Friday, April 18, 2008

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போதும், 26 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஹொஸ்னி முபாரக், தாணியக்கிடங்கை திறந்து விடவில்லை. அதற்கு பதிலாக போலிஸ் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே எகிப்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பருத்தி ஆலைதொழிளார்கள் வேலை நிறுத்தம், தற்போது அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்....இப்படியே தொடர்ந்தால் போலீஸ்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யாதது தான் மிச்சம். பலதரப்பட்ட பொருளாதர நிலைகளில் வேலைநிறுத்தங்கள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தாலும், அது முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை அசைக்கப்போவதில்லை. அதற்கு காரணம், காவல்துறை , இந்த அரசை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளது. உயர் மட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள், செல்வந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ளதென்றால், நடுத்தர அதிகாரிகள் லஞ்சப்பணம் பெற்று பிழைத்துக்கொள்கின்றனர்.

கடந்த வருடம் எகிப்திய பொருளாதாரம் ஏழு வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் மொத்த சனத்தொகையில் நாற்பது வீத எகிப்தியர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை. "Kefaya"(போதும்) என்ற பெயரில் ஒரு புதிய மதச்சார்பற்ற மக்கள் இயக்கம், பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. விலை வாசி உயர்வு, மாதக்கணக்காக வழங்கப்படாத சம்பளப்பணம், ஊழல், போலிஸ் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் இவற்றிற்கெதிராக பொது மக்கள் எதிர்ப்பைக்காட்ட வருமாறு அவர்களின் பிரசுரங்கள் அழைப்பு விடுத்தன. தலைநகர் கய்ரோவில் பலத்த போலிஸ் கெடுபிடி காரணமாக வேலை நிறுத்தம் வெற்றியளிக்கவில்லை. ஆனால் தலைநகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ள, பருத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள அல்-குப்ரா என்ற இடத்தில், தொழிலாளர் ஒற்றுமையாக வேலைநிறுத்தத்தில் குதித்ததுடன், அடக்க வந்த போலிஸ் படைகளை எதிர்த்து போராடிய போது, போலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். நூற்றுக்கனக்கனோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் எவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களுக்கு போனஸ் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாக அர்ரிவித்தது. பரந்துபட்ட தொழிலாளர் போராட்டம், அரசாங்கம் ஆட்டம் காணுவதன் அறிகுறி. ஆனால் அதேநேரம், அந்தப்போராட்டம் ஈவிரக்கமின்றி அடக்கப்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் , பல எகிப்தியர்கள் நாட்டை விட்டு தப்பியோடி, ஐரோப்பாவில் புகலிடம் கோரலாம். என்ன அதிசயம், எந்தவொரு ஐரோப்பிய ஊடகமும் இப்போது எகிப்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை. பின்னர் அகதிகள் வரும் போது, அங்கே என்ன பிரச்சினை என்று, ஒன்றும் தெரியாதது மாதிரி கேட்பார்கள்.

எகிப்தில் நிலவும் சர்வாதிகாரம் காரணமாக, அநேகமான மக்கள் மாற்று வழியை தேடுகிறார்கள். அதனாலே தான் இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியான "முஸ்லீம் சகோதரத்துவம்", தேர்தலில் போட்டியிடும் போது பெரும்பான்மையான மக்கள் அதற்கு வாக்கு போடுகின்றனர். 2005 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், அந்தக்கட்சி இருபது வீதமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லீம் சகோதரர்கள், தற்போது நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. தொழிலாளர் போராட்டம் மத அடிப்படை கொண்டதல்ல என்பதால், "புரட்சி ஆபத்தானது" என்று போதித்து வருகின்றனர். அவர்களக்கு உலகத்தில் மதத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. இருப்பினும், அரச அடக்குமுறை அவர்கள் மீதும் ஏவி விடப்படுகின்றது. அந்தக்கட்சியின் நிதி வழங்குனறன, ஸ்விட்ஸர்லாந்தில் வசித்த எகிப்து வங்கியாளர், மேலும் இரண்டு வர்த்தகர்கள் சர்வதேச போலிஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வருங்காலத்தில் பலவீனப்படும் வாய்ப்புகள் உள்ளன.

முபாரக்கின் சர்வாதிகாரம் எகிப்திற்கு புதிதல்ல. அதற்கு, இராணுவ உதவிகளை வாரிவழங்கும் அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவும் புதிதல்ல. தொழிலாளரின் அன்றாட உணவிற்கே போதாத ஊதியம், ஏழ்மை நிலை, ஊழல் இவை எதுவுமே எகிப்திற்கு புதிதல்ல. ஆனால் இந்த சமூக குறைபாடுகளை எல்லாம், மக்கள் பொறுத்துக்கொள்வது, மதவாதிகளின் பிரச்சாரத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டு இஸ்லாமிய நாடுகளில், எகிப்து தான் மத அடிப்படைவாத கொள்கையை கண்டுபிடித்தது. குறிப்பாக "முஸ்லீம் சகோதரத்துவம்" கட்சி தான், நமது காலத்திய கொமெய்னி (ஈரான்), பின் லாடன் (சவூதி) வகையறாக்களின் சித்தாந்த பாசறை. அவர்களின் பார்வையில், மக்களின் அவலநிலமைக்கு காரணம், சாதாரண மக்களின் மத நம்பிக்கை குறைபாடு தான். எல்லோரும் மதத்தை சரியாக கடைப்பிடித்தால், எல்லா சமூக குறைபாடுகளும் விலகிவிடுமாம். ஒரு காலத்தில், மதச்சார்பற்ற லிபரல் கலாச்சாரத்தை பின்பற்றிய எகிப்திய மக்கள், இந்த பிரச்சாரத்தின் பின்னர், மதப்பற்றாளர்களாக மாறினர். மதவடிப்படைவாத சக்திகளின் வேகமான வளர்ச்சிக்கு அதுவே காரணம்.

தற்போது எகிப்தின் தொழிலாளர் போராட்டங்கள், மத அடிப்படைவாதம் சோறு போடாது என்று கண்ட அனுபவத்தின் விளைவு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கமான சமுதாய சீர்கேடுகள் நிலைத்து நிற்பதற்கு மத நம்பிக்கை குறைவு காரணமல்ல. மக்கள் நலன்களை விட லாபத்தை மட்டுமே முதன்மையாக கருதும் முதலாளிகள், அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்கும் அரசாங்கம், அரசாங்கத்தை மக்களிடமிருந்து காப்பாற்ற உள்ள பாதுகாப்புபடைகள், ஊழல் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச ஆதரவு... இப்படி நீள்கிறது பட்டியல். இந்தக் காரணங்களை மக்களிடம் இருந்து மறைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகளின் இரட்டை வேஷங்களை கண்ட மக்கள் தான் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.

_____________________________________________________

No comments: