Tuesday, April 22, 2008

அகதி வைரஸ் 2.0 (Made in Holland)

ஒல்லாந்து தேசியவாதிகள் உருவாகிய "நாடு காத்த சிறுவன்" கதை, நமது பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளதால், பலரும் அறிந்திருப்பர். கடல்மட்டத்திற்கு கீழே இருக்கும் ஒல்லாந்து நாட்டில் அடிக்கடி கடல் நீர் உள்ளே வந்து பேரழிவை ஏற்படுத்துவதால், அதை தடுக்கும் பொருட்டு, மிகப்பெரிய அணை கட்டினர். அப்படி கட்டிய அணையில் ஒரு முறை வெடிப்பு ஏற்பட்டு நீர் கசிவதை கண்ட சிறுவன் ஒருவன், கடல் நீர் ஊருக்குள் செல்வதை தடுக்க தனது விரல்களால் வெடிப்பை மூடிகொண்டிருந்தவாறே இறந்தான். தன்னுயிர் கொடுத்து பிறர் உயிர் காத்த அந்த இளைஞனை ஊர் மக்கள் மெச்சினர். இந்தக்கதை பின்னர் நாடு முழுவதும் பரவியது.ஐரோப்பிய காலனியவாதிகளால் பின்னர் இந்தக்கதை எமது நாடுகளிலும் பரவியது. அந்தக்கதை சொல்லும் சேதி என்ன? உண்மையில் தேசியவாத அரசியல் கருத்தியல் அந்தக்கதை மூலம், எமது பாடப்புத்தகங்கள் ஊடாக எமது மனதில் விதைக்கப்பட்டது. கல்வியில் அரசியல் கலந்திருப்பதன் உதாரணம் இது.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நெதர்லாந்து(அந்த நாட்டின் உத்தியோகபூர்வ பெயர், தாழ் நிலம் என்ற அர்த்தம் கொண்டது. பிற நாட்டு மக்களால் "ஹோலாந்து" என்றும், தமிழில் "ஒல்லாந்து" என்றும் அழைக்கப்படுகின்றது.) நாட்டில் நடக்கவில்லை. 18 ம் நூற்றாண்டில் உருவாகிய சில தேசியவாத புத்திஜீவிகள் இயற்றிய கற்பனை கதை அது. பிரேஞ்சுபுரட்சியை பின்பற்றி, ஒல்லாந்திலும் தேசிய குடியரசு சிறிது காலம் நிலைத்திருந்தது. அப்போது மக்களுக்கு போதிக்கப்பட்ட தேசியவாத கற்பிதங்களில் ஒன்று தான் அந்த கதை. இராணுவ பலம் வாய்ந்த மன்னர் பரம்பரை மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காலத்தில் இருந்து, இன்று வரை தேசியவாதம் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக வளரவில்லை. ஆனால் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி, லிபரல் சீர்திருத்தங்களை காலத்தின் கட்டாயம் கருதி ஏற்றுக்கொண்டமை வேறு விடயம்.

ஒல்லாந்து அரசியல் களத்தில், VVD என்ற கட்சி, பணக்காரர்கள், அல்லது அதிக வருமானம் ஈட்டும் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவு பெற்ற, அவர்களின் நன்மைக்காகவே பாடுபடும் கட்சியாகும். அவர்களால் தனியாக பெரும்பான்மை வாக்குகளை பெற முடியா விட்டாலும், பிற பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்து கூட்டாட்சி அமைப்பதன் மூலம், தனது செல்வாக்கை செலுத்தி வந்தது. அண்மைக்காலமாக அந்தக்கட்சியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல தீவிர வலதுசாரி கருத்துக் கொண்டோரும், இனவாதிகளும் அங்கிருந்து தான் அரசியல் அரங்கில் பிரவேசிக்கின்றனர். "இஸ்லாமிய எதிர்ப்பு புனிதப் போராளி" வில்டர்ஸ், மற்றும் "வெளிநாட்டவரை விரட்டிய வீர நங்கை" ரீட்டா வெர்டொன்க் ஆகியோர் அந்தக்கட்சியில் இருந்து, பின்னர் அவர்களின் தீவிரவாத கருத்துகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த மந்திரிசபையில் ரீட்டா வெர்டொன்க், வெளிநாட்டு குடியேறிகளுக்கான அமைச்சு பொறுப்பில் இருந்த போது பல்வேறு கொடுங்கோல் சட்டங்களை பிறப்பித்து, அரசியல் தஞ்சம் கோரும் அகதிகளினதும், வேலை தேடி அல்லது துணையுடன் சேர வரும் வெளிநாட்டு(குறிப்பாக வறிய நாடுகள்) பிரசைகளின் தொகையை கணிசமான அளவு குறைத்தார். பத்து வருடங்களுக்கு மேல், எந்த முடிவும் இல்லாமல், அகதி முகாம்களுக்குள் அடைபட்டு கிடந்த, பல்நாட்டு அகதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது, என்று ஒரேயடியாக மறுத்தார். அதனால் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சொந்த நாட்டிற்கும் திரும்ப முடியாமல், தஞ்சம் புகுந்த நாட்டிலும் எந்த வித உரிமைகளுமற்று, நடைப்பிணங்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களை ஒரு வழி பண்ணிய ரீட்டா, பின்னர் ஏற்கனவே வதிவிட அனுமதி பெற்று இந்த நாட்டில் வேலை செய்து கொண்டு, தனக்கான துணையை தாயகத்தில் இருந்து தேடிக்கொள்ளும் வெளிநாட்டு குடியேறிகள் மீது பாய்ந்தார். "தனது தாயகத்து கணவனை/மனைவியை கொண்டுள்ளோர் எல்லோரும், தமது இனத்தை பெருக்கும் நோக்கில் செயற்படுகின்றனர்." என்று குற்றம் சாட்டினார். அதனால் புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் சேருவதை தடுக்கும் பொருட்டு, விண்ணப்பதாரி நிரந்தர வேலையும், உயர்ந்த மாத வருமானத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றும், வரப்போகும் கணவன்/மனைவி தாயகத்திலேயே நெதர்லாந்து நாட்டின் சரித்திரம், கலாச்சாரம், டச்சு மொழியை கற்றுதேற வேண்டும் என்றும் சட்டங்கள் கொண்டு வந்தார். வெளிநாட்டவர் வருகையை குறைப்பது, எதிர்காலத்தில் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் உருவாவதை தடுக்கும் என்றும், வெளிநாட்டவர்கள் தமது "பிற்போக்கு" கலாச்சாரத்தை கைவிட்டு விட்டு, "மேன்மையான" நெதர்லாந்து கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது, அப்படி பின்பற்றாத பட்சத்தில் அவர்களை உரிமைகளற்ற இரண்டாம்தர பிரஜைகளாக ஒதுக்கி வைப்பது, என்பன தான் ரீட்டாவின் நோக்கங்கள். இவை யாவும் ஏற்கனவே, தீவிர வலதுசாரி கட்சிகளால் முன்மொழியப்பட்டவை.

லிபரல் (VVD) கட்சியில் இருந்து விரட்டப்பட்ட ரீட்டா, அண்மையில் புதிய கட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார். "நெதர்லாந்தின் பெருமை" (Trots op Nederland) என்ற பெயரே, புதிய கட்சி தேசியவாத பாதையில் போகவிருப்பதை காட்டுகின்றது. தனது கட்சிக்கு உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பழைய லிபரல் கட்சியில் இருந்தே பிரித்தெடுக்க நினைக்கிறார். மேலும் மக்களை கவர "அரசியல் 2.0" என்ற இன்டர்நெட் விவாத அரங்கம் தொடங்கினார். ஆனால் எதிர்ப்பாளர்களின் தாக்குதல் காரணமாக அந்த இணையத்தளம் பின்னர் மூடப்பட்டது. பகிரங்கமாகவே அகதிகள் மீதும், வெளிநாட்டு குடியேறிகள் மீதும் வெறுப்பு காட்டும் அவரை சுற்றி ஒளிவட்டம் பிடிக்கும் ஊடகங்கள், தினந்தோறும் ரீட்டா பற்றியும் அவரது கட்சி பற்றியும் பெரும் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் விதைத்து, அவர் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அடுத்த பிரதமராவார், என்றும் ஜோதிடம் சொல்கின்றன. இப்படியான தீவிர வலதுசாரி கருத்துகளை மக்கள் கருத்துகளாக மற்றும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் நாட்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்?

உண்மையில் ஒல்லாந்தின் சனத்தொகையில் (பூர்வீக/வெள்ளை இனம்) இளம் சமுதாயத்தை விட, வயோதிபர்கள் அதிகமாகி வருகின்றனர். கடந்த ஐம்பது வருடகால மாற்றங்களான, முன்னேறிய மருத்துவ வசதி, செல்வந்த வாழ்வு போன்றன இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இளமையான உழைப்பாளிகள் இனி வருங்காலத்திலும் தேவைப்படுகின்றனர். அதனை ஈடு செய்ய வெளிநாட்டில் இருந்து வரும் உழைப்புசக்தியிலேயே தங்கியிருக்க வேண்டும். ஆகவே நூறு வீத வெளிநாட்டவர் வருகையை தடை செய்வதென்பது நடக்க சாத்தியம் இல்லை. இருப்பினும் மறுபக்கத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நீண்ட காலமாகவே பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால், கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிலை. ஆனால் பல தசாப்தங்களாக நலன்புரி அரச அமைப்பின் கீழ் வசதியான வாழ்வு வாழும் மக்கள் சடுதியான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். தாம் அனுபவித்த சலுகைகள் ஒன்றன் பின் ஒன்றாக பரிபோகின்றதென்றால், வீதியில் இறங்கியும் போராட தயங்க மாட்டார்கள். இந்த நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்பது எப்படி?

அதற்கு குறைந்த ஊதியம் வழங்கி, குறைந்த காப்புறுதிகளுடன் சுரண்டப்படும் தொழிலாளர் சமூகத்தை உருவாக்கும் தேவை அவர்களுக்கு உள்ளது. வெளிநாட்டு தொழிலாளரை விட்டால் அதற்கு ஏற்றவர்கள் வேறு யார்? அதற்கு தான் வில்டர்ஸ், ரீட்டா வெர்டொன்க் போன்ற தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் இப்போதிருந்தே மொத்த ஒல்லாந்து சமூகத்தையும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று இரண்டாக பிரிக்க பார்க்கின்றனர். நூறு வருடத்திற்கு முன்னர் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியோர் வெள்ளை நிற தோலையும், கிறிஸ்தவ மதத்தையும் கொண்டிருந்ததால், அவர்கள் இலகுவாகவே பெரும்பான்மை இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது நெதர்லந்துகாரர்(டச்சுகாரர்) என்று சொன்னால் அவர்கள் கிறிஸ்தவர்களான வெள்ளையர்கள். மொரோக்கோ, துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்தோர் இஸ்லாமியர் என்பதால் பழுப்பு நிறத்தினர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். முஸ்லிம்கள் மற்றும் கருப்பு நிற தோலை உடையவர்கள், எல்லோருமே தற்போது சிறுபான்மை இனங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த அடையாளம், பல சலுகைகளை குறைக்க பயன்படுகின்றது. உரிமைகள் குறைக்கப்பட்டு இரண்டாம்தரப் பிரஜைகளாக மாறும் இந்த சிறுபான்மை இனங்களை, குறைந்த ஊதியம் கொடுத்து சுரண்டுவதற்கும் வழி பிறக்கும். தேவைப்பட்டால் அவர்களிடம் இருந்து வாக்குரிமையும் எதிர்காலத்தில் பறிக்கப்படலாம். "வன்முறைகளில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள்" பற்றியும், "ஏழ்மையை போக்க இங்கு வந்து பொருளீட்டி செல்வத்தை தமது நாடுக்கு அனுப்பும், அல்லது அரசாங்க சலுகைகளை அனுபவித்து கொண்டு சோம்பேறிகளாக காலம் கடத்த நினைக்கும் அகதிகள்" பற்றியும் கதைகளை அளந்து விட்டால், பெரும்பான்மை மக்கள் இரக்கம் காட்ட மாட்டார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் அகதிகளின் வருகையை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கபட்டன. அப்போது தொடங்கிய "வெளிநாட்டவர் மீது வெறுப்பு" என்ற வைரஸ் தற்போது பல்வேறு மட்டத்திற்கு பரவி வருகின்றது. தீவிர வலதுசாரிகள் இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் உருவாகப்போகும் புதிய நெதர்லாந்து, நியாயமான அரசாட்சியை கொண்டிருக்கப் போவதில்லை. இருப்பினும் வெளிநாட்டவருக்கு அல்லது அகதிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள், தற்போது பிற ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்படுவதை பார்க்கும் போது, நெதர்லாந்து முன்னுதாரணமாக திகழ்வதை கண்கூடாக பார்க்கலாம்.


நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்
__________________________________________________

Friday, April 18, 2008

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போதும், 26 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஹொஸ்னி முபாரக், தாணியக்கிடங்கை திறந்து விடவில்லை. அதற்கு பதிலாக போலிஸ் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே எகிப்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பருத்தி ஆலைதொழிளார்கள் வேலை நிறுத்தம், தற்போது அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்....இப்படியே தொடர்ந்தால் போலீஸ்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யாதது தான் மிச்சம். பலதரப்பட்ட பொருளாதர நிலைகளில் வேலைநிறுத்தங்கள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தாலும், அது முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை அசைக்கப்போவதில்லை. அதற்கு காரணம், காவல்துறை , இந்த அரசை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளது. உயர் மட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள், செல்வந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ளதென்றால், நடுத்தர அதிகாரிகள் லஞ்சப்பணம் பெற்று பிழைத்துக்கொள்கின்றனர்.

கடந்த வருடம் எகிப்திய பொருளாதாரம் ஏழு வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் மொத்த சனத்தொகையில் நாற்பது வீத எகிப்தியர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை. "Kefaya"(போதும்) என்ற பெயரில் ஒரு புதிய மதச்சார்பற்ற மக்கள் இயக்கம், பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. விலை வாசி உயர்வு, மாதக்கணக்காக வழங்கப்படாத சம்பளப்பணம், ஊழல், போலிஸ் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் இவற்றிற்கெதிராக பொது மக்கள் எதிர்ப்பைக்காட்ட வருமாறு அவர்களின் பிரசுரங்கள் அழைப்பு விடுத்தன. தலைநகர் கய்ரோவில் பலத்த போலிஸ் கெடுபிடி காரணமாக வேலை நிறுத்தம் வெற்றியளிக்கவில்லை. ஆனால் தலைநகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ள, பருத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள அல்-குப்ரா என்ற இடத்தில், தொழிலாளர் ஒற்றுமையாக வேலைநிறுத்தத்தில் குதித்ததுடன், அடக்க வந்த போலிஸ் படைகளை எதிர்த்து போராடிய போது, போலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். நூற்றுக்கனக்கனோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் எவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களுக்கு போனஸ் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாக அர்ரிவித்தது. பரந்துபட்ட தொழிலாளர் போராட்டம், அரசாங்கம் ஆட்டம் காணுவதன் அறிகுறி. ஆனால் அதேநேரம், அந்தப்போராட்டம் ஈவிரக்கமின்றி அடக்கப்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் , பல எகிப்தியர்கள் நாட்டை விட்டு தப்பியோடி, ஐரோப்பாவில் புகலிடம் கோரலாம். என்ன அதிசயம், எந்தவொரு ஐரோப்பிய ஊடகமும் இப்போது எகிப்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை. பின்னர் அகதிகள் வரும் போது, அங்கே என்ன பிரச்சினை என்று, ஒன்றும் தெரியாதது மாதிரி கேட்பார்கள்.

எகிப்தில் நிலவும் சர்வாதிகாரம் காரணமாக, அநேகமான மக்கள் மாற்று வழியை தேடுகிறார்கள். அதனாலே தான் இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியான "முஸ்லீம் சகோதரத்துவம்", தேர்தலில் போட்டியிடும் போது பெரும்பான்மையான மக்கள் அதற்கு வாக்கு போடுகின்றனர். 2005 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், அந்தக்கட்சி இருபது வீதமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லீம் சகோதரர்கள், தற்போது நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. தொழிலாளர் போராட்டம் மத அடிப்படை கொண்டதல்ல என்பதால், "புரட்சி ஆபத்தானது" என்று போதித்து வருகின்றனர். அவர்களக்கு உலகத்தில் மதத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. இருப்பினும், அரச அடக்குமுறை அவர்கள் மீதும் ஏவி விடப்படுகின்றது. அந்தக்கட்சியின் நிதி வழங்குனறன, ஸ்விட்ஸர்லாந்தில் வசித்த எகிப்து வங்கியாளர், மேலும் இரண்டு வர்த்தகர்கள் சர்வதேச போலிஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வருங்காலத்தில் பலவீனப்படும் வாய்ப்புகள் உள்ளன.

முபாரக்கின் சர்வாதிகாரம் எகிப்திற்கு புதிதல்ல. அதற்கு, இராணுவ உதவிகளை வாரிவழங்கும் அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவும் புதிதல்ல. தொழிலாளரின் அன்றாட உணவிற்கே போதாத ஊதியம், ஏழ்மை நிலை, ஊழல் இவை எதுவுமே எகிப்திற்கு புதிதல்ல. ஆனால் இந்த சமூக குறைபாடுகளை எல்லாம், மக்கள் பொறுத்துக்கொள்வது, மதவாதிகளின் பிரச்சாரத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டு இஸ்லாமிய நாடுகளில், எகிப்து தான் மத அடிப்படைவாத கொள்கையை கண்டுபிடித்தது. குறிப்பாக "முஸ்லீம் சகோதரத்துவம்" கட்சி தான், நமது காலத்திய கொமெய்னி (ஈரான்), பின் லாடன் (சவூதி) வகையறாக்களின் சித்தாந்த பாசறை. அவர்களின் பார்வையில், மக்களின் அவலநிலமைக்கு காரணம், சாதாரண மக்களின் மத நம்பிக்கை குறைபாடு தான். எல்லோரும் மதத்தை சரியாக கடைப்பிடித்தால், எல்லா சமூக குறைபாடுகளும் விலகிவிடுமாம். ஒரு காலத்தில், மதச்சார்பற்ற லிபரல் கலாச்சாரத்தை பின்பற்றிய எகிப்திய மக்கள், இந்த பிரச்சாரத்தின் பின்னர், மதப்பற்றாளர்களாக மாறினர். மதவடிப்படைவாத சக்திகளின் வேகமான வளர்ச்சிக்கு அதுவே காரணம்.

தற்போது எகிப்தின் தொழிலாளர் போராட்டங்கள், மத அடிப்படைவாதம் சோறு போடாது என்று கண்ட அனுபவத்தின் விளைவு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கமான சமுதாய சீர்கேடுகள் நிலைத்து நிற்பதற்கு மத நம்பிக்கை குறைவு காரணமல்ல. மக்கள் நலன்களை விட லாபத்தை மட்டுமே முதன்மையாக கருதும் முதலாளிகள், அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்கும் அரசாங்கம், அரசாங்கத்தை மக்களிடமிருந்து காப்பாற்ற உள்ள பாதுகாப்புபடைகள், ஊழல் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச ஆதரவு... இப்படி நீள்கிறது பட்டியல். இந்தக் காரணங்களை மக்களிடம் இருந்து மறைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகளின் இரட்டை வேஷங்களை கண்ட மக்கள் தான் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.

_____________________________________________________

Thursday, April 17, 2008

இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

இன்னும் சில நாட்களில் நேபாளம் குடியரசாகி விடும். மன்னர் கியேன்த்ரா, கத்மண்டு அரண்மனையை விட்டு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் பத்தாம் திகதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், நேபாளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி விட்டது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை, அந்த தேர்தல். 1996 ம் ஆண்டில் இருந்து, வெற்றிகரமான ஆயுதமேந்திய மக்கள் புரட்சியை நடத்தி, நேபாளத்தின் 80 % நிலப்பரப்பை, தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மாவோயிஸ்டுகள், தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஆளும்வர்க்கம், இந்தியா, அமெரிக்கா,பிரிட்டன் ஆகியன அதிர்ச்சியில் உறைந்து போயின. தேர்தல் கண்காணிக்க போன முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அமெரிக்கா அரசாங்கம் மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய தருணம் இது என்றார். (மாவோயிஸ்ட் கட்சி அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது) தேர்தல் முடிவுகளை அறிவிக்க தொடங்கிய பி.பி.சி. செய்தியாளர், நேபாள காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், மாவோயிஸ்டுகள் மூன்றாம் இடத்திலும் வருவார்கள், என்று தனது எதிர்பார்ப்பை செய்தியாக கூறினார். ஆனால் அடுத்த நாளே, மாவோயிஸ்டுகள் மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் நிற்கின்றனர் என்ற உண்மையை சொல்ல வேண்டியேற்பட்டது. அவ்வளவு தான், பி.பி.சி. அதற்கு பிறகு நேபாள பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. (வாழ்க நடுநிலமை)

தொன்னூருகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் பிரச்சினைகளை மறந்து, முடியாட்சிக்கு முண்டு கொடுக்கும் சாதாரண அரசியல் கட்சியாக இருப்பதாக குறை சொல்லி, "பிரச்சந்தா தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைத்த நாளில் இருந்து தலைமறைவாக இயங்க வேண்டியேற்பட்டது. இமய மலைக் கிராமங்களை தமது தளமாக கொண்டு மக்கள் யுத்தம் ஆரம்பித்தனர். நேபாளம் உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்று. குறிப்பாக நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், ஒன்றில் பின்தங்கிய இனங்களை சேர்ந்த, அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வறிய மக்கள், மாவோயிஸ்டுகளின் அரசியல் கோரிக்கைகள்,தமது நலன்களுக்கானவை என்று கண்டு கொண்டதால், பெருமளவு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் கணிசமான அளவு பெண் போராளிகளும் இருந்தனர்.

கம்யூனிசம் இறந்து சமாதிக்குள் உறங்குகிறது, அது இந்தக்கால கட்டத்திற்கு ஒவ்வாது, என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் நடந்து, எல்லோரும் அதை நம்பிய நேரத்தில், மாவோ வழியில் ஒரு இயக்கம், நேபாளத்தில் மக்களை திரட்டி, வெற்றியும் பெற்றது. அதன் வெற்றியை ஆராய்ந்த மேற்குலக அரசியல் அறிஞர்கள் , இன்றும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை ஒப்புக்கொண்டனர். தெற்காசிய நாடுகளுக்கே உரிய "சிறப்பம்சமான" சாதிய பாகுபாடு, பெண் அடக்குமுறை ; இவற்றுடன் ஈவிரக்கமின்றி உழைப்பு சுரண்டப்படுவதால் வறுமையில் வாடும் மக்கள், கடன் சுமையால் கஷ்டப்படும் நிலமற்ற விவசாயிகள், போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்துவது தான், என்று மாவோயிஸ்டுகள் கூறிய போது, யாரும் மறுக்கவில்லை. மேலும் அதன் பலாபலன்கள் உடனுக்கு உடனே தெரிய ஆரம்பித்தன. முடிக்குரிய நேபாள் இராணுவம், போலிசுடன் போராடி கைப்பற்றிய பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மாவோவாதிகள், "உழுபவனுக்கே நிலம்" என்ற கோஷத்தின் கீழ், அங்கிருந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார். அவர்களின் அவல வாழ்வுக்கு காரணமான, கடன்பத்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சாதி அடக்குமுறை தடுத்து நிறுத்தப்பட்டு, சாதிக்கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் விடுதலை இராணுவத்தில் இருந்த போராளிகள் இவ்வாறு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்து பெற்றனர். சீதனம் கொடுப்பது/வாங்குவது குற்றமாக்கப்பட்டது. இவற்றை விட தொழிற்சங்க நடவடிக்கை மூலம், நகரங்களில் கூட தொழிலாளரின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்தது. நேபாள சரித்திரத்தில் முதன் முறையாக, ஆதிக்க சாதியினர், அநியாய வட்டிக்கு கடன்கொடுப்போர், பெரும் முதலாளிகள் ஆகியோர், ஒடுக்கப்பட்ட மக்களின் உத்தரவுகளுக்கு கீழ்படிந்தனர். இந்த மாற்றங்கள் யாவும் மாவோயிஸ்டுகளின் போராட்டம் இல்லையேல் சாத்தியமாகியிருக்காது.

நேபாள இராணுவம் மாவோயிஸ்டுகளுடன் நீண்ட காலம் போரிட்டு வெல்ல முடியாத போது, அதற்கு பாராளுமன்றத்தை குற்றம் சாட்டிய மன்னர், அதிகாரம் முழுவதையும் தன் கையில் எடுத்தார். அது ஒரு முட்டாள்தனமான முடிவாக அமைந்து, "பூமராங்" போன்று மன்னரையே திருப்பி தாக்கியது. மன்னரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போது மக்கள், கிளர்ந்தெழுந்தனர். இந்தியாவும் அதனை விரும்பாததால், அழுத்தங்களுக்கு கட்டுபட்ட மன்னர் ஒதுங்கிக்கொண்டார். ஜனநாயகம் மீண்ட போது, பாரளுமன்ற கட்சிகள், மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கண்ட உடன்பாட்டின் படி, முடியாட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு பிரகடனம் செய்வதென்றும், புதிய அரசியல் நிர்ணய சபை அமைத்து, புதிய சட்டங்கள் எழுதுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் படி இதுவரை இருந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மிக விரைவில் நேபாளத்தின் சட்டங்களை மாற்றியமைப்பார்கள். நிச்சயமாக இதனால் மாவோயிஸ்டுகளின் பிரேரணைகள் நடைமுறைக்கு வரும்.

புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு குடியரசாக மாறும். அதற்கு பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி உருவாகும். நேபாளம் பல்வேறு மொழிகள் பேசும், பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தாலும், அது ஒற்றையாட்சி அலகை கொண்டிருந்தது. புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு சமஷ்டிக் குடியரசாகும். அதிலே ஒவ்வொரு மொழி பேசும் இனங்களுக்கும், தனித்தனியாக பதினொரு மாநிலங்கள் உருவாக்கப்படும். அதிலேயும் சிறுபான்மையாக இருக்கும் இனங்களுக்கு தனியான நான்கு நிர்வாக அலகுகள் கிடைக்கும். நேபாளத்தில் வட இந்திய இனங்களே(அதிலும் பிராமண, சத்திரியர்கள் ) ஆதிக்கம் செலுத்தி வந்தன. பூர்வகுடிகளான திபெதோ-இந்திய இனக்குழுக்கள் அதிகாரமற்று இருந்தனர். அவர்கள் தங்களை ஆளும் மாநில அரசு கிடைத்தால் நன்மையடைவர். மேலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் மேம்பாட்டிற்கு அரச சலுகைகள் கிடைக்கும். தற்போது தெரிவு செய்ய பட்ட மாவோயிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களில், கணிசமான அளவு தலித் மக்களும், பெண்களும் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். பிற கட்சிகளில் இவர்களின் பங்கு மிகக்குறைவு. ஊனமுற்றவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், வேலையற்றவர்களுக்கும் உதவிதொகை வழங்கப்படும். (இந்த திட்டம் ஐரோப்பாவின் நலன்புரி அரசை ஒத்தது) மக்கள் விடுதலைப் படை போராளிகளின் குடும்பத்தினருக்கு விசேஷ சலுகைகள். மேலும் மாவோயிஸ்டுகள் தமது இராணுவப்பிரிவை(மக்கள் விடுதலை படை), முடிக்குரிய நேபளிய இராணுவத்துடன் இணைக்குமாறு கோரி வருகின்றனர். அதனை இராணுவ உயர் அதிகாரிகள் எதிர்க்கின்றனர். பொருளாதாரம்: தனியார் நிறுவனங்கள் , மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன சமாந்தரமாக இயங்கும். அதே நேரம் நிலசீர்திருத்தம் நடைமுறை படுத்தப் படும். கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்படும். வெளிவிவகாரம்: நவீன தொழில்நுட்ப அறிவு, மற்றும் பாரிய கட்டுமானப்பணிகள் போன்றவற்றை அன்னிய நிறுவனங்களின் உதவியுடனேயே நடைமுறைப்படுத்த முடியும். இதன் நிமித்தம் சர்வதேச நாடுகளுடன் சுமுகமான உறவு பேணப்படும்.

மாவோயிஸ்டுகளின் "புதிய ஜனநாயக புரட்சி" சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ஆண்ட கட்சிகள் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்ட மக்கள், மாவோயிஸ்டுகள் மாற்றத்தை கொண்டு வருவர், என நம்புகின்றனர். மக்களின் வாக்குகளை உத்தரவாக கருதி, நேபாளத்தை முன்னேற்ற பாதையில் இட்டு சென்று, அதனை இமாலய சொர்க்கமாக்குவது, மாவோயிஸ்டுகளின் கைகளில் உள்ளது. நேபாளின் மன்னர், இராணுவம், ஆண்ட வர்க்கம், முதலாளிகள், மற்றும் அமெரிக்கா ஆகியன; இந்த முன்னேற்றத்தை தடுக்க நினைக்கலாம். எதிர்பாராத சதிப்புரட்சி ஏற்படலாம். அந்த நேரத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதனை மாவோயிஸ்டுகள் செய்வார்கள்.



____________________________________________________

கலையகம்

Monday, April 14, 2008

தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?

சீன ஆட்சிக்கெதிராக திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முண்டியடித்துக் கொண்டு தலைப்புசெய்தியாக போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. சாத்வீகமான போராட்டம் என்று கருதப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம், திடீரென வன்முறை வெடித்து, பௌத்த ஹான், முஸ்லீம் ஹுய் சீனர்களின் கடைகள், உடமைகளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவியுடை தரித்த திபெத்திய பௌத்த பிக்குகள், அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திய காட்சிகளை, சீன தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. வேறு வழியில்லாமல், (ஏனென்றால் அப்போது திபெத்தில் இருந்து வேறு எந்த படங்களும் வராததால் ), மேலைத்தேய ஊடகங்களும் அந்த ஒளிப்படங்களையே வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்படியான செயல்களை வேறு யாராவது செய்திருந்தால், (உதாரணத்திற்கு: பாலஸ்தீனியர்கள்), வன்மையாக கண்டிக்கும் மேற்குலக "அரசியல் அவதானிகள்", இந்த திபெத்தியர்கள் சீன அரச அதிகார இலக்குகளை தாக்குவதை விட்டு, எதற்கு பொதுமக்களின் சொத்துகளை தாக்க வேண்டும், என்றெல்லாம் தர்க்க ரீதியாக கேட்காமல், தீபெத் வன்முறைகளை மட்டும் நியாயப்படுத்தி கதைத்தனர். "பாலஸ்தீனியர்கள் அடித்தால் பயங்கரவாதம், திபெத்தியர்கள் அடித்தால் சுதந்திரப்போராட்டம்", என்று படித்து பட்டம் பெற்ற "அரசியல் அவதானிகள்" வேறு எப்படி பேசப்போகிறார்கள்?

இந்த நியாயப்படுத்தல்கள் சில நாட்களே தேவைப்பட்டது. ஒரு நாள், தலாய் லாமாவிடம் இருந்து, ஒரு நிழற்படம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்தப்படத்தில் சீன போலிஸ் படையினர், கைகளில் (பிக்குகள் அணியும்) காவி உடைகளுடன் காட்சி தருகின்றனர். அந்த நிழற்படம் கூற விரும்பும் செய்தி இது தான். திபெத்திய பௌத்த பிக்குகள் வன்முறையில் ஈடுபடவில்லை. சீன பொலிசார், பிக்குகள் போல் வேஷம் போட்டு, இந்தக் காரியங்களை செய்துள்ளனர். அதனை சீன அரசு வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்கின்றது. அமெரிக்க, ஐரோப்பிய "நடுநிலை காக்கும்" ஊடகங்களுக்கு இந்த ஒரு படம் போதாதா? சீனர்களின் "உண்மை சொரூபத்தை" தோலுரிக்க? பலதடவை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது, தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. ( அந்தப் படம் கீழே உள்ளது)


ஆனால் உண்மை என்ன? தலாய் லாமா அனுப்பிய அந்தப்படம் ஒரு திரைப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. திபெத் பற்றிய சீன படம் ஒன்றில், இராணுவ வீரர்களாக நடித்த அதே நடிகர்கள், பின்னர் பௌத்த பிக்குகள் வேடத்திலும் நடிக்க தயாராக நின்ற போது, எடுத்த நிழற்படம் தான் அது. அந்த நடிகர்கள் போட்டிருந்த சீருடை கூட, மாவோ காலத்திய இராணுவத்தினுடையது. இன்றைய சீன போலிஸ், அல்லது இராணுவம் வேறுவிதமான சீருடை போட்டிருப்பதை, இதை வாசிக்கும் நீங்களே பின்னர் கவனித்து பாருங்கள். தலாய் லாமாவின் ஏமாற்று வேலை தெரிய வர, சீன ஊடகங்கள் பின்னர் மேற்கத்திய ஊடகங்களின் நம்பகத்தன்மையை அக்கு வேறு, ஆணி வேறாக அலசத் தொடங்கி விட்டன. இதனால் நாணமுற்ற மேற்கத்தைய ஊடகங்கள், திபெத்தியர்கள் செய்வதும் பிரச்சாரம் தான், இதனால் உண்மை எது பொய் எது என்று தெரியவில்லை, என்று சப்பைக்கட்டு கட்டின. ஒரு சில, அப்போது திபெத்தில் இருந்த, மேலைத்தேய உல்லாச பயணிகளை விசாரித்து, செய்தி வெளியிட்டன. அவர்களும் தாம் வெடிச்சத்தங்களை தூரத்தில் கேட்டதாகவும், ஊரடங்கு உத்தரவினால் வெளியே போகவில்லை என்று மட்டும் கூறினர்.

தலாய் லாமா, இப்போது மட்டும் தான் உண்மையை திரிபு படுத்துகிறாரா? ஓட்டு மொத்த திபெத் மக்களின் ஆன்மீக-அரசியல் தலைவராகவும், புகலிடத்து திபெத் அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆகவும், தனது நான்கு வயதில் இருந்து, எழுபத்தியிரண்டு வயது வரை பதவியில் இருக்கும் "தென்சின் கியஸ்டோ" என்ற இயற் பெயருடைய மனிதர், "தலாய் லாமா" (அறிவுக்கடல் என்று அர்த்தம்) என்ற கௌரவ பட்டத்துடன், நமக்கெல்லாம் அறிமுகமாகிறார். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன், அஹிம்சை, சமாதானம் பேசும் இவருக்கு "சமாதானத்திற்கான நோபெல் பரிசு" வழங்கப்படும் அளவிற்கு, உலக மக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்துள்ளார். அல்லது மேற்குலகம் அவரை அப்படித்தான் எமக்கு காட்ட விரும்புகிறது. ஐரோப்பியரும், அமெரிக்கரும் சொல்லி விட்டால் நாமும் நம்பத்தானே வேண்டும்?

அஹிம்சா முறை போராட்டம், சமாதானம் எல்லாம், கடந்த இருபது வருட காலமாக, சரியாக சொன்னால், ஆயுதமேந்திய திபெத்திய விடுதலை போராட்டம் தோல்வியை தழுவிய பின்னரே, தலாய் லாமா இப்படி பேசி வருகின்றார். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக திபெத்தில் இடம்பெற்ற, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயதமேந்திய போராளிகளின் கெரில்லா போராட்டம், பற்றி பலர் இப்போது தான் முதன்முறையாக கேள்விப்படலாம். திபெத்தியரின் கெரில்லா தாக்குதல்களில், பல சீன இராணுவ வீரர்கள் மடிந்திருந்தாலும், யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்களும் இறந்துள்ளனர். ஆயுதமேந்திய திபெத் சுதந்திரப்போராட்டம் பற்றி எந்த சரித்திர நூல்களிலும் எழுதப்படவில்லை, ஊடகங்கள் மௌனம் காத்தன. அந்தப் போராட்டத்திற்கு தேவையான நிதி, ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்க அரசாங்கம் இதைப்பற்றி மிக இரகசியமாக வைத்திருந்தது. அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள இரகசிய பயிற்சி முகாமில், திபெத்தியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை, ஆயுதங்களுடன் அமெரிக்க விமானங்கள் எடுத்து சென்று, திபெத் மலைகளில் பரசூட் மூலம் இறக்கி விட்டன.


சீன அணு குண்டு தயாரிப்பது பற்றிய தகவல் முதற்கொண்டு, பல சீன இராணுவ இரகசியங்கள், இந்த திபெத் போராளிகள் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.எ. கு வழங்கினர். ஆனால் அதுவே அவர்களது ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்கு காரணியானது. சீனா அணு வல்லரசாக மாறியதால், அமெரிக்கா அதனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சீனாவின் நட்பினை பெரிதாக மதித்த அமெரிக்கா, திபெத்தியர்களை கை விட்டது.


இந்த உண்மைகளை அமெரிக்க அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக சொல்லவில்லை என்றால், ஒரு ஆன்மீக தலைவரான தலாய் லாமா சொல்லலாம் தானே? திபெத்தின் நீண்ட ஆயுதமேந்திய போராட்ட வரலாற்றை மறைப்பதேன்? அப்படி சொன்னால் தனது சமாதான முகமூடி கிழிந்துவிடும், ஆன்மீக வேஷம் கலைந்து விடும், என்று அஞ்சுகிறாரா? திபெத் போராளிகளின் தியாகத்தை மூடி மறைத்து விட்டு, திபெத்தியர்கள் என்றால் வன்முறையில் ஈடுபடாத அப்பாவிகள், என்று கதையளப்பதேன்? இப்போது கூட சில திபெத்திய தீவிரவாதிகள் தலைமறைவாக வன்முறைக்கு தயாராகும் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தலாய் லாமா அதை சீன அரசாங்கத்தின் பொய் பரப்புரை என்கிறார். தலாய் லாமா அவர்களே! நீங்கள் ஆண்ட அன்றைய திபெத்தில், பண்டைய இந்தியாவில் இருந்தது போன்ற சத்திரியர் குலம், "காம்" என்ற மாகாணத்தில் இருந்தும், அவர்களே உங்களது ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினராக இருந்ததையும் எதற்கு சொல்லாமல் மறைக்கிறீர்கள்? தலாய் லாமா, பொய் சொல்ல லாமா?

மேற்கத்தைய ஊடகங்களால் திரிக்கப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பு வீடியோ கீழே:


______________________________________________________

கலையகம்

Sunday, April 13, 2008

தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்

"ஒரு முக்கியமான தகவலை நான் சொல்ல விரும்புகின்றேன். கியூபா துருப்புகள் அங்கோலாவில் இருந்த போது, அந்த நாடு (அன்றைய நிறவெறி) தென் ஆப்பிரிக்க இராணுவ படையெடுப்பிற்கு உட்பட்டிருந்தது. அதே நேரம் அமெரிக்கா சில அணு குண்டுகளை, ஹிரோஷிமா-நாகசாகி மீது போட்ட அதே குண்டுகளை, பாசிச நிறவெறி தென் ஆப்பிரிக்கவிற்கு அனுப்பி வைத்தது. பலர் இன்றைக்கு மறந்து விட்டாலும், அங்கோலா போர், எட்டு அணு குண்டுகளை வைத்திருந்த, அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட நிற வெறி தென் ஆபிரிக்கவிற்கு எதிராக, கியூபா-அங்கோலா வீரர்கள் போராடினார்கள். இது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. உலகம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை."

 - பிடல் காஸ்ட்ரோ (எனது வாழ்க்கை, என்ற சுயசரிதை நூலில் இருந்து)

1970 க்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட காலங்களில், கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பங்குபற்றவென்று, 350000 இராணுவ வீரர்களையும், வைத்தியர்களையும், பிற தொண்டர்களையும்; அங்கோலா, நமீபியா, மொசாம்பிக், கினி பிசாவு, கேப் வெர்டே, சாவோ தோமே ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த சண்டைகளில் இதுவரை 2077 கியூபா படையினர் மாண்டுள்ளனர்.

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன், என்ற பழமொழிக்கேற்ப, அந்த நாடுகளின் விடுதலைக்கு தனது இன்னுயிரை கொடுக்க தயாராக இருந்த, ஆப்பிரிக்க கண்டதினை சேராத ஒரேயொரு நாடு, கியூபா மட்டுமே. இத்தனை தென் ஆப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பல தடவை நன்றியுடன் கூறியுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பல தடவை மேற்கத்திய நாடுகள், கியூபா உடனான உறவுகளை முறிக்க சொல்லி அழுத்தம் கொடுத்த போதும், அதை மறுத்து, பிடல் காஸ்ட்ரோ தனது ஆருயிர் நண்பன் என்று பகிரங்கமாக அறிவித்தார். தனது நாடு கியூபாவிற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்கட்டுவார்.

"வெள்ளை நிறவெறி தென் ஆப்பிரிக்காவில் நாம் உரிமைகளற்று அடக்கப் பட்ட நேரம், நீங்கள் அவ்வரசிற்கு ஆதரவு வழங்கினீர்கள். கியூபா எமது பக்கம் நின்றது. எமக்கு உதவி செய்ய கியூபா போராளிகளை, வைத்தியர்களை, ஆசிரியர்களை அனுப்பி வைத்தது. ஒரு நாளும் அவர்கள் காலனியவாதிகளாக வரவில்லை. எமக்காக இரத்தம் சிந்தியதற்காக ஆப்பிரிக்கர்களான நாங்கள், கியூபாவிற்கு தலை வணங்குகிறோம். இந்த சுயநலமற்ற சர்வதேசியத்தை நாம் ஒரு போதும் மறவோம். " 
- இதை நெல்சன் மண்டேலா மேற்கத்தைய தலைவர்களின் முகத்திற்கு நேராகவே கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் கியூபா பல மனம் நெகிழ வைக்கும் உதவிகளை செய்துள்ளது. கியூபா சுதந்திரமடைந்து ஒரு சில வருடங்களே ஆகியிருந்தது. அறுபதுகளில் பிரெஞ்சு காலனிய ஆட்சியை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த அல்ஜீரிய போராளிகளுக்கு, கியூபா ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்தது. திரும்பி வந்த கப்பலில், போரால் பாதிக்கப்பட்டு பெற்றாரை இழந்து அனாதைகளான அல்ஜீரிய பிள்ளைகள் இருந்தனர். அந்தப்பிள்ளைகள் கியூபா பிரசாவுரிமை பெற்று, கல்வி கற்று, இன்றைக்கும் கியூபாவில் வாழ்கின்றனர். 

அதே போல 1978 ல் அங்கோலாவில் இருந்த நமீபியா அகதி முகாம் ஒன்று, தென் ஆப்பிரிக்க படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, மக்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது, கியூபா படைகள் போய் சண்டையிட்டு, அந்த அகதிகளை காப்பாற்றி கியூபா அனுப்பி வைத்தனர். அப்படி காப்பாற்றப் பட்டவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளுமடங்குவர். அந்த அகதிக் குழந்தைகளில் ஒன்று, இன்று நமீபியாவின் தூதுவர். இந்த சம்பவங்களெல்லாம் காஸ்ட்ரோ வினால், அவரது சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ("My Life, Fidel Castro", published by Allen Lane, an imprint of Penguin books)


ஆப்பிரிக்க விடுதலைபோராட்ட வரலாற்றில், அங்கோலா, நமீபியா, கினி ஆகிய நாட்டு விடுதலைப் போராட்டங்கள் மட்டுமே கியூபா விற்கு பெருமை சேர்த்த போர்கள். சோமாலியாவின் படையெடுப்பினை எதிர்த்து போரிட, எத்தியோப்பிய சென்ற போது, ஒரு பிழையான நண்பனை தெரிவு செய்ததாக பட்டது. அன்றைய எத்தியோப்பிய அதிபர் மெங்கிஸ்டுவின் கொடுங்கோலாட்சியும், எரித்திரிய சுதந்திர போராளிகளை அடக்கியதிலும், கியூபா உடன்படவில்லை. 

இதனால், அந்தப் போர் பற்றிய விபரங்களை Castro தனது நூலில் குறைத்துக் கொண்டுள்ளார். அதை போலவே, காங்கோவில் சே குவேரா ஒரு சிறு படையுடன் போய், கபிலாவின் இயக்கத்துடன் சேர்ந்த போதும் நடந்தது. முதலாவதாக கபிலா ஒரு முற்போக்குவாதியாக சேவுக்கு படவில்லை. இரண்டாவதாக கபிலாவின் படையினர், போராட தயங்கும் சுகபோகிகளாக இருந்தனர். இதனால் வெறுத்து போன சே தனது ஆப்பிரிக்க சாகசங்களை அத்தோடு முடித்து கொண்டு கியூபா திரும்பினார்.

ஆபிரிக்காவில் அப்போது போராடிய விடுதலை இயக்கங்கள், மார்க்சிய- லெனினிய சித்தந்ததை வரித்துக்கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்காவின் எ.என்.சி. கூட ஆரம்பத்தில் மார்க்சிய அடிப்படை கொண்டிருந்தது. சோவியத் யூனியன் அப்போது, காலனிய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைய விரும்பிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தாராளமாக உதவி வந்தது. ஆப்பிரிக்காவில் சோவியத் நிதியுதவி வழங்கி வந்ததுடன் , கியூபா இராணுவ உதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டது. கியூபாவில் கறுப்பினத்தவர் மொத்த சனத்தொகையில் அரைவாசி என்பதால், ஆப்பிரிக்க சென்ற படையினரில் கணிசமான கறுப்பின வீரர்கள் இருந்தனர். 

ஆரம்பத்தில், உதாரணத்திற்கு அங்கோலா போன்ற நாடுகளில், உள்ளூர் போராளிகள் தாமே முன்னணியில் நின்று சண்டை பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், சில தோல்விகளை சந்தித்த பின்பு, கியூபா படைபிரிவை சுதந்திரமாக போரிட விட்டனர். கியூபா வீரர்கள் சண்டையில் காட்டிய துணிச்சல், போரில் பல வெற்றிகளை கொண்டு வந்து சேர்த்தது. Castro அந்த நூலில் சொல்வது போல, கியூபா படையினர் பல வருடங்களாக போரிட்டதின் விளைவு , நமீபியா சுதந்திரம், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியின் முடிவு என்பன சாத்தியமாகின.

இன்று மேற்கத்திய நாடுகள் (முன்னாள் காலனிய ஆட்சியாளர்கள்), ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றதற்கு பல காரணங்கள் கூறலாம். ஆனால் சுதந்திரத்திற்காக போராடிய இயக்கங்கள் பலவற்றின் அரசியல் சித்தாந்தம் "மார்க்சிச-லெனினிசமாக" இருந்த உண்மையையும், இப்படியே விட்டால் தம்மால் "தீய சித்தாந்தம்" என்று அறிவிக்கப்பட்ட ஒன்று, நாளை அந்த கண்டம் முழுவதும் பரவிடும் என்ற அச்சம், பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்க முக்கிய காரணம். மேலும், சோவியத் யூனியனின் நிதியுதவியும், கியூபா வின் இராணுவ உதவியும் விடுதலைப் போராளிகளுக்கு தொடர்ந்து கிடைக்கலாம் என்பதாலேயே பல போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த வரலாற்றை இப்போது நினைவு படுத்துவதன் காரணம் என்ன. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்றை திரிபுபடுத்த நினைக்கின்றது. ஒரு காலத்தில் கம்யூனிச நாடக இருந்த அங்கோலா இன்று அமெரிக்காவிற்கு பெற்றோலிய எண்ணை ஏற்றுமதி செய்யும், பொருளாதார முக்கியத்துவம் உள்ள நண்பன். பல ஆப்பிரிக்க நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு அடி பணிந்து வருகின்றன. இந்த நிலைமையை பயன்படுத்தி, கடந்த கால உண்மைகளை இன்றைய இளம் சந்ததிக்கு மறைத்து, சரித்திரத்தை மாற்றி எழுதும் முயற்சி நடக்கிறது. நூலில் இத்தனை சுட்டிக்காட்டும் Castro, மறைந்த ஆப்பிரிக்க காலனியாதிக்க- எதிர்ப்பு தலைவர் அமிகால் காப்றேல் சொன்னதை நினைவு கூறுகிறார். "கியூபா போராளிகள் எமது தேசத்தின் விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்தனர். ஆனால் அதற்கு கைமாறாக அவர்கள் தமது போரில் மடிந்த சக போராளிகளின் உடல்களை மட்டுமே எடுத்துச் செல்கின்றனர்."
இப்போது அந்த அணு குண்டுகள் எங்கே?

"Orange Free State" என்பது ஒரு தென் ஆப்பிரிக்காவில், வெள்ளை இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம். apartheid என்ற இனங்களை பிரித்து வைக்கும் நிர்வாக முறையை அறிமுகப்படுத்திய, அன்றைய டச்சு காலனியாதிக்கவாதிகளின் பிள்ளைகள், ஒல்லாந்து அரசபரம்பரையின் ஒரேஞ் என்ற பெயரையே தமது குடியேற்றங்களுக்கு இட்ட தீவிர வலதுசாரிகள். கருப்பர்களுடன் கலந்து வாழ்ந்தால் , தமது இனத்தூய்மை கெட்டுவிடும் என்று ஒதுங்கி வாழ்கின்றனர். தாம் வாழும் மாகாணத்தையே ஒரு தனி தேசம் போல பாதுகாப்பவர்கள், அதற்கென சட்டவிரோதமாக தனியார் இராணுவமே வைத்திருக்கின்றனர். இன்றைய தென் ஆப்பிரிக்க அரச படையினர், அங்கே நுழைய அஞ்சுகின்றனர். அரசாங்கமோ, ஏன் வீண் பிரச்சினை என்று, அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டது. 

அன்றைய நிறவெறி அரசாங்கத்திற்கு, அமெரிக்க வழங்கிய எட்டு அணு குண்டுகளும், இது போன்ற பாதுகாக்கப்பட்ட வெள்ளையர் காலனிகளிலேயே இருக்கும் என்று நம்பப்படுகின்றது. அதை பற்றி யாரும் கதைப்பதில்லை. இன்றுவரை கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் அது. தென் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பினத்தவர் ஆட்சியில் இருக்கலாம், ஆனால் அது அரசியல் அதிகாரம் மட்டுமே. தொழில்துறை நிறுவங்கள், பெருந்தோட்டங்கள், போன்ற கணிசமான அளவு பொருளாதார பலம் மட்டுமல்ல, இராணுவ பலமும் இன்னமும் வெள்ளையர் கைகளில் உள்ளன. அந்த அதிகார மையத்தை தகர்க்காமல், அணு குண்டுகளை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அது நடக்கக்கூடிய காரியமல்ல. அதை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும், மேற்குலக நாடுகளால் தடுத்து நிறுத்தப்படும்.

**********

கியூபா பற்றிய மேலதிக தகவல்களுக்கு இதையும் வாசிக்கவும்:
  • கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

  • Saturday, April 12, 2008

    உலக ( உணவுக் கலவர) வங்கி

    "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்." - என்று பாடினான் பாரதி. "பல கோடி மக்களுக்கு உணவில்லை எனில் தனி மனிதர்களை அழிப்பதில் தவறில்லை." - என்று பொருளாதார பாடம் சொல்லிக் கொடுக்கிறது உலக வங்கி. அந்த வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்று, எதிர்வரும் காலங்களில் உலகில் முப்பத்திமூன்று நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து, போது மக்கள் கலவரங்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எகிப்து, ஹைத்தி, கமரூன் ஆகிய நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கலவரத்தை அடக்க பொலிசார் சுட்டதில் ஹைத்தியில் ஐந்து பெரும், கமரூனில் நாற்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா, பாகிஸ்தான், மொரோக்கோ, செனகல், மொசாம்பிக், மொரிடனியா ஆகிய நாடுகளிலும் உணவுப்பொருள் விலையேற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பிலிப்பைன்சில் அரிசிக்கடைகளுக்கு பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாராவது ஒரு பிடி அரிசி திருடினால், கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது.

    கடந்த சில மாதங்களாக அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று: பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள். இரண்டு : சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் பெருகிவரும் மத்தியதர வர்க்கத்தினரின் வாங்குதிறன் அதிகரித்து, முன்பை விட அதிகம் இறைச்சி தமது அன்றாட உணவில் சேர்க்கின்றனர். இறைச்சி உண்பவர்கள், அதோடு சேர்த்து பல மடங்கு தானியங்களையும் நுகர்கின்றனர். மூன்று : பணக்கார நாடுகள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, வழக்கமான நிலத்தடி பெற்றோலிய நுகர்வை குறைத்து, சுற்று சூழல் காப்பது என்ற பெயரில், உயிரியல் எரிபொருளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில், பெருந்தோட்டங்களில் விளைவித்து எரிபொருளாக பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அதே சோளம், அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள். ஐரோப்பாவும், அமெரிக்காவும் தமது நாட்டின் 20 வீதமான வாகனங்கள் வரும் பத்தாண்டுகளில் உயிரியல் எரிபொருளை பாவிக்க வேண்டும், என்று திட்டம் போட்டு நடைமுறைபடுத்துகின்றன. இதனால் சோளத்தின் விலை உலகசந்தையில் உயர்ந்து, வறிய மக்களால் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு : பங்குச்சந்தை சூதாடிகள், தானிய வியாபாரத்தில் அதிகளவு லாபம் வரும் என்று நம்பி, தானிய விலையை செயற்கையாக அதிகரிக்க வைக்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், தானியங்களின் விலை உயர்வு ஏழை மக்களையே அதிகளவு பாதிக்கின்றது.

    இந்த பொருளாதார தாக்கம் முரண்நகையாக ஏழை நாடுகளில் தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளையே பாதிக்கின்றது. உலகமயமாகிய பொருளாதாரம் காரணமாக, ஏழை நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை விட, தாய்லாந்திலும், சீனாவிலும் இருந்து இறக்குமதியாகும் அரிசி மிக மலிவாக உள்ளது. இதனால் உள்ளூர் விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி தள்ளப்பட்டனர். கிராமங்களில் விவசாயிகளாக இருந்த போது, உணவுக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. ஆனால் நகர்புற சேரிகளில், கூலி உழைப்பாளிகளாக வாழும் போது, கிடைக்கும் கூலியில் அரைவாசிக்கு மேல் உணவுத்தேவைக்கு செலவிட வேண்டிய நிலை. ஒரு காலத்தில், மலிவான அரிசி விற்றுக்கொண்டிருந்த தேசங்கடந்த வர்த்தக நிலையங்கள், தற்போது அதே அரிசியின் விலையை இரு மடங்காக அதிகரித்த போது, அதனை விலை கொடுத்து வாங்க சக்தியற்றவர்கள் ஏழை மக்கள் தான். அதனால் தான் ஹைத்தியிலும், எகிப்திலும் அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர்.

    உணவுக் கலவரங்கள் பரவவிடாது தடுக்கும் பொருட்டு, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஹைத்தி, எகிப்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், உள்ளூர் தனிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை கேட்டது தான் தாமதம், உலக வங்கி அலறி அடித்துக் கொண்டு; "இது தேசிய பொருளாதாரத்தை பாதிக்கும், அரச வரவுசெலவுத்திட்டத்தில் செலவினத்தை அதிகரிக்கும், இது தற்காலிக தீர்வு மட்டுமே, மானியத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் பொருளாதார விருத்திக்கு உதவ மாட்டார்கள்..." இவ்வாறு பொருளாதார வல்லுனர்கள், அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். இதே உலக வங்கி, மக்கள் பட்டினியால் சாவதை பற்றியோ, சாமானியர்களின் செலவினம் அதிகரிப்பது பற்றியோ கவலைப்படவில்லை. உலகவங்கியின் கவலை எல்லாம், உலகம் முழுக்க தானியம் விற்கும் தேசங்கடந்த நிறுவனங்களின் லாபம் குறைந்து விடும் என்பது மட்டுமே.

    அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்பு வெளிநாடுகளில் இருந்து தானியம் இறக்குமதி செய்வதை தடைசெய்து, தமது விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தனர். அன்று அப்படி செய்த அதே நாடுகள் தான், இன்று தமது மிதமிஞ்சிய தானியங்களை உலகசந்தையில் விற்கின்றனர். அதனையே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் செய்ய விரும்பினால், உலக வங்கி ஓடி வந்து பொருளாதார வகுப்பு எடுக்கும். மூன்றாம் உலக நாடுகளில், சீனா மட்டுமே பணக்கார நாடுகளுக்கு நிகராக தானிய ஏற்றுமதி செய்கின்றது. அதுவும் முன்பு அங்கு இடம்பெற்ற கம்யூனிச புரட்சியின் பின்னர், எல்லைகளை மூடி, ஏற்றுமதியை தடைசெய்து, உள்ளூர் உற்பத்தியை பெருக்கியதாலே தான் இன்று இந்த நிலை.

    உள்நாட்டு உற்பத்தியை கூட்ட, சந்தையை பாதுகாக்க நினைக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார சீர்திருத்தம், காலம் பிந்தி வந்த மிகச்சிறிய சீர்திருத்தம் என்று அந்நாட்டு மக்கள் குறைப்படுகின்றனர். அதேநேரம் சந்தையை திறந்துவிடு, கட்டுபாடுகள் போடாதே, என்று உலகவங்கி கொடுக்கும் அழுத்தம் காரணமாக அந்த சீர்திருத்தம் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் தானியங்களின் விலையும் குறையப்போவதில்லை. இதைப்பற்றி பணக்கார நாடுகளில் உயிரியல் எரிபொருள் நிரப்பிய கார் ஓடும் மக்களுக்கு, உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர்களுக்கு, வறிய நாடுகளில் உள்ள வசதிபடைதோருக்கும் என்ன கவலை? அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தாராளமாக சந்தையில் கிடைக்கின்றன. அதை வாங்க கூடிய பலமும் இருக்கிறது. அவ்வப்போது உணவுக்கலவரங்கள் வெடிக்கும் போது, ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் உலகின் மறுகோடியில் இருக்கும் மக்களுக்கு செய்தி போய்ச்சேர்வதில்லை.

    __________________________________________________

    கலையகம்

    Friday, April 11, 2008

    வட கொரியாவில் அகதித் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்!

    ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது).

    அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின் சரித்திர நூல்களில் பதிப்பிக்கப் பட்டு, "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து "சுதந்திர மேற்கு" நோக்கி இடம்பெயர்ந்த "வீர மக்கள்" பற்றிய கதைகள், பாடசாலை பிள்ளைகளுக்கு போதிக்கப் படுகின்றது. அதேபோல் கம்யூனிச நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கின்றனர்.

    கொரிய போர் முடிந்து, கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (வட கொரியா) உருவான போது, லட்சக் கணக்கான கொரியர்கள், ஜப்பானில் இருந்து போய் குடியேறினர். அதே போலே இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லையில், காவல் கடமையில் இருந்த சில அமெரிக்க இராணுவ வீரர்களும், வட கொரியா நோக்கி ஓடிப்போய், ராஜ போக வாழ்க்கை வாழ்கின்றனர்.

    இவர்களைப் பற்றிய தகவல்களை, அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக வைத்திருந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், ஒரு வயதான அமெரிக்கர், தனது ஜப்பானிய மனைவியுடன் இணையும் நோக்கில் வெளியுலகம் வந்த படியால் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவம், ஊடகங்களில் சர்வதேச செய்தியாகிய பின்னர் தான், இந்த தகவல்கள் உண்மை என்பது உலகிற்கு தெரிந்தது.

    அந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்த இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்கள், “Crossing the Line” என்ற பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரித்தனர். ட்றேச்நோக் என்ற அமெரிக்க வீரர், தென் கொரியாவையும், வட கொரியாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டில் கடமையாற்ற பணிக்கப்பட்டவர். தனக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அஞ்சி, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட எல்லையை கடந்து, வட கொரிய சென்று தஞ்சம் கோரும் காட்சியுடன் படம் ஆரம்பமாகின்றது.

    ஆரம்பத்தில் அவர் ஓர் அமெரிக்கர் என்பதால், அவரைக் கொலை செய்ய நினைத்த வட கொரியர்கள், பின்னர் மனம் மாறி, தலைநகர் பியங்கியாங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கே நடந்த விசாரணையில், ஒரு சாதாரண போர்வீரர் என்பதை அறிந்து கொண்ட கொரியர்கள், பின்னர் அவரை பிற அமெரிக்க வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

    இவரைப் போன்று, நான்கு அமெரிக்கர்கள், வட கொரியாவில் அறிமுகமாகினர். அவர்கள் புகலிடம் கோரிய அந்நிய நாட்டில், பல கலாச்சார சிக்கல்களை எதிர் கொண்டனர். கொரியர்கள் மட்டும் வாழும் அந்த நாட்டில், தாம் அமெரிக்கர்கள் என்பதால் வெறுக்கப் படுவதாக உணர்ந்தனர். அதற்கு முன்னர் நடந்து முடிந்த கொரியப் போரில், அமெரிக்கா குண்டு வீசி, பல பொதுமக்களை கொன்றுள்ளதால், அனைத்து கொரியர்களும் தம்மை வெறுப்பதாக கலாச்சார அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    வட கொரியாவில் இருந்து தப்பிச் செல்வதற்காக, சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரினார்கள். தாம் ஐரோப்பிய இனத்தவர் என்பதால், ரஷ்யர்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரஷ்யர்கள் அவர்களை கொரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.

    வசமாக மாட்டிக் கொண்ட நான்கு அமெரிக்கர்களும், கொரியர்கள் தம்மை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யபோவதாகஅஞ்சினார்கள். அவர்கள் நினைத்தற்கு மாறாக, கொரியர்கள் அவர்களை அரசியல் பாடசாலைக்கு அனுப்பி, கொரிய சரித்திரம், கலாச்சாரம், சித்தாந்தம் போன்றவற்றை போதித்தார்கள்! அன்றிலிருந்து அந்த நான்கு அமெரிக்கர்களும் வட கொரியாவில் தங்கிவிட தீர்மானித்தார்கள்.

    அந்த அமெரிக்கர்கள், கொரியப் பெண்களை மணந்து கொண்டு, அங்கேயே தங்கிவிட்டனர். வட கொரிய அரசு, அவர்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுத்ததுடன், தன் நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டது. இந்த ஆவணப் படத்தின் நாயகன் ட்றேஸ்நோக், ஒரு ரோமானிய பெண்ணை மணம் முடித்து, இரண்டு ஆண் பிள்ளைகளுடன் அமைதியான குடும்ப வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மகன் தன்னை ஒரு கொரியனாக அடையாளப் படுத்துவதுடன், எதிர்காலத்தில் இராஜ தந்திரியாக பணி புரிய ஆசைப்படுகின்றார்.

    ஆவணப் படத்தில் வரும் நான்கு அமெரிக்கர்களில் ஒருவர், கொரியர்களால் கடத்தப்பட்ட ஒரு ஜப்பானிய பெண்மணியை திருமணம் செய்த படியால் தான், இந்தத் தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தன. வட கொரிய உளவாளிகளுக்கு, ஜப்பானிய மொழி சொல்லிக் கொடுக்கும் நோக்கில் கடத்தப்பட்ட அந்தப் பெண்மணி, பின்னர் ஜப்பானிய அரசுடன் செய்து கொள்ளப் பட்ட உடன்படிக்கையின் படி திருப்பி அனுப்பப் பட்டார்.

    ஜப்பானிய மனைவியைத் தேடிச் சென்ற அமெரிக்கக் கணவர், ஜப்பானிய பிரதமர் தடுத்தும் கேளாமல், அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அது பின்னர் உலக செய்தியானது. கைது செய்யப்பட்டவர், அப்போது தன்னை விடுவித்து விடுவார்கள் என்று நினைத்து, வட கொரிய அரசினால் தனக்கு ஆபத்து என்று பொய் சொன்னதாக, இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளார்.

    எனது நண்பர் ஒருவருக்கு பழக்கமான ஒரு வட கொரியர், தனது நாட்டில் உள்ள அடக்குமுறைகள் பற்றிக் கூறிய விளக்கங்கள், பலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். கிழமைக்கு நாற்பது மணித்தியாலம் வேலை நேரத்திற்கும் அப்பால், ஒரு நாள் கட்டாய அரசியல் வகுப்பில் பங்கு பற்ற வேண்டும், என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்தார்.

    சாதாரண தொழிலாளிகள் கூட, அரசியல், சமூகவியல், சரித்திரம் கற்பது ஒரு சிலருக்கு "அடக்குமுறை" போல தெரிகின்றது. சர்வதேச நாடுகளினால் திரிக்கப் பட்ட பொய்கள், தற்போது நம்பகத் தன்மையை இழந்து வருகின்றன.

    உண்மையில், வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி இருந்திருந்தால், அந்த அமெரிக்கர்கள் சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, அவர்களது தப்பி ஓடும் முயற்சிக்காக சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்களுக்கு அரசியல் பாடம் கற்பித்தவுடன் நில்லாது, திரைப்பட துறையில் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

    ஆவணப்படம் தயாரித்தவர்கள், “அரசின் பிரச்சாரப் படங்களில் நடித்தீர்களா?" என்று கேட்டதற்கு, ட்றேஸ்நோக் சரியான பதிலடி கொடுத்தார். கொரியாவில் அமெரிக்கா செய்த கொடூரங்கள், ஏற்கனவே ஆவணப் படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைப் பற்றி படம் தயாரித்தால், அது எப்படி "பிரச்சாரப் படம்" ஆகும்? அப்படிப் பார்த்தால் தற்போது வரும் ஹோலிவூட் படங்கள் பல, அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பிரச்சார படங்களாக கருத இடமுண்டு.

    தலைநகர் பியங்கியாங்கில் கூட தண்ணீர் தட்டுப்பாடு , மின்சார வெட்டு முதலிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ட்றேஸ்நோக் குடும்பம், இன்று வரை வட கொரியா அரசாங்கத்திற்கு, மறைந்த தலைவர் கிம் உல் சுங்கிற்கு, தனித்துவமான ஜூகே கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதை காட்டுவதுடன் அந்த ஆவணப் படம் முடிகின்றது. நாட்டில் நிலவிய கடுமையான பஞ்சத்தால், லட்சக்கணக்கான மக்கள் மடிந்த போதும், தமக்கு உணவு கிடைத்து வந்ததாக இந்த குடும்பத்தினர் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

    அந்தப் ஆவணப் படத்தில், ஒரு குறிப்பிடத் தக்க காட்சி வருகின்றது. பல வட கொரியர்கள் இன்று ஆங்கில பாடம்கற்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இன்றைய தொழில்நுட்பம் பற்றி கற்பதற்கு ஆங்கிலம் அவசியமாகவுள்ளது என்பது தான். நமது மக்களைப் போன்று, “உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஆங்கிலம் படிக்கவில்லை.” கொரிய மக்கள் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை மட்டுமே வெறுக்கின்றனர். அமெரிக்க மக்களையோ, அல்லது ஆங்கில மொழியையோ அவர்கள் வெறுக்கவில்லை என்ற உண்மை படத்தில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

    இந்தப் படம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பரப்பி வரும் பொய்களுக்கு, பதிலடி கொடுக்கின்றது. வட கொரியாவில் வாழும் மக்கள், “ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள்” வாழ்வதாக கூறி வந்த பொய்களை இந்தப் படம் உடைக்கின்றது. இதைப் போன்று, டச்சு திரைப்பட துறையினர் தயாரித்த, "வட கொரியாவில் ஒரு நாள்" என்ற படமும், வட கொரியர்கள் பிறரைப் போல சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள் தான் என்று நிரூபித்தது. அது தான் உண்மையும் கூட.

    வட கொரியர்களும், பிற நாட்டு மக்களைப் போல, தமது வேலை, குடும்பம், வருமானம் என்று வாழ்பவர்கள் தான். பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர். தாம் வாழ்வது ஒரு சோஷலிச நாடா? அல்லது முதலாளித்துவ நாடா? ஜனநாயக நாடா? என்று கவலைப் படுவதில்லை. இதையே தென் கொரியா வந்து தஞ்சம் கோரும், வட கொரியர்களும் கூறுகின்றனர். தென் கொரியாவில் நடக்கும் பிரச்சாரம், தமது நாட்டின் உண்மை நிலையை கூறுவதில்லை என்று இவர்கள் குறைப்படுகின்றனர். ஜெர்மனியை பின்பற்றி, கொரியாக்களை இணைக்க, பல முயற்சிகள் நடக்கின்றன. .

    மேற்குலக ஊடகங்களின் பிரச்சாரம் முழுக்க, பிற தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றியே இருக்கிறது. தமது அரசியல் எதிரிகளை சிறையில் போடும் விடயம், எந்த நாட்டில் இல்லை? அமெரிக்கா தமது அரசியல் எதிரிகளை "குவந்தனமோ" வில் வைத்து சித்திரவதை செய்ததை, மக்கள் அதற்கிடையில் மறந்து விட்டார்களா? வட கொரியாவிலும், அரச எதிரிகள் சிறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

    இருப்பினும், பெரும்பான்மை மக்கள் அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாலேயே, மேற்குலகம் எதிர்பார்க்கும் "புரட்சி" எதுவும் அங்கே நடக்கவில்லை. இந்த விவரணப் படத்தை தயாரித்தவர்கள் கூட, அமெரிக்காவுடன் யுத்தம் வந்தால், வட கொரிய அணு ஆயுதம் பயன் படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்க கூட, வட கொரியா மீது கை வைக்க தயங்குவதற்கு, அணு ஆயுதம் தான் காரணம்.

    ஆவணப் படங்களைப் பார்க்க கீழே உள்ள தொடுப்பை அழுத்துங்கள் :





    _____________________________________________

    கலையகம்

    Saturday, April 05, 2008

    திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்

    பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு சில மாதங்களே இருந்த நேரம், திபெத் மாநிலம் சீனாவினால் இணைக்க பட்ட பிறகு ஏற்பட்ட எழுச்சியின் 49 ம் ஆண்டு நிறைவுதினம், மீண்டும் கலகங்களையும், திபெத் சுதந்திர கோரிக்கையையும் கிளப்பி விட்டது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சீன பாதுகாப்பு படைகள் கலைத்தத்தில் முப்பது அல்லது நாற்பது பேர் இறந்ததாகவும், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், சீன வர்த்தக நிலையங்கள் திபெதியர்களால் தாக்கப் பட்டு, சில சீனர்களும் கொல்லப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய ஊடகங்களுக்கு இவை போதாதா? தொடர்ந்து சில நாட்கள், திபெத் தலைப்பு செய்தியாகியது. மனித உரிமை நிறுவனங்கள், சீன அரசிற்கு சர்வதேச நெருக்கடி கொடுக்குமாறு கூற, அரசியல் தலைவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்க யோசிப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படி நடக்குமா என்று இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

    முன்பு என்பதுகளில் சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது, அமெரிக்கா உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் விளையாட்டுகளை பகிஷ்கரித்தன. சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருப்பதை அதற்கு காரணமாக கூறின. தற்போது அதே நாடுகளின் இராணுவங்கள், அதே ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன! அதே சமயம், அமெரிக்காவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள நடந்த போது, யாரும் பகிஷ்கரிக்கவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்ற போது, அங்கு பூர்வீக குடிகளான "அபோரிஜினர்கள்" சம உரிமை கேட்டு கலகம் செய்தனர். அப்போது இந்த மனித உரிமைவாதிகளோ, மேற்கத்திய அரசியல்வாதிகளோ ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஊடகங்களும் அதைப்பற்றி ஒரு நாள் செய்தியுடன் முடித்துகொன்டன.

    ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு. பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை தமது எதிரிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தும் மேலைத்தேய அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். இது போன்ற விடயங்களை பொது மக்கள் கவனிக்க தவறுகின்றனர். திபெதியரின் சுயநிர்ணய உரிமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் நியாயமானது. சீன அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. இதைப்பற்றி இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. அதே நேரம், இந்த விடயத்தை ஒரு சிலர் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்வதை அனுமதிக்க முடியாது. ஒரு பக்கம் சீன அரசாங்கமும், மறுபக்கம் இந்தியாவில் இயங்கும் தலாய் லாமா தலைமையிலான புகலிட திபெத் அரசாங்கமும், செய்திகளை திரிபுபடுத்தி அல்லது மிகைப்படுத்தி வெளியிடுவதிலும், வதந்திகளை கிளப்பி விடுவதிலும் மும்முரமாக இருக்கையில்; மேற்கத்தைய ஊடகங்கள், திபெத் சார்பு நிலை எடுத்தன. இருப்பினும் திபெத்தில் உள்ள சீனர்களின் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் தாக்கி எரிக்கப் பட்டத்தை, ஊடகங்கள் எதுவும் மறைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சார்பான கோணத்தில் இருந்தே இதை பார்த்தனர். சீன ஊடகங்கள், திபெதியரை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும், உண்மையில் சீன இனத்தவர்களே பாதிக்கப்படுகின்றனர், என்பதைக் காட்டத்தான் அவற்றை வெளியிட்டன. மேற்கத்திய ஊடகங்களோ, இது திபெத்திய மக்களின் அடக்குமுறையாளருக்கு எதிரான தன்னெழுச்சி, ஆகவே நியாயமானது என்ர கருத்துப்பட செய்தி வெளியிட்டன. இதிலே ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இன்னொரு உதாரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையை எடுத்து கொள்வோம் . திபெத் சீனாவின் இறைமைக்கு உட்பட்ட மாநிலம் என்று, அனைத்து சர்வதேச நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே நேரம் பாலஸ்தீனம் தனியான நாடாக இருக்க தகுதியுள்ளதாக ஐ.நா. அமைப்பு முதல், அமெரிக்கா உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அப்படியிருக்கையில், பாலஸ்தீனியர்கள், யூத வர்த்தக நிலையங்களை, வாகனங்களை தாக்கி எரியூட்டினால், அதை இந்த ஊடகங்கள் எப்படி விவரிக்கும்? பாலஸ்தீனியர்கள் வெறிபிடித்த வன்முறையாளர்கள் என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கோடு அந்தக் காட்சிகளை காட்டுவார்கள். இங்கே தான் "நடுநிலை" ஊடகங்களின் பக்கச்சார்பு தன்மை தெளிவாகின்றது.

    திபெத் பிரச்சினையை வரலாற்று ரீதியாகவும் பார்க்க வேண்டும். சீன படையெடுப்பு வரும் வரை இருந்த, "சுதந்திர திபெத்" அன்றைய காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த, மக்களை அடிமைத்தளையில் வைத்திருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை கொண்டது. "லாமாக்கள்" என்றழைக்கப்படும் பௌத்த மதகுருக்கள், அரசியல் நிர்வாகம் செய்யும் பிரபு குலமாக இருந்தனர். மதமும், அரசியலும் ஒரே ஸ்தாபனமாக இருந்த அன்றைய காலம், லாமாக்கள் அதிகாரம் படைத்த செல்வந்தர்களாகவும், பிற மக்கள் அவர்களுக்கு சேவகம் செய்யும், அல்லது விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் வறியவர்களாகவும் இருந்தனர். கடன்களை திருப்பி கொடுக்க முடியாதவர்கள், அடிமைகளாக சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இந்தக் குறிப்புகள் அப்போது திபெதிற்கு பயணம் செய்த சில ஐரோப்பியரின் எழுத்துகளிலும் பார்க்கலாம். இவர்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நபரும் இருந்தார். அவரின் கதையை ஹோலிவூட் "திபெத்தில் எழு வருடங்கள்" என்ற பெயரில் படமாக தயாரித்தது. ஹிட்லரால் அனுப்பப்பட்ட அந்த ஜெர்மன்காரர், நாசிசத்தின் அச்சாணியான நிறவாத சித்தாந்தத்தின் தோற்றுவாய் திபெத் ஆக இருக்கலாம், என்ற கருத்தை கொண்டிருந்தார்.

    ஐம்பதுகளில் சீனாவில் ஏற்பட்ட மாவோ தலைமையிலான கம்யூனிச புரட்சி, திபெத்தின் சுதந்திரத்திற்கு, அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு முடிவு கட்டியது. கம்யூனிஸ்டுகள் தமது சித்தாந்தத்தின் படி, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என நம்பினர். சீன பொதுமக்களோ, மிகவும் பின்தங்கிய காட்டுமிராண்டி கால திபெத்தை நாகரீகப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக கருதினர். இதனை பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க காலனிய வாதிகள், கலிபோர்னியா போன்ற மேற்கு மாநிலங்களின் மீது படையெடுத்த காரணங்களோடு ஒப்பிடலாம். அப்போது மேற்கு அமெரிக்க பகுதிகள், "மேற்கு காடுகள்" என வர்ணிக்கப்பட்டன. அங்கிருந்த செவிந்திய சமூகத்தை காட்டுமிராண்டி கால மனிதர்களாக பார்த்து, அவர்களை நாகரீகப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக ஆங்கிலேய காலனியவாதிகள் கருதினர். மேலும் மெக்சிகோவின் பகுதியாக இருந்த, ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்த, கலிபோர்னிய மாநிலம், யுத்தம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே ஆங்கிலம் பேசும் மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது அங்குள்ள ஸ்பானிய மொழி பேசும் மக்கள், கலிபோர்னியாவை சுதந்திர நாடாக்க கோரி, ஆர்ப்பாட்டம் செய்தால், அதற்கு அமெரிக்க அரசு எப்படி பதிலளிக்கும்? பல தசாப்தங்களாக சுதந்திரமடையும் நோக்கோடு போராட்டங்கள் நடத்தும் "புவேர்டோரிகோ" என்ற சிறு தீவை கூட விட்டுக்கொடுக்க மறுக்கும் அமெரிக்க அரசு, கலிபோர்னியவை தனி நாடாக்க முன்வருமா? அப்படி இருக்கையில் சீன-திபெத் பிரச்சினையில் மட்டும், ஏன் எல்லோரும், வேறொரு கருத்தை கொண்டுள்ளனர்?

    சீனாவில் பெரும்பான்மையாக உள்ள "ஹான்" என்ற சீன இனத்தவர்கள், சீனா முழுக்க வசிக்கின்றனர். மன்னர் காலத்தில் நடந்த இந்த குடியேற்றங்கள், தற்போதும் தொடர்கின்றது. வியாபாரம் செய்யும் நோக்கோடும், தொழில் தேடியும் ஹான் சீனர்கள் திபெத் வந்து குடியேறுகின்றனர். இது பல திபெத்தியருக்கு எரிச்சலூட்டும் விடயம் தான். உண்மையில் சீன படையெடுப்புக்கு பின்னர் தான், திபெத் பொருளாதார வளர்ச்சி கண்டது. பல நவீன நகரங்கள் உருவாகின. ஒரு காலத்தில், மதகுருக்கள் மட்டுமே எழுத, வாசிக்க கற்றிருந்தனர். தற்போது பொது பாடசாலைகள் கட்டப்பட்டு, அனைத்து திபெத்தியருக்கும் கல்வியூட்டப்படுகின்றது. லாமக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மக்கள் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், தற்போது பலர் கல்வியறிவு பெற்றோ, அல்லது வியாபாரம் செய்தோ தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ள, பெரும்பான்மையான திபெத்தியர்கள், தலாய் லாமாவின் பின்னால் நிற்கவில்லை. உண்மையில் அதிகாரம் இழந்த லாமாக்களும், சில திபெத்திய தேசியவாதிகளும் தான், திபெத் சுதந்திர நாடாக வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்க சி.ஐ.எ. மறைமுக உதவி வழங்கி வருகின்றது. பனிப்போர் காலத்தில் இருந்து இந்த உறவு இருந்து வருவது இரகசியமல்ல. பௌத்த மதகுருக்களும், காவி உடை தரித்த அஹிம்சாவாதிகள் இல்லை. முந்தின எழுச்சியின் போது கூட மடாலயங்களில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். முன்பு தனி நாடாக இருந்த போது நன்கு பயிற்சி பெற்ற இராணுவ மதகுருக்கள் இருந்தனர். தற்போது இந்தியாவில் இருக்கும் தலாய் லாமா, ஒரு பக்கம் வன்முறையற்ற போராட்டம் பற்றி கதைத்தாலும், மறுபக்கத்தில் வன்முறையில் நம்பிக்கை கொண்ட திபெத்தியரும் உள்ளனர்.

    திபெத் சுதந்திரப் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவு, ஒரு கட்டத்திற்கு அப்பால் போகாது. ஒரு காலத்தில், சீனா தனது எதிரி நாடு என்ற காரணத்தால், திபெதியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா, தற்போது மாறிவரும் உலகில், சீனாவுடனான வர்த்தக உறவுகளுக்காக, திபெத்திய போராட்டத்தை நசுக்கி வருகின்றது. அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய நாடுகளும் தமது வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை விரும்பப் போவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி, சீனாவின் பெயரை கெடுத்து, மறைமுக அழுத்தங்கள் மூலம் சீனாவை தமது நிபந்தனைகளுக்கு பணிய வைத்து, மேலும் பல வியாபார ரீதியிலான சலுகைகளை பெற்றுக் கொள்வது தான்.

    இது தொடர்பான வேறு பதிவுகள் :
    தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?


    ________________________________________________

    கலையகம்

    Wednesday, April 02, 2008

    இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

    "பாசிசத்தை தோற்கடித்தோம், கொம்யுனிஸத்தை தோற்கடித்தோம், தற்போது இஸ்லாமிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்த வருகின்றது." இவ்வாறு முடிகிறது ஒல்லாந்து தீவிர வலதுசாரி பாரளுமன்ற உறுப்பினர் வில்டர்ஸ் தயாரித்த "பித்னா" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு விவரணப் படம். படத்தின் இறுதிக்காட்சியில் குர் ஆன் புத்தகத்தின் பக்கத்தை ஒரு கை கிழிக்க போவதாக காட்சி வரும். கமரா இருட்டை நோக்கி நகர, பின்னணியில் கடதாசி கிழிக்கும் சத்தம் கேட்கும். பின்னர் "அப்படி கிழிக்கப்பட்டது ஒரு டெலிபோன் புத்தகம், குர் ஆனின் பக்கங்களை கிழிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டு விடுகிறேன்." என்று ஒரு குரல் சொல்லும். இது வில்டர்ஸ் முன்பே கூறிய, குர் ஆனின் அரைவாசி பக்கங்கள், மனிதநேயத்திற்கு விரோதமான கருத்துகளை கொண்டிருப்பதால், கிழித்தெறிய வேண்டும், அந்த நூலையே தடை செய்ய வேண்டும், என்ற சர்ச்சையை நினைவு படுத்துகிறது. (ம்ம்ம்.... படத்திலேயே குர் ஆனை கிழிக்க வில்டர்சுக்கு தைரியமில்லை. )

    நீண்ட காலமாக இஸ்லாமிய எதிர்ப்பு படம் தயாராகிறது, என்று நெதர்லாந்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும், ஆர்வமாய் எதிர்பார்க்கப் பட்ட பித்னா, இண்டர்நெட்டில் வெளி வந்த அடுத்த நாளே, "அட, இவ்வளவு தானா?" என்று கேட்க வைத்து விட்டது. "இதெல்லாம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான தொலைக்காட்சி ஒளிப்படங்கள், புதிதாக ஒன்றும் இல்லை, என்று முஸ்லிம்கள் கூறி விட்டனர். படம் வெளியானவுடன், உலகமெங்கிலும் இஸ்லாமிய நாடுகளில் கலவரங்கள் உண்டாகும், (வில்டர்சின் கூற்றில்) "காட்டுமிராண்டி முஸ்லிம்கள்" நெதர்லாந்து தூதுவராலயங்களை உடைத்து நொறுக்கி, கொளுத்துவார்கள். அதன் எதிரொலியாக, ஆத்திரமடையும் வெள்ளையின நெதர்லாந்து மக்கள் தந்து கட்சிக்கு வாக்குகளை அள்ளி வழங்குவார்கள். தான் அடுத்த பிரதமர் ஆகி விடலாம், என்றெல்லாம் வில்டர்ஸ் கனவு கண்டிருக்கலாம். ஐயோ பாவம், எதுவுமே நடக்கவில்லை. யாருடனும் நேரடி விவாதத்திற்கு போகாத வில்டர்ஸ், பாராளுமன்றத்தில் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அவரின் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காத வேலைகள், சமூகத்தை பிளவு படுத்துவன , யதார்த்தங்களை எதிர்நோக்க துணிச்சலற்றவர், பக்க சார்பானவர், என்றெல்லாம் சக பாரளுமன்ற உறுப்பினர்கள் பொரிந்து தள்ளினர். அதற்கு பதிலளித்த வில்டர்ஸ், தான் மட்டுமே துணிச்சலுடன் "இஸ்லாமிய அபாயத்தை" எதிர் கொள்வதாக தெரிவித்தார்.

    பித்னா படத்தில், நெதர்லாந்தில் வருடந்தோறும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். "ஒருகாலத்தில் முஸ்லிம்கள் நாட்டில் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள், வெள்ளையின ஒல்லாந்து காரர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக போகின்றனர்." என்ற இனவாத கற்பனை, ஏற்கனவே பல தீவிர வலதுசாரிக் குழுக்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம். அவர்கள், "முஸ்லிம்களையும் (அதற்குள்ளே வெள்ளையின கிறிஸ்தவர்கள் அடங்க மாட்டார்கள்), கறுப்பர்களையும் (அதற்குள்ளே கறுப்பின கிறிஸ்தவர்களும் அடங்குவர்) நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், என்று பிரச்சாரம் செய்கின்றனர். வில்டர்சின் பிரச்சாரம், வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அது அனைத்து மூன்றாம் உலகை சேர்ந்த குடியேறிகளுக்கும் எதிரானது. அப்படி இல்லாவிட்டால் ஏன் வில்டர்ஸ் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில், "சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்." என்ற முதலாவது வாக்கியத்தை மாற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சை கிளப்ப வேண்டும்?

    பாசிசம், கம்யூனிசம், இஸ்லாம் எல்லாம் "தீய சித்தாந்தங்கள்" என்று கூறும் வில்டர்ஸ், தனது சித்தாந்தமான லிபரலிசம் பற்றி எதுவும் கூறாதது ஏன்? இல்லை...அவரது கூற்றுப்படியே, அது "சுதந்திரம்" என்று வைத்து கொள்வோம். தனது பித்னா படத்தை தடை செய்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று கூறும் வில்டர்ஸ், எவ்வாறு குர் ஆன் தடை செய்யப் பட வேண்டும் என்று கோரலாம்? அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகாதா? கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு இயங்கலாம் , ஆனால் இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும் என சொல்வது தான் சுதந்திரமா? நாட்டில் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமேயான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள் என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல பூச்சாண்டி காட்டுகிறார். இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்தவர்களை சுட்டிக் காட்டும் அதேநேரம், நவ நாகரீக உடையணியும் பெரும்பான்மை முஸ்லிம்களை ஏன் மறைக்க வேண்டும்? தீவிரவாத முஸ்லிம்களுக்கு எதிராக, மிதவாத முஸ்லிம்களுடன் கூட்டுச் சேர்வதை விட்டு விட்டு, அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாக காட்டுவதால், சமூகம் இரண்டாக பிளவு படாதா? இந்தக் கேள்விகளுக்கு வில்டர்ஸ் போன்றவர்களிடம் பதில் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுகிய அரசியல் லாபங்கள்.

    இவர்கள் தான் அப்படியென்றால், சில முன்னால் முஸ்லீம் புத்திஜீவிகளின் தற்புகழ்ச்சி தேடி அடிக்கும் ஸ்டன்ட்கள் வேறு எங்கள் நிம்மதியை கெடுக்கின்றன. இஸ்லாமிய நாடுகளில் பிறந்து வளர்ந்து, பின்னர் மேற்கு ஐரோப்பா வந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, இஸ்லாமிய மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை தமது சொந்த நாட்டில் இருந்து, அம் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதை விட்டு, மேற்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு இவர்கள் இஸ்லாமை விமர்சித்து கூறும் கருத்துகளை, இங்குள்ள ஊடகங்கள் மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கின்றன. அதனை தமது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்த "முன்னால் முஸ்லீம்" புத்திஜீவிகளும், தமக்கு ஊடக பிரபல்யம் கிடைப்பதற்காக, இருந்திருந்து எதாவது அதிரடிக் கருத்துகள் கூறிக் கொண்டிருப்பார்கள். சோமாலியாவை சேர்ந்த ஹிர்சி அலி(பாரளுமன்ற உறுப்பினர்), ஈரானை சேர்ந்த எலியான் (சட்ட விரிவுரையாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலத்தை தேடிக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஈரானை சேர்ந்த எஹ்சன் ஜாமி புதிய வரவு. இவர் தற்போது மத நம்பிக்கையற்ற பிற நண்பர்களை சேர்த்து "மாஜி முஸ்லிம்கள் சங்கம்" ஒன்றை அமைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் நடத்தி வருகிறார். ஜாமி தற்போது ஒரு அதிரடித் தகவலை கொடுத்து, எம்மை மீண்டும் ஒரு த்ரில் அனுபவத்திற்கு உட்படுத்த பார்க்கின்றார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது பற்றி ஒரு முழு நீள கார்டூன் படம் தயாரித்திருக்கிறாராம். அதில் முகமது தனது ஒன்பது வயது மனைவியான ஆயிஷாவை, ஒரு மசூதிக்குள் கூட்டிச் சென்று கன்னி கழிப்பதாக, ஒரு காட்சி வருகின்றதாம். இறைதூதரின் உருவப்படத்தை வரைவதே கலவரத்தை உண்டாக்கும் என்ற நிலைமையில், மேற்படி காட்சி பற்றி கூற வேண்டியதில்லை. இந்த தகவலை தொடர்ந்து, ஜாமிக்கு ஈரானில் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்த போதும், அது தனது கருத்து சுதந்திரம் கூறும் உரிமையை அச்சுருத்தாது என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது நெதர்லாந்து நீதி அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த கார்டூன் படத்தை வெளியிடும் திட்டம் கை விடப்பட்டுள்ளது. தற்போது பலர் பெருமூச்சு விட்டாலும், மீண்டும் எப்போது பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூற முடியாது.

    நீங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இருந்து வருகிறீர்களா? நீங்கள் பிறப்பால் முஸ்லிமா? இந்தத் தகுதிகளுடன், இஸ்லாமிய மதத்தை விமர்சித்து எதாவது எழுதினால், கூறினால், மேற்குலக ஊடகங்கள் உங்களை கண்டு கொள்ளும். தினசரி உங்களை பற்றிய தலைப்பு செய்திகள், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வரும். ஒரு சில நாட்களில் உலகப்புகழ் பெறலாம். உங்களைப் பற்றிய நூல்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும். இந்த பிரபல்யம் இஸ்லாமை தவிர வேறு மதங்களை விமர்சிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஊடகங்களுக்கு அவர்கள் மீது நாட்டமில்லை.

    நெதர்லாந்தில் நியோ-லிபரிலிச சீர்திருத்தங்கள் காரணமாக எத்தனையோ பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பொது மக்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைக்க படுகின்றன. மானியங்கள் குறைக்கப் படுகின்றன. வேலை வாய்ப்புகள் குறைகின்றன. வசிக்க வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கின்றது. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றது. இதனால் குடும்ப செலவுகளை சரிக்கட்ட கடன் வாங்கி, பின்னர் கடன் கட்ட முடியாமல் வீட்டை இழந்து தெருவுக்கு வரும் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இதன் விளைவு, நாட்டில் ஏழைகள் பெருகி வருகின்றனர். மறு பக்கத்தில் தஞ்சம் கோரும் அகதிகள் மனிதாபிமானமற்ற சட்டங்களால் அவல வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இது போன்ற பிரச்சினைகளை யாரும் படமாக தயாரிப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அகதிகளின் உரிமைக்காக பாடுபட்ட ஒரு வெள்ளையின டச்சு சமூக ஆர்வலர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அரசியல் படுகொலை என்று நிச்சயிக்கப் பட்ட இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு படம் எடுத்து கொலையுண்ட தேயோ வந்கோக் பற்றி ஊடகங்கள் உலகம் முழுக்க அறிவித்தன. நிலைமை இப்படியிருக்கையில், வில்டர்ஸ், ஜாமி, ஹிர்சி அலி போன்றவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டாலும் புகழ் பெறுவார்கள். அவர்களும் அதை தான் விரும்புகின்றனர். ஆகவே முதலில் ஊடகங்கள் இப்படியானவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதுவே உலகை அழிவில் இருந்து மீட்பதற்கான முதல் படி.

    முன்னைய பதிவு :

    சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்


    ___________________________________________________

    கலையகம்