Saturday, November 22, 2008

கிழக்கே நகரும் உலக அதிகார மையம்



உலகில் அமெரிக்கா என்ற ஒரேயொரு அதிகார மையம் மறைந்து, அந்த இடத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற பல அதிகார மையங்கள் உருவாக்கி வருவதாக, அமெரிக்க தேசிய புலனாய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இத்தகைய நிலையை ஏற்கனவே பலர் சரியாக கணித்து இருந்த போதும், அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமொன்று அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்று, எதிர்கால உலகில் ஆசியாவின் தலைமைப் பாத்திரம் குறித்த நிகழ்ச்சி ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்(1 செப்டம்பர் 2008) ஒளிபரப்பியது. 'The New Asian Hemisphere: The irresistible Shift of Global Power to the East' என்ற நூலை எழுதி வெளியிட்ட, சிங்கப்பூர் பல்கலைக்கழக உப வேந்தரும், ஐ,நா.சபைக்கான முன்னாள் தூதுவருமான Kishore Mahbubani என்பவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல், உலக அதிகார மையம் மாறுவதன் காரண காரியங்களை அலசுகின்றது. அவரது கருத்துகள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் இங்கே கொடுத்திருக்கும் தொடுப்பின் மூலம் முழு பேட்டியையும் பார்வையிடலாம். உரையாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது.

மேற்குலகின் தவறான வெளிவிவாகார கொள்கைகள் பற்றி விமர்சனங்களை வைக்கும் அதே வேளை, ஆசிய நாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேற்குலக அடிப்படையை கொண்டிருந்த போதும், தமக்கென தனியான பாதையை வகுத்துக் கொண்டதை அலசுகிறார். கிஷோரைப் பொறுத்த வரை, ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஜனநாயகம் அவசியமல்ல, சிறப்பான ஆட்சி அமைப்பே முக்கியம்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியானது, மேற்குலகில் வெற்றிக் களிப்பை ஏற்படுத்தியது. கம்யூனிசத்தை ஜனநாயகம் வென்று விட்டது என்றும், இனிமேல் உலகம் முழுவதும் வேறுவழியின்றி தம்மைத் தான் பின்பற்ற வேண்டும் என்று மேற்குலகம் மமதை கொண்டது. அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா போன்றோர், சரித்திரம் இத்துடன் முற்றுப் பெற்று விட்டதாகவும், மேற்கத்திய நாகரீகம் இனி காலங்காலமாக நிலைத்து நிற்கும் என்றும் எதிர்வு கூறினார். (பூக்கியாமா தனது நிலைப்பாட்டை பிறகு திருத்திக் கொண்டார்.) உலக மக்கள் முழுவதும் இனிமேல் சராசரி அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் போல மாறி விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். அதாவது உலகம் பன்முகக் கலாச்சாரம் கொண்டது என்ற யதார்த்தத்தை மறுதலித்து, ஒற்றைக் கலாச்சாரம் கொண்டது என்று கருதினர்.

ஐரோப்பிய புத்திஜீவிகள் ஐரோப்பிய மையவாத கண்ணோட்டத்திலேயே உலகைப் பார்ப்பதாக கிஷோர் விமர்சிக்கிறார். இதனால் அவர்கள் மூடுண்ட சமூகத்தினுள் வாழ்வதாக, சர்வதேச உறவுகளில் பல தவறான முடிவுகளை எடுப்பதாக கூறுகின்றார். இப்போதும் தினசரி பிரபல அமெரிக்க நாளிதழ்கள் சீனா போன்ற நாடுகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுப்பதாகவும், இந்த போதனைகள் தற்போது சீனர்களுக்கு சலிப்பைத் தருவதால், யாரும் பொருட்படுத்துவதில்லை, என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.

மேற்கத்திய நாடுகள் எதிர்பார்ப்பது போல மாற்றம் ஒரே இரவில் வரப்போவதில்லை. மேற்குலகம் மீதான புதிய வெறுப்புணர்வு சோவியத் வீழ்ச்சியுடன் ஆரம்பமாகியது. ரஷ்யா ஒரே நாளில் கம்யூனிச பொருளாதாரத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு(முதலாளித்துவ பொருளாதாரம்) மாறிய போது, ரஷ்ய மக்கள் சொல்லவொணா துன்பத்தை அனுபவித்தனர். அவர்களது தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றது. அப்போது ரஷ்யர்கள் ஏதோ ஜனநாயகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல, மேற்குலகம் அன்றைய மக்களின் அவல நிலையை கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததே தவிர உதவி எதுவும் செய்யவில்லை. அந்த படிப்பினை தந்த விளைவு தான், இன்று ரஷ்ய ஆளும் வர்க்கம் மேற்குலகின் மீது வன்மம் கொண்டிருப்பதன் காரணம். சீனாவும் அதனை அவதானித்து வந்துள்ளது. தமது நாட்டிலும் ரஷ்யா போன்ற நிலைமை வரக்கூடாது என்பதால் தான், சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டம் கட்டமாக பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டுவந்தது.

சீனா தனது இரண்டாயிரம் வருட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, இடையிடையே, நிலையற்ற ஆட்சி, அல்லது சட்டம் ஒழுங்கற்ற ஆராஜக நிலை நிலவியது. சில நூற்றாண்டுகளாவது தொடர்ந்த, அது போன்ற காலகட்டத்திற்கு திரும்பக்கூடாது என்ற அச்சமே, சீன அரசு தனது இரும்புப் பிடியை தளர்த்தாததன் காரணம். ஜனநாயக அமைப்பை தனது இறுதி லட்சியமாக கொண்டிருப்பதாக கூறும் கிஷோர், ஆனால் மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல சீனா ஒரு சில வருடங்களில் ஜனநாயகமயப் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்பது மட்டுமல்ல, அது எதிர்மறையான விளைவுகளையும் தோற்றுவிக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றார்.

தனிமனித சமத்துவத்தை சட்டமாக பிறப்பித்த அமெரிக்கா, அந்த சட்டம் இயற்றி 200 வருடங்களுக்கு பிறகு தான் கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை கொடுத்ததை நினைவுபடுத்தும் கிஷோர், ஆகவே அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது சீனா கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாதித்தது அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். சாதாரண சீன மக்கள் மாணவர்களாகவோ, உல்லாசப் பிரயாணிகளாகவோ ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் வேளை, அங்கிருக்கும் சிறந்த அம்சங்களை தமது நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் காலப்போக்கில் சீன மக்கள் தாமாகவே ஜனநாயக சமூகமாக மாறிவிடுவார்கள். அதை விடுத்து, சீனாவில் குறை கண்டுபிடித்து, அதனை பூதாகரமாக காட்டும் போது, மேற்குலகின் உள்நோக்கம் குறித்து சீன மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு காலத்தில், அமெரிக்கர்கள் ஜனநாயகத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று சீன புத்திஜீவிகள் நம்பினர். ஆனால் (கியூபாவில் அமெரிக்க தளமான) குவாந்தனமோ சிறையில் வைத்து கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட செய்திகள் வெளியான போது, அமெரிக்கா பற்றிய எண்ணங்களை அடியோடு மாற்றிக் கொண்டு விட்டனர். நாகரீகத்தின் உச்சிக்கு வந்து விட்டதாக நம்பப்பட்ட அமெரிக்காவே சித்திரவதை போன்ற மனித உரிமை மீறல்களை செய்யலாமென்றால், சீனாவை மட்டும் குறை சொல்லும் போக்கு, இரட்டை அளவுகோலை எடுத்துக் காட்டுகின்றது. ஊருக்கு உபதேசம் செய்து கொண்டே, தனக்கு பிறிதான நீதியை வைத்திருக்கும் இரட்டை அளவுகோல் முறை இன்று பல உலக நாடுகளை வெறுப்படைய வைத்துள்ளது. அதனாலேயே அமெரிக்கா சொல்வதை கேட்பவர்கள் குறைந்து விட்டது.

வெளிவிவகார கொள்கைகளில் மேற்குலகின் தவறான நிலைப்பாட்டிற்கு இன்னொரு உதாரணம் ஈரான். அமெரிக்க அதிபர் புஷ் ஈரானை "முரட்டு நாடுகளின்" பட்டியலில் இட்ட நேரம், அந்த நாட்டை கதாமி என்ற மிதவாத தலைவர் ஆண்டுவந்தார். அனைத்து முஸ்லீம் நாடுகளிலும், ஈரானியர்கள் தான் அதிகளவு அமெரிக்க சார்பானவர்கள். அப்படியான நாட்டை, வெளியுலக தொடர்பை துண்டித்து தனிமைப்படுத்தி, அந்த மக்களுக்கு மேற்குலகில் கல்வி கற்கும் வசதிகளை மறுத்து, பொருளாதார தடைகளை ஏற்படுத்த போனால், மக்களும் மேற்குலகின் மீது இயல்பாகவே வெறுப்படைவது இயல்பு. அதனால் மேற்குலக எதிர்ப்பு ஜனாதிபதி அஹ்மதின்ஜாத் போன்றவர்களை ஈரானிய மக்கள் தெரிவு செய்ததில் வியப்பில்லை.

இஸ்லாமிய நாடுகள் மீதான ஐரோப்பாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் கிஷோர் கூறுகின்றார். குறிப்பாக வட ஆப்பிரிக்காவில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் ஐரோப்பிய கண்டத்திற்கு அருகில் இருக்கும் அதே நேரம் ஏற்றத்தாழ்வான இரண்டு உலகங்கள் அருகருகே அமைந்துள்ள முரண்பாட்டையும் கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்த முதலாம் உலகை சேர்ந்த, குறைந்தளவு சனத்தொகையை கொண்ட ஐரோப்பா ஒரு பக்கம். அதே நேரம் அபிவிருத்தியடையாத மூன்றாம் உலகைச் சேர்ந்த, அதிகரித்து வரும் சனத்தொகையை கொண்ட வட ஆப்பிரிக்கா மறு பக்கம். இது போன்ற முரண்பாட்டை தொடர விடுவது ஆபத்தானது. ஐரோப்பா தனது நலன்களை பற்றி மட்டுமே கவனிப்பதை ஒத்தி வைத்து விட்டு, அயலில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளை நவீனமயப் படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை நீக்கலாம். இஸ்லாமிய நாடுகளும் தமது பின்தங்கிய நிலை நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து, நவினமயப் படலாம் என்பதைக் காட்டவே பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்ட துபாய் நகரின் படத்தை தனது நூலின் அட்டையில் போட்டதாக கிஷோர் தெரிவிக்கின்றார்.

"நவீனமயப்படுதல்" என்பதை மேற்கத்தைய கலாச்சாரத்தை பிரதி பண்ணுதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இத்தகைய மேலைத்தேய கருத்தாக்கமே பன்முகக் கலாச்சார உலகை ஏற்றுக் கொள்ள மறுக்கும் முக்கிய தடைக்கல். ஒவ்வொரு மக்கள் குழுவும், அந்நிய கலாச்சார சிறப்பம்சங்களை தன்வயப்படுத்துவதன் மூலம் பரிணாம வளர்ச்சியடைகின்றன. அவர்கள் தமது கலாச்சாரத்தை கைவிட்டு விட்டு, ஐரோப்பியராக மாறி விடுவார்கள் என எதிர்பார்ப்பது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. இன்றைக்கும் மேலைத்தேய உயர்கல்வி கற்ற இளம்தலைமுறை தமது தாய் மொழிப் பெயர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (கிஷோர் இங்கே சீனர்களை குறிப்பிடுகிறார். நம்மவர்களைப் பற்றி உங்களது தீர்ப்பிற்கே விடுகிறேன்.)

Video: The Interview with Kishore Mahbubani

4 comments:

Che Kaliraj said...

You are correct கலையகம். I think same as you. Poor countries are Decresing their Properties. Countries Of Imperilism like USA, Uk,........ are never accept their errors, but same time, thift to weak contries like ethiyopia, somaliya,......... Imperilism is not permanent, One day they will punish By world People. Terrorism from imperilsm Countries to weak contries. So "Than vinai Thannai Sudum" is tamil proverb, meaning is " Each & Every activities Must affect themself"

Anonymous said...

உங்கள் பதிவுகளின் முதற் பெரும் சிறப்பே, அதற்கு நீங்கள் இடும் தலைப்பே..

மேலும் , தலைப்பை போல் பதிவுகளுக்கு இனிய நடையை பிரதிபலிப்பது, சொல்லவரும் வரும் விடயங்களை மேலும் எளிதாகுகிறது ..

Kalaiyarasan said...

நன்றி Che Kaliraj,

நன்றி அறிவுமணி,
முதல் தடவையாக பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இனிவருங்காலங்களிலும் உங்கள் கருத்துகளை செவிமடுக்க ஆவலாக உள்ளேன்.

சதுக்க பூதம் said...

நல்ல தலைப்பு! நல்ல பதிவு. இந்த தலைப்பு பற்றி சற்று விரிவாக பதிவிட்டுள்ளேன் .நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்