Thursday, April 23, 2009

அநாதை தேசங்கள்

தமிழீழம் சாத்தியமா? ஓர் ஆய்வு [பகுதி-2]
ஐரோப்பிய கண்டத்தைத் தலைகீழாக மாற்றிய லிபரல் புரட்சி தேசியவாத அரசியலின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தபோது அது முதலாளித்துவப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டது இயல்பானதே. ஒரு நாட்டில் மன்னன் இட்டதே சட்டம் என்ற நிலை மாறி அரசு என்ற நிலையான ஸ்தாபனத்தை உருவாக்குவதே பூர்ஷுவாக்களின் (மத்தியதர
வர்க்கத்தின்) நோக்கமாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவான சட்டம், அரசமைப்பதற்கான யாப்பு போன்றவற்றின் அவசியம் அப்போது உணரப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நெப்போலியன் சட்டம் (Code Napolean)பிற்காலத்தில் பரந்த அரசியலமைப்புச் சட்டமாகியது. (இதைத்தான் ஒல்லாந்தர் இலங்கையில் அறிமுகப்படுத்த அது அங்கே டச்சுசு; சட்டம் என்றழைக்கப்படுகின்றது) இங்கிலாந்தில் உரிமைகள் சாசனம் (Bill of Rights) மத்தியதர வர்க்கத்தால் பொதுச்சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொழிற்சாலைகள் விநியோகத்திற்காக ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நிலையான நுகர்வோர் வட்டம் போன்றவற்றை வேண்டி நின்றன. ஒரு தேசிய அரசு
மட்டுமே இத்தேவைகளைச் சாத்தியமாக்க முடியும்.

தேசியவாதம் குறித்த பிரச்சினை மார்க்சியவாதிகளையும் விட்டுவைக்கவில்லை. “பாட்டாளி
களுக்குத் தேசம் கிடையாது” என்று கூறிய கார்ல் மார்க்ஸ் கூட இங்கிலாந்தின் முதலாவது காலனியான அயர்லாந்து பிரிந்ததை வரவேற்றார். “ஒடுக்கப்படும் தேசமொன்றின் பிரிந்து போகும் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்குகின்ற தேசத்தைச் சேர்ந்த சோஷலிஸ்ட் புறக்கணித்தால் அவன் சோஷலிஸ்ட் அல்ல” என்றார் லெனின். 1917இல் போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றதும் பின்லாந்துக்கு ரஷ்யாவிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இருப்பினும் கத்தோலிக்க தேசியவாத போலந்தை விட்டுவிடும்படி ஸ்டாலின் கூறியதை லெனின் ஏற்கவில்லை. போலந்து மக்களின் ஆதரவு கிடைக்காத செம்படை அவமானத்துடன்
திரும்பியது. பால்டிக் கடலோரக் குடியரசுகள் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. இந்தப் பாரம்பரியம் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் சோவியத் யூனியனின் உடைவிற்குக் காரணமாக இருந்தது.

ஜார் காலத்து ரஷ்யாவில் துருக்கி இனமக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மதத் தலைவர்களின் பிடியில் இருந்ததால் அங்கே தேசியவாதக் கருத்துகள் எட்டியும் பார்க்கவில்லை. அஸர்பைஜானில் போல்ஷ்விக்குகள் வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த போது அதனை அம்மக்கள் ‘ஜிகாத்’ என்று புரிந்து கொண்டார்கள். இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் நிலையில் அன்றிருந்த மத்திய ஆசியா, மதவாதிகளை ‘கொள்ளைக்காரர்கள்’ எனப் பட்டம் சூட்டி விரட்டியடித்த பின்புதான் அபிவிருத்தியடைந்தது. சோவியத் யூனியனில் பல்வேறு தேசிய அரசுகளாகப் பிரிக்கும் கடமையை ஏற்றிருந்த ஸ்டாலின் வரைந்த எல்லைகளின்படிதான் ‘ஸ்தான்’ என்று முடியும் மத்திய ஆசியக் குடியரசுகள் உருவாகின. அந்தப் புதிய தேசங்கள் அங்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் பெயரில் உருவான போதும், குறிப்பிட்ட நாட்டினுள் பிறமொழி பேசும் அயலவரும் அடங்கினர். இது வேண்டுமென்றே முன்யோசனையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு குறிப்பிட்ட இனம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட திட்டம், இன்றைய இனப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவுள்ளது. இருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ பிற இனங்களுடன் நட்புறவை பேணும் நிர்ப்பந்தம் அங்கே காணப்படுகின்றது.

சோவியத் யூனியனின் 15 குடியரசுகளும் வரலாற்று தொடர்ச்சியாகவோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையாக உள்ள இனத்தின் பெயரிலோ அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குடியரசுக்குள்ளேயே பல சிறுபான்மை இனங்கள் வாழ்ந்து வந்தனர். ரஷ்ய சோசலிசக் குடியரசில் மட்டும் நூற்றுக்குக் குறையாத மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். கணிசமானளவு தொகையுள்ள வளர்ச்சியடைந்த மொழிச் சிறுபான்மையினருக்கென தன்
னாட்சிப் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. சோவியத் அரசமைப்புச் சட்டத்தின்படி 15 குடியரசுகளுக்கும் பிரிந்து போகும் உரிமை இருந்ததைப் பயன்படுத்தி, 1991இல் சோவியத் யூனியன் 15 துண்டுகளாக உடைந்தது. ஆனால் தன்னாட்சிப் பிரதேசங்களால்
அவ்வாறு செய்ய முடியவில்லை. விளைவு பேரழிவைத் தந்த முடிவுறாத யுத்தங்கள். இவற்றில் குறிப்பிடத் தக்கது, ரஷ்யாவிலிருந்து பிரிய விரும்பிய செச்னியாவின் யுத்தம். இரண்டு செச்னிய போர்களுக்குப் பின், சில முன்னாள் கிளர்ச்சித் தலைவர்கள், ரஷ்ய
அரசுடன் சமரசம் செய்துகொண்டு சில கூடுதல் சலுகைகளுடன் மாநில ஆட்சியைப் பொறுப்பேற்றனர். மொஸ்கோவிற்கு அடிபணிய மறுத்த ஆயுதபாணிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டனர்.

புதிதாகச் சுதந்திரம்பெற்ற முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியாவிலும் மோல்டோ
வியாவிலும் கதை வேறுவிதமாக இருந்தது. ஜோர்ஜியாவின் ரஷ்ய எல்லைப்புறமாக அப்காஸியர், ஒசாத்தியர் என்ற இரு வேற்று மொழி பேசும் இன மக்கள் வாழ்கின்றனர். சோவியத் காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேச அலகு புதிய ஜோர்ஜிய அரசாங்கத்தால் ரத்துச் செய்யப்பட்டது. மேலும் ஆட்சியில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதிகள் தமது குடியரசில் இருக்கும் மொழிச் சிறுபான்மையினர் ஜோர்ஜிய மொழியை உத்தியோகபூர்வமான மொழியாக ஏற்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினர். இதன் எதிரொலியாக அப்காஸியர், ஒசேத்தியர் மத்தியிலும் தேசியவாத அமைப்புகள் தோன்றின. 1992இல் இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாகியது. கடுந்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத ஜோர்ஜியப் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓட, அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய இரு சுதந்திர தேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த ஜோர்ஜிய இன மக்கள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா நாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தை இதுவரை யாரும் அங்கீகரிக்கவில்லை. பின்புலத்தில் இருந்து கொண்டு இவைகளை ஆதரிக்கும் ரஷ்யா மட்டுமே அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்கிடமில்லாமல் இவ்விரு குட்டிநாடுகளும் தமது பாதுகாப்புக்கும், பொருளாதாரரீதியாக ரஷ்யாவில் தங்கியுள்ளன.

ரொமானியாவிற்கும் உக்ரேனுக்கும் நடுவில் அமைந்துள்ளது, முன்னாள் குடியரசுகளில் ஒன்றான மோல்டோவியா. 1991இல் சோவியத் உடைவின் பின் சுதந்திரம் பெற்ற மோல்டோவியாவில் பெரும்பான்மையினமாக ரொமேனிய மொழி பேசுவோரும், உக்ரெயின்
எல்லையோரம் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றனர். ரஷ்ய மொழிச் சிறுபான்மையினர் வாழும் பகுதியை டினியேஸ்டர் நதி நெடுக்கு வெட்டுமுகமாக பிரிப்பதால், அந்தப் பிரதேசம் திரான்ஸ் டினியேஸ்டர் அல்லது திரான்ஸ்திஸ்திரியா என
அழைக்கப்படுகின்றது. சோவியத் காலத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் அந்தப் பிரதேசத்தில்தான் அமைக்கப்பட்டன. மோல்டோவியாவின் சுதந்திரப்பிரகடனத்திற்குப் பிறகு ரொமேனிய பெரும்பான்மை அரசுக்கெதிராக ரஷ்ய சிறுபான்மை ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அவர்களுக்கு ரஷ்ய ராணுவத்தின் உதவி கிடைத்தது. மிக விரைவிலேயே மோல்டோவியப் படைகளை தோற்கடித்து, ரஷ்ய ஆயுதக் குழுக்கள் திரான்ஸ்திரியா பகுதி முழுவதையும் விடுவித்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தற்போது தமக்கெனப் பாராளுமன்றம், பொலிஸ், இராணுவம், வங்கி, நாணயம் என்று ஒரு தேசத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களுடன் கடந்த 15 வருடங்க ளாக சுதந்திர நாடாக இருக்கும் திரான்ஸ்திரியாவை இது வரை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. முன்னாள் சோவியத் சின்னங்கள், கொடிகள் மற்றும் லெனின் சிலைகள் என்பனவற்றை இப்போதும் அங்கே பார்க்கலாம். இருப்பினும் அந்த நாட்டை ஆள்வது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. தேசிய முதலாளித்துவ பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு கட்சி (அல்லது தனிநபர்)
சர்வாதிகாரமே அங்கே நிலவுகிறது.

சர்வதேச நாடுகளோ அல்லது நிறுவனங்களோ இத்தகைய புதிய சுதந்திர தேசங்களை அங்கீகரிக்கமறந்து அநாதைகளாக விட்டுவிடும் வேளையில், மறு பக்கத் தில் வேறு சில தேசங்களை அங்கீகரிப்பதில் பின் நிற்கவில்லை. பல தடவைகளில் இந்த இரட்டை வேடம் அம்பலப்படும்போது எழும் சர்ச்சைகளால் இவர்களது நம்பகத்தன்மை, நேர்மை, நன்னடத்தை என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக சுதந்திரம் கோரிப் போராடும் பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்) மக்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் எடுக்காத ஐரோப்பிய ஒன்றியம் யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்த நாடுகளை ஒவ்வொன்றாக அங்கீகரித்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூகோஸ்லேவியா என்ற நாட்டை உருவாக்கிய மேற்கைரோப்பிய நாடுகள், பின்னர் அதைத் துண்டு துண்டாக உடைத்ததற்கு அவர்களது தன்னலம் மட்டுமே காரணம். கம்யூனிச அரசாங்கங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கிழக்கைரோப்பிய நாடுகள் துரித வேகத்தில் மேற்கைரோப்பாவினால் காலனித்துவப்படுத்தப்பட்டது. பெரிய வர்த்தகக் கழகங்கள் புதிய சந்தைகளையும் செலவு குறைந்த மனித வளத்தையும் கண்டுபிடித்தன. முன்பு ஹிட்லர் ஆயுதபலம் கொண்டு அடைய விரும்பியதைத் தற்போது ஐரோப்பிய யூனியன் சமாதான வழியிலேயே பெற்றுக் கொண்டது.

இதன் பின்னணியிலேயே கொசோவாவின் சுதந்திரத்தையும் நோக்க வேண்டும். 17.02.2008 அன்று கொசோவா சுதந்திரமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தை செர்பியா, ரஷ்யா, கிரீஸ், ஸ்பெயின் உட்பட பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. விமானக் குண்டு வீச்சுகளின் உதவியுடன் சேர்பியாவின் கொசொவோ மாகாணத்தைக் கைப்பற்றிய நேட்டோ படையணிகள் அதனைப் பூரண ஐரோப்பிய காலனியாக மாற்றிக் காட்டின. அதேநேரம் அல்பேனிய தேசியவாதிகள் பிற இனங்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்ததை கண்டும் காணாததுபோல் இருந்தன. இதனால் சுதந்திர கொசோவோ, எல்லாவற்றிற்கும் மேற்கைரோப்பிய காலனியவாதிகளில் தங்கியிருக்க வேண்டும்.இது எதிர்காலத்தில் இஸ்ரேல் போன்று ஒரு பிராந்திய ரவுடியை உருவாக்க வழி சமைக்கலாம். இது ஒரு புறமிருக்க கொசோவோ விற்குச் சுதந்திரம் வழங்கியதால் அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா போன்றவற்றின் சுதந்திரத்தைத் தான் அங்கீகரிக்க வேண்டி இருந்தது, என்று ரஷ்யா நியாயம் சொல்லி வந்தது. இது பேரரசுகளின் பூகோள அரசியல் சதுரங்கம்.

வரலாறு நெடுகிலும் தம்மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லரசு பலவீனப்படும் வேளையிலேயே குட்டித் தேசங்கள் விடுதலையடைந்து வந்தன அல்லது இன்னொரு வல்லரசின் பக்கபலத்துடன் தமது சுதந்திரத்தை காப்பாற்றி வந்துள்ளன. இருப்பினும் 20ம் நூற்றாண்டு பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியைக் கண்டது. இதற்குக் காரணம் உலகெங்கும் பரவிய சித்தாந்தப் புரட்சி. ஐரோப்பாவில் தோன்றிய புரட்சித் தீ கண்டங்கள் கடந்து பரவியது. முரண்நகையாக ஐரோப்பியக் காலனியவாதிகளும் அதற்கு உதவியுள்ளனர். அவர்கள்
காலனித்துவப்படுத்திய நாடுகளில் ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அவர்களுக்கு ஐரோப்பியக் கல்வியைப் புகட்டப்போக, அந்தக் கல்வியினூடாக தேசியவாதத்தை அறிந்துகொண்ட உள்ளூர் தலைவர்கள் அதைக் கொண்டே காலனியவாதிகளை விரட்டியடித்தமை வரலாறு. தற்போது அப்படி விடுதலையடைந்த தேசங்களில் வாழும் பிற சிறுபான்மையினங்கள் அதே தேசியவாத சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்துத் தமது உரிமைகளைக் கோருகின்றனர். சக மனிதர்கள் சம உரிமை கோருவது போல இனங்களும் சம அந்தஸ்து கோருவது வியப்பில்லை. அதே நேரம் “ஒன்றுபட்டால் நன்மை எமக்கு; பிரிந்தால் இலாபம் எதிரிக்கு.” என்ற பொன்மொழியை மறுப்பதற்கில்லை. இதயசுத்தியுடன் தேசிய இனப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் அப்பிரச்சினை எழுவதைத் தடுக்கும் ஒரே வழி. சமாதானத்தை பிறருக்கும் வழங்குவதன்மூலம் தான் தானும் சமாதானமாக வாழ முடியும்.

(முற்றும்)

முதலாவது பகுதியை வாசிக்க:தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு

4 comments:

நிரு said...

கலை:
சமீப காலமாகத்தான் தங்களுடைய வலைத்தளத்தை படித்து வருகின்றேன்...எப்படி இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் எழுத முடிகிறதென்று ஆச்சர்யமாக இருக்கின்றது. பயனுள்ளவற்றை (மட்டுமே..:)) வாசிக்க தருவதற்காக தங்களை வாழ்த்துவதுடன் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

'அநாதை தேசங்கள்' பற்றிய கட்டுரை நன்றாக இருக்கிறது. நிறைய விடயங்களைத் தெரிந்துகொள்ள உதவியதென்று கூறினால் அது மிகையில்லை. முடிவில்...கட்டுரையின் முகப்பில் கொடுக்கப்பட்டுள்ள வரிகளை மீண்டும் படித்துக்கொண்டேன். தமிழீழம் சாத்தியமா என்ற கேள்வி எனக்குள் உண்மையிலேயே கலவரத்தை ஏற்படுத்துகிறது.
நன்றி.

Kalaiyarasan said...

நிரு, உங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.
ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னே கடுமையான உழைப்பு மறைந்திருக்கிறது. நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொன்னியின் செல்வன் said...

hi, your article is really good...i will appreciate in this article if you have included more info about what are possible scenarios...situtions about forming tamil eelam in detail what is the influnce of regional suprepowers..india and china etc

sivaguru said...

மிக சிறந்த கட்டுரை, எல்லோரும் படிக்க வேண்டிய மிக சிறந்த யதார்த்தமான அலசல்
நன்றி அன்பரே வளர்க தங்கள் பணி