அகதி அந்தஸ்து வழங்கியது. இவ்வாறு ஒரு சில வருடங்களில் மட்டும் இலட்சக்கணக்கான பன்னாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

11 செப்டம்பர் 2001 க்கு பிறகு உலகம் தலைகீழாக மாறியது. எந்தப் புற்றுக்குள் எந்த தீவிரவாதி இருக்கிறான் என்று, ஊடகங்களும் அரசாங்கங்களும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தன. என்ன ஆச்சரியம்? ஒரு காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தவர்க்கெல்லாம், தங்க அனுமதித்த அதே அரசு, இப்போது சந்தேகக்கண் கொண்டு பார்த்தது. அல் கைதா, தாலிபான் உறுப்பினர்கள் என்று சிலரை, ஊடகங்கள் புலனாய்வு செய்து வெளியிட்டன. அதே நேரம், ஒரு சிலர் முன்னாள் அரச, இராணுவ அதிகாரிகள் என்றும், கைதிகளை சித்திரவதை செய்தவர்கள் என்றும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், சில மனித உரிமை அமைப்புகள் குட்டையைக் கிளறி விட்டன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும், நெதர்லாந்து அரசாங்கம் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டது.

"அடடா, இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பாவி வெள்ளையனை ஏமாற்றி விட்டார்களா?" என்று உடனே ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். மேற்குலக நாடுகளின் "அகதிகள் அரசியலைப்" புரிந்து கொண்டவர்களுக்கு, வெள்ளையன் குடுமி சும்மா ஆடாது என்ற விடயம் தெரியும். மேற்கு ஐரோப்பாவில், அமெரிக்க அரசுடன் நெருங்கிய உறவைப் பேணி வரும் நெதர்லாந்து அரசாங்கம் அப்போதிருந்தே அகதிகளை ஏற்றுக்கொள்ளும் காருண்யவானாக காட்டி வந்துள்ளது. பொஸ்னியா சென்று பேரூந்து வண்டிகளில் முஸ்லீம் அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அகதிகளுக்கு இரங்கிய அதே அரசின் சமாதானப் படையை சேர்ந்த அதிகாரி, செர்பிய படைகள் முஸ்லீம்களை கொன்று போட அனுமதித்த விடயம் வெளியே தெரிய வர சில காலம் எடுத்தது.

இன்னொரு விதமாக சொன்னால், அகதிகள் உருவாக காரணமானவர்களே, அவர்களை ஏற்றுக் கொண்டனர், பொஸ்னிய யுத்தம் முடிந்த பிறகு அனுப்பியும் வைத்தனர். இதே கதை தான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடந்தது. இந்த நாடுகளைச் சேர்ந்த கைதிகளிடம் இருந்து, உள்நாட்டு இராணுவ/அரசியல்/பொருளாதார இரகசியங்களை, விலை மதிக்க முடியாத தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அவற்றில் எல்லாமே சரியானவை அல்ல என்பது வேறு விடயம். உதாரணத்திற்கு, சதாம் அணுகுண்டு வைத்திருந்த கதை, தமது தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வைக்க, சில ஈராக்கிய அகதிகள் கூறிய பொய் என்பது பின்னர் தெரிய வந்தது. அதே போல, இஸ்லாமிய எதிர்ப்பு போராளியாக காட்டிக் கொண்ட சோமாலிய "வீரப் பெண்மணி" ஹிர்சி அலி, புகழ் தேடி இட்டுக் கட்டிய கதைகளை, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று புட்டுப் புட்டு வைத்தது.

வருகிற அகதிகள் எல்லாம், தான் குறிப்பிட்ட ஒரு அரசாங்கத்தில், அல்லது இயக்கத்தில் பெரிய பதவியில் இருந்ததாக கதை விடுவார்கள் என்பது, அவர்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு தெரியாத சங்கதியல்ல. உண்மையிலேயே அப்படியான நிலையில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த அகதியை விசாரிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த நாட்டைப் பற்றி தன் நாட்டு வெளிவிவகார அமைச்சு தொகுத்த அறிக்கையை வாசித்திருப்பார். (சில நேரம் விசாரணை நடக்கும் இடத்திலும் இந்த அறிக்கையை வைத்திருப்பார்). அதனால் விசாரிக்கப்படும் அகதி, வழக்கமாக தெரிந்த நபர்களை அல்லது இடங்களைப் பற்றி அதிகமாக தெரிவிக்கும் போது, அந்த அகதியிடம் இன்னும் கறக்கலாம் என நினைத்துக் கொள்வர். கவனிக்கவும், முதலில் விசாரிப்பவர் எப்போதும் குடிவரவு அமைச்சில் வேலை செய்யும் சாதாரண அதிகாரி தான். ஆனால், குறிப்பிட்ட அகதியிடம் இருந்து இன்னும் நிறைய தகவலைப் பெறுவதற்காக, இன்னொரு விரிவான விசாரணைக்கு அழைக்கப்படுவார். அந்த விசாரணையை செய்வது அனேகமாக புலனாய்வுத்துறையை சேர்ந்த அதிகாரியாக இருப்பார். அகதிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்களை பிறகு என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் இதுவரை தெரியாது. தஞ்சம் கோரிய அகதியின் சொந்த நாட்டு அரசிற்கு அறிவிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்த போதிலும்.... தகவல்கள் பரிமாறப்படுவதாக சில அகதிகளுக்கு உதவும் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

மேற்குலக நாட்டு அரச புலனாய்வுப்பிரிவு, சில அகதிகளை தமக்கு வேலை செய்யுமாறு கேட்ட சம்பவங்கள் பல உள்ளன. அவ்வாறு ஒத்துக் கொள்ளும் போது, அவரது நாட்டை சேர்ந்தவர்களை வேவு பார்த்து சொல்லுமாறு பணிக்கப்படுவர். அந்த சேவைக்கு பணம் வழங்கப்படலாம், அல்லது அந்த அகதிக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அகதி அந்தஸ்தோ, அல்லது பிரசா உரிமையோ வழங்கப்படலாம். வேவு பார்க்க மறுப்பவர்களின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப் போவதாக பயமுறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. ஆகவே எதுவும் சாத்தியமே.

இனி மீண்டும் இஸ்லாமிய நாடுகளின் அகதிகளைப் பற்றிய விடயத்திற்கு வருவோம். பெருந்தொகையாக இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது ஏன் என்ற புதிருக்கான பதில் சில வருடங்களில் தெரிய வந்தது. முதலில் சர்வதேச (வாசிக்கவும்: அமெரிக்க) தலையீட்டினால், பொஸ்னியாவில் யுத்தம் நின்று, சமாதானம் ஏற்பட்டது. போரினால் அழிவுற்று எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு அகதிகள் வற்புறுத்தப்பட்டனர். மீள்குடியேற்றத்திற்கு சிறு தொகைப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். புகலிடம் கோரிய நாட்டிலேயே தங்குவோம் என பிடிவாதம் பிடித்தவர்களுக்கு, அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் என்ன நடந்தது என்பதை நான் இங்கே அதிகமாக விபரிக்க தேவையில்லை. அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த அந்த நாடுகளில், மொழிபெயர்ப்பாளராகவும், பிற அரச கருமங்கள் ஆற்றுவதற்கான ஊழியர்களாக, மேற்குலகில் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் அகதிகளின் சேவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த கடமை அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் இயக்கங்கள், அவர்களை துரோகிகளாக பார்த்தன. சில நேரம் தாக்குதல்களில் கொள்ளப்படலாம் என்ற ஆபத்திற்கு மத்தியில் தான் அவர்கள் பணி புரிய வேண்டியுள்ளது. உண்மையில் சில பேர் தாமாக விரும்பிப் போயிருக்கலாம். இருப்பினும் குறிப்பிட்ட தொகையினருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒரு பக்கம் தஞ்சம் கோரிய நாட்டில் விரட்டுகிறார்கள், மறுபக்கம் சொந்த நாட்டில் கொல்கிறார்கள். எங்கே போவது?

-- தொடரும் --


Sunday, February 15, 2009

நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி


உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா? பகுதி - 2

ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட அந்த மின்சார ரயில்வண்டி, கிரீச் என்ற ஒலியுடன், ஆம்ஸ்டர்டாம் ரயில்நிலையத்தை வந்தடைந்தது. இரண்டுமணி நேரமாக "மின்சாரத் தடை" காரணமாக கதவுகள் திறக்காததால், பயணிகள் கலவரமடைந்தனர். இறுதியில் கதவுகள் திறக்கப்பட்ட போது, மேடையில் காத்திருந்த பொலிஸார் இரண்டு இளைஞர்களை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த பின்னர், அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அப்படியானால் அவர்களை கைது செய்யக் காரணம் என்ன? ரயிலில் வந்து கொண்டிருந்த தாடி வைத்திருந்த, இஸ்லாமியப் பாணி உடை அணிந்திருந்த அந்த இரு இளைஞர்களும் தொழுகைக்கு முன்னதாக கழிவறை சென்று வந்தது தான். இஸ்லாமியப்பாணி உடை அணிந்திருப்பதும், கழிவறை செல்வதும் தண்டனைக்குரிய குற்றங்கள் அல்ல. ஆனால் அந்த ரயிலில் வந்த மற்ற பயணிகள், அந்த இளைஞர்கள் "குண்டுவைப்பதற்கு தயாராவதாக" தாமாகவே கற்பனை செய்து கொண்டது தான் இவ்வளவு அமர்க்களத்திற்கு காரணம். ஒரு குறிப்பிட்ட இனத்தை, மதத்தை சேர்ந்த காரணத்தாலேயே அனைவரும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுவது, ஏதோ இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் நடக்கும் விடயமல்ல, மனித உரிமைகளை இம்மியளவு பிசகாமல் பாதுகாப்பதாக கருதப்படும், மேற்குலக ஜனநாயக நாடுகளிலும் நடந்து வருவதற்கு உதாரணமே, மேற்குறிப்பிட்ட சம்பவம்.

நெதர்லாந்து நகரொன்றில், தொலைத்தொடர்பு நிலையமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த, நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, அந்த எகிப்திய இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டான். அந்த இளைஞன் அல் கைதாவுடன் தொடர்பு வைத்திருந்தாக பொலிஸ் குற்றஞ்சாட்டியது. அதற்கு ஆதாரமாக ஓட்டுக்கேட்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல் தம்மிடம் இருப்பதாக கூறியது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். ஆனால் பொலிஸ் மறுநாளே அந்த இளைஞனை பிடித்து விமானத்தில் ஏற்றி அனுப்பி, எகிப்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டது. அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தியது அமெரிக்க அரசு. எகிப்திய சிறையில் சித்திரவதைக்குள்ளான அந்த இளைஞன், இறுதியில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டான்.

இது போன்ற கைதுகளும், நாடுகடத்தல்களும் முஸ்லீம் இளைஞர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுவதில்லை. கனடாவில் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டான். இலங்கையில் கைதிகள் சித்திரவதை செய்வது ஏற்கனவே நிரூபணமான விடயம் என்று கூறி, மனித உரிமை நிறுவனங்கள் சில நாடுகடத்தலை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சி கைகூடவில்லை. இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், இலங்கை, எகிப்து போன்ற நாடுகளில் சித்திரவதை நடப்பது மேற்குலக நாடுகளுக்கு ஒன்றும் தெரியாத விடயமல்ல. உண்மையில் தாம் செய்ய விரும்பாத, தமது நற்பெயருக்கு களங்கம் வரும் என அஞ்சும் "அழுக்கான வேலை"களை, அந்த நாடுகள் பார்த்துக் கொள்ளட்டும் என திருப்தியடைகின்றன.

மேலைத்தேய நாடுகளில் வாழும் (ஐரோப்பிய இனங்களைச் சேராத) வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளில் பிரசாவுரிமையைப் பெற்றிருந்த போதிலும், இரண்டாம்தரப் பிரசைகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு "நம்பகத்தன்மை" தேவைப்படும் தொழில்களுக்கு அவர்களை எடுப்பதில்லை. தொழில் இரகசியத்தை வெளிவிடலாம், அல்லது தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தலாம், என்பன தேசநலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களாக பார்க்கப்படுகின்றன. அரசாங்கம், பொலிஸ், இராணுவம், விமானப்படை, மற்றும் அணு மின் உலைகள் போன்றன இந்த வகைக்குள் அடங்கும். இத்தகைய பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களை, பொலிஸ் சோதனை செய்து (screening) நற்சான்றிதழ் கொடுத்தால் தான், வேலையில் சேர்ப்பார்கள். சில நிறுவனங்கள் துப்பறியும் நிபுணர்களை நாடுவதும் உண்டு.

அதே நேரம் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை நிரந்தரம் என எண்ணிவிடக் கூடாது. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இரண்டு வெள்ளையின யுவதிகள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். அரசு அவர்களை "பயங்கரவாத சந்தேகநபர்களாக" பார்க்க காரணம்? அந்த யுவதிகள் இருவரினதும் அரசியல் பின்னணி கண்ணை உறுத்தியது தான். "இனவெறி எதிர்ப்பு", "அகதிகளுக்கு உதவுதல்" போன்ற இடதுசாரி அரசியலில் ஈடுபடுபவர்கள் கூட, அரசின் கண்களுக்கு ஆபத்தானவர்களாக தெரிகின்றனர். இதே போல, பாரிஸ் விமான நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெருந்தொகையான தமிழ் இளைஞர்களும், ஆபத்தானவர்களாக கருதப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பது, 11 செப்டம்பர் 2001 க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நெதர்லாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பத்து ஆசனங்களை கைப்பற்றி இருந்தது. அந்தளவு மக்கள் ஆதரவைக் கூட சகிக்க முடியாத அரசு, மென்மையான அடக்குமுறையை ஏவிவிட்டது. அரச நிர்ப்பந்தம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை யாரும் வேலையில் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியதால், இன்றைய தலைமுறைக்கு அப்படி ஒரு கட்சி இருந்ததே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், பல மேற்குலக நாடுகளில் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்ற பொழுதிலும், நடைமுறையில் கருப்புத்தலையுடன் காணப்படும் வெளிநாட்டவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை காட்டுமாறு கேட்கப்படுகின்றது. இதனை நிறப்பாகுபாடு என்று நீங்கள் கூறலாம், ஆனால் அப்படி செய்யுமாறு தனது மேலதிகாரிகள் அறிவுறுத்துவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். மேற்குலக நாடுகளும் தேச நலன் என்று வரும் போது, மூன்றாம் உலக நாடுகள் அளவிற்கு இறங்கிச் செல்லும் என்பதை இது போன்ற சம்வங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில், அடையாள அட்டை சோதிக்கும் நடைமுறை கூட தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நகர வீதிகளில், கட்டடங்களில் பொருத்தப்படும் கமெராக்கள், நீங்கள் சிறுநீர் கழிக்க ஒதுங்கினாலும் காட்டிக் கொடுத்துவிடும். அதைவிட பொதுப் போக்குவரத்து துறையில் பாவிக்கப்படும் மின்னியல் அட்டை மூலம், நீங்கள் எங்கேயெல்லாம் பயணம் செய்கின்றீர்கள் என்பதை இலகுவில் கண்காணிக்கலாம். நீங்கள் தனியாக காரில் பயணம் செய்பவரா? கவலை வேண்டாம். நீங்கள் அறியாமலே உங்கள் வண்டியில் (விமானங்களில் உள்ளத்தைப் போல) "கறுப்புப் பெட்டி" ஒன்று பொருத்தப் படும். நெடுஞ்சாலைகளில் உள்ள நவீன கருவிகள், நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளீர்கள் என்பதை காட்டிக் கொடுத்துவிடும். உண்மையில் பிரத்தியேக வரி அறவிடவே இந்த நடைமுறை வருகின்ற போதிலும், வாகனம் ஓட்டுபவரின் பயண விபரங்களை பதிவு செய்து வைக்கவும் உதவும்.

மேற்குலக நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக சென்று தஞ்சம் கோருபவர்களை விசாரணை செய்யும் புலனாய்வுத்துறையினர், அவர்களிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இது பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

-- தொடரும் --


முன்னைய பதிவு:
உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?

Saturday, February 14, 2009

உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?


ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் தயாரித்துள்ள "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றவர்களை காப்பாற்றுவதற்கு எந்த சட்டமும், வக்கீலும் உதவப்போவதில்லை. சட்டங்களால் ஆளப்படும் மேற்கத்திய நாடுகளில் கூட, "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" என்ற பெயரில் மெல்ல மெல்ல சர்வாதிகாரம் பரவிவருகின்றது.

"அல் கைதாவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தக்கதி, எனக்கில்லை" என்று அப்பாவித்தனமாக இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவ்வாறு சந்தேகிக்கப்பட்ட நபர்களோ, அல்லது நிறுவனங்களோ கூட, பின்னர் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் கூட கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் மீது அரச உளவுத்துறை தயாரித்த குற்றப்பத்திரிகைகளை, கைது செய்யப்பட்டவரோ, அல்லது அவரது வக்கீலோ பார்க்க முடியாது. அதெல்லாம் "தேச நலனை முன்னிட்டு இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை."

ஒரு நாள், நீங்கள் வங்கியில் தானியங்கி இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க எத்தனிக்கின்றீர்கள், என்று வைத்துக் கொள்வோம். பணம் வரவில்லை, அதற்குப் பதிலாக "ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் பேரில்" உங்களது வங்கி அட்டை தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வருகின்றது. நீங்கள் சம்பந்தப் பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டு விசாரிக்கின்றீர்கள்.

"எந்தக் குற்றமும் செய்யாத உங்களை, சந்தேகத்திற்குரிய வேறொரு நபர் என்று தவறுதலாக கணித்து விட்டிருக்கலாம்", என முறையிடுகின்றீர்கள். வங்கியிலிருந்து உறுதியான பதில் வருகிறது: "மன்னிக்கவும், எமக்கு கிடைத்த தகவல்கள் சரியானவை. நிச்சயமாக அது நீங்கள் தான்." உளவுத்துறை தயாரித்துள்ள, பயங்கரவாதிகளுக்கு காசு அனுப்பும் சந்தேகநபர்களின் பட்டியலில், உங்களது பெயர் இடம்பெற்றுள்ள விஷயம் அப்போது தான் தெரிய வரும்.

பணம் அனுப்புவது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக பேசுவது, அது பற்றிய நூலை வாங்குவது, நூலகத்தில் இரவல் பெறுவது, கூட உங்கள் பெயரை பயங்கரவாத சந்தேகநபர்கள் பட்டியலில் வரவைக்கும். இதுவரை எந்த ஒரு தமிழ் ஊடகமும் வெளியிடாத செய்தி என்னவெனில், இந்தப் பட்டியலில் (பல நாடுகளில் வதியும்) தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும், இதுவரை பலர் அந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதையும் தான். அதுமட்டுமல்ல, சில மேற்குலக நாடுகளில் அரச உயர்பதவிகளில், அல்லது உயர் தொழில்நுட்ப படிப்புகளில், அனுமதி மறுக்கப்பட்டவர்களில் தமிழர்களும் அடங்குவர்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை கண்காணிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது தான். உதாரணத்திற்கு ஒருவரது மாதாந்த வருமானம் 1500 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே ஒருவர் மாதம் 1000 டாலர் சேமிக்க முடியுமாகில், வருட முடிவில் அதிக பட்சம் 12000 டாலர்கள் கணக்கில் இருக்கலாம். இதற்கு மீறிய தொகையை வைத்திருப்பவர்கள், சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டனர்.

திடீரென இரண்டு பொலிஸ்காரர்கள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டி, நீங்கள் ஏதாவது கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறீர்களா என விசாரிப்பது, வழக்கமாக நடந்து வருவது தான். ஆனால் இப்போது அதுவே பயங்கரவாத குற்றமாக நோக்கப்படும் என்பது தான் வித்தியாசம். இதனை விட இன்னொரு பாரம்பரிய வேவு பார்க்கும் முறையும் மேற்குலக நாடுகளில் உள்ளன. கிராமங்களில், நகர வட்டாரங்களில் நியமிக்கப்பட்டுள்ள, உளவுத்துறையுடன் தொடர்புடைய ஆட்காட்டிகள், அந்த இடத்திற்கு புதிதாக குடி வருபவர்களை பற்றிய தகவல்களை கொடுத்து வருகின்றனர். இந்த நடைமுறை இன்றைய காலத்தில் இன்னும் விரிவுபடுத்தப் படலாம்.

"பயங்கரவாதிகளின் பட்டியலை" யார் தயாரிக்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலனாய்வுத்துறை தீவிரவாத அரசியலில் ஈடுபடுபவர்களின் விபரங்களை சேர்த்து வருகின்றது. ஒரு சில ஆயிரம் பேர்களே சேவையில் உள்ள தேசிய புலனாய்வுத் துறை, காவல்துறையை விட சக்தி வாய்ந்தது. ஒரு சாதாரண திருட்டுக்குற்றத்திற்கே சாட்சியம் உண்டா எனக்கேட்டு வெளியே வந்து விடலாம். ஆனால் புலனாய்வுத்துறை எவ்வாறு அந்த தகவல்களைப் பெற்றது? அதைப்பார்க்க முடியுமா? இந்தக் கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதி கூட கேட்க முடியாது.

புலனாய்வுத்துறையை எதிர்த்து வழக்கு போட முடியாது. பயங்கரவாத சந்தேக நபர்களின் பட்டியல், சம்பந்தப்பட்ட அரசாங்கங்களால் அமெரிக்காவுக்கு, (அல்லது ஐ.நா.சபைக்கு) அனுப்பப்படுகின்றன. மறுபக்கத்தில் விரிவான தகவல் மையத்தை (Data Base) கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது பட்டியலில் உள்ளவரை தடுத்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாட்டிற்கு ஓலை அனுப்பும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் கூட இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் ஒன்றாக செயற்படுகின்றன.

சாதாரண காவல்துறை, ஒரு குற்றம் நடந்த பிறகு தான் துப்பறிந்து, குற்றவாளியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஆனால் புதிதாக வந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் படி, குற்றம் புரிய எண்ணியிருந்ததாக ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம். அதாவது "ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை தான் வெறுப்பதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும்" ஒருவர் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துகிறார் என வைத்துக் கொள்வோம்.

இதனை பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு நபர் (நெருங்கிய நண்பராக கூட இருக்கலாம்) உளவுத்துறைக்கு தகவல் தருமிடத்து, அந்த "வீர வசனம்" பேசிய நபர் கைது செய்யப்படலாம். இந்த நடைமுறை "பயங்கரவாத சம்பவம் ஒன்று இடம்பெறுவதை முன்கூட்டியே தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என அழைக்கப்படுகின்றது. இதுவரை பல "வாய்ச்சொல் வீரர்கள்" பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் மேற்கத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றிற்கு சார்பானவர்களை கண்டுபிடிப்பது, உளவுத்துறைக்கு கைவந்த கலை. சில நேரம் உளவுத்துறையால் பணியில் அமர்த்தப்படும் நபர்களே, பெருமளவு பலியாடுகளை கவர்ந்திழுத்து பொறியில் மாட்டி விடுகின்றனர். குறிப்பிட்ட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பாளராக காட்டிக் கொள்ளும் "போலி தீவிரவாதிக்கும்", "நிஜ தீவிரவாதிக்கும்" இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். இந்த போலி தீவிரவாதிகளின் நிஜ முகம் அம்பலமாகும் போது தான், சில பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் உளவுத்துறை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின்றன.

-- தொடரும் --


Part 2:நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி

Friday, February 13, 2009

"நலன்புரி முகாம்": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் கிராமம்

போர் நடைபெறும் இடங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களை, நலன் புரி முகாம்கள் என்ற பெயரில் இலங்கை அரசு தங்க வைத்து வருகின்றது. ஆனால் முட்கம்பி வேலிகளால் தனிமைப்படுத்தப்படும், இந்த முகாம்களை விரிவு படுத்தி மாதிரி கிராமங்களாக மாற்றி வருகின்றது. விடுதலை செய்வது என்ற பெயரில் மக்களை வதைக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. போராளிகளையும், மக்களையும் பிரித்து வைக்கும் இந்த யுக்தியை, இதற்கு முன்னரே மலேசியாவில் "கம்யூனிச எதிர்ப்பு போரில்" பிரிட்டிஷ் அரசும், இந்தியாவில் "மாவோயிச எதிர்ப்பு போரில்" இந்திய அரசும் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தனிமைப் படுத்தும் கிராமங்களுக்கு பிரிட்டிஷ் அரசு நிதி உதவி வழங்கலாம் என பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (பார்க்க:Barbed wire villages raise fears of refugee concentration camps)

Thursday, February 12, 2009

பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை


பெல்ஜியத்தின் தொழிற்புரட்சி வரலாற்றில் முன்னணி வகித்த துறைமுக நகரம் அன்ட்வேர்ப்பன். இரண்டாம் உலகப் போர்முடிவின் பின்னர் பெல்ஜியம் அமெரிக்க நிதியுதவியால் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றானது. இந்தப் பொருளாதார முன்னேற்றம் காரணமாக அடித்தட்டு பெல்ஜியத் தொழிலாளர் வர்க்கம் நடுத்தர நிலைக்கு உயர்ந்தனர். இதனால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மொரோக்கோவிலிருந்து கூலித் தொளிலார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். முன்பு பெல்ஜியத் தொழிலாளர்கள் வசித்த அதே குடியிருப்புகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பெல்ஜியத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பு கணிசமானது.

இன்று பல தசாப்தங்கள் கடந்த நிலையில், இரண்டாவது தலைமுறை மொரோக்கோ நாட்டினர் பிள்ளைகளும் வளர்ந்து தொழிலாளர் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், ஐரோப்பாவைத் தாக்கிய பொருளாதாரப் பிரச்சினை பெல்ஜியத்தையும் விட்டுவைக்காததால் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. வேலையில்லாப் பிரச்சினையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டோர் எங்கேயும்போல சிறுபான்மையினத்தவர்தான். பெல்ஜியத்தில் மொரோக்கோ நாட்டவர். சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளஞ்சந்ததி ஒரு பக்கம் குற்றச் செயல்களில் ஈடுபட, மறுபக்கம் அதைக்காட்டியே தீவிர வலதுசாரி நவநாஸிசக் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொண்டன. வெளிநாட்டவர், அகதிகளுக்கெதிராகப் பிரச்சாரம் செய்யும் "ஃப்ளாம்ஸ் ப்ளொக்" (தற்போது "பிளாம்ஸ் பெலாண்க்" என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற கட்சி அன்ட்வேர்ப்பன் தேர்தல் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று மாநகர சபையில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அன்ட்வேர்ப்பன் மாநகரசபை காவல் துறையில் கடமையாற்றும் பல பொலிஸ்காரர்கள் ஃப்ளாம்ஸ் ப்ளொக் ஆதரவாளர்கள் என்பது ஊரறிந்த சங்கதி. நகரில் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் அல்லது சந்தேகத்திற்குரிய மொரோகோ இளைஞர்களைக் கைது செய்யும் பொலிஸ்காரர்கள் அவ்விளைஞர்களைத் தெருவழியே தொர தொரவென இழுத்துச் செல்வதும், அவர்களுக்கெதிராக தேவையற்ற வன்முறைகளைப் பிரயோகிப்பதும் வெளிநாட்டவர் மத்தியில் காவல்துறை பற்றிய அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. "ஐரோப்பிய அரபு லீக்" (AEL) எனப்படும் அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும், இத்தகைய இனவெறிச் செயல்களை அரசாங்கமோ, "நடுநிலை"ப் பத்திரிகைகளோ கண்டுகொள்ளாமலிருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்ட புலம்பெயர்ந்தோர் அமைப்புகளைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் இருந்து வருகின்றன. ஒன்றில் அவை மதம், கலாச்சாரம் வளர்ப்பனவையாகவிருக்கும் அல்லாவிடத்தில் அவை தமது சொந்த நாட்டு அரசியல் அமைப்புகளின் தொடர்ச்சியாகச் செயற்படும். இவற்றைத் தமக்கு ஆபத்தானதாகவில்லாததாகவும், அதற்கப்பால் வெளிநாட்டவர் மைய அரசியல் நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமென்றுதான் ஐரோப்பிய அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், ஐரோப்பிய நாடொன்றைத் தனது தாயகமாக வரித்துக்கொண்ட வெளிநாட்டினமொன்று புலம்பெயர்ந்த நாட்டில் தமது நலம்பேண அரசியல் அபிலாசைகளுடன் நிறுவனமயமாகும் போது எதிர்நோக்கும் சவால்கள் பல. இத்தகைய பின்னணியில் உருவான அமைப்புத்தான் "ஐரோப்பிய அரபு லீக்".

பத்து வருடங்களுக்கு முன்பு லெபனானில் இருந்து புலம்பெயர்ந்து பெல்ஜியத்தில் அகதியாகத் தஞ்சமடைந்த அபு ஜாஜாவினால் தனது வேலையைப் பார்த்துக்கொண்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கெதிராக கூட்டப்பட்ட "மக்கள் எதிர்ப்பு முன்னணி" ல் இயங்கியதாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், அபு ஜாஜா ஹெஸ்புள்ளா இயக்க உறுப்பினராக இருந்ததால், அவரது பெல்ஜியப் பிரஜா உரிமையைப் பறிக்கவேண்டுமென ஃப்ளாம்ஸ் புளொக் சர்ச்சயைக் கிளப்பியது. இது ஒருபுறமிருக்க அபு ஜாஜாவினால் அரசியல் விழிப்புணர்வு அடைய வைக்கப்பட்ட மொரோக்கோ இளைஞர்கள் ஒன்று கூடி ஐரோப்பிய அரபு லீக்கை ஸ்தாபித்தனர். இவர்களது வேலை தெருக்களில் ரோந்து சுற்றி வெளிநாட்டவர்மீது அத்துமீறி நடக்கும் பொலிஸாரைக் கண்காணித்தல், பாதிக்கப்பட்டவருக்கு மேற்கொண்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தல் என்பனவாகும். வன்முறை பிரயோகிக்காத அதேவேளை போர்க்குணாம்சம் பொருந்திய இத்தகைய அரசியற் போக்கிற்கு, ஒரு காலத்தில் அமெரிக்காவைக் கலக்கிய கறுப்பின இளைஞர்களின் "கருஞ் சிறுத்தைகள்" அமைப்பை அவர்கள் தமது முன்னோடியாகக் கொள்கின்றனர். இதைவிட பிரபல எகிப்திய ஷோசலிஸ்ட் நாஸரின் கொள்கைகளை தமது அரசியற் சித்தாந்தமாக வரித்துக்கொண்டுள்ளனர்.

பல பெல்ஜிய வெள்ளையினத்தவர் மற்றும் அரசாங்கத்தின் மத்தியில் இந்த வீதி ரோந்து எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. சாதாரண வீதி ரோந்துகள் சட்டவிரோதமானவையல்ல என்பதும் பணக்காரரின் வீடுகள் உள்ள இடங்களில் ஏற்கெனவெ இதுபோன்ற 'தனியார் பொலிஸ்' வீதி ரோந்துகள் சகஜம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெல்ஜியப் பிரதமரைப் பொறுத்தவரை இது "பொலிஸாரின் கடமையைச் செய்யவிடாது தடுத்து கிரிமினல்களுக்குச் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கும் நோக்கம் கொண்டது.' AEL தன்னை ஒரு "கிரிமினல்களின் குழுவென்றும், பயங்கரவாத இயக்கமென்றும்" பாராளுமன்றத்தில் பிரதமர் சொன்னதை கண்டித்து வழக்குப் போட்டது. AEL க்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் ஒரு இனவாதக் கொலையுடன் உச்சக்கட்டத்தை அடைந்தன.

அன்ட்வேர்ப்பன் நகரில் ஒரு மொரோக்கோ இளைஞனை அயல்வீட்டு வெள்ளையின பெல்ஜியக்காரர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பிவிட்டது. குற்றவாளியைக் கைது செய்து சென்ற பொலிஸ் இது ஒரு மனநோயாளி செய்த செயல் என்றும் எந்தவித இனவாத நோக்கமும் பின்னணியில் இல்லையெனவும் அறிவித்தது. ஆத்திரமுற்ற மொரோக்கோ இளைஞர்கள் வீதிகளில் குழுமினர். அவர்களைச் சுற்றி வளைத்த பொலிஸ் கண்ணீர்புகைப் பிரயோகம் செய்து கலைத்தது. தொடர்ந்து ஏற்பட்ட கலகத்தில் வீதியோரம் இருந்த வாகனங்கள், கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலகத்தை AEL தூண்டிவிட்டதெனக்கூறி பொலிஸ் அதன் தலைவர் அபு ஜாஜாவை கைது செய்து சென்றது. திடீரென இந்தச் செய்தி ஐரோப்பியத் தொடர்பூடகங்களின் கவனத்தை ஈர்த்தது. சில நாட்களிலேயே அபு ஜாஜா விடுதலை செய்யப்பட்டாலும், இந்தப் பிரச்சினை தற்போது நீறு பூத்த நெருப்பாகவுள்ளது. AEL ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்த் போன்ற நாடுகளிலும் கட்சியை விரிவுபடுத்த எண்ணியுள்ளது.

பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற சிறுபான்மையினர் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. வெள்ளை-கிறிஸ்தவ ஐரோப்பிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பிற இனங்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாகப் பொருமுவதும், திடீரென நடக்கும் அசம்பாவிதத்தால் எழுச்சியடைவதும் ஆங்காங்கே நடந்துவருகின்றன. பிரிட்டனில் ஜமைக்கர், பாகிஸ்தானியரும், பிரான்ஸில் அல்ஜீரியரும் மேற்கிந்தியக் கறுப்பரும், ஜேரமனியல் துருக்கியரும் இது போன்ற சூழ்நிலைகளிலேயே உள்ளனர். இவர்களனைவரும் வேலையில்லாப் பிரச்சினையால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தமது வாழ்விடங்கள் கவனிக்கப்படாது புறக்கணிக்கப்படுவதாகவும் , மொத்தத்தில் தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதாகவும் குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

இந்தக்குறை அவர்களை எதிர்க்கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கின்றது. குறிப்பாக முதலாவது தலைமுறை அரபு முஸ்லீம் (அல்ஜீரியா, மொரோக்கொவை சேர்ந்த) தொழிலாளர்கள் சாதாரண மதநம்பிக்கையுள்ள பாமர மக்களாக இருந்தனரேயன்றி, தமது மதத்தைப்பற்றிக் கற்றுத்தெளியுமளவிற்குக் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. அதற்கு மாறாக ஐரோப்பியக் கல்வி கற்ற இரண்டாவது தலைமுறை இஸ்லாமிய மதத்தைப்பற்றி மேலும் தெளிவுற அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன் அதனைச் சிறுபான்மையினக் கலாச்சாரமாக வளர்த்து வருகின்றனர். பல இளம் முஸ்லீம்பெண்கள் தாம் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பேணவும், தீய நோக்குடன் நெருங்கும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவுமே தலையைமூடி முக்காடு போடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய சமூகம் இரண்டாகப்பிரிந்து இரு வேறு கோணங்களில் நிற்பதன் பலன்கள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன. சிறுபான்மை முஸ்லீம் இளைஞர்களில் பெரும்பான்மையினர் இன்றும் மிதவாத அரசியல் போராட்டங்களில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரபு ஐரோப்பிய லீக் கூட சாத்வீக வழியில் அரசியலுரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுபக்கத்தில் தீவிர அரசியலில் நாட்டங்கொள்ளும் சில இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தால் கவரப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் நெதர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சு தீவிர அரசியலால் கவரப்படும் முஸ்லீம் இளைஞர்களைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்தது. பல உயர் கல்வி கற்ற இளைஞர்கள் கூட தமது எதிர்காலம் குறித்து விரக்தியுற்று , மத்தியகிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் சென்று ஜிகாத் போராட்டத்தில் தம்மை இணைத்து வருவதை இந்த அறிக்கை குறிப்பிட்டமை அதிர்ச்சியளித்தது. இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய யூத இளைஞர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் போய்ச்சேருவதை மேற்குலக அரசுகள் கண்டுகொள்ளாமல் இரட்டைவேடம் போடுவது கவனிக்கப்படவேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு:
Arab European League

Wednesday, February 11, 2009

7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா?


7/7/2005 ல், லண்டன் சுரங்க ரயில் வண்டிகளில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புகள், பிரிட்டிஷ் புலனாய்வுப்பிரிவினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள்வீட்டு சதியா? சம்பந்தப்பட்ட "பயங்கரவாதிகள்", லண்டன் மாநகரப் பாதுகாப்பு பயிற்சிக்காக வேலைக்கமர்த்தப்பட்ட அப்பாவி முஸ்லீம் இளைஞர்களா? இது போன்ற சந்தேகங்களை கிளப்பும் வீடியோ நீண்ட காலமாகவே இணையத்தில் காணக்கிடைக்கிறது. ஆனால் அண்மையில் இந்த வீடியோவை, குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரித்துவரும் நீதிபதிக்கு அனுப்பிய குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் பிரசை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Irish Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

7/7 Ripple Effect
_________________
Regarding the 7/7/2005 terrorist attacks in London, let us look at the facts, and what we were told, and compare them. Then, using Ockham’s Razor and common-sense, let us see what conclusions are to be drawn, so we can all understand what most likely really did happen that day.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்

ஒருகாலத்தில் மக்களை வழிநடத்திய தலைவர்கள், ஏதாவதொரு அரசியல் கொள்கையை முன்மொழிந்தார்கள். தாம் காட்டும் வழியில் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்று நம்பிக்கையூட்டினார்கள். ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள், மக்களை நிர்வகிப்பவர்களாக மட்டுமே உள்ளனர். மதம் உட்பட அனைத்து வகை அரசியல் சித்தாந்தங்களிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாலோ என்னவோ, நமது காலத்து தலைவர்கள், தம்மை மீட்பர்களாக மட்டுமே காட்டிக் கொள்கின்றனர். நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து மக்களை மீட்க முனைகின்றனர். இன்னும் சிறப்பாக சொன்னால், தேசத்தை பிடித்தாட்டும் "பயங்கரவாதம்" என்ற பிசாசிடமிருந்து எமக்கு விடுதலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.

"அச்சத்தில் இருந்து மக்களை மீட்கும் அரசியல்" பற்றிய இந்த ஆவணப்படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

Politics - The Power of Nightmares


Part 1:Baby it's Cold Outside


Part 2: The Phantom Victory


Part 3: The Shadows in the Cave

Tuesday, February 10, 2009

பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்










ஜெர்மன் ஜனநாயக குடியரசில்(Deutsche Demokratische Republik, சுருக்கமாக: DDR), மேற்கு பெர்லினை சுற்றிக்கட்டப்பட்ட மதில்களுக்கு அப்பால், நாற்பதாண்டுகள் சோஷலிசத்தை கட்டியமைக்கும் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது.

முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியின் பிரசைகள் சிலர், கடந்த காலம் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதனை அறிந்து கொள்ள நெதர்லாந்து நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் குழுவொன்று(VPRO), நேரடி சாட்சியங்களை கேட்டு ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.

பெர்லின் மதில் பற்றிய கேள்விகளுடன் ஆரம்பிக்கும், இந்த விவரண சித்திரத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் (கம்யூனிச சர்வாதிகார கொடுங்கோன்மை) கிடைக்காதது, அவர்களுக்கு ஏமாற்றத்தை தருகின்றது. இந்தப் படத்தில் மூன்று முக்கிய பிரமுகர்கள் நேர் காணப்பட்டுள்ளனர்.

1. முன்னாள் உளவுத்துறை நிறுவனமான "ஸ்டாசி", Ministerium für Staatssicherheit("தேசப்பாதுகாப்பிற்கான அமைச்சு" சுருக்கமாக: Stasi), அதிகாரி Hagen Koch, பெர்லின் மதில் கட்டுவதற்கு திட்டமிடும் பணியை மேற்கொண்டவர். ஜெர்மனி ஒன்றான போது, சோஷலிசத்தை நிராகரித்தவர்.

2. "புதிய சோஷலிச மனிதனை" உருவாக்கும் சலனப்படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் இருந்த திரைப்பட இயக்குனர் Winfried Junge . உலகிலேயே மிகவும் நீளமான ஆவணப்படமான "The Children of Golzow" தயாரித்தவர். இன்றும் சோஷலிச நம்பிக்கை கொண்டவர்.

3. Gudrun Klitzke , அந்த ஆவணப்படம் தயாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட Golzow நகர பாடசாலையின் முதன்மை மாணவி.

நெதர்லாந்து படப்பிடிப்புக் குழுவின் நோக்கம், மனிதாபிமானமற்ற பெர்லின் மதிலின் (மேற்குலகில் "வெட்கத்தின் சின்னம்" என அழைக்கப்பட்டது.) இருண்டபக்கத்தை வெளிக்கொணர்வது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாகி, சுமார் பத்தாண்டுகளுக்கு பின்னர் 1961 ல் தான் பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதுவரை மேற்கு,கிழக்கு பெர்லின்களுக்கு இடையில் சுதந்திரமான போக்குவரத்து இருந்தது.

அதனை, இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடும் இயக்குனர் Junge, தானே மேற்கு பெர்லின் சென்று வந்ததாகவும், ஆனால் கொள்கைரீதியாக கிழக்கு ஜெர்மனியுடன் ஒத்துப் போனதால் அங்கேயே தங்கி விட்டதாக தெரிவிக்கிறார். மேலும் அமெரிக்க-ஆங்கிலேய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு பெர்லினை, கிழக்கு ஜெர்மனி உரிமை கோரியதாலும், அது நிறைவேறாததால் மதில் சுவர் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை பலர் வசதியாக மறந்து விடுகின்றனர்.

"கிழக்கு பெர்லினில் பொருட்களின் விலை மலிவாக இருந்ததால், மேற்கு பெர்லின் மக்கள் பெருமளவு வந்து வாங்கிச் சென்றதாகவும், கிழக்கு பெர்லின் பொருளாதாரத்தை காப்பாற்றவே மதில் கட்டப்பட்டதாக", அங்கிருந்த மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததை பிரதிபலிக்கிறார், இந்த ஆவணப்படத்தில் சாட்சியமளிக்கும் Gudrun. மேற்கு பெர்லின் வழியாக உளவாளிகள் ஊடுருவதை தடுப்பதற்கே மதில் கட்டியதாக, கிழக்கு ஜெர்மன் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஆனால் இது போன்ற மாற்றுக் கருத்துக்களுக்கு, "சுதந்திர மேற்கு ஐரோப்பாவில்" ஒரு போதும் இடம் இருந்ததில்லை. இப்போதும் சரித்திர பாட நூல்களில் இடம்பெற்ற வாசகங்கள்: "கிழக்கு ஜெர்மனியில் மக்களை கொடுமைப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. திறந்தவெளிச் சிறைக்குள் அகப்பட்ட மக்கள், சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்காக மேற்கு ஜெர்மனி நோக்கி பெருமளவில் வெளியேறினர். அதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பெர்லின் மதில் கட்டப்பட்டது. மீறிச் சென்ற அகதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்."

மதிலை கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட Hagen Koch சாட்சியத்தின் படி, கிழக்கு பெர்லின் நகர மக்கள் வெளியேற மேற்கு-பெர்லின் தீயணைப்புப் படை உதவியுள்ளது. மதில் கட்டப்பட்ட போது, மேற்கு பெர்லின் பகுதிகளில் இடையூறு இருந்தது. காவல் கடமையில் இருந்த கிழக்கு-பெர்லின் வீரர்களை, தப்பியோடும் அகதிகளும், மேற்கு-பெர்லின் காவலர்களும் சுட்டதில், 25 பேரளவில் கொல்லப்பட்டனர்.

பெர்லின் மதில் நான்கு கட்டங்களாக, பல அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டிருந்தாலும், நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்படவில்லை. அதற்கு காரணம் நெருக்கமான நகரப்பகுதி என்பதால். ஆனால் மேற்கு பெர்லின் நிர்வாகம் தனது பக்கத்தில் கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருந்தது.

இவற்றை சொன்ன அந்த ஸ்டாசி அதிகாரி, தற்போது கம்யூனிசத்தை தவறென்று வாதிடுபவர். அதற்கு அவர் கூறும் காரணம்: "மனிதர்க்கிடையே ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற, யுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவதென்ற கொள்கை வெறும் கனவு மட்டுமே. நடைமுறையில் சாத்தியமற்றது. பல்வேறு வேறுபாடுகளை இயற்கையாக கொண்ட மனித குலத்தை எப்படி ஒன்றுபடுத்தலாம்?" 

அதேநேரம், நெதர்லாந்து படப்பிடிப்பாளர்கள் அறிய முயன்ற, "கொடுமைக்கார ஸ்டாசி" பற்றி அந்த முன்னாள் அதிகாரி கருத்து எதுவும் கூற மறுக்கிறார். "அப்போது சர்வாதிகாரம் இருந்தது தான். ஆனால் ஹிட்லரினதைப் போல மோசமாக இருக்கவில்லை. வெளியே தெரியாத அளவிற்கு மிக நுணுக்கமானது. (மேற்குலக நாடுகளிலும் அப்படித்தான், ஐயா) ஸ்டாசியில் வேலை பார்த்தவர்கள், அவரவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை மட்டுமே செய்தனர். மற்றவர் என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. அதனால் தான் அந்த அமைப்பு கட்டுக் குலையாமல் இருந்தது."
கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில், போலந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ளது Golzow என்ற சிறிய நகரம். ஒரு காலத்தில், அயலில் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களை எல்லாம் இணைத்து, ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவுப்பண்ணை உருவாகியது. செழிப்பான தரை, சிறந்த விவசாய செயல்முறை, இவற்றின் காரணமாக அதிக விளைச்சலையும், லாபத்தையும் கொடுத்த கூட்டுறவுப்பண்ணை, Golzow மக்களை வாழ்க்கை வசதிகை மேம்படுத்தியது.

இன்று? அது ஒரு கைவிடப்பட்ட நகரம், பெரும்பாலும் முதியோர்கள் மட்டும் அங்கே தங்கிவிட, இளைஞர்கள் வேலை தேடி வெளியேறுகின்றனர். Golzow மக்கள் ஒரு காலத்தில் தம்மை சீரும் சிறப்புமாக வாழவைத்த சோஷலிச பொருளாதாரம், மீண்டும் வரவேண்டும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இங்கேயாவது, எவராவது கம்யூனிச சர்வாதிகாரம் பேச மாட்டார்களா? என எதிர்பார்த்த நெதர்லாந்தின் ஆவணப்பட தயாரிப்பாளருக்கு ஏமாற்றம். என்ன காரணம்? என்ற கேள்விக்கு எதோ ஒரு திருப்தியான பதிலை பெற்றுக் கொள்கிறார். "பலரை அங்கவீனர்களாக்கிய,போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான வாழ்க்கையை தெரிவு செய்தனர்." 

ஆனால், பேட்டி கொடுக்கும் அந்த சாதாரண விவசாயியே விளக்கமளிக்கிறார்: "எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிருப்தியாளர்கள் எங்கேயும் இருப்பார்கள்." திரைப்பட தயாரிப்பாளர் Winfried Junge அதனை பிரதிபலிக்கிறார்: "கிழக்கு ஜெர்மனியில் நடந்தது ஒரு சோஷலிச பரிசோதனை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்வோமே. ஆரம்ப முதலே மேற்கு ஜெர்மனி, சோஷலிச கட்டுமானத்தை உடைப்பதிலேயே குறியாக இருந்தது."


Golzow நகர ஆரம்ப பாடசாலையில் ஆறு வயதில் சேரும் குழந்தைகள், அவர்களது மாணவப்பருவம், வகுப்பில் வெளிப்படும் திறமைகள், பிற்காலத்தில் அந்த மாணவர்கள் எந்தெந்த தொழில்களை செய்கின்றனர், இன்னபிறவற்றை பொறுமையாக சுமார் முப்பது ஆண்டு காலம் கடுமையாக உழைத்து, "The Children of Golzow" என்ற சலனப் படமாக தயாரித்திருக்கிறார் Winfred Junge.

இந்த ஆவணப்படத்தில் வரும் திறமையான மாணவியான Gudrun இறுதியில் நகரசபை மேயராக தெரிவாகிறார். ஆவணப்படத்தில் முதன்மை பாததிரமான Gudrun னின் கால் நூற்றாண்டு வரலாறு, சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான வரலாற்றை ஆவணப்படுத்திய ஜெர்மன் மொழி பேசும் குறுந்தகடுகளை(DVD) , நீங்கள் இங்கே: Die Kinder von Golzow பெற்றுக் கொள்ளலாம். அன்றைய கிழக்கு ஜெர்மனியின் சாதாரண பிரசைகளின் வாழ்க்கை முறையையும், அவர்களை சுற்றியிருந்த அரசியல் சூழலையும் புரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவும்.
"1961-DDR" என்ற பெர்லின் மதில் பற்றிய, (டச்சு மொழி) ஆவணப்படத்தை இங்கேயுள்ள தொடுப்பில் பார்வையிடலாம்.

Monday, February 09, 2009

இஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)

இஸ்ரேலை அனைத்து யூதர்களும் ஆதரிப்பதாக மாயை பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் இஸ்ரேலின் தேசியவாத சியோனிச அரசியலுடன் அடையாளம் காணப்பட விரும்பாத மத நம்பிக்கையுள்ள யூதர்களும் இருக்கிறார்கள். (இடதுசாரி யூதர்கள் ஆரம்பம் முதலே இஸ்ரேலின் பாலஸ்தீன அடக்குமுறையை எதிர்த்து வருவது ஏற்கனவே தெரிந்தது தான்.) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில், இஸ்ரேலை நிராகரிக்கும் Naturei Karta அமைப்பின் யூதர்களும், மதசார்பற்ற "ஐரோப்பிய அரபு லீக்(AEL)" கும் சேர்ந்து, 26-01-2009 அன்று மகாநாடொன்றை நடத்தின. இஸ்ரேலின் சியோனிச இனவாதத்திற்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியின் முதற்படியான அந்த கலந்துரையாடலின் காட்சிகள் சில:

“Judaism is not Zionism”



* விரைவில் பெல்ஜிய Arab-European League (AEL)பற்றிய முழுமையான கட்டுரை கலையகத்தில் வெளியிடப்படும்.