Friday, March 13, 2009

போருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா?

பிரபல ஆங்கிலேய பத்தி எழுத்தாளர் Gwynne Dyer இலங்கை இனப்பிரச்சினை பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மாபெரும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. இலங்கை 26 ஆண்டு கால தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை நோக்கி செல்கின்றது. அதேநேரம் மாபெரும் மாபெரும் தவறை செய்யும் நிலையில் உள்ளது.

சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரேமதுங்கே எழுதிய இறுதி வரிகள் இங்கே ஞாபகமூட்டத் தக்கவை: "பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். நாங்கள் அரசபயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் எதிராக கிளர்ச்சியுற்றோம். அதே நேரம், உலகில் இலங்கை அரசு மட்டுமே தனது பிரசைகள் மீது குண்டு வீசுகிறது என்ற கொடூரத்தையும் பகிரங்கப் படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்."

விக்கிரமதுங்கே இந்த வரிகளை தான் கொல்லப்பட்ட பின்னர் பிரசுரிக்குமாறு, தனது கணனியில் விட்டு விட்டு சென்றுவிட்டார். தனது மரணம் சம்பவிக்கப் போகின்றது என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதற்கு யார் காரணம் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. இலங்கை அரசே பொறுப்பு என்பதற்காக, தனது மரணசாசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிட்டு எழுதி இருந்தார். சுமார் கால் நூற்றாண்டு காலமாக லசந்தவும், மகிந்தவும் நண்பர்கள் என்பது அந்த சாசனத்தை படித்த பின்பு தான் அவரின் வாசகர்கள் பலருக்கு தெரிந்தது. உண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். "எனது மரணம் சம்பவித்த உடனேயே நீங்கள் (ஜனாதிபதி ராஜபக்ஷ) வழக்கமான விசாரணைகளை தொடங்குவீர்கள். ஆனால் கடந்தகாலங்களில் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இதிலும் எந்த ஒரு முடிவும் வரப்போவதில்லை. உண்மையைச் சொன்னால் எனது மரணத்திற்கு யார் காரணம் (அனேகமாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ) என்பது, நம் இருவருக்கும் தெரியும்."

அமெரிக்காவில் புஷ் நிர்வாகத்தின் கீழ் நடந்ததைப் போல, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சட்டத்திற்கு மதிப்பளிப்பதை இலங்கை நிறுத்தி விட்டது. 1983 ம் ஆண்டில் இருந்து தமிழ்ச் சிறுபான்மை தனியரசு கோரி நடத்திய போராட்டத்தில் இதுவரை 70000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானோர் பொது மக்கள். 2004 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், 14 ஊடகவியலாளர்கள் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் கூட வடக்கு கிழக்கில் சுமார் 15000 சதுர கி.மீ. பரப்பு நிலத்தை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கே ஒரு இறைமையுள்ள நாட்டிற்கே உரிய அனைத்து நிறுவனங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் தளராத இராணுவ நடவடிக்கை, அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்தை சில நூறு கிலோ மீட்டருக்குள் சுருக்கி விட்டது.

ஒரு சில வாரங்களுக்குள், தமிழ்ப் புலிகளின் நிழல் இராச்சியப் பகுதிகள் மறைந்து போகலாம். கேள்விகேட்காமல் கீழ்ப்படிய வைப்பதற்காக, தமிழரையும் கொன்றது மட்டுமல்ல, அவர்களது தற்கொலைக் குண்டுதாரிகளால் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதையே காரணமாக காட்டி, இலங்கை அரசு 1983 க்கு முன்பிருந்த நிலைமைக்கு திரும்ப வேண்டுமென்று நியாயப்படுத்த முடியாது. தமிழர்கள் கிளர்ச்சிக்கு நியாயமான காரணங்களை கொண்டுள்ளனர். தமிழ் பேசும் இந்துக்கள் இலங்கையின் சிக்கலான இன விகிதாசார சமூகத்திற்குள் வாழ்ந்து வந்தனர். ஆனால் மொத்த சனத்தொகையில் 12 வீதத்தையே கொண்டுள்ளனர். 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை முழுவதையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் வரை, தமிழர்கள் சிங்களம் பேசும் பௌத்த பெரும்பான்மையினருடன் சுமுகமான உறவைப் பேணி வந்தனர். ஆனால் அந்தக் காலகட்டத்தின் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது.

பிரிட்டிஷாரின் வழக்கமான பிரித்தாளும் கொள்கையின் கீழ், கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்ச் சிறுபான்மையினர் சார்பாக நடந்துகொண்டனர். அதற்கெதிரான சிங்கள அதிருப்தி வளர்ந்து, 1939 ல் கலவரம் ஏற்பட வழிவகுத்தது. கலவரத்தில் தமிழர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். 1948 ல் சுதந்திரம் வந்த பின்னர், சிங்களவர்கள் தமது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பல்கலைக்கழக அனுமதியிலும், அரச தொழில்களிலும் தமது இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கினர். அதே நேரம் சிங்களம் மட்டுமே தேசிய மொழியாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் தேசியவாதங்கள் கூர்மையடைந்த வேளை, 1960 களிலும், 1970 களிலும் தமிழ் விரோத கலவரங்கள் ஏற்பட்டன.


1970 ன் இறுதியில், வட- கிழக்கில் தமிழ் நிழல் அரசு ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது. 1983 ல் யுத்தம் வெடித்தது. குறுகிய காலத்திற்குள் தமிழ்ப் புலிகள், போட்டித் தமிழ் பிரிவினைவாத குழுக்களை ஒழித்துக் கட்டியதுடன், தமிழ் மக்களை தமது முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தனர். 26 வருடங்களுக்குப் பின்னர், இறுதியில் தமிழ்ப் புலிகளின் இராணுவம் நசுக்கப்பட்டதன் பின்னர், இலங்கை அரசு (நடைமுறையில் சிங்கள அரசு) வெற்றியடைந்துள்ளது. ஆனால் 12 வீத தமிழர்கள், இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கு இதுவே ஏற்ற தருணம். ஆனால் அது நடக்கப் போவதாக தெரியவில்லை.

சிங்கள தேசியவாதம் எதையும் சகித்துக் கொண்டதில்லை, தற்போது வெற்றி பெற்ற மமதை அதனை ஊக்குவிக்கும். மேலதிகமாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் "தேசிய பாதுகாப்பு அரசு" துரித வளர்ச்சி கண்டுள்ளதுடன், ஜனநாயகத்தை தகர்த்து, எதிர்க்கருத்தாளரை வாயடைக்கப் பண்ணியுள்ளது. அதனால் வடக்கில் கெரில்லாப் போராட்டம் திரும்புவதுடன், அரசினதும் தமிழ் தீவிரவாதிகளினதும் கொலைகள் தொடரும் என்று எதிர்வுகூரலாம்.

- Gwynne Dyer is a London based independent journalist whose articles are published in 45 countries.

Thanks to: Cyprus Mail 5/03/2009

Gwynne Dyer's web site

No comments: